என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புகை மூட்டம்"

    • தேர்தல் நேரங்களில் அரசியல் கட்சியினர் பலரும் குப்பை கிடங்கை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்து வருகிறார்கள்.
    • தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. தீ வேகமாக பரவியதால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பீச் ரோடு பகுதியில் வலம்புரி விளை குப்பை கிடங்கு உள்ளது. மாநகர பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு கொட்டப்பட்டு வருகிறது. இதனால் குப்பைகள் மலை போல் குவிந்து கிடக்கின்றன.

    நாகர்கோவில் நகரின் மையப்பகுதியில் உள்ள இந்தக் குப்பை கிடங்கை மாற்ற வேண்டும் என்று அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். தேர்தல் நேரங்களில் அரசியல் கட்சியினர் பலரும் குப்பை கிடங்கை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்து வருகிறார்கள்.

    ஆனால் இதுவரை குப்பை கிடங்கு மாற்றப்படவில்லை. இந்த குப்பை கிடங்கில் குப்பைகள் மலை போல் தேங்கி கிடப்பதால் அவ்வப்போது தீ விபத்து ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. இன்று அதிகாலையில் வலம்புரி விளை குப்பை கிடங்கில் இருந்து புகை மண்டலம் வந்தது. இதை பார்த்த அங்கு பணியில் இருந்த ஊழியர்கள், மாநகராட்சி அதிகாரிகளுக்கும், நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அதற்குள் தீ மளமளவென்று பரவி கொழுந்து விட்டு எரிந்தது. அதனை தீயணைப்பு வீரர்கள் அணைக்க முயன்றனர். ஆனால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. தீ வேகமாக பரவியதால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

    காற்றும் வீசியதால் அந்த பகுதியை சுற்றியுள்ள குடியிருப்புகளை புகை மண்டலம் சூழ்ந்தது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் அவதிக்குள்ளானார்கள். நேரம் செல்ல செல்ல புகை அதிகரித்து இருளப்பபுரத்திலிருந்து பீச் ரோடு வரும் சாலை முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

    அந்த பகுதி வழியாக வாகனங்கள் வர முடியாத நிலை ஏற்பட்டது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு இருந்ததால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளானார்கள். இந்நிலையில் தக்கலையில் இருந்தும் தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க தற்பொழுது போராடி வருகிறார்கள். ஜே..சி.பி. எந்திரம் மூலமாக குப்பைகள் கிளறப்பட்டு தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    தீ விபத்து பற்றி தகவல் அறிந்ததும் மாநகராட்சி மேயர் மகேஷ் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். தீயை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அறிவுறுத்தினார்கள்.

    இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், நாகர்கோவில் மாநகரப் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் தொடர்ந்து வலம்புரி விளை குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. குப்பை கிடங்கில் இருந்து துர்நாற்றமும் வீசுவதால் அந்த பகுதியில் உள்ள மக்கள் மூக்கை பிடித்து கொண்டு வாழ வேண்டிய நிலை உள்ளது. குப்பை கிடங்கை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அனைத்து கட்சியினரும் தெரிவித்து வருகிறார்கள். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

    இதனால் இந்த பகுதியைச் சேர்ந்த முதியவர்கள், குழந்தைகள் அனைவரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு மூச்சு திணறலும் ஏற்பட்டு வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வாக குப்பை கிடங்கை மாற்றுவதைத் தவிர வேறு வழி இல்லை. மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக குப்பை கிடங்கை மாற்றாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.

    • புகை மூட்டத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதி.
    • தேசிய நெடுஞ்சாலையில் முன்னால் செல்லும் வாகனம் தெரியாததால் மோதி அடுத்தடுத்து விபத்து ஏற்படுகிறது.

    டெல்லி, உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு வட மாநிலங்கள் கடுமையான புகை மூட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக டெல்லி, அதனையொட்டிய உத்தர பிரதேச நகரங்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

    பனி போன்று புகை மூட்டம் அடர்ந்து காணப்படுவதால் சாலைகளில் வாகனங்கள் செல்வதில் மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளது. அருகில் செல்லும் வாகனங்கள் தெரியாத அளிவற்கு புகை மூட்டம் சூழ்ந்துள்ளதால் விபத்துகள் அதிக அளவில் ஏற்பட்டுள்ளது.

    இன்று உத்தர பிரதேச மாநிலம் நொய்டா மற்றும் மேற்கு உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற விபத்தில் பைக்கில் சென்ற இருவர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

    கிழக்கு பெரிபெரல் எக்ஸ்பிரஸ்வே-யில் இரண்டு சரக்கு வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றான மோதி விபத்துக்குள்ளாகின.

    பானிபட்டில் இருந்து மதுரா சென்ற பேருந்து முன்னே சென்ற லாரி மீது மோதியுள்ளது. இதில் பேருந்தில் இருந்த 12-க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

    பரிசாபாத்தில் ஆக்ரா அருகே லாரி மீது கார் மோதி நின்ற நிலையில் அடுத்தடுத்த ஆறு வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் பலர் காயம் அடைந்தனர். இதேபோன்று ஏராளமான சொகுசு கார்கள் விபத்தை எதிர்கொண்டன.

    புலந்த்ஷாஹ்ர் என்ற இடத்தில் முன்னாள் சென்ற இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில், பைக்கில் சென்றவர் உயிரிழந்தார். பதான் என்ற இடத்திற்கு அருகில் அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று பைக் மீது மோதியதில் ஆசிரியர் பள்ளிக்கு சென்ற வழியில் உயிரிழந்தார்.

    • விமான நேரம் மாற்றம் குறித்து பயணிகளுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்.
    • புகை மூட்டம் மற்றும் பனிமூட்டம் காரணமாக முன்னெச்சரிக்கையாக 30க்கும் மேற்பட்ட விமான நேரம் மாற்றம்.

    சென்னை விமான நிலையத்தைச் சுற்றுயுள்ள பகுதிகளில் போகியையொட்டி கழிவுகள் எரிக்கப்படுவதால் கடும் புகை மூட்டம் ஏற்பட்டுள்ளது.

    இதனால், விமான நிலைய ஓடுபாதையை புகை மூட்டம் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், போகி பண்டிகை புகை மூட்டம் மற்றும் பனிமூட்டம் காரணமாக முன்னெச்சரிக்கையாக 30க்கும் மேற்பட்ட விமான நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

    போகி பண்டிகை புகைமூட்டம் காரணமாக கடந்த 2018ம் ஆண்டு 108 விமானங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் இருந்து இன்று காலை புறப்பட வேண்டிய 30க்கும் மேற்பட்ட புறப்பாடு மற்றும் வருகை விமானங்களின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    டெல்லி, பெங்களூரில் இருந்து இன்று அதிகாலை சென்னை வர வேண்டிய 3 பயணிகள் விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    விமான நேரம் மாற்றங்கள் குறித்து பயணிகளுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ×