search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலெக்டர் அருணா"

    • அந்தந்த சோதனை சாவடிகளிலேயே இ-பாஸ் பெற்று தரப்படுகிறது.
    • இ-பாஸ் கட்டாயம் என்ற விழிப்புணர்வு வாசகம் அவசியம்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா கூறியிருப்பதாவது:-

    சென்னை ஐகோர்ட்டு, நீலகிரி மற்றும் கொடைக்கானல் பகுதிகளுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் தங்களுடைய விவரங்களையும், பயணிக்கும் வாகனங்களின் எண்களையும் அவர்கள் வரும் நாள், தங்கும் கால அளவு, தங்கும் இடம் ஆகிய விவரங்களை முன்கூட்டியே இணையதளத்தின் மூலமாக தெரிவித்து விண்ணப்பித்து இ-பாஸ் பெற்று அந்த அடிப்படையில் வாகனங்களும், சுற்றுலா பயணிகளும் அனுமதிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டு இருந்தது.

    இதனை பரிசாத்த முறையில் நடைமுறைப்படுத்தும் வகையில் நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களுக்கு இ-பாஸ் பெற்று வரும் நடைமுறை கடந்த 7-ந் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு உள்ளது.

    மேலும் இ-பாஸ் இல்லாமல் நீலகிரி மாவட்டத்துக்கு வருகை தரும் சுற்றுலாபயணிகளின் வாகனங்களுக்கு எந்தவொரு சிரமமின்றி இ-பாஸ் கிடைத்திடும் வகையில் அந்தந்த சோதனைச் சாவடிகளிலேயே மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பணியாளர்களை இ-பாஸ் பதிவு செய்யும் பணிகளில் ஈடுபடுத்தி இ-பாஸ் பெற்று தரப்படுகிறது.

    மேலும் மாவட்டத்தில் உள்ள துணை ஆட்சியர் நிலையில் அலுவலர்களை கொண்டு மேற்காணும் பணிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் கடந்த 6-ந் தேதி முதல் நேற்று 8-ந் தேதி மாலை வரை சுமார் 3 லட்சத்து 17 ஆயிரத்து 102 சுற்றுலாபயணிகள், 58 ஆயிரத்து 983 வாகன ங்களில் பயணம் செய்ய இ-பாஸ் முறையில் நீலகிரி மாவட்டத்துக்கு வருகை தர பதிவு செய்துள்ளனர்.

    இ-பாஸ் நடைமுறை குறித்து சுற்றுலாபயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அவர்கள் தங்கும் விடுதிளின் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள், தாங்கள் வழங்கும் அறை முன்பதிவிற்கான ரசீதில் நீலகிரி மாவட்டத்துக்குள் வருகை தருவதற்கு இ-பாஸ் கட்டாயம் என்ற விழிப்புணர்வு வாசகம் அவசியம் இடம்பெற்றிருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • வருகிற 10-ந்தேதி மலர் கண்காட்சியுடன் தொடங்க உள்ளது.
    • இ-பாஸ் தொடர்பாக மாலையில் தெரிவிக்கிறேன் என்றார்.

    ஊட்டி:

    நீலகிரியில் ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக கோடைவிழா நடத்தப்பட்டு வருகிறது. மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, பழ கண்காட்சி உள்பட பல்வேறு கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டுக்கான கோடைவிழா வருகிற 10-ந்தேதி மலர் கண்காட்சியுடன் தொடங்க உள்ளது. மலர் கண்காட்சியையொட்டி ஊட்டி தாவரவியல் பூங்காவில் தயார் செய்யப்பட்ட 388 ரகங்களில் 65 ஆயிரம் மலர் தொட்டிகளை மலர் மாடத்தில் காட்சிப்படுத்தும் பணியை கலெக்டர் அருணா இன்று தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஊட்டியில் வருகிற 10-ந் தேதி மலர் கண்காட்சி தொடங்குகிறது. 10-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி வரை என 10 நாட்கள் இந்த கண்காட்சி நடக்க உள்ளது.

     மலர் கண்காட்சியை பார்வையிட நுழைவு கட்டணமாக சிறியவர்களுக்கு ரூ.75 ஆகவும், பெரியவர்களுக்கு ரூ.150 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இதுதவிர ரோஜா கண்காட்சி மற்றும் பழக்கண்காட்சியும் நடத்த உள்ளோம் ரோஜா கண்காட்சி வருகிற 10-ந் தேதி தொடங்கி 19-ந் தேதி வரை நடக்கிறது.

    பழ கண்காட்சி 24-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை நடக்கிறது. ரோஜா கண்காட்சியை பார்வையிட நுழைவுக்கட்டணமாக சிறியவர்களுக்கு ரூ.500, பெரியவர்களுக்கு ரூ.100 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மலர் கண்காட்சியில் மொத்தம் 6.5 லட்சம் மலர்கள் மக்கள் பார்வையிட வைக்கப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    தொடர்ந்து நிருபர்கள் அவரிடம், நீலகிரியில் அமல்படுத்தப்பட உள்ள சுற்றுலா பயணிகளுக்கான இ-பாஸ் நடைமுறை குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த கலெக்டர் அருணா, இ-பாஸ் தொடர்பாக மாலையில் தெரிவிக்கிறேன் என்றார்.

    • மேட்டுப்பாளையம்- கோத்தகிரி, மேட்டுப்பாளையம்- குன்னூர் மலைப்பாதைகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
    • தொடர் மழையால் நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டது.

    நீலகிரி:

    வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக கோவை, நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்தது.

    நீலகிரி மாவட்டத்தில் நேற்று இரவு திடீரென கனமழை பெய்யத் தொடங்கியது. இரவு விடிய, விடிய மழை பெய்தது. குன்னூர், கோத்தகிரி பகுதியில் மழை வெளுத்து வாங்கியது. ரோட்டில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. நடுரோட்டில் மரங்களும் முறிந்து விழுந்தன.

    இதன் காரணமாக குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து தடைபட்டது. சாலையின் இருபுறமும் பல மணி நேரம் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றன.

    அந்த சாலையில் அரசு போக்குவரத்து கழக பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் மீது மரம் ஒன்று முறிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. அவர்கள் மாற்று வாகனங்கள் மூலம் ஊருக்குசென்றனர். அதிகபட்சமாக கீழ் கோத்தகிரியில் 24.1 செ.மீ. மழை பதிவாகி இருந்தது. தொடர் மழையால் நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டது.

    இந்நிலையில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் குன்னூர் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நீலகிரிக்கு வருவதை தவிர்க்குமாறு சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அருணா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    மேட்டுப்பாளையம்- கோத்தகிரி, மேட்டுப்பாளையம்- குன்னூர் மலைப்பாதைகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த பாதையை பொதுமக்கள் இன்று பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். கோவையில் இருந்து 2 தமிழக பேரிடர் மீட்பு படை வர உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

    • கலெக்டர் அருணா, முதியோர்களுடன் அமர்ந்து ஒன்றாக உணவு சாப்பிட்டார்.
    • கலெக்டர் கண் கலங்கியதை பார்த்ததும், அங்கிருந்த சக அதிகாரிகள் மற்றும் மூதாட்டிகள் அவரை தேற்றி சமாதானப்படுத்தினர்.

    ஊட்டி:

    கூடலூர் நகராட்சிக்குட்பட்ட மேல் கூடலூரியில் ராமகிருஷ்ணா முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது.

    இந்த முதியோர் இல்லத்தில், சமூக நலத்துறை சார்பில் உலக முதியோர் தினவிழா மற்றும் கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலெக்டர் அருணா கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து, அங்கிருந்த முதியவர்களுக்கு சால்வை அணிவித்து அவர்களை கவுரவப்படுத்தினார். மேலும் முதியோர் ஓய்வூதியம் பெறும் 100 வயதினை அடைந்த ஆண் மற்றும் 2 பெண் என மொத்தம் 3 முதியவர்களுக்கு ரூ.1,000 மதிப்பிலான சட்டை, வேட்டி மற்றும் துணிகளையும், பெண்களுக்கு ரூ.1000 மதிப்பிலான புடவையும், பெட்ஷீட்டுகளையும் வழங்கினார்.

    பின்னர் கலெக்டர் அருணா, முதியோர்களுடன் அமர்ந்து ஒன்றாக உணவு சாப்பிட்டார். முன்னதாக முதியோர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    அப்போது மூதாட்டிகள் சிலர், தாயின் பெருமை பற்றிய பாடலை இசைக்கவிட்டு அதற்கு ஏற்ப நடனமாடினர். 'ஆசப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்... அம்மாவ வாங்க முடியுமா... நீயும் அம்மாவ வாங்க முடியுமா...' என்ற சினிமா பாடலும் ஒலிபரப்பப்பட்டு மூதாட்டிகள் நடனம் ஆடினார்கள். அந்த பாடல் வரிகளை கேட்டதும் கலெக்டர் அருணா திடீரென உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கி விட்டார்.

    சிறிது நேரம் கண் கலங்கியபடியே மூதாட்டிகளின் நடன நிகழ்ச்சியை கண்டு ரசித்தார். கலெக்டர் கண் கலங்கியதை பார்த்ததும், அங்கிருந்த சக அதிகாரிகள் மற்றும் மூதாட்டிகள் அவரை தேற்றி சமாதானப்படுத்தினர். இது அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சி அடைய செய்தது.

    இதைத்தொடர்ந்து சிறப்பாக நடனம், பாட்டு பாடிய முதியோர்களின் திறமையை கலெக்டர் அருணா பாராட்டினார். இதில் கூடலூர் ஆர்.டி.ஓ. முகமது குதரதுல்லா, மாவட்ட சமூக நல அலுவலர் பிரவீனா தேவி, நாவா சங்க செயலாளர் ஆல்வாஸ், ஸ்ரீராமகிருஷ்ணா முதியோர் இல்ல நிர்வாகி வசந்தகுமாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டு உள்ள இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
    • சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப்படலாம்.

    சென்னை:

    சென்னை மாவட்ட கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் ஆட்சியில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தொன்றுதொட்டு சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. சுற்றுச் சூழல் பாதுகாப்பில் மக்க ளாகிய நமக்கு மிகப்பெரிய கடமை இருக்கிறது. நீர் நிலைகள் (கடல், ஆறு மற்றும் குளம்) நமக்கு குடி நீர் ஆதாரத்தை தருகிறது.

    நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் வருகிற விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும்போது, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்களின்படி (www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் உள்ளது) மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டு உள்ள இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    எனவே, பொது மக்களுக்கு கீழ்க்கண்டவாறு வேண்டுகோள் விடப்படுகிறது.

    * களிமண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டர் ஆப்பாரிஸ் (பி.ஒ.பி.), பிளாஸ்டிக் மற்றும் தெர்மா கோல் (பாலிஸ்டிரின்) கலவையற்றதுமான, சுற்றுச் சூழலை பாதிக்காத மூலப் பொருள்களால் மட்டுமே செய்யப்பட்டதுமான விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படுகிறது.

    * சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம். மேலும், சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப்படலாம்.

    * ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தொர்மாக்கோல் பொருட்களை பயன்படுத்த கண்டிப்பாக அனுமதிக்கப்படாது. நீர் நிலைகள் மாசுபடுவதை தடுக்கும் பொருட்டு, வைக்கோல் போன்ற சுற்றுச் சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள், பந்தல்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும்.

    * சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம், எண்ணை வண்ணப்பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது, மாற்றாக சுற்றுச்சூழலுக்கு தகுந்த நீர் சார்ந்த, மக்கக் கூடிய, நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

    * சிலைகளை அழகுபடுத்த வண்ணப்பூச்சுகள் மற்றும் பிற நச்சு ரசாயனங்கள் கொண்ட பொருட்களுக்கு பதிலாக, இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்தப் படவேண்டும்.

    * விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் தமிழ் நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும்.

    விநாயக சதுர்த்தி விழாவினை சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு கொண்டாடும்படி பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    மேலும் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர், காவல் துறை கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோரை அணுகலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • குறைந்த பட்சம் 50 சதவீதம் மதிப்பெண்கள் மற்றும் ஆங்கிலத்தில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    • உடற்தகுதியாக குறைந்தபட்ச உயரம் 152.50 சென்டிமீட்டர் ஆண்களும், 152 சென்டி மீட்டர் பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.

    சென்னை:

    சென்னை மாவட்ட கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    இந்திய விமானப் படையில் அக்னி வீர்வாயு பதவிகளுக்கு சேர்வதற்கான வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்.

    வயது வரம்பு 27.6.2003 முதல் 27.12.2006 வரையிலான காலத்தில் பிறந்தவராகவும் இருக்க வேண்டும். கல்வித் தகுதியாக கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கிலத்துடன் இடைநிலை, 10-ம் வகுப்பு, பிளஸ்-2வுக்கு சமமான தேர்வில் குறைந்த பட்சம் 50 சதவீதம் மதிப்பெண்கள் மற்றும் ஆங்கிலத்தில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது பொறியியல் (மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல், கம்ப்யூட்டர் சயின்ஸ்) 3 ஆண்டு டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும்.

    உடற்தகுதியாக குறைந்தபட்ச உயரம் 152.50 சென்டிமீட்டர் ஆண்களும், 152 சென்டி மீட்டர் பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.

    இப்பதவிகளுக்கு சம்பளமாக மாதம் ரூ.30 ஆயிரம் மற்றும் பிற சலுகைகளும் வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட அளவு ஊதிய உயர்வும் வழங்கப்படும். ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் http://agnipathvayu.cdac.in என்ற இணைய தளத்திலும் உடனடியாக விண்ணப்பிக்கவும்.

    மேலும் விவரங்களுக்கு 044-24615160 என்ற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    ×