என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழக வீரர்"

    • முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று உயரிய ஊக்கத்தொகையாக 20 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
    • சேலஞ்சர்ஸ் பிரிவில் வெற்றி பெற்ற பிரணவ் வெங்கடேசுக்கு பரிசு தொகையாக 6 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.

    உலக ஜூனியர் செஸ் போட்டியில் சாம்பியன் தமிழக வீரர் பிரணவ் வெங்கடேசுக்கு ரூ.20 லட்சம் ஊக்க தொகை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    மொண்டெனேகுரோ நாட்டின், பெட்ரோவாக்கில் நடைபெற்ற பீடே உலக ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த 18 வயதான பிரணவ் வெங்கடேஷ் வெற்றி பெற்று வரலாறு படைத்ததற்காக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று உயரிய ஊக்கத்தொகையாக 20 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

    பிரணவ் வெங்கடேஷ், 2022-ம் ஆண்டில், கிராண்ட் மாஸ்டர் பட்டத்திற்கு தகுதி பெற்றார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்திய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் போட்டியில் சேலஞ்சர்ஸ் பிரிவில் வெற்றி பெற்ற பிரணவ் வெங்கடேசுக்கு பரிசு தொகையாக 6 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் முருகானந்தம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, மற்றும் பிரணவ் வெங்கடேசின் பெற்றோர் உடன் இருந்தனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இந்தியா சார்பில் 17 பேர் போட்டியில் கலந்து கொண்டு 4 பதக்கங்களை வென்றனர்.
    • போட்டி முடிந்து தாயகம் திரும்பிய பரத் விஷ்ணுவுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாகமான வரவேற்பு.

    சர்வதேச கிக் பாக்சிங் போட்டி துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடந்தது. இந்த போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.

    இந்தியா சார்பில் 17 பேர் போட்டியில் கலந்து கொண்டு 4 பதக்கங்களை வென்றனர். இவற்றில் 14 வயதான தமிழக வீரர் பரத்விஷ்ணு அனைத்து சுற்றிலும் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

    தாம்பரம் அருகே உள்ள முடிச்சூரைச் சேர்ந்த பரத் விஷ்ணு போட்டி முடிந்து தாயகம் திரும்பிய அவருக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    அப்போது, பரத் விஷ்ணுவை வரவேற்ற தலைமை பயிற்சியாளர் சி.சுரேஷ்பாபு, தமிழ்நாடு கிக் பாக்சிங் சங்கத்தின் பெண்கள் கமிட்டி சேர்மன் டாக்டர் ஆர்த்தி உள்ளிட்டோர் பாராட்டுகளை தெரிவித்தனர்.

    • செல்வ பிரபு 16.78 மீட்டர் தூரம் தாண்டி தேசிய ஜூனியர் சாதனையை முறியடித்து தங்கம் வென்றார்.
    • மதுரையை சேர்ந்த அவர் இதற்கு முன்பு 16.63 மீட்டர் தூரம் தாண்டியதே சாதனையாக இருந்தது அவரது சாதனையை முறியடித்து புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார்.

    சென்னை:-

    கிரீஸ் நாட்டில் உள்ள வெனிசிலியா-ஷானியா நகரில் சர்வதேச தடகள போட்டி நடைபெற்றது.

    இந்த போட்டியில் தமிழகத்தை சேர்ந்த செல்வ பிரபு பங்கேற்றார். டிரிபிள் ஜம்ப் பந்தயத்தில் கலந்து கொண்ட அவர் தங்கப் பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்தார்.

    செல்வ பிரபு 16.78 மீட்டர் தூரம் தாண்டி தேசிய ஜூனியர் சாதனையை முறியடித்து தங்கம் வென்றார். மதுரையை சேர்ந்த அவர் இதற்கு முன்பு 16.63 மீட்டர் தூரம் தாண்டியதே சாதனையாக இருந்தது அவரது சாதனையை முறியடித்து புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார்.

    கடந்த ஆண்டு கொலம்பியாவில் நடந்த 20 வயதுக்குட்பட்ட உலக தடகள போட்டியில் செல்வ பிரபு 16.15 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் பெற்று இருந்தார். தற்போது சர்வதேச போட்டியில் தங்கப்பதக்கம் பெற்று முத்திரை பதித்தார்.

    செல்வ பிரபுவின் தந்தை திருமாறன் கூறும்போது, ' எனது மகனின் சாதனையை நினைத்து பெருமைபடுகிறேன். ஆசிய மற்றும் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் பெறுவான் என்று நம்பிக்கை உள்ளது' என்றார்.

    • 400 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டத்தில் சந்தோஷ் குமார் வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
    • ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா இதுவரை 5 தங்கம், ஒரு வெள்ளி உட்பட 10 பதக்கங்களை பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது.

    தாய்லாந்தில் நடைபெற்று வரும் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாடு வீரர் சந்தோஷ் வெண்கல பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.  4-வது நாளான இன்று நடைபெற்ற ஆண்களுக்கான 400 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டத்தில் சந்தோஷ் குமார் வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

    400 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டத்தில் 49.09 வினாடிகளில் இலக்கை எட்டினார். ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா இதுவரை 5 தங்கம், ஒரு வெள்ளி உட்பட 10 பதக்கங்களை பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது. 11 தங்கத்துடன் ஜப்பான் முதல் இடத்திலும், 5 தங்கம், 7 வெள்ளி பெற்று சீனா இரண்டாவது இடத்திலும் உள்ளது.

    • 2018-ம் ஆண்டு முதல் உணவு விநியோகிப்பாளராக வேலை பார்த்து வந்த அவர் கிரிக்கெட் வீரர் ஆவார்.
    • 10 ஆயிரம் பந்துவீச்சாளர்களை மதிப்பீடு செய்த நெதர்லாந்து அணி நிர்வாகம் லோகேஷ் குமார் உள்பட 4 பேரை தேர்வு செய்தது.

    சென்னை:

    இந்தியாவில் நடைபெற உள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக ஒவ்வொரு அணியும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் நெதர்லாந்து அணிக்கு வலை பயிற்சி பந்து வீச்சாளராக தமிழக வீரர் ஒருவர் தேர்வாகி உள்ளார். சென்னையை சேர்ந்தவர் லோகேஷ் குமார் (வயது 29). 2018-ம் ஆண்டு முதல் உணவு விநியோகிப்பாளராக வேலை பார்த்து வந்த அவர் கிரிக்கெட் வீரர் ஆவார்.

    இதற்கிடையே நெதர்லாந்து அணிக்கு வலைபயிற்சி பந்துவீச்சாளர் தேவை என்ற விளம்பரத்தை பார்த்து விண்ணப்பித்தார். இடது கை வேகப்பந்து மற்றும் சைனாமேன் பந்து வீச்சாளராக அவர் தனது பந்து வீசும் வீடியோக்களை சமூக வலைதளத்தில் அனுப்பி வைத்தார். இந்தியாவில் இந்து சுமார் 10 ஆயிரம் பந்துவீச்சாளர்களை மதிப்பீடு செய்த நெதர்லாந்து அணி நிர்வாகம் லோகேஷ் குமார் உள்பட 4 பேரை தேர்வு செய்தது.

    இதுகுறித்து லோகேஷ் குமார் கூறும்போது, இது எனது வாழ்க்கையின் விலை மதிப்பற்ற தருணங்களில் ஒன்றாகும். நான் இன்னும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் மூன்றாம் பிரிவு லீக்கில் கூட விளையாடவில்லை. நான்கு ஆண்டுகளாக 5-வது பிரிவில் விளையாடினேன். நடப்பு சீசனில் 4-வது பிரிவில் பதிவு செய்துள்ளேன்.

    நெதர்லாந்து அணியால் ஒரு வலைப்பந்துவீச்சாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது எனது திறமைக்கு அங்கீகாரம் கிடைத்ததாக உணர்கிறேன். நெதர்லாந்து அணி வீரர்கள் என்னை உற்சாகமுடன் வரவேற்றனர். இது உங்கள் அணி தாராளமாக உணருங்கள் என்று என்னிடம் தெரிவித்தனர். நெதர்லாந்து அணியின் விளம்பரத்தை பார்த்து அதற்கு முயற்சி செய்ய முடிவு எடுத்தேன். அதிக சைனாமேன் பந்துவீச்சாளர்கள் இல்லாததால் நான் தேர்வு செய்யப்படுவேன் என்ற நம்பிக்கை இருந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கர்நாடகாவின் ஆலூரில் நடந்து வரும் நெதர்லாந்து அணியின் பயிற்சி முகாமில் லோகேஷ் குமார் இணைந்து உள்ளார்.

    • நிலா ராஜா பாலுவுடன் இணைந்து 125 புள்ளிகளை பெற்று 2-வது இடத்தை பிடித்தார்.
    • எனது 8-வது வயதில் துப்பாக்கி சுடுதலில் நுழைந்தேன்.

    சென்னை:

    கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியில் துப்பாக்கி சுடுதலில் 'டிராப்' கலப்பு அணிகள் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த எஸ்.எம்.யுகன் வெள்ளிப்பதக்கம் பெற்றார். அவர் நிலா ராஜா பாலுவுடன் இணைந்து 125 புள்ளிகளை பெற்று 2-வது இடத்தை பிடித்தார்.

    வெள்ளி பதக்கம் வென்ற யுகனுக்கு 12 வயது தான் ஆகிறது. கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் இளம் வயதில் பதக்கம் பெற்று அவர் சாதித்துள்ளார். இதுகுறித்து யுகன் கூறியதாவது:-

    கேலோ இந்தியா விளையாட்டில் பதக்கம் வென்றதால் நான் மிகவும் பெருமை அடைகிறேன். எனக்கு ஆதரவாக இருந்த எனது பெற்றோருக்கு இந்த பதக்கத்தை அர்ப்பணிக்கிறேன்.

    எனது 8-வது வயதில் துப்பாக்கி சுடுதலில் நுழைந்தேன். 'டிராப்' பிரிவில் எனது கவனத்தை செலுத்தினேன். ஒரே நேரத்தில் படிப்பு மற்றும் பயிற் சியை நிர்வகிப்பது எனக்கு சற்று கடுனமாகவே இருக்கிறது. ஆனால் இரண்டையும் ஒரே நேரத்தில் கையாள்வதில் எனக்கு நம்பிக்கை இருக்கி றது.

    இவ்வாறு யுகன் கூறி உள்ளார்.

    கடந்த ஆண்டு நடந்த தேசிய போட்டிகளில் அவர் 125 இலக்குகளில் 108 புள்ளிகளை பெற்றதால் கேலோ இந்தியா விளையாட்டுக்கு முன்னேறினார்.

    • குகேசுக்கு தமிழக அரசு முழு ஆதரவை வழங்குவதில் பெருமிதம் கொள்கிறது.
    • செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றிருப்பது தமிழகத்திற்கு உலக அளவில் பெருமை சேர்த்து இருக்கிறது.

    சென்னை:

    கனடாவில் நடந்த கேன்டிடேட் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற சென்னையை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் டி.குகேசுக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி:

    தமிழ்நாட்டை சேர்ந்த குகேஷ் மிக இளம் வயதில் பீடே கேன்டிடேட் சர்வதேச போட்டியில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தமைக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்:

    பீடே கேன்டிடேட்ஸ் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் எலைட் விளையாட்டு வீரர் மற்றும் கிராண்ட்மாஸ்டர் டி.குகேசுக்கு வாழ்த்துக்கள். 17 வயதான சென்னையின் பெருமை இந்திய செஸ்சில் அபாரமான சாதனையை நிகழ்த்தியுள்ளது. விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு கேண்டிடேட்ஸ் போட்டியில் வெற்றி பெற்ற இரண்டாவது இந்திய வீரர் குகேஷ் ஆவார். உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்திற்காக டிங்லிரனுக்கு சவால் விடும் வகையில் அவர் தயாராகும் அவருக்கு நல்வாழ்த்துக்கள். குகேசுக்கு தமிழக அரசு முழு ஆதரவை வழங்குவதில் பெருமிதம் கொள்கிறது.

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை:

    17 வயதில் கேன்டிடேட் செஸ் போட்டியில் வெற்றி பெற்று உலக சரித்திரம் படைத்த கிராண்ட் மாஸ்டர் குகேசுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    உங்களது உறுதியும், விடா முயற்சியும் நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளது. செஸ் உலகில் மிகப்பெரிய இடத்தைப் பிடிக்க விரும்பும் அனைத்து இளம் திறமையாளர்களுக்கும் குகேஷ் உத்வேகமாக இருக்கிறார்.

    தமிழ்நாட்டைச் சேர்ந்த குகேஷ் கேண்டி டேட்ஸ் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றிருப்பது தமிழகத்திற்கு உலக அளவில் பெருமை சேர்த்து இருக்கிறது.

    17 வயதாகும் சென்னையைச் சேர்ந்த குகேஷ் உலக சாம்பியனுடன் போட்டியிட உள்ளார் என்பது தமிழகத்திற்கு பெருமையாக இருக்கிறது. இந்திய நாட்டிற்கு புகழ் சேர்க்கிறது. உலக அளவில் இளம் வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றிருக்கும் குகேசை தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் பாராட்டி, வாழ்த்துகிறேன்.



    • தமிழக துப்பாக்கி சுடுதல் வீரர் பிருத்வி ராஜ் தொண்டைமான் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
    • இவர் ஏற்கனவே உலக துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    புதுடெல்லி:

    33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஜூலை மாதம் 26-ம் தேதி தொடங்கி ஆகஸ்டு 11-ம் தேதி வரை நடைபெறுகிறது.

    இந்நிலையில், தமிழகத்தை சேர்ந்த துப்பாக்கிச் சுடுதல் வீரர் பிருத்வி ராஜ் தொண்டைமான் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

    ஆடவர் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் பிருத்விராஜ் தொண்டைமான் தகுதி பெற்றுள்ளதாக தேசிய துப்பாக்கிச்சுடுதல் சங்கம் அறிவித்துள்ளது.

    பிருத்வி ராஜ் தொண்டைமான் புதுக்கோட்டையைச் சேர்ந்தவர். இவரது தலைமையில் ஒலிம்பிக் தொடருக்கான 5 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    இவர் ஏற்கனவே உலக துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்றது.
    • குகேஷ், கருப்பு நிற காய்களுடன் விளையாடி சீன வீரரை வீழ்த்தி உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார்.

    இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்றது.

    13 சுற்றுகள் முடிவில் குகேசும், லிரெனும் தலா இரு ஆட்டங்களில் வெற்றி பெற்று இருந்தார்கள். மற்ற அனைத்து ஆட்டங்களும் டிராவில் முடிந்தன. இதனால், இருவரும் தலா 6½ புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தார்கள்.

    இந்நிலையில், இன்று 14-வது மற்றும் கடைசி சுற்று நடந்தது. இதில் குகேஷ், கருப்பு நிற காய்களுடன் விளையாடி சீன வீரரை வீழ்த்தி உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார்.

    14வது சுற்றுகள் கொண்ட இந்த தொடரில் 7.5 புள்ளிகள் பெற்று குகேஷ் வெற்றி பெற்றுள்ளார்.

    18 வயதிலேயே குகேஷ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். பட்டம் வென்ற நிலையில், குகேஷ் ஆனந்த கண்ணீர் சிந்தியுள்ளார்.

    உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றது குறித்து குகேஷ் கூறியதாவது:-

    உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது 2 வருட தீவிர பயிற்சிக்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறேன்.

    உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் தயாராகி வந்தேன்.

    ஒவ்வொரு செஸ் வீரருக்கும் உள்ள கனவுதான் இன்று எனக்கு நனவாகியுள்ளது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×