search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை"

    • தமிழகத்தில் மூன்று நாட்கள் மிக கனமழை பெய்ய வாய்ப்பு.
    • மீனவர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதிச் சீட்டு திரும்ப பெறப்பட்டது.

    மண்டபம்:

    தெற்கு வங்கக் கடலில் புதிதாக உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையை தொடர்ந்து தமிழகத்தில் மூன்று நாட்கள் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இதையடுத்து வங்கக் கடல், பாக் ஜலசந்தி கடல் பகுதியில் மணிக்கு 40 முதல் 55 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கனமழை அல்லது மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.

    அதனால் மண்டபம் விசைப்படகு, நாட்டுப்படகுகளை பாதுகாப்பாக வைத்திருக்கவும் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடி தொழிலுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும், இன்று (15-ந்தேதி) அனுமதி சீட்டு வழங்கப்படமாட்டாது எனவும் மீன் வளம், மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் சிவக்குமார் தெரிவித்தார்.

    முன்னதாக மீனவர்களுக்கு வழங்கப்பட்டு இருந்த அனுமதி சீட்டு ரத்து செய்யப்பட்டு திரும்ப பெறப்பட்டது.

    அதன்பேரில் மண்டபம், பாம்பன், மூக்கையூர், ராமேசுவரம், ஏர்வாடி, கீழக்கரை உள்ளிட்ட 30-க்கும் மேற் பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் தங்களது விசைப்படகு மற்றும் நாட்டுப்படகுகளை கரையோரம் பாதுகாப்பாக நங்கூர மிட்டு நிறுத்தி வைத்துள்ளனர்.

    மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் ராமேசுவரம் பகுதி மீன்பிடி துறைமுகம் வெறிச்சோடி காணப்பட் டது. மேலும் அதனை சார்ந்துள்ள பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழப்பை சந்தித்துள்ளனர். மீன்பிடி வர்த்தகமும் பாதிக்கப்பட்டது.

    ×