என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டயட்"

    • அட்கின்ஸ் டயட் முறையை, மருத்துவரின் ஆலோசனையை பெற்று பின்பற்றலாம்.
    • இளசுகளிடம் தற்போது பிரபலமாக இருக்கும் உணவு முறை 'அட்கின்ஸ் டயட்'.

    இளசுகளிடம் தற்போது பிரபலமாக இருக்கும் உணவு முறை 'அட்கின்ஸ் டயட்'. வழக்கமான உணவு முறையில், சிறிய மாறுதல்கள் மட்டும் செய்வது இந்த உணவு முறையின் சிறப்பு. அதைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

    அட்கின்ஸ் முறையின் அடிப்படை விதி, கார்போஹைட்ரேட் இல்லாத அல்லது குறைவாக உள்ள உணவு வகைகளை சாப்பிடுவதாகும். நாம் சாப்பிடும் உணவில் இருக்கும் கார்போஹைட்ரேட் எனும் மாவுச்சத்து மற்றும் கொழுப்புச்சத்து தான், உடல் எடை அதிகரிப்புக்குக் காரணம். இதில், கொழுப்பைக் கரைப்பதிலேயே பலரும் கவனம் செலுத்துகின்றனர்.

    ஆனால், மாவுச்சத்து அதிகரிப்பைப் பற்றி கவலை கொள்வதில்லை. அட்கின்ஸ் உணவு முறையில், கார்போஹைட்ரேட் அளவைக் குறைத்தால், உடல் எடையைக் குறைக்க முடியும் என்று உறுதியாக கூறப்படுகிறது. கார்போஹைட்ரேட்டை குறைக்கும் போது, உடலின் வளர்ச்சிதை மாற்றம் தூண்டப்பட்டு, இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்துகிறது. இது, குளுக்கோசை எரித்து சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் கொண்டு வர உதவும். உடலில் தேங்கியிருக்கும் கெட்ட கொழுப்புகளையும் கரைத்து வெளியேற்றும். இதனால் எடைக் குறைப்பு என்பது எளிதாகிறது.

    அட்கின்ஸ் டயட்டின் 4 நிலைகள்:

    ஆரம்ப நிலையில், நாம் எடுத்துக்கொள்ளும் உணவில் மாவுச்சத்து எனும் கார்போஹைட்ரேட் 20 கிராம் மட்டுமே இருக்க வேண்டும். அவற்றையும் காய்கறி சாலட், பழங்கள் ஆகியவற்றின் மூலமே பெற வேண்டும். கீரைகளை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். அடுத்த நிலையில், 30 கிராம் வரை கார்போஹைட்ரேட் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால், இவற்றில் அதிகம் உலர் பழங்கள், விதைகள், மாவுச்சத்து அதிகமில்லாத காய்கறிகள், குறைந்த அளவிலான பெர்ரி பழ வகைகள் ஆகியவற்றை சாப்பிடலாம்.

    இதனால், 2-வது வாரத்திலேயே எடைக் குறைப்பைப் பார்க்க முடியும். மூன்றாவது நிலையில், பராமரித்தல் முறையில், எடைக் குறைப்பை மெதுவாகக் கொண்டு செல்ல வேண்டும். இதில் முழு தானியங்கள், புரதம் உள்ள உணவுகள், நல்ல கொழுப்புள்ள உணவுகள், பால் பொருட்கள் ஆகியவற்றை சாப்பிடலாம். இதில், உடல் எடை குறைய குறைந்தபட்சம் 1 மாதம் வரை தேவைப்படும்.

    நான்காவது நிலையில், சீரான எடையை வாழ்நாள் முழுவதும் பராமரிப்பது முக்கியமானதாகும். இதற்கு அனைத்து சத்துக்களும் நிறைந்த சரிவிகித உணவைத் தொடர்ந்து சாப்பிட வேண்டும். எடைக் குறைப்பில் உணவுகள் மூலம் 70 சதவீத கலோரிகளை எரித்தால், மீதமுள்ள 30 சதவீத கலோரிகளை உடற்பயிற்சியால் மட்டுமே எரிக்க முடியும். தண்ணீர் போதுமான அளவு குடிக்க வேண்டும்.

    கிழங்கு வகைகள், சோளம், மாம்பழம், சப்போட்டா, அன்னாசிப்பழம், வாழைப்பழம், பப்பாளி வகைகள், பேக்கரி உணவுகள், இனிப்பு வகைகள், எண்ணெய்யில் பொரித்த உணவுகள், துரித உணவுகள், பதப்படுத்திய உணவுகள், டின்களில் அடைக்கப்பட்ட உணவுகள், வெள்ளை நிறப் பொருட்கள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். அட்கின்ஸ் டயட் முறையை, மருத்துவரின் ஆலோசனையை பெற்ற பின்னரே பின்பற்ற வேண்டும்.

    • இன்று உடல் பருமன் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
    • உணவை பார்க்கும் விதத்தை மாற்றுங்கள்.

    இன்று உடல் பருமன் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. அதனால் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள பலரும் பல ஆயிரங்களை செலவு செய்கின்றனர். குறிப்பாக உடல் எடையைக் குறைப்பதற்காக டயட், ரன்னிங், நடைப்பயிற்சி, ஜிம், விளையாட்டு, யோகா என ஏராளமான வழிமுறைகளை மாதக்கணக்கில் கடைப்பிடிக்கிறார்கள். இதற்காக தினமும் சில மணி நேரங்களை ஒதுக்குகிறார்கள்.

    அத்துடன் எடை குறைப்பிற்காகவும், உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதற்காகவும் மேற்கொள்ளும் ஒவ்வொரு விஷயத்தையும் பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு லைக்குகளை அள்ளுகிறார்கள். ஆனாலும் சிலரைத் தவிர மற்றவர்களுக்கு சரியான ரிசல்ட் கிடைப்பதில்லை.

    இந்தநிலையில், ``உணவை பார்க்கும் விதத்தை மாற்றுங்கள். உங்களால் மன நிறைவாக சாப்பிட முடியும். அதேநேரத்தில் உங்களின் எடையும் குறையும்...'' என்று அடித்துச் சொல்கிறது இங்கிலாந்தில் செய்யப்பட்ட சமீபத்திய ஆய்வு. இந்த ஆய்வை மேற்கொண்ட `அய்ன் ட்ரீ' மருத்துவமனை, 500 பேரிடம் உணவு குறித்த சர்வேயை எடுத்திருக்கிறது. இந்த ஆய்வை ராபர்ட் என்ற மருத்துவர் தலைமையேற்று, நடத்தி முடித்திருக்கிறார்.

    ``உணவை எப்படி வேறு விதமாக பார்ப்பது?'' என்ற கேள்விக்கு ராபர்ட் பதில் அளிக்கிறார்.

    ``உணவுக்கும், மனதுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. நவீன வாழ்க்கையின் பரபரப்பில் அவசர அவசரமாக ஒரு கடமையை நிறைவேற்றுவதை போல சாப்பிடுகிறோம். சாப்பிடும் நேரத்தில் கூட மனதை எங்கேயோ அலையவிட்டு பதற்றத்துடன் இருக்கிறோம். அல்லது ஸ்மார்ட்போனை பார்த்துக்கொண்டே உணவை உள்ளே தள்ளுகிறோம். நமக்கு பசிக்கவில்லை அல்லது உணவு பிடிக்கவில்லை என்றாலும் கூட நேரம் தவறாமல் சாப்பிட வேண்டும் என்பது எழுதப்படாத ஒரு விதியாகவே ஆகிவிட்டது.

    முக்கியமாக சுவையானதை தேடித்தேடி சாப்பிடுகிறோம். அது உடலுக்கு ஆரோக்கியமானதா என்று கூட பார்ப்பதில்லை. முதலில் இந்த பழக்கத்தை மாற்றுங்கள். தியானத்தில் ஈடுபடுவதை போல முழு மனதையும் செலுத்தி உணவை உண்ணுங்கள். ஆரோக்கியமான உணவை தேடிப்பிடித்து சாப்பிடுங்கள். முக்கியமாக, பசிக்கும்போது மட்டும் சாப்பிடுங்கள். அப்புறம் பாருங்கள், உங்களின் எடை குறைவது மட்டுமல்லாமல் உணவைப் பார்க்கும் விதமே மாறி இருக்கும்'' என்றார்.

    • உலகம் முழுவதும் அண்மைக்காலங்களில் வீகன் டயட் முறை மிகவும் பிரபலமாகி வருகிறது
    • இந்த வீகன் உணவு முறையால் உடலுக்கு தேவையான பல சத்துக்கள் கிடைக்காமல் போகலாம் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்

    உலகம் முழுவதும் அண்மைக்காலங்களில் வீகன் டயட் முறை மிகவும் பிரபலமாகி வருகிறது. வீகன் டயட் முறையை பின்பற்றுபவர்கள் இறைச்சி உணவுகள் மட்டுமில்லாமல், கால்நடைகளின் மூலம் கிடைக்கும் பால், தயிர், முட்டை போன்ற உணவுப் பொருட்களையும் உட்கொள்ள மாட்டார்கள்.

    முழுக்க முழுக்க காய்கறி, பழங்களை மட்டுமே மையப்படுத்திய இந்த உணவு முறையால் உடலுக்கு தேவையான பல சத்துக்கள் கிடைக்காமல் போகலாம் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனாலும் உலகம் முழுவதும் பலர் இந்த உணவு முறையை பின்பற்றுகின்றனர்.

    இந்நிலையில் ரஷ்ய நாட்டில் வீகன் டயட் முறையை பின்பற்றுவதாக கூறி, உணவு, தண்ணீர், தாய்ப்பால் என எதுவும் கொடுக்காததால் பிறந்த குழந்தை ஒன்று 1 வயது நிறைவடைவதற்குள் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

    வீகன் டயட் முறையை தீவிரமாக பின்பற்றும் 44 வயதான மாக்சிம் லியுட்டி, ஒரு வயதுக்கும் குறைவான மற்றும் 1.5 கிலோ எடையுள்ள தனது குழந்தைக்கு சூரிய ஒளியில் இருந்து ஊட்டச்சத்து கிடைக்கும் என்று பட்டினி போட்டுள்ளார்.

    குழந்தையின் தாயான ஒக்ஸானா மிரோனோவா (34) தனது குழந்தைக்கு தாய்ப்பால் கூட கொடுக்க கூடாது என மாக்சிம் லியுட்டி தடுத்துள்ளார்.

    மேலும் தனது குழந்தையை வைத்து பரிசோதனை செய்த அவர், குழந்தைக்கு சூரிய ஒளியால் கிடைக்கும் நன்மைகள் குறித்து மற்றவர்களுக்கு எடுத்து கூறியுள்ளார்.

    உணவு, தண்ணீர், தாய்ப்பால் கொடுக்கப்படாததால் உடல் மெலிந்த குழந்தை நிமோனியா நோயால் உயிரிழந்துள்ளது என்று மருத்துவ அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் தனது மகனை பட்டினி போட்டு கொலை செய்த குற்றத்தில் மாக்சிம் லியுட்டிக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    இதே போல் கடந்தாண்டு தீவிர வீகன் டயட் உரையை பின்பற்றிய 39 வயது பெண்மணி ஸன்னா சம்சனோவா பரிதாபமாக மரணமடைந்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    ரஷ்யாவை சேர்ந்த அவர், உணவு தண்ணீர் எடுக்காமல் தீவிரமாக வீகன் டயர் முறையை பின்பற்றினார். இதனால் நாளுக்கு நாள் உடல் மெலிந்து வந்த அவர் ஊட்டச்சத்து குறைப்பாட்டால் உயிரிழந்தார்.

    கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வீகனாக இருந்து வரும் இவர் பலருக்கும் வீகன் டயட் முறையை பின்பற்றுவது குறித்து இன்ஸ்டாவில் ரீல்ஸ் போன்றவற்றை தயார் செய்து பலருக்கும் முன்னுதாரணமாகவும் இருந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தற்போதைய காலக்கட்டத்தில் பலர் உடல் பருமனுக்கு ஆளாகிறார்கள்.
    • ஒரு பிடித்த உணவை சாப்பிட எண்ணம் வந்தாலும், இது போன்ற நபர்கள் கூறிய வீடியோக்கள் கண் முன்னே வந்துப் போவதால்

    தற்போதைய காலக்கட்டத்தில் பலர் உடல் பருமனுக்கு ஆளாகிறார்கள். இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. வாழ்க்கை முறை, தரம் கெட்ட உணவுகள், வேலை பளு, மனச் சோர்வு என்று ஏகப்பட்ட காரணங்களை கூறிக் கொண்டே இருக்கலாம்.

    இதனால் பலர் உடற்பயிற்சி, யோகா என அவரவர் விரும்பிய பயிற்சிகளை செய்கிறார்கள். அவர்களால் முடிந்த உடற்பயிற்சியில் ஈடுப்படுகின்றனர். இதனால் இன்ஸ்டாகிராமில் ஃபிட்னஸ் சார்ந்த கிரியேட்டர்ஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றனர். ஒவ்வொருவரும் தனக்கு தோன்றியதை கருத்தாக கூறி வருகின்றனர். ஒருவர் கூறும் தகவல்கள் குறித்து அறிவியல் ஆராய்ச்சி எதுவும் செய்யாமல் மேம்போக்காக வீடியோவில் கூறி விடுகின்றனர்.

    சமூக வலைதளங்களில் இப்படியொரு வழக்கம் இருப்பதைத் தொர்ந்து இன்ஸ்டாகிராமில் யாரை நம்புவது, எந்த தகவல் உண்மை என்பதை குழம்பி தவித்து வருகின்றனர். ஒரு பிடித்த உணவை சாப்பிட எண்ணம் வந்தாலும், இது போன்ற நபர்கள் கூறிய வீடியோக்கள் கண் முன்னே வந்துப் போவதால் அதை சப்பிட்டப் பின் இத்தனை கலோரிகள் கூடிவிடும் என்பதால் அவர்களுக்கு பிடித்த உணவுகளை கூட சாப்பிட முடியாமல் குற்ற உணர்ச்சியில் தவிக்கின்றனர்.

    அப்படி சமீப காலமாக ஃபிட்னஸ் செய்யும் நபர்களில் சிலர், நாம் சாப்பிடும் உணவின் கலோரியை உடலில் எரிக்க எத்தனை மணி நேரம் உடற்பயிற்சி செய்தால் அந்த உணவின் கலோரியை எரிக்க முடியும் என்று கூறிவருகிறார்கள். இந்த தகவல்களை முற்றிலும் மறுக்கும் கருத்துக்களை முன்னணி உடற்பயிற்சி நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

    இது குறித்த வீடியோவில் ஜார்டன் யோ ஃபிட்னஸ் கூறும் போது, உதாரணமாக நாம் சாப்பிடும் 1 சமோசாவில் 550 கலோரிகள் உள்ளன. அதன் கலோரியை எரிக்க வேண்டுமென்றால் நாம் 30 நிமிடம் ஓட வேண்டும் அல்லது 30 நிமிடம் நீச்சல் பயிற்சி வேண்டும் அல்லது 1 மணி நேரம் தீவிர உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

    ஆனால் மக்கள் தினசரி அவர்கள் பார்க்கும் வேலைக்கு ஏற்ப கலோரி நிறைந்த உணவுகளை எடுத்துக் கொண்டு வருகின்றனர். சராசரி மனிதன் தினசரி 1500 முதல் 2000 கலோரிகளை உணவாக உட்கொள்கிறார்கள். ஆனால் இவை அனைத்தும் நம்மால் உடற்பயிற்சியின் மூலம் எரிக்கவே முடியாத காரியம்.

    நாம் சாப்பிடும் பெரும்பாலான கலோரிக்கள் பிஎம்ஆர் என சொல்லப்படும் பேசல் மெடபாலிக் ரேட்டில் (Basal Metabolic Rate) தான் 60 சதிவீததுக்கும் மேற்பட்ட கலோரிக்கள் எரிக்கப்படுகிறது. 20 சதவீத கலோரி NEAT என கூறப்படும் நாட் எக்சர்சைஸ் ஆக்டிவிட்டி லெவல் (Not Exercise Activity Level) உதவியுடன் நாம் கலோரிக்களை எரிக்கிறோம்.

    அந்த வகையில் ஒருவர் தனது உடல் எடையை குறைக்க அதிகளவு உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடுகளை பின்பற்றாமல், பிஎம்ஆர் அடிப்படையில் அவரவர் உடலுக்கு தேவையானதை விட குறைந்த அளவு கலோரி கொண்ட உணவுளை உட்கொண்டாலே நாளடைவில் உடல் எடை தானாக குறையும்.

    இதனால் மக்களுக்கு கூற வருவது என்னவென்றால், மனதுக்கு பிடித்திருப்பதை சாப்பிடுங்கள். உங்களால் முடிந்த அளவுக்கு உடற்பயிற்சி செய்யுங்கள். உடல் எடை கூடி இருந்தாலும், உடல் எடை குறைந்து இருந்தாலும் கவலைப்படாமல் மனதில் தைரியத்துடன் எல்லாம் விஷயத்தையும் அணுகுங்கள், என்று தெரிவித்தார்.

    இந்த வீடியோவை பார்த்த பலரும் இவருக்கு நன்றியும், இது தொடர்பான சந்தேகங்களையும் கமென்ட் செய்து வருகின்றனர்.

    • உணவுக் கட்டுப்பாடு [டயட்டிங்] துறை எவ்வாறு இயங்குகிறது என்ற தனது பார்வைகளை போட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றிலே அவர் பகிர்ந்துகொண்டார்.
    • ஆறு மாதங்களுக்கு பிறகு எடை குறைப்பு முயற்சிகளை மீண்டும் தொடங்கினேன்.

    பிரபல இந்தி சீரியல் மற்றும் தொலைக்காட்சி பிரபலம் ராம் கபூர். சமீபத்தில் தனது எடையில் 55 கிலோவை குறைத்துள்ளார். தனது எடை குறைப்பு அனுபவம் குறித்தும் அவர் எதிர்கொண்ட சவால்கள் மற்றும் உணவுக் கட்டுப்பாடு [டயட்டிங்] துறை எவ்வாறு இயங்குகிறது என்ற தனது பார்வைகளை போட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றிலே அவர் பகிர்ந்துகொண்டார்.

    நான் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு எடை குறைப்பை ஆரம்பித்தேன், இதுவரை 55 கிலோ எடையைக் குறைத்துள்ளேன். முதல் ஆறு மாதங்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது, ஆனால் பின்னர் நான் ஒரு விபத்தில் மற்றும் என் தோள்பட்டையில் காயம் அடைந்தேன். இதற்கு அறுவை சிகிச்சை மற்றும் எட்டு மாதங்கள் பிசியோதெரபி தேவைப்பட்டது, இது எனது எடை குறிப்பு பயணத்தை இடைநிறுத்தியது.

    இறுதியில், மேலும் ஆறு மாதங்களுக்கு பிறகு எடை குறைப்பு முயற்சிகளை மீண்டும் தொடங்கினேன், இது எனது மாற்றத்திற்கு வழிவகுத்தது. நான் ஓசெம்பிக், பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை அல்லது எடை இழப்பு மருந்துகளை பயன்படுத்தவில்லை.

    நான் பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை செய்தேன் என்று மக்கள் கருதினர், ஆனால் நான் ஏன் அதை மறைக்க வேண்டும்? இதற்கு முன், நான் ஐந்து ஆண்டுகளாக எடை இழப்பு பயணத்தில் இருந்தேன் மற்றும் 30 கிலோகிராம் இழந்தேன். ஆனால் அந்த எடை மீண்டும் கூடியது.

    என்ன செய்யக்கூடாது என்று அந்த அனுபவம் எனக்குக் கற்றுக் கொடுத்தது. நான் எண்ணற்ற இரவுகளை நிபுணர்கள் எழுதிய புத்தகங்களைப் படித்து பாட்காஸ்ட்களைப் பார்த்தும் தெரிந்துகொண்டேன் என்று தெரிவித்தார்.

    மேலும் டயட்டிங்கை சுற்றி இயங்கும் தொழில்துறையை விமர்சித்த அவர்,20 பில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள சந்தை கொண்ட டயட்டிங் தொழில், அதை பயன்படுத்தும் மக்கள் அடையும் தோல்வியில் செழிக்கிறது.

    அவை உங்களை தோல்வியடையச் செய்வதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. எடை குறைந்து நீங்கள் அவர்களிடம் திரும்பிச் செல்லவில்லை என்றால் அவர்கள் எப்படி தொழில் செய்வார்கள்?

    அவர்கள் எடை குறையும் என்று உறுதியளிக்கிறார்கள். ஆனால் அதை எவ்வாறு குறைந்த எடையை பராமரிப்பது என்பதை மக்களுக்கு கற்பிக்கத் தவறுகிறார்கள்.

    எடை குறைந்ததும் நீங்கள் மீண்டும் தவறான பாதையை தேர்ந்தெடுக்கிறீர்கள். அது மீண்டும் உங்கள் எடையை அதிகரிக்க செய்கிறது. எனவே நிலையான மாற்றத்திற்கு தனிப்பட்ட [மன] மாற்றம் தேவை. அதை அவர்கள் கூறுவதே இல்லை என்று தெரிவித்துள்ளார்.

    மேலும் தனது தினசரி வாழ்க்கை முறை குறித்து தெரிவித்த அவர்., நான் இப்போது தினமும் இரண்டு முறை சாப்பிடுகிறேன்- காலை 10:30 மற்றும் மாலை 6:30 மணி க்கு சாப்பிடுகிறேன்.  எனது வொர்க்அவுட்டில் 45 நிமிடங்கள் கார்டியோ மற்றும் வலிமை பயிற்சி அடங்கும். நீரேற்றமாக இருப்பதும், தரமான தூக்கத்தை உறுதி செய்வதும் மிக முக்கியம் என்று தெரிவித்தார். 

    • அதிக எடை குறைப்புக்கான டயட்டை அவர் பின்பற்றி வந்த நிலையில், அவரது உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்டது.
    • ஸ்ரீநந்தாவின் வயிறு மற்றும் உணவுக்குழாய் சுருங்கிவிட்டதை மருத்துவர்கள் கண்டுபிடித்து சிகிச்சை அளித்தனர்.

    திருவனந்தபுரம்:

    'யூ-டியூப்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஏராளமான வீடியோக்கள் பதிவிடப்படுகின்றன. அவற்றில் உடல் ஆரோக்கியம் தொடர்பான வீடியோக்கள் அதிகமாக இருக்கும். அவற்றை பின்பற்றி நடந்தால் பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கிறது.

    அதே நேரத்தில் சில ஆதாரமற்ற வீடியோக்களை பார்ப்பவர்கள், அதனை பின்பற்றி நடக்கும் போது பிரச்சனைகளையும் சந்திக்கிறார்கள். உடல் ஆரோக்கியம், நோய் பாதிப்பு உள்ளிட்ட விஷயங்களை மருத்துவர்கள் ஆலோசனை இல்லாமல் செய்வது சில நேரங்களில் நமது உயிருக்கே ஆபத்தான விஷயமாக மாறிவிடுகிறது.

    அப்படித்தான் கேரளாவில் ஒரு சம்பவம் தற்போது நடந்திருக்கிறது. உடல் எடையை குறைப்பதற்காக 'யூ-டியூப்' வீடியோவை பார்த்து உணவு கட்டுப்பாட்டை கடைபிடித்த கல்லூரி மாணவி ஒருவர், உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார்.

    கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கூத்து பரம்பா பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதரன். இவரது மனைவி ஸ்ரீஜா. இவர்களது மகன் யதுவந்த், மகள் ஸ்ரீநந்தா (வயது18). மட்டனூரில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாமாண்டு இளங்கலை படித்து வந்த ஸ்ரீநந்தா, தனது உடல் எடை அதிகமாக இருப்பதாக எண்ணினார்.

    இதனால் தனது உடல் எடையை குறைக்க திட்டமிட்டார். இதற்காக அவர் உடல் எடை குறைப்பு தொடர்பான வீடியோக்களை யூ-டியூப்பில் பார்த்துள்ளார். அந்த வீடியோக்களில் வருவது போன்று உணவை குறைத்து சாப்பிட்டபடி இருந்திருக்கிறார்.

    அதிக எடை குறைப்புக்கான டயட்டை அவர் பின்பற்றி வந்த நிலையில், அவரது உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவரை அவரது குடும்பத்தினர் தலச்சேரி கூட்டுறவு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

    ஆகவே அவர் கோழிக்கோடு மருத்துவக்கல்லுரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். உடல் எடையை குறைப்பதற்காக உணவு சாப்பிடுவதை குறைத்ததன் காரணமாக ஸ்ரீநந்தாவின் வயிறு மற்றும் உணவுக்குழாய் சுருங்கிவிட்டதை மருத்துவர்கள் கண்டுபிடித்து சிகிச்சை அளித்தனர்.

    இருந்தபோதிலும் சிகிச்சை பலனின்றி மாணவி ஸ்ரீநந்தா பரிதாபமாக இறந்தார். இதனால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். மகளை இழந்த பெற்றோர் கதறி துடித்தனர்.

    மாணவி இறந்தது குறித்து அவருக்கு சிகிச்சையளித்த தலச்சேரி கூட்டுறவு மருத்துவமனையின் டாகடர் நாகேஷ்பிரபு கூறியிருப்பதாவது:-

    உணவுக்கோளாறு காரணமாக வரக்கூடிய அனோரெக்சியா நெர்வோ சாவால் மாணவி பாதிக்கப்பட்டிருந்தார். உடல் எடையை அதிகமாக குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் பசியுடனே இருந்திருக்கிறார். தண்ணீர் உணவையே அதிகமாக சாப்பிட்டுள்ளார்.

    இந்த உணவு முறையை 6 மாதங்களாக பின்பற்றியுள்ளார். மாணவி ஸ்ரீநந்தா விஷயத்தில் அவரது உடில் சோடியம் மற்றும் சர்க்கரை அளவுகள் குறைந்தது. அதனை சரிசெய்த பிறகும் அவற்றின் அளவு குறைந்த படியே இருந்தது.

    அனோரெக்சியா நெர்வோசா மேற்கத்திய நாடுகளில் பொதுவானது. ஆனால் கேரளாவில் மிகவும் அரிதானது. அனோரெக்சியா நெர்வோசா பாதிப்புக்கு உள்ளாகுபவர்கள் காலப்போக்கில் தங்களின் பசி உணர்வை இழக்கிறார்கள். இது அனைத்து வயது மற்றும் உடல்வகையினரையும் பாதிக்கும்.

    சரியான நேரத்தில் சிகிச்சை பெற்றால் குணமடைதல் சாத்தியமாகும். இருப்பினும் இத்தகைய கோளாறுகள் ஒரே நாள் இரவில் குணமாகாது. ஒருவர் பாதிக்கப்பட்ட காலத்தின் தீவிரம் மற்றும் நீளத்தை பொறுத்து குணமடைய நீண்ட காலம் ஆகலாம்.

    அனோரெக்சியா நெர்வோசா என்பது முற்றிலும் ஒரு உணவு கோளாறும் இல்லை. இது ஒரு உளவியல் நிலையாகும். எனவே மாணவி ஸ்ரீநந்தா நீண்ட காலத்துக்கு முன்பே மனநல சிகிச்சை எடுத்திருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

    ×