search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டி.கே.சிவக்குமார்"

    • கூட்டத்தில் பல்வேறு பரபரப்பு விவாதங்கள் நடந்ததாக கூறப்படுகிறது.
    • கர்நாடகாவில் முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் பதவி காலியாக இல்லை.

    பெங்களூரு:

    கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்து ஓராண்டு ஆகிறது. முதல்-மந்திரியாக சித்தராமையா உள்ளார். துணை முதல்-மந்திரியாக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரான டி.கே.சிவக்குமார் உள்ளார்.

    கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தபோது நீண்ட இழுபறிக்கு பிறகு சித்தராமையாவுக்கு முதல்-மந்திரி பதவியும், டி.கே.சிவக்குமாருக்கு துணை முதல்-மந்திரி பதவியும் வழங்கப்பட்டது. அப்போது முதல்-மந்திரி பதவி ஆளுக்கு 2½ ஆண்டுகள் அதிகாரத்தை பகிா்ந்து அளிப்பது என்று வாய்மொழியாக ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

    ஆனால் அவ்வப்போது சித்தராமையாவின் ஆதரவாளர்கள் கூடுதல் துணை முதல்-மந்திரி பதவி உருவாக்க வேண்டும் என்றும், டி.கே.சிவக்குமார் ஆதரவாளர்கள் அவருக்கு முதல்-மந்திரி பதவி வழங்கவும் போர்க்கொடி தூக்கி வருகிறார்கள்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்-மந்திரி சித்தராமையாவின் ஆதரவு மந்திரி கே.என்.ராஜண்ணா மேலும் 3 துணை முதல்-மந்திரி பதவிகளை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    மேலும் ஒருவருக்கு ஒரு பதவி மட்டுமே வழங்க வேண்டும் என்றும் அவர் கூறினார். அதாவது துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், கட்சியின் மாநில தலைவராகவும் உள்ளார். அவருக்கு ஒரு பதவி மட்டுமே வழங்க வேண்டும் என மந்திரி கே.என் ராஜண்ணா மறைமுகமாக கூறி வருவதாக சொல்லப்படுகிறது.

    இந்த நிலையில் கே.என்.ராஜண்ணாவின் பேச்சுக்கு டி.கே.சிவக்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்றிருந்த முதல்-மந்திரி சித்தராமையா, முதல்-மந்திரி மாற்றம் பற்றி டி.கே.சிவக்குமாரின் தூண்டுதலின் பேரில் மடாதிபதி, சிலர் பேசி வருவதாக கட்சி மேலிட தலைவர்களிடம் புகார் அளித்து இருந்தார்.

    அதுபோல் டி.கே.சிவக்குமாரும் டெல்லி சென்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம், கூடுதல் துணை முதல்-மந்திரி பதவி கேட்டு மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் பேசி வருவதை கூறியதுடன், எக்காரணம் கொண்டும் துணை முதல்-மந்திரிகளை கூடுதலாக நியமிக்க கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார்.

    இதற்கிடையே கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாா் தலைமையில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதும் இருந்து 190 நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இதில் கலந்துகொண்ட டி.கே.சிவக்குமார் ஆதரவாளர்கள் அவருக்கு முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். மேலும் சில நிர்வாகிகள், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி பேசும் மந்திரிகளுக்கு நோட்டீஸ் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

    இதுகுறித்து விரைவில் முடிவு செய்வதாக டி.கே.சிவக்குமாா் உறுதியளித்தார். சில மந்திரிகள் தன்னை பணிய வைத்துவிடலாம் என்று கருதி பேசுகிறார்கள். அதற்கெல்லாம் பணிந்து செல்பவன் நான் கிடையாது என்று டி.கே.சிவக்குமார் கட்சி நிர்வாகிகளிடம் கூறியதாக கூறப்படுகிறது.

    இந்த நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அவர் பங்கேற்கவில்லை.

    அதனால் முதல்-மந்திரி சித்தராமையா இல்லாமல் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் நடந்து முடிந்துள்ளது. இந்த கூட்டத்தில் பல்வேறு பரபரப்பு விவாதங்கள் நடந்ததாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே கர்நாடக நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் பைரதிசுரேஷ் கூறியதாவது:-

    கர்நாடகாவில் முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் பதவி காலியாக இல்லை. கூடுதலாக 4 அல்லது 5 துணை முதல்-அமைச்சர்கள் பதவி ஏற்பதா என்பது குறித்து கட்சியின் மேலிடம் முடிவு செய்யும் என்றார்.

    • யார் மீதும் பழி போடுவதில் அர்த்தமில்லை.
    • பொது இடங்களில் தேவையில்லாமல் அறிக்கை விடக்கூடாது.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் மொத்தம் 28 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளது. இதில் கடந்த தேர்தலில் 27 இடங்களில் காங்கிரஸ் கட்சி தோற்றது. ஆனால் பெங்களூர் புறநகரில் மட்டும் கர்நாடக காங்கிரஸ் தலைவரும், துணை முதல் மந்திரியுமான டி.கே.சிவகுமாரின் தம்பி டி.கே.சுரேஷ் வெற்றி பெற்றார்.

    பெங்களூர் புறநகர் டி.கே.சிவக்குமார், டி.கே. சுரேஷின் கோட்டையாக இருந்து வந்தது. இந்த தொகுதியில் கடந்த 2012-ல் நடந்த இடைத்தேர்தல், அதைத்தொடர்ந்து நடந்த 2014, 2019 ஆகிய ஆண்டுகளில் நடந்த பாராளுமன்ற தேர்தலிலும் டி.கே.சுரேஷ் வெற்றி பெற்று எம்.பி. ஆனார்.

    இந்த நிலையில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 9 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனாலும் பெங்களூர் புறநகரில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் டி.கே.சுரேஷ் 2 லட்சத்து 68 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

    அவரை எதிர்த்து போட்டியிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரும், தேவகவுடாவின் மருமகனுமான டாக்டர் மஞ்சுநாத் வெற்றி பெற்றார்.

    இந்த தோல்வி டி.கே. சிவக்குமார் மற்றும் காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த நிலையில் டி.கே.சுரேஷை திட்டமிட்டு கட்சியினர் தோல்வியடைய வைத்து விட்டனர் என்று டி.கே.சுரேசின் ஆதரவாளர்கள் பொதுவெளியில் பேச ஆரம்பித்தனர்.

    இந்த விவகாரம் கர்நாடக காங்கிரசில் பெரும் பூதாகரமாக வெடித்து உள்ளது. ஏற்கனவே முதல் மந்திரி சித்தராமையாவுக்கு ஆதரவாக சில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும், துணை முதல் மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு ஆதரவாக சில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் பேசி வரும் நிலையில் டி.கே.சுரேஷ் தோல்வியால் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாகி உள்ளது.

    இந்த நிலையில் கர்நாடக காங்கிரஸ் தலைவரும், துணை முதல் மந்திரியுமான டி.கே.சிவக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சமீபத்திய தேர்தல் முடிவுகள் காங்கிரசுக்கு எச்சரிக்கை மணி. தோல்வி குறித்து மாநிலம் முழுவதும் உள்ள தொகுதிகளில் ஆய்வு கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த கூட்டங்களுக்கான தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும்.

    அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் இருந்தோம். ஆனால் அந்த எண்ணிக்கையை எட்ட முடியவில்லை. மக்களின் தீர்ப்பை ஏற்க வேண்டும். கட்சி தலைவர்களின் சொந்த கிராமங்கள் மற்றும் நகரங்களில் இருந்து வாக்குகள் கிடைக்கவில்லை.

    தேர்தல் தோல்விக்கு சில எம்.எல்.ஏ.க்கள் மீது அமைச்சர்கள் குற்றம் சாட்டுவது குறித்து கேட்டபோது இதுபற்றி யாரும் என்னிடம் புகார் செய்யவில்லை. யார் மீதும் பழி போடுவதில் அர்த்தமில்லை.

    தோல்விக்கான காரணம் குறித்து தொகுதி பொறுப்பில் உள்ள தலைவர்கள், தொண்டர்களிடம் பேசி அதற்கான காரணங்களை ஆராய வேண்டும். அதை விட்டுவிட்டு எம்.எல்.ஏ.க்கள் பொது இடங்களில் தேவையில்லாமல் அறிக்கை விடக்கூடாது. கட்சி தொண்டர்களுடன் அமர்ந்து பிரச்சினைகளை விவாதிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆபாச வீடியோக்களை வெளியிட 4 மந்திரிகள் குழுவாக செயல்பட்டனர்.
    • ரூ.100 கோடி கொடுப்பதாக என்னிடம் பேரம் பேசினார்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச படங்களை வெளியிட்டதாக அவரது முன்னாள் கார் டிரைவர் கார்த்திக் மற்றும் பா.ஜனதா பிரமுகர் வக்கீல் தேவராஜ்கவுடா ஆகியோர் மீது சிறப்பு விசாரணைக்குழுவினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இந்த நிலையில் ஒரு பெண் கொடுத்த பாலியல் புகாரின் அடிப்படையில் பா.ஜனதா பிரமுகர் வக்கீல் தேவராஜ் கவுடா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரை நேற்று போலீசார் கோர்ட்டுக்கு கொண்டு சென்று ஆஜர்படுத்தி மீண்டும் சிறைக்கு கொண்டு வந்தனர்.

    அப்போது போலீஸ் வாகனத்தில் இருந்தபடி வக்கீல் தேவராஜ்கவுடா பரபரப்பு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-

    ஆபாச வீடியோ வெளியானதில் மூளையாக செயல்பட்டதே கர்நாடக துணை முதல் மந்திரி டி.கே.சிவக்குமார் தான். ஆபாச வீடியோக்களை வெளியிட டி.கே.சிவக்குமார் தலைமையில் மந்திரிகள் கிருஷ்ண பைரேகவுடா, செலுவராயசாமி, பிரியங்க் கார்கே உள்பட 4 மந்திரிகள் குழுவாக செயல்பட்டனர்.

    ஆபாச வீடியோக்கள் அடங்கிய பென் டிரைவை வெளியிட ரூ.100 கோடி கொடுப்பதாக என்னிடம் முன்னாள் எம்.எல்.ஏ. சிவராமேகவுடா பேரம் பேசினார். மேலும் பவுரிங் கிளப்பில் ரூ.5 கோடி முன் பணமாக கொடுக்க வந்தனர். இதில் டி.கே.சிவக்குமாருக்கு தொடர்பு இருப்பதால் எந்த பிரச்சினையும் ஏற்படாது என்றும் தெரிவித்தார்.

    ஆபாச வீடியோக்களை வெளியிடுவது தொடர்பாக டி.கே.சிவக்குமார் என்னை அழைத்து பேசினார். அதில் பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான வீடியோக்கள் வெளியான விவகாரத்தில் குமாரசாமியை குற்றம் சாட்டும் திட்டத்துடன் என்னை தொடர்பு கொண்டு பேசினார். மேலும் நான் குமாரசாமி மீது இந்த விவகாரம் தொடர்பாக குற்றம் சாட்ட வேண்டும் என்று அவர்கள் விரும்பினர்.

    பிரஜ்வலின் முன்னாள் கார் டிரைவர் கார்த்திக்கிடம் பென் டிரைவ் பெறுவதற்கு டி.கே.சிவக்குமார்தான் காரணம். மேலும் பிரதமர் மோடிக்கு கெட்ட பெயர் கொண்டு வரவேண்டும் என்பதற்காக டி.கே.சிவக்குமார் சார்பில் என்னை அணுகி ரூ.100 கோடி பேரம் பேசினார்.

    டி.கே.சிவக்குமார் என்னிடம் பேசிய ஆடியோ உரையாடல் உள்ளது. நான் வெளியே வந்தால் என்னிடம் உள்ள அனைத்து ஆதாரங்களையும் வெளியிடுவேன். நான் வெளியே வந்தால் காங்கிரஸ் ஆட்சியே இருக்காது. இதனால் தான் என் மீது பொய்யான வழக்கை போட்டு சிறையில் வைத்துள்ளனர்.

    ஆபாச வீடியோ விவகாரத்தில் பிரதமர் மோடியின் பெயரை கலங்கப்படுத்த வேண்டும், குமாரசாமிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் டி.கே.சிவக்குமாரின் நோக்கம். நான் யாருக்கும் பயப்பட மாட்டேன். காங்கிரஸ் ஆட்சி கண்டிப்பாக கூடிய விரைவில் கவிழும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ராஜஸ்தானில் சச்சின் பைலட் நிலை எனக்கு வேண்டாம்.
    • தற்போது சச்சின் பைலட்டை கட்சியில் இருந்து நீக்கும் நிலை உள்ளது.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது. அந்த கட்சியில் முதல்-மந்திரி பதவிக்கு காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், மூத்த தலைவர் சித்தராமையா ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. முதல்-மந்திரியாக சித்தராமையாவை அறிவிக்க காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளது.

    அதாவது முதல் 2½ ஆண்டுகள் சித்தராமையாவும், அடுத்த 2½ ஆண்டுகள் டி.கே.சிவக்குமாரும் முதல்-மந்திரி பதவி வகிக்க காங்கிரஸ் மேலிடம் அறிவுறுத்தி வருகிறது. ஆனால் டி.கே.சிவக்குமார், கர்நாடகத்தில் கட்சியை நான் தான் வளர்த்துள்ளேன். இந்த தேர்தலில் 135 இடங்களில் வெற்றி பெற நான் தான் காரணம் என கூறி, முதல்-மந்திரி பதவியை தனக்கே வழங்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கி வருகிறார். இதனால் முதல்-மந்திரி தேர்வில் இழுபறி நீடிக்கிறது.

    கட்சி மேலிட உத்தரவின் பேரில் சித்தராமையா நேற்று முன்தினமே டெல்லி புறப்பட்டு சென்றார்.

    ஆனால் முதல்-மந்திரி பதவி விவகாரத்தில் கட்சி மேலிட நடவடிக்கையில் அதிருப்தி அடைந்த டி.கே.சிவக்குமார் நேற்று முன்தினம் டெல்லி செல்லாமல் புறக்கணித்தார். பின்னர் அவரை மேலிட தலைவர்கள் சமாதானப்படுத்தினர். இதைத்தொடர்ந்து நேற்று காலை அவர் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.

    முன்னதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் பெங்களூருவில் வைத்து டி.கே.சிவக்குமாருடன் நேற்று காலை தனியாக ஆலோசனை நடத்தினார்.

    அப்போது அவர், முதல்-மந்திரி பதவி விவகாரத்தில் 50-50 பார்முலாவை ஏற்கும்படியும், ராகுல்காந்தி உத்தரவின் பேரில் உங்களுக்கு நிச்சயம் அடுத்த 2½ ஆண்டுகள் முதல்-மந்திரி பதவி வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார். எனவே இதற்கு சம்மதம் தெரிவிக்கும்படி டி.கே.சிவக்குமாரிடம் கூறினார்.

    ஆனால், டி.கே.சிவக்குமார், இவ்வாறு தான் ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட்டுக்கும், சச்சின் பைலட்டுக்கும் தலா 2½ ஆண்டுகள் முதல்-மந்திரி பதவி வழங்குவதாக ராகுல்காந்தி கூறினார்.

    ஆனால் இதுவரை அசோக் கெலாட் முதல்-மந்திரி பதவியில் இருக்கிறார். ராஜஸ்தானில் சச்சின் பைலட் நிலை எனக்கு வேண்டாம். தற்போது சச்சின் பைலட்டை கட்சியில் இருந்து நீக்கும் நிலை உள்ளது. இதே நிலை எனக்கும் நடக்காது என்பது என்ன உத்தரவாதம் என கேள்வி எழுப்பியதுடன், தலா 2½ ஆண்டுகள் முதல்-மந்திரி பதவி நிர்வகிக்கும் முறை வேண்டாம். என்னை முதலில் முதல்-மந்திரி ஆக்குங்கள் என திட்டவட்டமாக கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • முதல்-மந்திரி பதவிக்கு சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே போட்டி எழுந்துள்ளது.
    • சித்தராமையா தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சிலரை டெல்லிக்கு அழைத்து சென்றுள்ளார்.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்துள்ளது. முதல்-மந்திரி பதவிக்கு சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே போட்டி எழுந்துள்ளது. சித்தராமையா தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சிலரை டெல்லிக்கு அழைத்து சென்றுள்ளார். தனக்கு கட்சி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளதால் முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.

    இதுகுறித்து கர்நாடக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், முன்னாள் துணை முதல்-மந்திரியுமான பரமேஸ்வர் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், "எனக்கு முதல்-மந்திரி பதவி கொடுத்தால் வேண்டாம் என்று சொல்ல மாட்டேன். என்னாலும் 50 எம்.எல்.ஏ.க்களை டெல்லிக்கு அழைத்து செல்ல முடியும். ஆனால் கட்சி கட்டுப்பாட்டை நான் மீற மாட்டேன். கட்சியின் முடிவை நான் ஏற்பேன். பொதுவாக எங்கள் கட்சியில் மாநில தலைவராக இருப்பவருக்கு தான் முதல்-மந்திரி பதவி வழங்குவது சம்பிரதாயம். இது தான் எனது கருத்து" என்றார்.

    பரமேஸ்வருக்கு முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் துமகூருவில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். பரமேஸ்வர் காங்கிரஸ் மாநில தலைவராக நீண்ட காலம் பணியாற்றியதாகவும், அவர் துணை முதல்-மந்திரியாக இருந்தபோது பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார் என்றும் அவர்கள் கூறினர்.

    • கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 135 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.
    • முதல்-மந்திரி பதவியை பிடிப்பதில் டி.கே.சிவக்குமார் மற்றும் சித்தராமையா இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.

    புதுடெல்லி :

    கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 135 இடங்களில் அமோக வெற்றிபெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இந்த நிலையில் முதல்-மந்திரி பதவியை பிடிப்பதில் டி.கே.சிவக்குமார் மற்றும் சித்தராமையா இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. இருவரும் டெல்லி சென்றுள்ள நிலையில் நேற்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை அவரது இல்லத்தில் தனித்தனியாக சந்தித்தனர். இந்த சந்தர்ப்பத்தில் ராகுல்காந்தி மல்லிகார்ஜுன கார்கேவின் வீட்டுக்கு வந்தார்.

    அவர் டி.கே.சிவக்குமார் மற்றும் சித்தராமையாவிடம் முதல்-மந்திரி விவகாரம் குறித்து பேசி ஆலோசனை நடத்தினார். பின்னர் இருவரிடமும் தனித்தனியாகவும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த சந்தர்ப்பத்தில் மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடக மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோரும் உடன் இருந்துள்ளனர். இந்த சந்திப்பு சுமார் 90 நிமிடங்கள் நீடித்தது. அதையடுத்து ராகுல் காந்தி அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டார்.

    அதையடுத்து கே.சி.வேணுகோபால் ராகுல்காந்தியை அவருடைய இல்லத்தில் தனியாக சந்தித்து கர்நாடக முதல்-மந்திரியாக யாரை நியமிக்கலாம் என்பது குறித்து பேசினார். இதற்கிடையே நேற்று இரவு சித்தராமையா திடீரென கே.சி.வேணுகோபால், ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்களின் வீடுகளுக்கு மாரத்தான் ஓட்டப்பந்தயம் போல் விறுவிறுவென காரில் சென்று அவர்களை சந்தித்தார்.

    இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பவன் கேரா நேற்று ஐதராபாத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கர்நாடக முதல்-மந்திரி தேர்வில் ஓரளவுக்கு முடிவு எட்டப்பட்டு விட்டதாகவும், இறுதி முடிவை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியுடன் ஆலோசித்து இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிப்பார்கள் என்றும் கூறினார்.

    ×