search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திமுக ஆட்சி"

    • ராமர் ஆட்சியின் நீட்சிதான் தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் தி.மு.க.வின் ஆட்சி.
    • யாருடைய தயவிலும் ஆட்சி அமைக்கக்கூடிய சூழ்நிலை எங்களுக்கு ஏற்படாது.

    ராமர் ஆட்சியில் ஏற்றத்தாழ்வு இல்லாமல் அனைவரும் சமம் என்று இருந்துபோல், திமுக ஆட்சியிலும் தற்போது நடைபெற்று வருகிறது என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

    புதுக்கோட்டையில் நிகழ்ச்சி ஒன்றில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்துக் கொண்டு பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    திராவிட மாடல் ஆட்சியின் முன்னோடியாக நாங்கள் ராமனைப் பார்க்கிறோம். ஏற்றத்தாழ்வு இருக்கக்கூடாது என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்ட காவியம் ராம காவியம்.

    சமத்துவத்தையும், சமூக நீதியும் எல்லோருக்கும் சமம் என்று போதித்தவர் ராமன்.

    ராமர் ஆட்சியின் நீட்சிதான் தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் தி.மு.க.வின் ஆட்சி. 2026 சட்டப்பேரவை தேர்தலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்துள்ள சாதனையால் அருதி பெரும்பான்மையோடு தி.மு.க. ஆட்சி அமைக்கும்.

    யாருடைய தயவிலும் ஆட்சி அமைக்கக்கூடிய சூழ்நிலை எங்களுக்கு ஏற்படாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாட்டின் வளர்ச்சி மீது தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் பிரதமரை மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
    • சென்னையில் தேசிய கட்சியின் தலைவர் ஒருவர் பட்டப்பகலில் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.

    அவினாசி:

    பாராளுமன்ற தேர்தலில் நீலகிரி தொகுதியில் பா.ஜ.க., சார்பில் போட்டியிட்ட மத்திய தகவல், ஒளிபரப்புதுறை மற்றும் பாராளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் எல்.முருகன் தொகுதிக்குட்பட்ட அவினாசி பகுதியில் வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நேற்றிரவு நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பேசியதாவது:-

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜக கட்சிக்கு மிகப்பெரிய ஆதரவு அளித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சி அமைத்திருப்பது சாதாரண விஷயம் அல்ல. இது ஒரு சரித்திர நிகழ்வாகும். நாட்டின் வளர்ச்சி மீது தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் பிரதமரை மக்கள் கொண்டாடி வருகின்றனர். அதனால்தான் தொடர்ந்து 3-வது முறையாக மக்கள் நரேந்திர மோடியை தேர்ந்தெடுத்துள்ளனர்.

    அவிநாசி- அத்திக்கடவு திட்டம் நிறைவேற்ற பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது .ஆனால் தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன் அதை கிடப்பில் போட்டுவிட்டது. பவானியில் தண்ணீர் இல்லை என்று தி.மு.க.வினர் கூறி வருகின்றனர். ஆனால் இன்று பவானியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. எனவே உடனடியாக நடவடிக்கை எடுத்து பவானி ஆற்று தண்ணீரை அவிநாசி- அத்திக்கடவுக்கு கொண்டு வர வேண்டும்.

    நீண்ட நாள் கோரிக்கையான மேட்டுப்பாளையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ரெயில் சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீலகிரி மாவட்டத்தில் விளையக்கூடிய தேயிலை உள்ளிட்ட மற்ற பொருட்கள் தூத்துக்குடி துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். இதன் மூலம் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்.

    நாம் இந்த பகுதியில் வெற்றி வாய்ப்பை தவற விட்டு இருக்கலாம். ஆனால் மக்கள் மனதில் என்றும் இடம் பிடித்துள்ளோம். அதனால்தான் 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வாக்களித்துள்ளனர்.

    கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பது வேதனைக்குரிய செய்தியாகும். தமிழகத்தில் இன்று சட்ட ஒழுங்கு மிகவும் சீர்கெட்டு உள்ளது. சென்னையில் தேசிய கட்சியின் தலைவர் ஒருவர் பட்டப்பகலில் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இதுபோன்று தமிழகத்தில் ஏராளமான கொலைகள் சமீபகாலமாக நடந்து வருகிறது. ஆகையால் தி.மு.க.வை நாம் தூக்கி எறிய வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணியால் மட்டும்தான் இங்கு நிரந்தரமான தீர்வை கொடுக்க முடியும். அவிநாசி பகுதியில் ஏராளமான சிறு, குறு நெசவாளர்கள் இருக்கின்றனர். இத்தகைய சூழ்நிலையில் தி.மு.க.வினர் தொடர்ந்து மின்சார கட்டண உயர்வை செய்து வருகின்றனர். இதன் மூலம் நெசவாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே மக்களை தி.மு.க. ஆட்சியில் இருந்து பாதுகாக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒருசில கொலை நிகழ்வுகளைத் தவிர, ஏனைய குற்றங்களில் உண்மைக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை.
    • உண்மைக் குற்றவாளிகள் இதுவரை பிடிபடாமல் இருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    யார் ஆட்சியில் இருந்தாலும் அங்கொன்றும், இங்கொன்றும் தனிப்பட்ட காரணங்களுக்காகவும், வக்கிர புத்தி படைத்தவர்களாலும், ஒருசில கொலைகள் நடப்பது இயல்பு. குற்றவாளிகளை காவல் துறையினர் கண்டுபிடித்து கைது செய்வது நடைமுறை.

    ஆனால், தி.மு.க. ஆட்சியில் கொலைகள் செய்வதையே தொழிலாகக் கொண்டு பலர் தமிழகம் முழுவதும் சுற்றிச் சுற்றி வந்து வெறியாட்டம் ஆடுவதும், பல கொலைகளில் ஈடுபட்ட கொலையாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் காவல் துறையினர் திணறுவதும் கண்கூடாகும்.

    பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும், வழக்கறிஞருமான ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில்கூட 'நாங்கள்தான் செய்தோம்' என்று தானாகவே முன்வந்து சிலர் சரணடைந்துள்ளதும், அதில் ஒருவரை சென்னை மாநகர் காவல் துறையினர் என்கவுண்டர் செய்ததும் விந்தையான சம்பவமாகும்.


    காங்கிரஸ் கட்சியின் நெல்லை மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் படுகொலை, சேலம் மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பகுதிக் கழகச் செயலாளர் சண்முகம் படுகொலை, மதுரையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி பாலசுப்பிரமணியன் படுகொலை என்று கட்சி பேதமின்றி பல படுகொலைகள் அரங்கேறிய வண்ணம் உள்ளன.

    இவற்றில் ஒருசில கொலை நிகழ்வுகளைத் தவிர, ஏனைய குற்றங்களில் உண்மைக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. உண்மைக் குற்றவாளிகள் இதுவரை பிடிபடாமல் இருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. 2021-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்தபிறகு தமிழகத்தின் தலைநகராம் சென்னை கொலை நகரமாக மாறியுள்ளது என்ற நிலையில், கடந்த 200 நாட்களாக தமிழகமே கொலைக்களமாக மாறியுள்ளது. மக்கள் தங்களது உயிருக்கு பாதுகாப்பில்லாத சூழ்நிலையில் வாழ்வது அபாயகரமான ஒன்றாகும்.

    தி.மு.க. ஆட்சியில் தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 80 கொலைகளும், பிப்ரவரி மாதம் 64 கொலைகளும், மார்ச் மாதம் 53 கொலைகளும்; ஏப்ரல் மாதம் 76 கொலைகளும், மே மாதம் 130 கொலைகளும், ஜூன் மாதம் 104 கொலைகளும், ஜூலை 17-ந் தேதி வரை 88 கொலைகளும் என, மொத்தம் சுமார் 200 நாட்களில் 595 கொலைச் சம்பவங்கள் அரங்கேறி உள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

    தமிழகத்தில் சென்னை மாநகரில் மட்டும் 86 கொலைச் சம்பவங்கள் அரங்கேறி முதலாவது இடத்தைப் பிடித்துள்ளது, இரண்டாவது மதுரையில் 40 கொலைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 35-ம், விருதுநகரில் 31 கொலைகளும் நடைபெற்று முறையே மூன்றாவது, நான்காவது இடங்களைப் பிடித்துள்ளன என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

    'அடுத்தவர்கள் சொல்வதை நாம் ஏன் கேட்க வேண்டும்' என்ற இரு மாப்போடு இனியும் செயல்படாமல், சுய சிந்தனையோடு கொலை பாதகர்களிடமிருந்து மக்களை எப்படி காப்பாற்ற வேண்டும் என்று சிந்தித்து, போர்க்கால அடிப்படையில் இந்த அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அ.தி.மு.க. சார்பில் வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தி.மு.க. ஆட்சியில் பிறப்பிக்கப்பட்டிருக்கும் சமூகநீதிக்கு எதிரான இந்த ஆணை கண்டிக்கத்தக்கதாகும்.
    • உயர் கல்வித்துறை செயலாளரின் ஆணைப்படியே மாணவர் சேர்க்கை நடைபெறுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் அனைத்து வகையான கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையின் போது இட ஒதுக்கீடு எவ்வாறு கடைபிடிக்கப்பட வேண்டும் என்பதற்கு தெளிவான முறையில் விதிகள் வகுக்கப்பட்டிருக்கும் நிலையில், அவற்றில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அநீதி இழைக்கும் வகையில் திருத்தம் செய்து கல்லூரிக் கல்வி இயக்குனர் ஆணை பிறப்பித்திருக்கிறார். தி.மு.க. ஆட்சியில் பிறப்பிக்கப்பட்டிருக்கும் சமூகநீதிக்கு எதிரான இந்த ஆணை கண்டிக்கத்தக்கதாகும்.

    கல்லூரிக் கல்வி இயக்குனரின் வழிகாட்டுதல்படி, அடுத்தக்கட்ட மாணவர் சேர்க்கை வரும் 8-ந் தேதி முதல் தொடங்கவுள்ள நிலையில், அதற்கு முன்பாக கல்லூரிக் கல்வி இயக்குனரின் ஆணை ரத்து செய்யப்பட வேண்டும். மே 22-ந் தேதியிட்ட உயர் கல்வித்துறை செயலாளரின் ஆணைப்படியே மாணவர் சேர்க்கை நடைபெறுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பொது வினியோகத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தமிழ்நாடு அரசு படுதோல்விடைந்து விட்டது.
    • உளுத்தம் பருப்பு மீண்டும் நியாய விலைக்கடைகள் மூலம் வழங்கப்படும் என்று தேர்தலின் போது தி.மு.க. வாக்குறுதி அளித்தது.

    சென்னை:

    பா.ம.கா. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    வெளிச்சந்தையில் துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவற்றின் விலையேற்றத்தைத் தடுக்க வேண்டும், ஏழை மக்களுக்கு அவை கட்டுபடியாகும் விலையில் கிடைக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் தான் சிறப்பு பொதுவினியோகத் திட்டம் தொடங்கப்பட்டது.

    பருப்பு, பாமாயில் ஆகியவற்றை வாங்குவதற்கான ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டு ஒரு மாதத்திற்கும் மேலாகும் நிலையில், மக்களுக்கு அந்தப் பொருட்கள் இன்னும் வழங்கப்படாததன் மூலம் சிறப்பு பொது வினியோகத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தமிழ்நாடு அரசு படுதோல்விடைந்து விட்டது என்பது உறுதியாகியிருக்கிறது.


    தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், ஏற்கனவே நிறுத்தப்பட்ட உளுத்தம் பருப்பு மீண்டும் நியாய விலைக்கடைகள் மூலம் வழங்கப்படும் என்று தேர்தலின் போது தி.மு.க. வாக்குறுதி அளித்தது. ஆனால், இன்று வரை அந்தத் திட்டம் செயல்படுத்தப்படவில்லை.

    மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்களை உடனே வழங்க தமிழக அரசின் பொதுவழங்கல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழ்நாட்டில் உள்ள 2.36 கோடி வீட்டு மின் நுகர்வோர்கள் பயன் பெற்று வருகின்றனர்.
    • 1,68,000 விசைத்தறி நுகர்வோர்கள் இந்த அரசை மனதார பாராட்டி வருகின்றனர்.

    சென்னை:

    தமிழக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள தகவலில் கூறி இருப்பதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2021-ல் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் மின் உற்பத்திக்காகப் புதிய பல திட்டங்களை உருவாக்கி வருகிறார். மூன்றாண்டுகளில் 2 லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்க ஆணையிட்டு வழங்கி வருகிறார்.

    "94987 94987" என்னும் கைபேசி எண் வழியாக, நுகர்வோர் மின்சாரம் தொடர்பாக, ஏற்படும் சிக்கல்கள் குறித்து புகார்களைப் பதிவு செய்திட "மின்னகம்" எனும் சேவை மையத்தினை 20.6.2021 அன்று தொடங்கி வைத்தார். இந்த மின்னகம் வழியாக மக்கள் இதுவரை தெரிவித்த 23 லட்சத்து 97 ஆயிரத்து 957 புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டு 99.82 சதவீதப் புகார்கள் மீது தீர்வுகள் காணப்பட்டது.

    ஆட்சிப் பொறுப்பேற்ற 2021-ல் ஆண்டில் 32,595 மெகாவாட்டாக இருந்த தமிழ்நாட்டின் மொத்த மின் நிறுவுதிறன் இப்போது 36,671 மெகாவாட் என அதிகரித்துள்ளது.

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின், மின்கட்டமைப்பு, 30.4.2024 அன்று ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 454.32 மில்லியன் யூனிட் மின்சாரத்தையும், 2.5.2024 அன்று 20,830 மெகாவாட் உச்ச மின் தேவையையும் எவ்விதத் தடங்கலுமின்றி வழங்கி சாதனை படைத்து உள்ளது.

    10.9.2023 அன்று காற்றாலை மூலம் பெறப்பட்ட அதிகபட்ச மின் உற்பத்தி 120.25 மில்லியன் யூனிட்டுகளும் 23.4.2024 அன்று சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் கிடைக்கப்பெற்ற அதிகபட்ச மின் உற்பத்தி 40.50 மில்லியன் யூனிட்டுகளும் தமிழ்நாடு மின்சாரத் தேவைகளை ஈடுசெய்வதில் பெரிதும் துணைபுரிந்துள்ளன.

    இந்த அரசு பதவியேற்ற நாளில் இருந்து 3,984 மெகாவாட் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையங்கள், தமிழ்நாடு மின் கட்டமைப்பில் இணைக்கப்பட்டு சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையங்களின் மொத்த நிறுவு திறன் 8,496 மெகாவாட்டாக உயர்ந்து, தமிழ்நாட்டு மக்களுக்கு மிகுந்த பயனளிக்கிறது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுக்குத் தடையற்ற மின்சாரத்தை வழங்குவதில் ஆர்வம் கொண்டு செயல்படுத்தும் முனைப்பான திட்டங்களால் அனல் மின் நிலையம் மூலம் 2023-24-ம் ஆண்டில் 25,479 மில்லியன் யூனிட்டுகள் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.

    29.8.2021 முதல் அதிக மின்பளுவுள்ள பகுதிகள் மற்றும் குறைந்த மின்னழுத்தம் நிலவிய பகுதிகளில் தடையின்றிச் சீரான மின்சாரம் வழங்குவதற்காக இதுவரை மொத்தம் 11,038 புதிய மின்மாற்றிகள் நிறுவப்பட்டன.

    டெல்டா மாவட்டங்களின் கடலோரம் அமைந்துள்ள துணை மின் நிலையங்களுக்கு இடையே செல்லும் 33 கே.வி. மேனிலை உயரழுத்த மின் கம்பிகள் புதைவடங்களாக மாற்றப்பட்டு தடையில்லா மின்சாரம் வழங்கப்படுகிறது.

    சுசீந்திரம், ஸ்ரீரங்கம் கோவில்களின் தேரோடும் வீதிகளில் மேலே செல்லும் உயரழுத்த மின்கம்பிகள் புதைவட மின்பாதைகளாக மாற்றப்பட்டுள்ளன.

    33/11 கி.வோ துணை மின் நிலையங்கள் 46 நிறுவப்பட்டுள்ளன. 17,785 கி.மீ உயர் அழுத்த மின் பாதைகளும் 31,705 கி.மீ தாழ்வழுத்த மின் பாதைகளும் நிறுவப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டன.

    சென்னையில், மழைக்காலங்களின் போது மழை நீர் தேங்கும் இடங்களில் உள்ள மின் தூண் பெட்டிகள் கண்டறியப்பட்டு, 5,086 மின்தூண் பெட்டிகள் தரை மட்டத்திலிருந்து 1 மீட்டர் உயரத்திற்கு உயர்த்தப் பட்டுள்ளன.

    மழைக் காலங்களின் போதும் சீரான மின்சாரம் வழங்குவதற்காக, துணை மின் நிலையங்களில் உள்ள 41 திறன் மின் மாற்றிகளின் அடித்தளம் 1 மீட்டர் உயரத்திற்கு உயர்த்தப்பட்டன.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சீரிய வழி காட்டுதலின்படி சிறப்பான பல விருதுகளை பெற்றுச் சாதனைகள் பல படைத்து உள்ளது தமிழ்நாடு அரசின் மின்துறை.

    10.9.2022 முதல் திருத்தப்பட்ட மின்கட்டணத்தில், வீட்டு மின் நுகர்வோர்களுக்கு நிலைக் கட்டணம் இரு மாதங்களுக்கு ரூ.20 முதல் ரூ.50 வரை செலுத்துவதில் இருந்து முழுவிலக்கு அளிக்கப்பட்டு, நுகர்வோர்களிடம் இருந்து மின் பயன்பாட்டுக் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. இதனால், தமிழ்நாட்டில் உள்ள 2.36 கோடி வீட்டு மின் நுகர்வோர்கள் பயன் பெற்று வருகின்றனர்.

    கைத்தறி நெசவாளர்களுக்கு இரு மாதங்களுக்கு 200 யூனிட்டுகள் மட்டுமே இலவசம் என்ற நிலை மாற்றிய மைக்கப்பட்டு இரு மாதங்களுக்கு 300 யூனிட்டுகள் இலவசம் என உயர்த்தி வழங்கியது இந்த அரசு. இதனால் தமிழ்நாட்டில் உள்ள 73,642 கைத்தறி நெசவாளர்கள் பயன் பெற்று வருகின்றனர்.

    விசைத்தறி நெசவாளர்களுக்கு இரு மாதங்களுக்கு 750 யூனிட்டுகள் இலவசம் என்ற நிலை மாற்றப்பட்டு இரு மாதங்களுக்கு 1,000 யூனிட்டுகள் இலவசம் என உயர்த்தப்பட்டது. மேலும், மின் கட்டண உயர்வில் 35 காசுகள், யூனிட் இரு மாதங்களுக்கு 1,001 யூனிட் முதல் 1,500 யூனிட் வரை மற்றும் 70 காசுகள் / யூனிட் இரு மாதங்களுக்கு 1,500 யூனிட்டுகளுக்கு மேல் உள்ள மின் நுகர்வுக்கு குறைக்கப்பட்டுள்ளது.

    இதனால், தமிழ்நாட்டில் உள்ள 1,68,000 விசைத்தறி நுகர்வோர்கள் இந்த அரசை மனதார பாராட்டி வருகின்றனர். 2.36 கோடி வீட்டு நுகர்வோர்களுக்கு, 1.7.2023 முதல் 2.18 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட வில்லை. இதனால் ஏற்படும் நிதிச்சுமையை மக்களிடம் சுமத்தாமல் அரசே ஏற்று உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தி.மு.க.வை அழிப்பேன் என்று கூறியவர்கள் தான் அழிந்து போயிருக்கிறார்கள்.
    • மத்திய சென்னையில் தயாநிதி மாறனை கூடுதல் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்.

    சென்னை:

    சென்னையில் இன்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    பிரதமர் மோடி தமிழ் நாட்டிலேயே தங்கி பிரசாரம் செய்தாலும் தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட பாரதிய ஜனதா வெற்றி பெறாது. பிரதமர் மோடி மட்டுமல்ல அவரது தாத்தா வந்தாலும் தி.மு.க.வை தொட்டுப் பார்க்க முடியாது.

    70 ஆண்டுகளாக தி.மு.க.வை அழிப்பேன் என்று கூறியவர்கள் தான் அழிந்து போயிருக்கிறார்கள். பிரதமர் மோடி 2 நாட்கள் தமிழகத்திலேயே தங்கி வாயிலேயே வடை சுட்டு இருக்கிறார்.

    மத்திய சென்னையில் தயாநிதி மாறனை கூடுதல் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். தமிழகத்தில் கோவிலுக்கு செல்வார்கள். ஆனால் உதயசூரியனுக்கு ஓட்டு போடும் அளவுக்கு தெளிவானவர்கள்.

    இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

    • காவிரி டெல்டா மாவட்டங்களை பொன்விளையும் பூமியாக காத்தது அ.தி.மு.க. அரசு.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசைக் கண்டிக்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், தமிழகத்துக்குக் காவிரி நீர் பெற்றுத்தராத தி.மு.க. அரசை கண்டித்தும் தஞ்சாவூர் திலகர் திடலில் அ.தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் திருவாரூர் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான காமராஜ் வரவேற்று பேசினார்.

    ஆர்ப்பாட்டத்திற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை தாங்கி பேசியதாவது:-

    காவிரி டெல்டா மாவட்டங்களை பொன்விளையும் பூமியாக காத்தது அ.தி.மு.க. அரசு. ஆனால் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மீத்தேன், ஈத்தேன் திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டு விவசாயிகளுக்கு துரோகம் செய்தார்.

    இதனால் மத்திய அரசு டெல்டாவில் ஹைட்ரோகார்பன் எடுக்க தனியாருக்கு அனுமதி கொடுத்தனர். இதன் காரணமாக விவசாய நிலங்கள் பறிபோய் விடுமோ என விவசாயிகள் அச்சத்தில் உறைந்தனர். அவர்களின் அச்சத்தை போக்கும் வகையில் நானும் ஒரு விவசாயி என்பதால் காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக எனது தலைமையிலான அ.தி.மு.க. அரசு அறிவித்து சட்டம் கொண்டு வந்தது. இதனால் இன்றைக்கு மட்டுமல்ல எப்போதுமே மீத்தேன், ஹைட்ரோகார்பன் எடுக்க முடியாது. இதனை சாதித்தது அ.தி.மு.க. அரசாங்கம்.

    விவசாயிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசு என்றால் அது அ.தி.மு.க அரசுதான். விவசாயி நலமோடு வாழ அதிமுக அரசு எப்போதும் உதவும். காவிரி பிரச்சனையில் சட்டப் போராட்டம் நடத்தி அதற்கு தீர்வு கண்டதும் அ.தி.மு.க அரசுதான்.


    ஜெயலலிதா எண்ணங்கள் படி 50 ஆண்டுகால காவிரி பிரச்சனைக்கு தீர்வு கண்டோம். உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை நிறைவேற்ற நம்முடைய கோரிக்கையை அ.தி.மு.க.வின் 37 எம்பிக்கள் நடைமுறைப்படுத்த பாராளுமன்றத்தில் வலியுறுத்தி பாராளுமன்றத்தை ஒத்திவைக்க செய்ததும் அதிமுக தான். ஆனால் தற்போது தி.மு.க ஆட்சியில் விவசாயிகளுக்கு வேதனை தான் மிஞ்சியது.

    மேலும் நமக்கு கிடைக்க கூடிய காவிரி நீர் கிடைக்கவில்லை. மேகதாதுவிலும் அணை கட்டுவோம் என கர்நாடகா அரசு தொடர்ந்து கூறி வருகிறது. அதை திராணியில்லாத தி.மு.க அரசு கண்டு கொள்வதில்லை. போராடிப் பெற்றுத் தந்த வெற்றியை காக்க தவறியதும் தி.மு.க. அரசு தான்.

    காவிரி ஆணையத்தில் கர்நாடகாவிற்கு மேகதாது அணை கட்ட வைக்கப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக தமிழக அரசு அதிகாரிகள் ஓட்டு அளித்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளி நடப்பு செய்யாமல் திமுக அரசின் அதிகாரிகள் தீர்மானத்திற்கு ஆதரவாக ஓட்டளித்தது சரியான செயல் அல்ல.

    மேகதாது அணைகட்ட கருத்துரு வரக்கூடாது என்று அதிமுக போராடியது. ஆனால் தற்போது காவிரி ஆணையத்தில் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது அது எந்த வகை தீர்மானம் என்று தெரியாத நிலை உள்ளது.

    காவிரியில் இருந்து உரிய நீர் திறந்து விடாததால் டெல்டா மாவட்டங்களில் 3.5 லட்சம் ஏக்கரில் பயிர்கள் காய்ந்து வீணாகி விட்டது.

    பயிர் காப்பீடு திட்டத்தில் சேர்க்கப்பட்டு இருந்தால் ஒரு எக்டேருக்கு ரூ.84 ஆயிரம் நிவாரணம் கிடைத்து இருக்கும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதேப்போல் சம்பா, தாளடியும் உரிய தண்ணீரின்றி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

    அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக காவிரி-கோதாவரி இணைப்பு திட்டம், காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்தை முடிக்காமல் தி.மு.க. அரசு கிடப்பில் போட்டுள்ளது. தூர் வாரப்படாதால் ஏரி, குளங்களுக்கு தண்ணீர் செல்ல முடியாத நிலை. பொதுப்பணித்துறை வசம் உள்ள 14,000 ஏரிகள், ஊராட்சி நிர்வாகங்கள் வசம் உள்ள 26,000 குளங்கள் ஆகியவற்றை குடிமராமத்து திட்டம் மூலம் புனரமைத்து தூர் வார உத்தரவிட்டது அதிமுக அரசுதான்.

    அப்பொழுது ஏரி குளங்களில் இருந்து வண்டல் மண்ணை விவசாயிகள் எடுத்துச் சென்று தங்கள் வயல்களில் இயற்கை உரமாக பயன்படுத்தினர். ஆனால் தற்போது அவ்வாறு செய்ய இயலுமா? குடிமராமத்து திட்டம் மூலம் மழை நீர் சேகரிக்கப்பட்டது. நிலத்தடி நீர் உயர்ந்தது. குடிநீர் தடை இன்றி கிடைத்தது. அந்தத் திட்டத்திற்கும் மூடு விழா நடத்தியது திமுக அரசு தான்.

    தற்போது இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் போதை பொருள் விற்பனை அதிகமாக உள்ளது. திமுக அயலக அணியை சேர்ந்த ஜாபர்சாதிக் என்பவர் 2000 கோடி போதை பொருட்கள் கடத்தியதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

    போதை பொருள் நிறைந்த மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது. இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திறமையில்லாத ஆட்சி தான் காரணம்.

    போதைப்பொருள் வழக்கில் மத்திய அரசு தனி கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுங்கள். அவர்கள் எம்.பியாகி தமிழக விவசாயிகளுக்காக பாராளுமன்றத்தில் ஓங்கி குரல் கொடுப்பார்கள்.

    ஒருவேளை தி.மு.க. வெற்றி பெற்றால் தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தி.மு.க. ஆட்சியில் எஸ்.ஜ.எப்.ஐ. விளையாட்டு போட்டியில் கூட மாணவர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை.
    • பேருந்து சேவை குறைக்கப்பட்டதால் இலவச பேருந்து பயணமும் கிடைக்கவில்லை.

    ஈரோடு:

    செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கக்கோரி ஈரோட்டில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசினார்.

    தமிழ்நாட்டில் 13 ஆண்டுகள் எம்.ஜி.ஆர். ஆட்சி செய்தார். 5 முறை ஜெயலலிதா முதல்வரானார். பிறகு இ.பி.எஸ். மாநிலத்தில் ஆட்சி செய்தார். அத்திக்கடவு-அவினாசி குடிநீர் திட்டம் உட்பட பல நலத்திட்டங்கள் மற்றும் மேம்பாட்டு திட்டங்களை வழங்கினார்.

    ஆனால் தி.மு.க. ஆட்சியில் எஸ்.ஜ.எப்.ஐ. விளையாட்டு போட்டியில் கூட மாணவர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை. மின் விநியோகம் அவ்வப்போது தடைப்படுகிறது. பேருந்து சேவை குறைக்கப்பட்டதால் இலவச பேருந்து பயணமும் கிடைக்கவில்லை. கஞ்சா மற்றும் கள்ளச்சாராயம் அதிகரித்து வருகிறது. பல பகுதிகளில் குடிநீர் வினியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது.

    வரி பல மடங்கு உயர்த்தப்பட்டது. வணிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பால் விலை, சொத்து, தண்ணீர் வரி உயர்த்தப்பட்டது. மதுவின் மூலம் தி.மு.க.வுக்கு பல கோடி ரூபாய் தினசரி கிடைக்கிறது. நீட் தேர்வை ஒழிக்க வேண்டும் என்ற தனது தேர்தல் வாக்குறுதியை தி.மு.க. நிறைவேற்றவில்லை. அ.தி.மு.க. ஆட்சியின் திட்டங்கள் மட்டுமே தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளன. தி.மு.க. ஊழலால் வரும் பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும். அதைத்தொடர்ந்து தமிழக சட்டமன்றத் தேர்தலிலும் 234 தொகுதியில் அ.தி.மு.க அபார வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×