search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெங்களூரு குண்டு வெடிப்பு"

    • பெங்களூரு ராமேஸ்வரம் கபே ஓட்டலில் கடந்த மார்ச் 1-ந்தேதி இரண்டு குண்டுகள் வெடித்ததில் 9 பேர் காயம்.
    • குண்டு வெடிப்பு தொடர்பாக என்.ஐ.ஏ. விசாரணை நடத்தி நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

    பெங்களூரு ஒயிட்பீல்டு அருகே குந்தலஹள்ளி, ஐ.டி.பி.எல். ரோட்டில் ராமேஸ்வரம் கபே ஓட்டல் அமைந்துள்ளது. இந்த ஓட்டலில் கடந்த மார்ச் மாதம் 1-ந்தேதி அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்தது. இதில் ஓட்டல் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் என 9 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் பெங்களூரு மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்வலையையும் ஏற்படுத்தி இருந்தது.

    இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அந்த குற்றப்பத்திரிகையில் கூறியிருப்பதாவது:-

    பெங்களூரு ராமேஸ்வரம் கபே ஓட்டலில் கடந்த மார்ச் 1-ந்தேதி நடைபெற்ற குண்டுவெடிப்பு தொடர்பாக முசாவீர் உசேன் சாஜிப், அப்துல் மதீன் அகமது தாகா, மாஸ் முனீர் அகமது, முஜாமில் ஷெரீப் ஆகிய 4 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டு இருந்தனர். அவர்கள் 4 பேர் மீதும் என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிவமொகா மாவட்டத்தை சேர்ந்த முசாவீர், அப்துல் மதீன் ஆகிய 2 பேரும், தங்களது சமூகத்தை சேர்ந்த இளைஞர்களை மூளைச்சலவை செய்து ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் சேர்த்து விட்டு வந்துள்ளனர்.

    இதுபோன்று, மற்ற 2 பயங்கரவாதிகளான மாஸ் முனீர் அகமது, முஜாமில் ஷெரீப்பும் தங்களது சமூகத்தை சேர்ந்த இளைஞர்களை, பயங்கரவாத அமைப்பில் சேர்த்து விடும் வேலைகளில் ஈடுபட்டு வந்தனர். இந்திய சிம் கார்டுகள், இந்திய வங்கி கணக்குகளை வைத்திருந்ததுடன், வங்காளதேச நாட்டின் அடையாள அட்டைகள் சம்பந்தப்பட்ட சில ஆவணங்களையும் டார்க் நெட்டில் இருந்து பதிவிறக்கம் செய்து வைத்திருந்தார்கள்.

    அத்துடன் பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் தலைமறைவாக இருக்கும் முகமது சகீத் பைசலுக்கு, சோயிப் அகமது மிர்ஜியை அறிமுகம் செய்து வைத்திருந்ததும் அப்துல் மதீன் அகமது தாகாதான் என்பதும் தெரியவந்தது. அல்ஹிந்த் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பை சேர்ந்த முகமது சகீத் பைசலை தனது தலைமை அதிகாரியாகவும் அப்துல் மதீன் அகமது தாகா கொண்டு செயல்பட்டார்.

    பெங்களூரு ராமேஸ்வரம் கபே ஓட்டலில் குண்டுவெடிப்பை நடத்துவதற்கு முன்பாக, கடந்த ஜனவரி மாதம் 22-ந்தேதி அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவின்போது, பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள கர்நாடக பா.ஜனதா தலைமை அலுவலத்தைதான் பயங்கரவாதிகள் குண்டுகள் வைத்து தகர்க்க திட்டமிட்டு இருந்தார்கள். ஆனால் அவர்களது திட்டம் தோல்வியில் முடிந்துள்ளது. இதன் காரணமாக மார்ச் 1-ந்தேதி ராமேஸ்வரம் கபே ஓட்டலில் 2 வெடிகுண்டுகளை அடுத்தடுத்து வெடிக்க செய்திருந்தார்கள்.

    இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    இதன்மூலம் கடந்த ஜனவரி 22-ந்தேதி பெங்களூருவில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகத்தை குண்டுகள் வைத்து தகர்க்க திட்டமிட்டது அம்பலமாகி உள்ளது. அங்கு மக்கள் நடமாட்டம் இருந்ததாலும், அலுவலகத்திற்குள் செல்ல முடியாத காரணத்தாலும், எப்போதும் வாடிக்கையாளர்கள் கூட்டத்துடன் இருக்கும் ராமேஸ்வரம் கபே ஓட்டலில் குண்டுவெடிப்பை அரங்கேற்றியது என்.ஐ.ஏ. அதிகாரிகள் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகை மூலமாக அம்பலமாகி உள்ளது.

    • பெங்களூரு உணவக குண்டு வெடிப்பு வழக்கில் மேலும் ஒருவரை என்.ஐ.ஏ. கைதுசெய்தது.
    • இந்த வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    பெங்களூரு:

    பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கபே என்ற உணவகத்தில் கடந்த மார்ச் ஒன்றாம் தேதி குண்டு வெடித்தது. இதில் 9 பேர் காயம் அடைந்தனர்.

    குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைதுசெய்ய கர்நாடகா அரசு இவ்வழக்கை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளிடம் ஒப்படைத்தது. அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு குண்டு வைத்ததாக சந்தேகப்படும் நபரின் சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு, அதன் அடிப்படையில் குற்றவாளியை தீவிரமாக தேடினர். இதையடுத்து இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இந்நிலையில், பெங்களூரு உணவக குண்டு வெடிப்பு வழக்கில் மேலும் ஒருவரை என்.ஐ.ஏ. கைது செய்தது. இந்த வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் சோயப் அகமது மிர்சா என்ற சோட்டுவை கைதுசெய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    • என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று கோவையில் உள்ள 2 டாக்டர்களின் வீடுகளில் சோதனை மேற்கொண்டனர்.
    • சோதனையின்போது வீட்டில் இருந்தவர்களின் செல்போன்களை வாங்கி கொண்டனர்.

    கோவை:

    பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கபே ஓட்டலில் கடந்த மார்ச் 1-ந் தேதி 2 குண்டுகள் வெடித்தன. இதில் ஊழியர்கள் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த வழக்கினை பெங்களூரு காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில் வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டது. என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி, குண்டு வெடிப்பு சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளியை சேர்ந்த முசபீர் உசேன் சாஜீப், அப்துல் மதீன் தாகா ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    மேலும் சென்னை, சிவமொக்கா, பெங்களூரு போன்ற நகரங்களில் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக அதிரடி சோதனையும் மேற்கொண்டனர். தொடர்ந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் இந்த வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக, என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று கோவையில் உள்ள 2 டாக்டர்களின் வீடுகளில் சோதனை மேற்கொண்டனர்.

    கோவை சாய்பாபா காலனி பெரிய கருப்பண்ண கவுண்டர் வீதியை சேர்ந்தவர் ஜாபர் இக்பால். இவர் தனியார் ஆஸ்பத்திரியில் டாக்டராக வேலை பார்த்து வருகிறார். இன்று காலை 6 மணிக்கு இவரது வீட்டிற்கு 2 பேர் கொண்ட என்.ஐ.ஏ. அதிகாரிகள், கர்நாடக போலீசார் காரில் வந்தனர்.

    அவர்கள் வீட்டிற்குள் நுழைந்ததும் வீட்டின் நுழைவு வாயில், கதவுகள் அனைத்தையும் யாரும் உள்ளே நுழையாதவாறு அடைத்தனர். தொடர்ந்து ஜாபர் இக்பாலின் வீடு முழுவதும் ஒவ்வொரு அறையாக, அங்குலம் அங்குலமாக அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    வீட்டில் இருந்த ஜாபர் இக்பாலிடமும் விசாரித்தனர். சோதனையின்போது வீட்டில் இருந்தவர்களின் செல்போன்களை வாங்கி கொண்டனர்.

    இதேபோல் அவரது வீட்டின் அருகே உள்ள அவரது உறவினரான டாக்டர் நயன் சாதிக்கின் வீட்டிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

    காலை 6 மணிக்கு தொடங்கிய சோதனையானது 10.20 மணிக்கு முடிவடைந்தது. சோதனையின் முடிவில் 2 பேரின் செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. செல்போனில் உள்ள தரவுகளை ஆராய்ந்து சோதனை செய்து விட்டு திரும்ப ஒப்படைப்பதாக கூறி விட்டு சென்றனர். மேலும் அவர்கள் 2 பேரையும் வருகிற 23-ந் தேதி பெங்களூருவில் உள்ள என்.ஐ.ஏ. அலுவ லகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறி விட்டு சென்றுள்ளனர்.

    ஏற்கனவே என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்திய இடங்களில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இங்கு சோதனை நடந்ததாக கூறப்படுகிறது.

    • முசாவிர் ஹூசைன் ஷாஜிப், அப்துல் மதின் தாஹா ஆகிய 2 பேரை என்.ஐ.ஏ கைது செய்தது.
    • திருவல்லிக்கேணியில் உள்ள லாட்ஜ் மற்றும் பழைய கட்டிடம் ஒன்றிற்கு அழைத்து சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே என்ற உணவகத்தில் கடந்த மாதம் குண்டு வெடித்தது. இதில் 9 பேர் காயம் அடைந்தனர். குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய கர்நாடகா அரசு இவ்வழக்கை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளிடம் ஒப்படைத்தது. அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு குண்டு வைத்ததாக சந்தேகப்படும் நபரின் சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு, அதன் அடிப்படையில் குற்றவாளியை தீவிரமாக தேடிவந்தனர்.

    இதையடுத்து இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். குண்டுவெடிப்புக்கு பிறகு மேற்கு வங்கத்தில் தலைமறைவாக இருந்த முசாவிர் ஹூசைன் ஷாஜிப், அப்துல் மதின் தாஹா ஆகிய 2 பேரை என்.ஐ.ஏ கைது செய்தது.

    இந்நிலையில் இவ்வழக்கில் கைதான அப்துல் மதின் தாஹா என்பவரை சென்னை திருவல்லிக்கேணிக்கு அழைத்து வந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    திருவல்லிக்கேணியில் உள்ள லாட்ஜ் மற்றும் பழைய கட்டிடம் ஒன்றிற்கு அழைத்து சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மேற்கு வங்கத்தில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.
    • ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் இதுவரை 3 பேர் கைது.

    பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்படைய முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இவர்களை மேற்கு வங்கத்தில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.

    குண்டுவெடிப்புக்கு பிறகு மேற்கு வங்கத்தில் தலைமறைவாக இருந்த முசாவிர் ஹூசைன் ஷாஜிப், அப்துல் மதின் தாஹா ஆகிய 2 பேரை என்.ஐ.ஏ கைது செய்தது.

    முன்னதாக, வெடிகுண்டு தயாரிப்பதற்கான தளவாடங்களை சப்ளை செய்த முஸாமில் ஷெரீஜப் என்பவர், கடந்த மார்ச் 27ம் தேதி் கைது செய்யப்பட்டார்.

    ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் என்ஐஏ இதுவரை 3 பேரை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

    • பெங்களூரு குண்டுவெடிப்பில் தொடர்புடைய முசபீர் மற்றும் அப்துல் மதீன் கடந்த 2020-ம் ஆண்டில் இருந்தே தலைமறைவாக இருந்து வருகிறார்கள்.
    • பெங்களூரு ஓட்டலில் குண்டுவெடிப்பை நடத்தி இருந்த முசபீருக்கு 2 சிம் கார்டுகளையும் முஜாமில் ஷெரீப் வாங்கி கொடுத்ததும் தெரியவந்துள்ளது.

    பெங்களூரு:

    பெங்களூரு ஒயிட்பீல்டு அருகே குந்தலஹள்ளி, ஐ.டி.பி.எல். ரோட்டில் உள்ள ராமேஸ்வரம் கபே ஓட்டலில் கடந்த மாதம் (மார்ச்) 1-ந்தேதி 2 குண்டுகள் வெடித்தது. இதுகுறித்து என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஓட்டல் குண்டுவெடிப்பில் ஈடுபட்டது சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளியை சேர்ந்த முசபீர் உசேன் சாஜீப் மற்றும் அப்துல் மதீன் அகமது தாகா தான் என்பதை என்.ஐ.ஏ. அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

    அவர்கள் பற்றிய பல்வேறு விதமான புகைப்படங்களை வெளியிட்டு, அவர்களை பற்றி துப்பு கொடுத்தால் தலா ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அதே நேரத்தில் பெங்களூரு ராமேஸ்வரம் கபே ஓட்டல் குண்டுவெடிப்பில் குற்றவாளிகளுக்கு உதவியதாக சிக்கமகளூருவை சேர்ந்த முஜாமில் ஷெரீப்பை கைது செய்துள்ளனர்.

    அவரை, கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு 7 நாட்கள் காவலில் எடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையின்போது அதிகாரிகளுக்கு பல்வேறு அதிர்ச்சி தரும் தகவல்கள் கிடைத்த வண்ணம் உள்ளது. முதலில் பெங்களூரு ஓட்டல் குண்டுவெடிப்புக்கு தேவையான வெடிப்பொருட்களை முஜாமில் ஷெரீப் சப்ளை செய்திருந்தது தெரியவந்தது. இந்த நிலையில், பெங்களூரு தவிர்த்து மங்களூருவில் நடந்த குக்கர் குண்டுவெடிப்பு, சிவமொக்காவில் நடந்த குண்டுவெடிப்பு பயிற்சி ஆகியவற்றுக்கு தேவையான வெடிப்பொருட்களை முஜாமில் ஷெரீப் தான் சப்ளை செய்திருந்ததை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

    அதாவது பெங்களூரு குண்டுவெடிப்பில் தொடர்புடைய முசபீர் மற்றும் அப்துல் மதீன் கடந்த 2020-ம் ஆண்டில் இருந்தே தலைமறைவாக இருந்து வருகிறார்கள். அப்துல் மதீன் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்து வருவதுடன், அந்த அமைப்புக்கு தென்னிந்தியாவில் உள்ள இளைஞர்களை சேர்த்து விடும் வேலைகளையும் செய்து வந்துள்ளார். அதன்படி, கடந்த 2021-ம் ஆண்டு சிக்கமகளூருவை சேர்ந்த முஜாமில் ஷெரீப்புடன் அப்துல் மதீனுக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது.

    அப்போது அவரை மூளை சலவை செய்து, பயங்கரவாத அமைப்புக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்கும்படி கூறியுள்ளார். இதற்கு அவரும் சம்மதித்துள்ளார். செல்போன் செயலி மூலமாக 2 பேரும் பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதன்பிறகு, 2022-ம் ஆண்டு முஜாமில் ஷெரீப்பை தொடர்புகொண்டு 2 சம்பவங்களுக்கு (சிவமொக்கா, மங்களூரு) வெடிப்பொருட்கள் வேண்டும் என்று அப்துல் மதீன் கூறியுள்ளார்.

    அதன்படி, அவரும் வெடிப்பொருட்களை சப்ளை செய்திருக்கிறார். அதன்பிறகு, 2022-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 26-ந் தேதி சிவமொக்காவில் குண்டுவெடிப்பு பயிற்சி செய்துள்ளனர். அதனை தொடர்ந்து, அதே ஆண்டு நவம்பர் 19-ந் தேதி மங்களூரு கத்ரி கோவிலை தகர்க்க குக்கர் குண்டை ஆட்டோவில் கொண்டு சென்றபோது வெடித்தது தெரியவந்தது.

    இதற்கிடையில், பெங்களூரு ஓட்டலில் குண்டுவெடிப்பை நடத்தி இருந்த முசபீருக்கு 2 சிம் கார்டுகளையும் முஜாமில் ஷெரீப் வாங்கி கொடுத்ததும் தெரியவந்துள்ளது. அந்த 2 சிம் கார்டுகளை வாங்குவதற்காக, முசபீர் உசேன் சாஜீப் பெயரை மாற்றி போலி ஆதார் அடையாள அட்டையை தயாரித்து, அதன்மூலம் சிம்கார்டு வாங்கி இருப்பதும் என்.ஐ.ஏ. விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    அத்துடன் கைதான முஜாமில் ஷெரீப்புடன் மங்களூருவை சேர்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு தொடர்பு இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதாவது, முஜாமில் ஷெரீப்புக்கு சிக்கமகளூரு அய்யப்பா நகரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வாடகைக்கு வீடு பார்த்து கொடுத்துள்ளார். இன்ஸ்பெக்டர் கூறியதன் பேரில் வீட்டின் உரிமையாளர் முஜாமில் ஷெரீப்புக்கு வீட்டை வாடகைக்கு கொடுத்துள்ளார். 6 மாதங்கள் அங்கு தாயுடன் தங்கி இருந்த முஜாமில் ஷெரீப், பெங்களூரு ஓட்டலில் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு 20 நாட்களுக்கு முன்பு தான் பெங்களூருவுக்கு வந்திருந்தார். முஜாமில் ஷெரீப் கைது செய்யப்பட்டவுடன், அவரது தாய் வீட்டை பூட்டிவிட்டு சென்றுவிட்டார். என்.ஐ.ஏ. அதிகாரிகள் சிக்கமகளூருவுக்கு சென்று அந்த வீட்டில் சோதனை நடத்தினர். மேலும் முஜாமில் ஷெரீப்புக்கு வாடகைக்கு வீடு பார்த்து கொடுத்த இன்ஸ்பெக்டர் யார்? அவருக்கும் முஜாமில் ஷெரீப்புக்கும் என்ன தொடர்பு?, பயங்கரவாதிகளுடன் இன்ஸ்பெக்டருக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் தகவல் சேகரித்து வருகிறார்கள்.

    மற்றொரு புறம் தலைமறைவாக இருக்கும் முசபீர் மற்றும் அப்துல் மதீனை கைது செய்யவும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

    • என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னை, சிவமொக்கா, பெங்களூரு நகரங்களில் பல்வேறு இடங்களில் 2 நாட்களுக்கு முன்பு அதிரடி சோதனை நடத்தினர்.
    • முக்கிய குற்றவாளிகள் 2 பேரும் பல்வேறு தோற்றங்களில் இருக்கும் புகைப்படங்களை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

    பெங்களூரு:

    பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கபே ஓட்டலில் கடந்த 1-ந்தேதி 2 குண்டுகள் வெடித்தன. இதில் ஊழியர்கள் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். இதுதொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராமேஸ்வரம் கபே ஓட்டலில் சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளியை சேர்ந்த முசபீர் உசேன் சாஜீப் என்பவர் தான் குண்டு வைத்ததாக கருதப்படுகிறது. இவர், அப்துல் மதீன் அகமது தாகா என்பவருடன் குண்டுவெடிப்பு நிகழ்த்துவதற்கு முன்பு 2 மாதங்கள் சென்னையில் தங்கி இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னை, சிவமொக்கா, பெங்களூரு நகரங்களில் பல்வேறு இடங்களில் 2 நாட்களுக்கு முன்பு அதிரடி சோதனை நடத்தினர். குண்டுவெடிப்பு சம்பவத்தில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளுக்கு உதவியதாக கூறி நேற்று முன்தினம் முஜாமில் ஷெரீப் என்பவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர்.

    முஜாமில் ஷெரீப் கடந்த 16 ஆண்டுகளாக பெங்களூருவில் வசித்து வருகிறார். பசவேஸ்வரா நகர் பகுதியில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வந்த அவர், கடந்த ஓராண்டுக்கு முன்பு வேறு ஓட்டலுக்கு வேலைக்கு சென்றார்.

    முஜாமில் ஷெரீப், ஓட்டலில் வேலை செய்தபடி குண்டுவெடிப்புக்கு தேவையான பொருட்களை கூரியர் மூலம் சப்ளை செய்து உதவி வந்தது விசாரணையில் தெரிந்தது.

    இந்த நிலையில் பெங்களூரு ஓட்டல் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடையதாக தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளிகளான முசபீர் உசேன் சாஜீப், அப்துல் மதீன் அகமது தாகா ஆகிய 2 பேரின் புகைப்படங்களையும் என்.ஐ.ஏ. நேற்று வெளியிட்டுள்ளது. அதாவது, முக்கிய குற்றவாளிகள் 2 பேரும் பல்வேறு தோற்றங்களில் இருக்கும் புகைப்படங்களை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

    அத்துடன், அவர்கள் 2 பேரும் தங்களை பற்றிய விவரங்களை மறைத்து போலியான பெயர்களுடன் சாதாரண மக்கள் போன்று வசித்து வந்ததாகவும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இருவரையும் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்து அவர்களை பற்றிய துப்பு கொடுப்பவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் மொத்தம் ரூ.20 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்றும் என்.ஐ.ஏ. அறிவித்துள்ளது. மேலும் அவர்கள் 2 பேரையும் தேடும் பணியை என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர். கைதான முஜாமில் ஷெரீப் அளிக்கும் தகவல் அடிப்படையில் 2 பேரையும் பிடிக்க என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

    • இளைஞர்களை தீவிரவாத அமைப்புகளில் சேர வலியுறுத்தியதாகவும், கடற்கரை பகுதியில் வைத்து அவர்களுக்கு தீவிரவாத பயிற்சி அளித்ததாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன.
    • சேக் தாவூத் வீட்டில் கடந்த நான்கு ஆண்டுகளில் மூன்று முறைக்கு மேல் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    பனைக்குளம்:

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள புகழ்பெற்ற ராமேசுவரம் கபே உணவகத்தில் கடந்த மாதம் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் பலர் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தில் சந்தேகப்படும் நபரின் புகைப்படத்தை வெளியிட்ட போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இதில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு தொடர்பு கொண்டிருக்கலாம் என்ற அடிப்படையில் விசாரணை தீவிரமடைந்துள்ளது.

    இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் இன்று 5 இடங்களில் என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த வகையில், ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் பழங்கோட்டை தெருவில் உள்ள ஷேக் தாவூத் மற்றும் அவரது தந்தை வீடுகளில் இன்று காலை சுமார் 7 மணி முதல் தேசிய புலனாய்வு முகமை துணை போலீஸ் சூப்பிரண்டு முருகன் தலைமையில் சோதனை நடைபெற்றது.

    சேக் தாவூத் மீது கடந்த 2018 மற்றும் 2020 ஆகிய இரண்டு ஆண்டுகள் ஆயுதங்கள் வைத்திருந்தால், தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருந்தது, தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு பண பரிவர்த்தனை செய்தது, இளைஞர்களுக்கு மூளை சலவை செய்து பயிற்சி அளித்தது உள்ளிட்ட வழக்குகளில் தேவிபட்டினம் போலீஸ் நிலையத்தில் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரனை நடைபெற்று வருகிறது.

    இந்தநிலையில் பெங்களூரு ராமேசுவரம் கபே குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக எழுந்த சந்தேகத்தின் பெயரில் இன்று தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சேக் தாவூத் மற்றும் அவரது தந்தை வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது.

    மேலும் இவர் இளைஞர்களை தீவிரவாத அமைப்புகளில் சேர வலியுறுத்தியதாகவும், கடற்கரை பகுதியில் வைத்து அவர்களுக்கு தீவிரவாத பயிற்சி அளித்ததாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. சேக் தாவூத் வீட்டில் கடந்த நான்கு ஆண்டுகளில் மூன்று முறைக்கு மேல் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • ஷாசிப், தாஹா இருவரும் சென்னையில் மெரினா கடற்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றி பார்த்துள்ளனர்.
    • தொப்பியை தலையில் மாட்டிக்கொண்டு தான் ஷாசிப் பெங்களூரு சென்றுள்ளார்.

    சென்னை:

    பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் குற்றவாளிகளான ஷாசிப், தாஹா ஆகிய இருவரும் சென்னை திருவல்லிக்கேணி லாட்ஜில் ஒரு மாதம் தங்கி இருந்தது தெரிய வந்துள்ளது.

    கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இருவரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிரமாக தேடி வருகிறார்கள். இவர்களில் ஷாசிப் தான் தொப்பி அணிந்து கொண்டு குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்த ராமேஸ்வரம் கபே ஓட்டலில் இருந்து வெளியேறுவது கண்காணிப்பு கேமரா காட்சி மூலம் முதலில் தெரிய வந்துள்ளது.

    அவர் தவற விட்டுச்சென்ற தொப்பி, அதில் ஒட்டி இருந்த தலைமுடி ஆகியவற்றை வைத்து என்.ஐ.ஏ. அதிகாரிகளும், கர்நாடக மாநில போலீசாரும் துப்பு துலக்கி வந்தனர். இந்த நிலையில்தான் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லாட்ஜில் இருவரும் தங்கி இருந்து சதி திட்டம் தீட்டியது தெரிய வந்துள்ளது.

    ஷாசிப், தாஹா இருவரும் சென்னையில் மெரினா கடற்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றி பார்த்துள்ளனர்.

    அதுதொடர்பான தகவல்கள் கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலமாக தெரிய வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இதேபோன்று இருவரும் சென்னை மாநகர் முழுவதும் பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளனர். பலரை சந்தித்தும் பேசி இருக்கிறார்கள். இதன் மூலம் ஷாசிப், தாஹா இருவருக்கும் சென்னையில் பலர் அடைக்கலம் கொடுத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் யார்-யார் என்பது பற்றி அறிய விசாரணையை தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    இருவரும் எங்கெல்லாம் சென்றார்கள் என்பது பற்றிய தகவல்களை கண்டறிய 1000-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலமாக துப்பு துலக்கப்பட்டு தகவல்கள் திரட்டப்பட்டு வருகிறது.

    ஷாசிப், தாஹா இருவரும் பெங்களூருவில் குண்டு வெடிப்பை நிகழ்த்தியது போல சென்னையிலும் சதி திட்டத்தில் ஈடுபட திட்டம் வகுத்தார்களா? என்கிற கோணத்தில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. இவர்கள் இருவரையும் பற்றி உளவுப்பிரிவு போலீசாரும் ரகசியமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னையில் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள வணிக வளாகத்துக்கு சென்று இருவரும் தொப்பி ஒன்றை வாங்கி இருக்கிறார்கள். இந்த தொப்பியை தலையில் மாட்டிக்கொண்டு தான் ஷாசிப் பெங்களூரு சென்றுள்ளார். அவருடன் தாஹாவும் சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றிருப்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    வணிக வளாகத்திற்கு சென்று தொப்பியை வாங்கியதுபோல சென்னையில் வேறு எங்காவது சென்று குண்டுவெடிப்பு சதி செயலுக்கு தேவையான பொருட்கள் ஏதாவது இருவரும் வாங்கினார்களா? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இப்படி பெங்களூரு குண்டுவெடிப்பு குற்றவாளிகள் சென்னையில் எந்தவித தங்குதடையுமின்றி குறிப்பிட்ட லாட்ஜில் தங்கி சென்றிருப்பது சென்னை போலீசாரை கடும் அதிச்சியில் ஆழ்த்தி உள்ளது.

    இதன் மூலம் சென்னைக்கு குற்றச்செயல்களில் தொடர்புடைய யார் வேண்டுமானாலும் வரலாம், தங்கலாம் என்கிற நிலை உள்ளதா? என்கிற அச்சம் மேலோங்கி இருப்பதை மறுப்பதற்கில்லை.

    இதையடுத்து சென்னை மாநகர போலீசார் தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொண்டு லாட்ஜூகள் மற்றும் தங்கும் விடுதிகளில் சோதனை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக துப்பு கொடுப்பவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அளிக்கப்படும் என என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது.
    • சபீரை பெல்லாரியில் வைத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர்.

    பெங்களூரு:

    பெங்களூரு குந்தலஹள்ளியில் உள்ள ராமேஸ்வரம் கபே ஓட்டலில் கடந்த 1-ந்தேதி நடைபெற்ற குண்டுவெடிப்பு குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். அவர்களுடன் இணைந்து பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசாரும் மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக துப்பு கொடுப்பவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அளிக்கப்படும் என என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது. மேலும், தகவல் கொடுப்பவர்களின் விவரங்கள் பாதுகாப்பாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு வழக்கில், சபீர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். சபீரை பெல்லாரியில் வைத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர்.

    கைதான சபீர் முக்கிய குற்றவாளி இல்லை என்றும், வெடிகுண்டு வைத்தவருக்கு உதவியவர் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. சபீர் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்ததாக தெரியவந்துள்ளது.

    • பெங்களூருவில் குண்டுவெடிப்பை நடத்திவிட்டு துமகூரு, பல்லாரி மற்றும் கலபுரகிக்கு மர்மநபர் தப்பித்து சென்றிருந்தார்.
    • கர்நாடகத்தில் நடைபெற்ற ஒரு வழக்கில் அந்த நபருக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்திருக்கிறது.

    பெங்களூரு:

    பெங்களூரு ஒயிட்பீல்டு அருகே குந்தலஹள்ளி, ஐ.டி.பி.எல். ரோட்டில் உள்ள ராமேஸ்வரம் கபே ஓட்டலில் கடந்த 1-ந் தேதி அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்து சிதறியதில் 10 பேர் படுகாயம் அடைந்திருந்தார்கள். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் மற்றும் என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள் கூட்டாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையில் ஓட்டல், அரசு பஸ்களில் மர்மநபர் பயணம் செய்த போது சிக்கிய வீடியோ காட்சிகள் மூலமாக, அவரது உருவப்படங்கள் தயார் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. மர்மநபர் பற்றி துப்பு கொடுப்போருக்கு ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ஆனால் குண்டுவெடிப்பு நடந்து 11 நாட்கள் ஆகியும் இன்னும் குற்றவாளி கைது செய்யப்படவில்லை.

    பெங்களூருவில் குண்டுவெடிப்பை நடத்திவிட்டு துமகூரு, பல்லாரி மற்றும் கலபுரகிக்கு மர்மநபர் தப்பித்து சென்றிருந்தார். அதன்பிறகு, மர்மநபர் எங்கு சென்றார்? என்பது தெரியவில்லை. கல்யாண கர்நாடக மாவட்டங்களான ராய்ச்சூர், கலபுரகியில் மர்மநபர் பதுங்கி இருக்கலாம் என்று முதலில் கூறப்பட்டது. பின்னர் மர்மநபர் கலபுரகியில் இருந்து ஐதராபாத் அல்லது மும்பைக்கு தப்பித்து சென்றிருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியானது.

    இந்த நிலையில் தற்போது அவர் வெளிநாட்டுக்கு தப்பி சென்றாரா? என்ற கோணத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். அதே நேரத்தில் ஐதராபாத், மும்பை உள்பட பல்வேறு மாநிலங்களிலும் குண்டுவெடிப்பு குற்றவாளியை பிடிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார், என்.ஐ.ஏ. அதிகாரிகள் முகாமிட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    இதற்கிடையில், கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் மூலமாக பெங்களூரு ஓட்டலில் குண்டுவெடிப்பை நடத்திய மர்மநபர் யார்? என்பதை என்.ஐ.ஏ. அதிகாரிகள் அடையாளம் கண்டுபிடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அந்த நபர், கர்நாடகத்தை சேர்ந்தவர் தான் என்றும், பிற மாநிலங்களை சேர்ந்தவர் இல்லை என்பதையும் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

    இதற்கு முன்பு கர்நாடகத்தில் நடைபெற்ற ஒரு வழக்கில் அந்த நபருக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்திருக்கிறது. ஆன்லைன் மூலமாக வந்த உத்தரவை தொடர்ந்து ஓட்டல் குண்டுவெடிப்பை மர்மநபர் அரங்கேற்றி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதுபற்றி என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விவகாரம் குறித்து பெங்களூருவில் நேற்று போலீஸ் மந்திரி பரமேஸ்வர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பெங்களூரு ராமேஸ்வரம் கபே ஓட்டலில் கடந்த 1-ந் தேதி குண்டுவெடிப்பு நடந்திருந்தது. இந்த குண்டுவெடிப்பில் ஈடுபட்ட மர்மநபரை பிடிக்க போலீசார் மற்றும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். குண்டுவெடிப்பை நடத்தியது யார்?, அந்த நபருக்கு பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையில் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் உள்ளிட்ட பிற தகவல்களை வைத்து குண்டுவெடிப்பை நிகழ்த்திய மர்மநபர் யார்? என்பது அடையாளம் காணப்பட்டு, உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த அடையாளத்தை வைத்து குண்டு வெடிப்பு குற்றவாளி குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார், என்.ஐ.ஏ. அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். கூடிய விரைவில் குண்டு வெடிப்பு குற்றவாளி கைது செய்யப்படுவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பெங்களூரு ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • மாநிலம் முழுவதும் பஸ், ரெயில் நிலையங்கள், மக்கள் கூடும் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    பெங்களூரு:

    பெங்களூரு ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதால், என்.ஐ.ஏ. அதிகாரிகள் மற்றும் மத்திய உளவுப்பிரிவினரும் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பை தொடர்ந்து பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் பஸ், ரெயில் நிலையங்கள், மக்கள் கூடும் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கர்நாடக துணை முதல் மந்திரி டிகே சிவகுமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் குண்டுவெடிப்பு விவகாரம் தொடர்பாக முதல் மந்திரி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாஜக கோரியது பற்றி கேள்வி எழுப்பினர்.

    இதற்கு பதிலளித்த சிவகுமார், அவர்கள் ராஜினாமாவை விரும்புகிறார்களா? அவர்கள் கேட்கும் ராஜினாமாவை அவர்கள் விரும்பியபடி அனுப்புவோம். இந்த விவகாரத்தில் பா.ஜ.க.வினர் வெறும் அரசியல் செய்து வருகின்றனர். பெங்களூருவின் இமேஜை கெடுக்கின்றனர். அவர்கள் காலத்தில் கர்நாடகாவில் என்ன நடந்தது என்பதை அறிய அவர்கள் கண்ணாடியைப் பார்க்க வேண்டும்.

    அவர்கள் கர்நாடகாவை காயப்படுத்தவில்லை. மாறாக நாட்டையும், தங்களையும் காயப்படுத்துகிறார்கள் என தெரிவித்தார்.

    ×