என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழக ரெயில்வே திட்டம்"

    • ரெயில்வே திட்டங்களுக்குத் தேவையான நிலங்கள் விரைந்து கையகப்படுத்தப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது
    • ரெயில்வே திட்டங்களுக்கு மொத்தம் 2,197 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்த அரசு ஏற்கனவே அனுமதி

    தமிழ்நாட்டில் ரெயில்வே திட்டங்களுக்குத் தேவையான நிலங்கள் விரைந்து கையகப்படுத்தப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது என்று மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. தம்பிதுரை எழுப்பிய புகாருக்கு தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.

    இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் ஒன்றிய அரசினால் செயல்படுத்தப்பட்டு வரும் இரயில்வே திட்டங்களுக்குத் தேவையான நிலங்களை நில எடுப்பு செய்வதில் மாநில அரசு காலதாமதம் செய்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மு.தம்பிதுரை அவர்கள் தெரிவித்துள்ளதாக சில நாளிதழ்களில் செய்தி வெளியாகியுள்ளது தொடர்பாக கீழ்கண்ட விபரங்கள் தெரிவிக்கப்படுகிறது.

    கடந்த 2021-மே மாதம் முதல் தமிழ்நாட்டில் ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்ட இரயில்வே திட்டங்களின் முக்கியத்துவத்தை கருத்திற்கொண்டு பல ஆண்டுகளாக நிலுவையிலிருந்த இரயில்வே திட்டங்களுக்கான நில எடுப்பு பணிகளின் மீது தனிக்கவனம் செலுத்தி விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இரயில்வே திட்டங்களுக்காக மாநிலம் முழுவதும் கையகப்படுத்தப்படும் நிலங்களின் விவரங்கள்.

    தமிழ்நாட்டில் ஒன்றிய அரசின் இரயில்வே திட்டங்களுக்கு மொத்தமாக 2197.02 ஹெக்டேர் நிலங்களை நில எடுப்பு செய்ய ஏற்கனவே தமிழ்நாடு அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் முக்கியமான 17 இரயில்வே திட்டங்களுக்கு நில எடுப்பு செய்யப்பட வேண்டிய 1253.11 ஹெக் நிலங்களில், 1144.84 ஹெக்டேர் நிலங்களுக்கான நில எடுப்புப் பணிகள் முடிவுற்று (அதாவது 91% சதவீதம்) நிலம் இரயில்வே நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டின் குறிப்பாக முக்கியத் திட்டங்களான திண்டிவனம்-நகரி அகல ரயில்பாதை (100%), மதுரை-தூத்துக்குடி அகல ரயில்பாதை (100%), மணியாச்சி-நாகர்கோவில் அகல ரயில்பாதை (97%), கன்னியாகுமரி-நாகர்கோவில் அகல இரயில் பாதை இரட்டிப்பாக்குதல் (100%), தூத்துக்குடி-மதுரை (அருப்புக்கோட்டை வழி) புதிய அகல இரயில் பாதை கட்டம்1 (100%), சின்னசேலம்-கள்ளக்குறிச்சி புதிய அகல ரயில்பாதை (98%). கொருக்குப்பேட்டை-எண்ணூர் நான்காவது வழித்தடம் (100%), மயிலாடுதுறை-திருவாரூர் அகல ரயில்பாதை (100%), பட்டுக்கோட்டை நான்குமுனை சந்திப்பு (100%), புதிய அகல இரயில் பாதை (சேலம் கரூர் வழித்தடம் உருவாக்குதல்) (100%), மன்னார்குடி- நீடாமங்கலம் அகல ரயில்பாதை (100%), சென்னை கடற்கரை-கொருக்குப்பேட்டை மூன்றாவது நான்காவது வழித்தடம் (100%), மற்றும் விழுப்புரம்-திண்டுக்கல் அகல இரயில்பாதை (100%) ஆகிய திட்டங்களுக்கு மேலே குறிப்பிட்டுள்ளவாறு 97% முதல் 100% வரை நில எடுப்புப் பணிகள் முடிக்கப்பட்டு ஒன்றிய இரயில்வே நிர்வாகத்திடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. எஞ்சிய நில எடுப்புப் பணிகளை விரைந்து முடிக்க முழுவீச்சில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இரயில்வே துறையால் எடுக்கவேண்டிய நடவடிக்கையால் நிலுவையிலுள்ள இனங்கள்

    திருவண்ணாமலை-திண்டிவனம் புதிய அகல ரயில்பாதை திட்டத்திற்கு 229,23 ஹெக்டேர் நிலங்களை நில எடுப்பு செய்ய 2011 ஆம் ஆண்டில் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டும் இரயில்வே துறையினரால் நில எடுப்பிற்கு நிதி ஒதுக்கப்படாததால் நில எடுப்புப் பணிகள் அனைத்தும் முற்றிலும் முடங்கியுள்ளன.

    அத்திப்பட்டு புத்தூர் இடையிலான இரயில்வே தடத்திற்கு இதுவரை இரயில்வே துறையினரால் நிலத் திட்ட அட்டவணை (L.P.S) சமர்ப்பிக்கப்படவில்லை மற்றும் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஒன்றிய அரசு ரெயில்வே திட்டங்களில் தமிழர்களின் முதுகில் குத்தியிருக்கிறது.
    • தமிழ்நாட்டுக்கு அறிவிக்கப்பட்ட நிதி அநியாயமாக பறிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பிரதமர் மோடி தலை மையில் 3-வது முறையாக ஆட்சி அமைந்த பிறகு தாக்கல் செய்த ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்றும் நலன் தரும் திட்டங்கள் ஒன்றுகூட இல்லாதது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

    பீகார், ஆந்திரா மாநிலங்களுக்கு மட்டும் லட்சக்கணக்கான கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியவர்கள், தமிழ்நாட்டை வஞ்சித்தார்கள். நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டைத் தாக்கல் செய்யும் போது, திருக்குறள் சொல்லுவார்.

    இப்போது திருக்குறள் மட்டுமல்ல, தமிழ், தமிழ்நாடு என்ற வார்த்தைகளே பட்ஜெட்டில் இடம்பெறாமல் பார்த்துக் கொண் டார்கள். இதனைக் கண்டித்து தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் போராட்டங்களை நடத்தின.

    பட்ஜெட்டில் தமிழ் நாட்டுக்கான திட்டங்கள் எதையும் அறிவிக்காமல் துரோகம் செய்த ஒன்றிய அரசு, இன்றைக்கு ரெயில்வே திட்டங்களிலும் தமிழர்களின் முதுகில் குத்தியிருக்கிறது.

    பாராளு மன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் முடிந்த பிறகு ரெயில்வே திட்டங்கள் குறித்த அதிகாரப்பூர்வமான பிங்க் புத்தகம் வெளியாகியிருக்கிறது. அதில் தான் தமிழ்நாட்டு ரெயில்வே திட்டங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டி ருக்கிறது.

    பொதுவாக பட்ஜெட் தாக்கல் செய்யப் பட்டதுமே ரெயில்வே பிங்க் புத்தகம் அவையில் வைக்கப்பட்டுவிடும். இது காலம் வரை கடைப்பிடிக்கப்பட்டு வந்த இந்த நடைமுறையை இந்த பட்ஜெட்டில் ஏனோ பின்பற்றவில்லை.

    பட்ஜெட் கூட்டத்தொடர் முடித்த பிறகு பிங்க் புத்தகம் வெளியிட்டிருப்பதே இவர்களின் சதியை வெளிக்காட்டி இருக்கிறது.

    பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பு இடைக்கால பட்ஜெட்டின் பிங்க் புத்தகத்தில் தெற்கு ரெயில்வேயின் புதிய வழித்தடங்களுக்கு 976 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்து.

    ஆனால், இப்போது வெளியான பிங்க் புத்தகத்தில் அந்தத் தொகையை 301 கோடி ரூபாயாகக் குறைத்து விட்டார்கள். அதாவது மூன்றில் ஒரு பகுதியாக்கி விட்டார்கள்.

    இரட்டைப்பாதை திட்டங்களுக்குத் தேர்தலுக்கு முன்பு ஒதுக்கப்பட்ட 2,214 கோடி ரூபாய் இப்போது 1,928 கோடி ரூபாய் ஆக்கிவிட்டார்கள்.

    புதிய வழித்தடங்கள், இரட்டைப் பாதைத் திட்டங்கள் என அனைத்திலும் தேர்தலுக்கு முன்பு தமிழ்நாட்டுக்கு அறிவிக்கப்பட்ட நிதி அநியாயமாக பறிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் முக்கிய ரயில் திட்டங்களுக்கு வெறும் 1,000 ரூபாயை ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

    சென்னை-மாமல்ல புரம்-கடலூர் கடற்கரைப் பாதைக்கு 25 கோடி ரூபாய் முன்பு ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது வெறும் ஆயிரம் ரூபாய்தான் ஒதுக்கியிருக்கிறார்கள்.

    திருப்பெரும்புதூர்-கூடுவாஞ்சேரி-இருங்காட்டுக்கோட்டை-ஆவடி லைனுக்கு முன்பு 25 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

    மதுரை-அருப்புக் கோட்டை-தூத்துக்குடிக்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்ததை வெறும் 18 கோடி ரூபாயாகக் குறைத்துவிட்டார்கள். இப்படிப் பல திட்டங்களுக்கு நிதி பெரும் அளவில் குறைத்திருக்கிறது ஒன்றிய அரசு.

    புதிய ரெயில்வே திட்டங்களை அறிவிப்பதற்கு பதிலாக ஏற்கெனவே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட திட்டங்களின் நிதியைப் பெருமளவில் குறைத்தது இதுவரை ரெயில்வே துறையில் நடக்காத ஒன்று.

    புயலால் அழிந்து போன தனுஷ்கோடி ரயில் பாதையில் மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்கு வதற்காக 2019 பாராளு மன்றத் தேர்தல் நேரத்தில் 2019 மார்ச் 1-ந்தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அடுத்த பொதுத் தேர்தலும் நடந்து முடிந்துவிட்டது.

    ஆனால், திட்டம் இன்னும் வரவில்லை. பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய ராமேஸ்வரம் தனுஷ்கோடி திட்டத்துக்கு இடைக்கால பட்ஜெட்டில் ஒரு கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. அதனையும் இப்போது 56 லட்சம் ரூபாயாகக் குறைத்துவிட்டார்கள்.

    பிரதமர் அடிக்கல் நாட்டிய வெறும் 17 கிலோ மீட்டர் தூர இந்த ரெயில் பாதை யைக் கூட முடிக்காதவர்கள், எப்படி பெரும் ரெயில்வே திட்டங்களை முடிப்பார்கள்?

    சென்ட்ரல், எழும்பூர், தாம்பரத்தைத் தொடர்ந்து நான்காவதாக பெரம்பூரில் புதிய ரெயில் முனையம் அமையப் போகிறது என சொன்னீர்களே… அவை யெல்லாம் என்ன ஆகும் என்பது ஒன்றிய அரசுக்கே வெளிச்சம்.

    கடந்த மூன்று ஆண்டுகளில் காத்திருப்புப் பட்டியலில் இருந்தவர்கள் டிக்கெட்டை கேன்சல் செய்ததன் மூலம் ரெயில்வே துறைக்குக் கிடைத்த 1,229 கோடி ரூபாய் வருவாய் எல்லாம் எங்கே போனது?

    மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் திட்டமான மெட்ரோ ரெயில் திட்டங்களில் கூட தமிழ்நாட்டுக்கு நிதியை ஒதுக்காமல் வஞ்சித்தனர். 2-ஆம் கட்ட சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு இதுவரை ஒன்றிய அரசிடம் இருந்து எந்த நிதியும் ஒதுக்கவில்லை.

    இதுபற்றி மக்களவையில் தி.மு.க எழுப்பிய கேள்விக்கு, ''சென்னை மெட்ரோ ரெயிலின் 2-ம் கட்டிப் பணிகள் தற்போதைக்கு மாநில அரசின் திட்டமாகவே செயல்படுத்தப்படுகிறது. எனவே, அதற்கான செலவுகளை தமிழ்நாடு அரசே செய்கிறது'' என்ற அதிர்ச்சி பதிலைத் தந்தார்கள்.

    ரெயில்வே திட்டங்களுக்கு வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கினார்கள். ஆனால், மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு அதுகூட இல்லை என கையை விரித்து விட்டார்கள்.

    பா.ஜ.க. கூட்டணிக்கு மக்களவைத் தேர்தலில் பூஜ்ஜியம் கொடுத்தற்காகத் தமிழ்நாட்டு மெட்ரோ ரயில் திட்டங்களுக்குப் பூஜ்ஜியம் அளித்திருக்கிறார்கள்.

    கடந்த இரண்டு ஆண்டுகளில் சென்னை மெட்ரோவுக்கு ஒரு பைசாகூட வழங்காத மத்திய அரசு, பா.ஜ.க. ஆளும் பல மாநில மெட்ரோ பணிகளுக்குக் கோடிகளைக் கொட்டிக் கொடுத்திருக்கி றது.

    ஆட்சி அமைக்க வாக்களிக்காத மக்களுக்கும் சேர்த்துதான் ஒரு அரசு செயல்படும். 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு வாக்க ளிக்காத பெண்களுக்கும் சேர்த்துதான் 1.15 கோடி மகளிருக்குக் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினின் அரசு செயல்படுத்தி வருகிறது.

    அப்படித்தான் பா.ஜ.க.வுக்கு எம்.பி-க்கள் தராத மாநிலங்களுக்கும் பாகுபாடு இல்லாமல் ஒன்றிய நிதி அளிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • புதிய தண்டவாளங்கள் அமைக்கும் பணிகள் ரூ.33,467 கோடி மதிப்பீட்டில் நடந்து வருகிறது.
    • கேரளா மாநிலத்தில் ரூ. 3,042 கோடி ரெயில்வேக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு ரயில்வே திட்டங்களுக்கு 2025-26 நிதியாண்டிற்கான ஒன்றிய பட்ஜெட்டில் ரூ.6,626 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய ரெயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு ரெயில்வே திட்டங்களுக்கு 2025-26 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் ரூ.6,626 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் ரூ.2,948 கோடி மதிப்பீட்டில் 77 ரெயில் நிலையங்களின் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகிறது. மொத்தமாக 2,587 கி.மீ நீளத்திற்கு புதிய தண்டவாளங்கள் அமைக்கும் பணிகள் ரூ.33,467 கோடி மதிப்பீட்டில் நடந்து வருகிறது.

    கர்நாடக மாநிலத்திற்கு ரூ.7,564 கோடி ரெயில்வேக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அங்கு 97% ரயில் வழித்தடங்கள் மின்மயம் ஆக்கப்பட்டுள்ளது. விரைவில் முழுவதும் மின்மயமாக்கப்படும். கேரளா மாநிலத்தில் ரூ. 3,042 கோடி ரெயில்வேக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    காங்கிரஸ் ஆட்சியை விட பாஜக ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் 50 நமோ பாரத் புதிய ரெயில்கள் இயக்க இந்த பட்ஜெட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ரெயில்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க புதிய ரெயில்கள் மற்றும் கூடுதல் பெட்டிகள் தெற்கு ரெயில்வேயில் இணைக்கப்பட உள்ளது.

    பாம்பன் ரெயில்வே பாலம் ஒரு தனித்துவமானது. பாம்பன் பாலத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ளது. பாலம் திறக்கப்படும் தேதி விரைவில் அறிவிக்கப்படும். ரெயில்வே திட்டங்களை செயல்படுத்த அனைத்து மாநில அரசுகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    தனுஷ்கோடி ரெயில்வே திட்டம் மத்திய அரசு தரப்பில் உயிர்ப்புடன் தான் உள்ளது. ஆனால், மாநில அரசு தரப்பில் அதனை செயல்படுத்த விருப்பப்படவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×