என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 98971"

    • ஜெயலலிதாவின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று ஆரம்பத்தில் இருந்தே குரல் கொடுத்து வருவது நான் மட்டுமே.
    • அ.தி.மு.க. தலைவர்கள் யாரும் இதற்காக ஒருபோதும் பேசமாட்டார்கள்.

    சென்னை:

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அ.தி.மு.க.வினரும் பொது மக்களும் அவர் இறந்த உடனேயே குற்றம் சாட்டினர்.

    இந்த நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக கடந்த 5 ஆண்டுகளாக விசாரணை நடத்திய ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கையை தற்போது தாக்கல் செய்து உள்ளது.

    அதில் ஜெயலலிதா மரணத்தில் சசிகலா உள்பட சரமாரியாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று உரிய சிகிச்சை அளிக்க முன் வராதது குறித்தும் பல்வேறு சந்தேகங்களை ஆணையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா, ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையின் படி தமிழக அரசு அடுத்தகட்ட நடவடிக்கைகளை விரைவுபடுத்தி விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் ஜெயலலிதாவின் மரணத்தில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்பதை கண்டுபிடித்து அனைவரையும் கடுமையாக தண்டிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து உள்ளார்.

    இது தொடர்பாக மாலைமலர் நிருபருக்கு தீபா அளித்த பேட்டி வருமாறு:-

    எனது அத்தை ஜெயலலிதா எப்படி இறந்தார் என்பது அவர் மரணம் அடைந்த உடனேயே மிகப்பெரிய கேள்வியாக எழுந்தது. பொதுமக்களும் இது தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தார்கள். அவருக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டது எப்படி? எந்த மாதிரி நோயால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்கள் என்ன? என்பவற்றையெல்லாம் வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றும் பொதுமக்கள் பலர் வலியுறுத்தினார்கள்.

    இந்த நிலையில் ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை சசிகலா மீதும் ஓ.பன்னீர் செல்வம் மீதும் அப்போது இருந்த அமைச்சர், அதிகாரிகள் மீதும் குற்றம் சாட்டி இருக்கிறது. எனவே இதில் தவறு செய்த அனைவரும் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்.

    காவல்துறையை பொறுத்தவரையில் சசிகலாவுக்கு தற்போது இருக்கும் அதிகாரிகள் பலரும் நெருக்கமானவர்களாக இருக்க வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் அவரது அதிகாரம் அப்படிப்பட்ட அதிகாரமாக இருந்தது.

    எனவே இதையெல்லாம் ஆலோசித்து நேர்மையான காவல்துறை அதிகாரியை நியமித்து இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை நடத்த வேண்டும்.

    ஜெயலலிதாவின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று ஆரம்பத்தில் இருந்தே குரல் கொடுத்து வருவது நான் மட்டுமே. அ.தி.மு.க. தலைவர்கள் யாரும் இதற்காக ஒருபோதும் பேச மாட்டார்கள். நமது நாட்டில் பல தலைவர்கள் இதற்கு முன்பு உயிர் இழந்து உள்ளனர்.

    எம்.ஜி.ஆர்., கருணாநிதி என அனைவரது மரணமும் இயற்கையாக இருந்துள்ளது. எம்.ஜி.ஆர். மரணமடைந்த நேரத்தில் இவ்வளவு தகவல் தொழில்நுட்ப வசதி கிடையாது. இருப்பினும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் என்ன? எந்த நோயால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது போன்ற விஷயங்களை எல்லாம் வெளிப்படையாக மக்களுக்கு தெரிவித்தனர்.

    வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்றும் அவருக்கு சிகிச்சை அளித்தனர். ஆனால் அது போன்று சசிகலாவும் அவரால் கோடி கோடியாக சம்பாதித்த அ.தி.மு.க. தலைவர்களும் ஏன் ஜெயலலிதாவை காப்பாற்ற முன்வரவில்லை.

    ஜெயலலிதாவுக்கு என்ன நடந்தது என்பதை மூடி மறைக்க வேண்டிய அவசியம் என்ன? முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா எப்படி இறந்தார் என்பதை நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய கடமை அப்போது இருந்த ஆட்சியாளர்களுக்கும், உடன் இருந்த சசிகலாவுக்கும் உண்டு.

    திட்டமிட்டு சூழ்ச்சி செய்து எனது அத்தை உயிர் இழப்பதற்கு அவரை சுற்றி இருந்தவர்களே காரணமாக இருந்துள்ளனர்.

    ஜெயலலிதாவிடம் அளித்த உறுதி மொழியை மீறி அவரது இருக்கையில் அமர்வதற்கு சசிகலா ஆசைப்பட்டார். இதன் காரணமாகவே ஜெயலலிதாவுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என்பது எனது குற்றச்சாட்டாகும்.

    எனவே அவரது மரணத்தில் உள்ள மர்மங்களை தமிழக அரசு வெளிக்கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    ஓ. பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தியது எதற்காக? ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது அவர்தானே முதல்-அமைச்சராக இருந்தார். எனவே அவரும் ஜெயலலிதாவின் மரணத்தில் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு உள்ளார்.

    இந்த விஷயத்தில் அப்போது இருந்த ஆட்சியாளர்கள் அதிகாரிகள் அனைவரும் கடமை தவறி இருப்பது ஆணையத்தின் மூலம் உறுதியாகி இருக்கிறது.

    அ.தி.மு.க.வை வளர்ப்பதற்கு ஜெயலலிதா செய்த தியாகங்கள் எதையும் அவரால் பயனடைந்தவர்கள் நினைத்துக் கூட பார்க்கவில்லை. அப்படி நினைத்து பார்த்திருந்தால் அவரது உயிரை நிச்சயம் காப்பாற்றி இருப்பார்கள்.

    தற்போது சசிகலா தவறு செய்யவில்லை என்று கூறுகிறார். இதனை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த போது ஏன் எங்களை எல்லாம் பார்க்க விடவில்லை. நாங்கள் அவரை நெருங்க கூட முடியவில்லை. இதற்கு சசிகலாவும் அவருடன் இருந்தவர்களுமே காரணம்.

    எனவே மரணத்துக்கு பதில் சொல்ல வேண்டிய முழு பொறுப்பு சசிகலாவுக்கே உள்ளது.

    அ.தி.மு.க.வில் தற்போது நடைபெற்று வருவது மிகப்பெரிய நாடகமாகும். பன்னீர்செல்வத்தை வெளியேற்றி விட்டு எடப்பாடி பழனிசாமியும் சேர்ந்து நாடகமாடுகிறார்.

    ஓ.பி.எஸ் வழியே சென்று சசிகலாவை கட்சியில் சேர்க்க வேண்டும் என்று கூறுகிறார். இதன் மூலம் இருவருமே சேர்ந்து நாடகம் ஆடுவது உறுதியாகியுள்ளது. மக்கள் ஏமாளிகள் அல்ல.

    எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடும் எண்ணம் எதுவும் தற்போது இல்லை. முதுகில் குத்தும் இந்த அரசியல் வேண்டாம் என்றுதான் நான் ஒதுங்கி இருக்கிறேன்.

    அத்தையின் மரண விவகாரத்தில் கடைசியாக ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ஆணைய அறிக்கையை தொடர்ந்து தமிழக அரசு அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை உடனடியாக தொடங்க வேண்டும். அத்தையின் மரணத்தில் தொடர்புடைய அனைவரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்து தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு ஜெ.தீபா கூறினார்.

    • ஜெயலலிதா மரணம் அடைந்து 6 ஆண்டுகளாக ஆகிறது. இதில் 5 ஆண்டுகள் நடந்த விசாரணை கமிஷன் தற்போதுதான் முடிவடைந்து அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது.
    • ஜெயலலிதா மரணத்தில் என்ன நடந்துள்ளது என்பதை விசாரணை கமிஷன் அம்பலப்படுத்தி இருக்கிறது.

    சென்னை:

    முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ந்தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

    இதையடுத்து சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் டிசம்பர் மாதம் 5-ந்தேதி உயிரிழந்தார்.

    75 நாட்கள் தொடர் சிகிச்சையில் இருந்த ஜெயலலிதா உயிரிழந்து விட்டதை அறிந்ததும் அ.தி.மு.க. தொண்டர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் அதுபற்றி உரிய விசாரணை நடத்தி உண்மையை வெளியில் கொண்டு வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

    இதைத் தொடர்ந்து கடந்த 2017-ம் ஆண்டு ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. அப்போது முதல்-அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி இந்தஅறிவிப்பை வெளியிட்டார்.

    இதையடுத்து நீதிபதி ஆறுமுகசாமி தனது விசாரணையை தீவிரப்படுத்தினார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் உள்பட 159 பேரிடம் விசாரணை நடத்தி நீதிபதி ஆறுமுகசாமி அவர்களிடம் வாக்குமூலத்தையும் பெற்றார். இது தவிர அரசு துறை அதிகாரிகளிடமும், அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகத்தினரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

    சசிகலாவின் உறவினர்களும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டனர். இப்படி ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு தரப்பினரிடமும் நடத்திய விசாரணையின் அடிப்படையில் நீதிபதி ஆறுமுகசாமி 611 பக்க அறிக்கையை தயாரித்தார்.

    கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை நீதிபதி ஆறுமுகசாமி 5 ஆண்டுகள் வரை விசாரித்து பல்வேறு தகவல்களை திரட்டினார். இதில் ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. இது தொடர்பான அனைத்து தகவல்களையும் நீதிபதி ஆறுமுகசாமி அறிக்கையில் இடம்பெற செய்துள்ளார்.

    ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க தேவையில்லை என்றும் சென்னையிலேயே சிகிச்சை அளித்தால் போதும் என்றும் சசிகலா கூறியதாகவும், ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்க அவர் மறுப்பு தெரிவித்ததாகவும் விசாரணை அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான அனைத்து முடிவுகளையும் சசிகலா குடும்பத்தினரே எடுத்தனர் என்றும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இதுபோன்று ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் பல்வேறு குறைபாடுகள் இருந்ததாகவும் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    ஜெயலலிதா உயிரிழந்த மரண தேதியிலும் குழப்பம் உள்ளது. அப்போது சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் ஒரு டாக்டராக இருந்தும் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் அவர் போதிய கவனம் செலுத்தவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    இப்படி பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி இருக்கும் நீதிபதி ஆறுமுகசாமி, அப்பல்லோ டாக்டர்களையும் விசாரிக்க வேண்டும் என்று அறிக்கையில் கூறியுள்ளார். இது தொடர்பாக சசிகலா, டாக்டர் சிவகுமார், முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதா கிருஷ்ணன், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டாக்டர்கள் எஸ்.வி.சி.ரெட்டி, பாபு ஆபிரகாம், முன்னாள் தலைமை செயலாளர் ராம மோகனராவ், அப்பல்லோ மருத்துவமனை தலைவர் டாக்டர் பிரதாப் சி.ரெட்டி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

    இதையடுத்து தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அரசாணையில் சுகாதார முதன்மை செயலாளருக்கு ஆணையத்தின் அறிக்கை அளிக்கப்பட்டு அதில் நடவடிக்கை எடுப்பது தொடர்பான முன்னெடுப்புகளை துறை மேற்கொண்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆணையத்தின் பரிந்துரைப்படி குறிப்பிடப்பட்டுள்ள நபர்களின் மீது உரிய நடவடிக்கை எடுப்பது பற்றி சட்ட நிபுணர்களின் கருத்துக்கள் கேட்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்களை விரைவில் வெளிக்கொண்டு வர வேண்டும் என்பதில் தமிழக அரசு தீவிரமாக இருப்பது தெரிய வந்துள்ளது.

    இதன்படி சசிகலா உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் விசாரணை நடத்த விரைவில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட உள்ளது. இது தொடர்பாக சுகாதார துறையினர் விரைவில் காவல்துறையில் புகார் மனு அளிக்க உள்ளனர். இதனை பின்பற்றியே சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட உள்ளது.

    ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    போலீஸ் சூப்பிரண்டு அந்தஸ்திலான அதிகாரி ஒருவர் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட உள்ளார். இவருக்கு கீழ் டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர்கள் அந்தஸ்திலான அதிகாரிகளும் இடம்பெற உள்ளனர்.

    இந்த சிறப்பு புலனாய்வு குழுவினர் சசிகலா உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர உள்ளனர்.

    ஜெயலலிதா மரணம் அடைந்து 6 ஆண்டுகளாக ஆகிறது. இதில் 5 ஆண்டுகள் நடந்த விசாரணை கமிஷன் தற்போதுதான் முடிவடைந்து அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. ஜெயலலிதா மரணத்தில் என்ன நடந்துள்ளது என்பதை விசாரணை கமிஷன் அம்பலப்படுத்தி இருக்கிறது.

    இதன் மூலம் ஜெயலலிதா மரணத்தின் பின்னணியில் மிகப்பெரிய சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளதோ என்கிற சந்தேகமும் அச்சமும் அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    இதனை சிறப்பு புலனாய்வு குழு கண்டறிந்து வெளிப்படுத்த வேண்டும் என்கிற எண்ணத்திலேயே புதிய குழு அமைக்கப்பட உள்ளதாக அரசு துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதன் மூலம் ஜெயலலிதா மரணத்தில் நீடித்து வரும் மர்மம் விலகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளும் ஏற்கனவே எழுப்பப்பட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் அவரது மரணம் இயற்கையானது இல்லை என்பது போன்ற தோற்றத்தையே ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை ஏற்படுத்தி இருக்கிறது. இப்படி பொதுமக்கள் மற்றும் அ.தி.மு.க.வினர் மத்தியில் எழுந்துள்ள கேள்விகளுக்கும் சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணையில் உரிய பதில் கிடைக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

    ஜெயலலிதா மரணத்தில் 6 ஆண்டுகளுக்கு பிறகு சசிகலா உள்ளிட்டோர் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட இருப்பது அரசியல் அரங்கில் அதிர்வலைகளையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

    • ஆணையம் யூகத்தின் அடிப்படையில் சொல்வதை எல்லாம் மக்கள் ஏற்கமாட்டார்கள்.
    • என்மீது சொல்லப்படுகின்ற குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுக்கிறேன் என்றார் சசிகலா.

    சென்னை:

    சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

    ஆணையம் யூகத்தின் அடிப்படையில் சொல்வதையெல்லாம் மக்கள் ஏற்கமாட்டார்கள்.

    என்னை அரசியலில் இருந்து ஓரங்கட்ட வேண்டும் என்றால் அதற்கு எத்தனையோ வழிகளை தேர்ந்தெடுத்து இருக்கலாம். அதற்கு அம்மா அவர்களின் மரணத்தை சர்ச்சை ஆக்கியது தான் மிகவும் கொடுமையானது.

    புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மரணத்தை சர்ச்சையாக்கி, அதற்காக ஒரு விசாரணை ஆணையம் நீதியரசர் ஆறுமுகசாமி அவர்கள் தலைமையில் அமைத்து, அதன் அறிக்கையும் அரசியலாக்கி விட்டார்கள்.

    இந்த ஆணையத்தின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது போல் புரட்சித்தலைவி அம்மாவின் மருத்துவ சிகிச்சையில் ஒருபோதும் நான் தலையிட்டதில்லை. அவ்வாறு கருத்துக்களை சொல்லக்கூடிய அளவுக்கு மருத்துவ படிப்பு நான் படித்தது கிடையாது. எந்த விதமான பரிசோதனைகள் செய்ய வேண்டும், எந்த எந்த மருந்துகள் தர வேண்டும் என்கிற முடிவை மருத்துவ குழுவினரே தான் முடிவெடுத்து உரிய சிகிச்சைகளை வழங்கினார்கள்.

    அக்கா உடல்நிலை சம்பந்தப்பட்ட பரிசோதனைகளை அப்பல்லோ மருத்துவமனையில் செய்து இருந்தோம். இதன் காரணமாகத்தான் அந்த மருத்துவமனையை தேர்ந்தெடுத்து அம்மா அவர்களை சிகிச்சை அளிக்க அங்கு கொண்டு சென்றோம் வெளிநாடு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க நான் என்றைக்குமே தடையாக இருந்தது இல்லை.

    ஆணையம் யூகத்தின் அடிப்படையில் சொல்வதையெல்லாம் மக்கள் ஏற்கமாட்டார்கள். எனவே, என் மீது சொல்லப்படுகின்ற குற்றச்சாட்டுகளை நான் முற்றிலும் மறுக்கிறேன். இது தொடர்பாக என்னிடம் எந்த வித விசாரணை நடத்தினாலும் அதை சந்திக்க தயாராக இருக்கிறேன்.

    நம் அம்மா அவர்களை அரசியல் ரீதியாக எதிர்க்கக்கூட துணிவில்லாதவர்கள் அவர்களின் மரணத்தை அரசியலாக்கி வேடிக்கை பார்க்கும் அற்பத்தனமான நிலையை யாரும் இனிமேல் ஆதரிக்கமாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வி.கே.சசிகலா உள்பட 8 பேர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரை.
    • சட்ட வல்லுநர்களின் ஆலோசனையை பெற்று நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு முடிவு.

    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் இறுதி விசாரணை அறிக்கையில் வி.கே.சசிகலா, கே.எஸ்.சிவகுமார், அப்போதைய சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர். ஒய்.வி.சி. ரெட்டி மற்றும் டாக்டர் பாபு ஆபிரகாம், அப்போதைய தலைமை செயலாளர் டாக்டர் ராமமோகன ராவ் ஆகியோர் மீது விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    அதேபோல் அப்பல்லோ மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பிரதாப் சி.ரெட்டி தொடர்பாக அரசாங்கம் முடிவு செய்து விசாரிக்கலாம் என்றும் ஆணையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜெயலலிதா மரண விவகாரத்தில் ஆறுமுகசாமி ஆணைய விசாரணை அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட 8 பேர்கள் மீது நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை செயலாளருக்கு தலைமைச்செயலாளர் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளார். சில குறிப்பிட்ட நபர்களுக்கு எதிராக ஆணைய அறிக்கையின் பரிந்துரை மீது சட்ட வல்லுநர்கள் ஆலோசனை பெற்று நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை அறிக்கையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார். இந்த விசாரணை அறிக்கை 608 பக்கங்களை கொண்டுள்ளது.
    • விசாரணை அறிக்கையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டசபையில் தாக்கல் செய்தார்.

    சென்னை:

    முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 22.09.2016 அன்று திடீர் உடல்நலக்குறைவால் சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    75 நாட்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற நிலையில் அவர் சிகிச்சை பெறும் புகைப்படங்களோ, முக்கிய தலைவர்கள் யாரும் அவரை பார்த்தது போன்ற புகைப்படங்களோ வெளியாகவில்லை.

    அவர் ஆஸ்பத்திரியில் இருந்த போது நலமாக இருக்கிறார். ஜூஸ் குடித்தார். இட்லி சாப்பிட்டார். நடைபயிற்சி செய்தார் என்று தகவல்கள் வெளியிடப்பட்டன. ஆனாலும் அது தொடர்பான புகைப்படங்கள் வெளிவரவில்லை.

    இதனால் ஜெயலலிதா எப்படி இருக்கிறார்? அவரது உடல்நிலை எப்படி இருக்கிறது? என்று தெரியாமல் அ.தி.மு.க. தொண்டர்கள் ஆஸ்பத்திரி வாசலிலேயே நாட்கணக்கில் இரவு பகலாக காத்துக்கிடந்தார்கள்.

    இந்த நிலையில் 5.12.2016 அன்று அவர் மரணம் அடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு மரணம் அடையும் வரையிலான சந்தர்ப்ப சூழல்கள் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது. அவரது மரணம் மிகப்பெரிய விவாத பொருளாகவும் இருந்தது.

    இந்த சூழ்நிலையில் ஜெயலலிதா மரணம் அடையும் வரை துணை முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் திடீரென்று ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அதை கண்டுபிடிக்க வலியுறுத்தியும் தர்ம யுத்தத்தை தொடங்கினார். இதனால் ஜெயலலிதா மரண விவகாரம் சூடு பிடித்தது.

    25.9.2017 அன்று ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. அடுத்த 5 நாட்களில் அதாவது 30.9.2017 முதல் விசாரணை ஆணையம் அதிகாரப்பூர்வமாக செயல்படத்தொடங்கியது.

    விசாரணை ஆணையத்தின் விசாரணை நீண்டு கொண்டே சென்றதால் 14 முறை விசாரணை ஆணையத்துக்கு பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டு கடந்த ஆகஸ்டு 24-ந்தேதிக்குள் அறிக்கையை தாக்கல் செய்யும்படி அரசு உத்தரவிட்டது.

    அதன்படி நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை அறிக்கையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார். இந்த விசாரணை அறிக்கை 608 பக்கங்களை கொண்டுள்ளது.

    இந்த விசாரணை அறிக்கையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டசபையில் தாக்கல் செய்தார். அரசு தாக்கல் செய்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    விசாரணை ஆணையம் எய்ம்ஸ் மருத்துவக்குழு அளித்த மருத்துவ அறிக்கையை கவனத்துடன் ஆய்ந்து பார்த்ததில் எய்ம்ஸ் மருத்துவக்குழு சிகிச்சை விவரத்தின் சுருக்கத்தை மட்டுமே அவர்களது கருத்தாக தெரிவித்துள்ளனர் என தெரியவருகிறது. எனவே மருத்துவக்குழுவின் அறிக்கையை விசாரணை ஆணையம் ஏற்கவில்லை.

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா 22.9.2016 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கு வழி வகுத்த சூழ்நிலைகள் மற்றும் சந்தர்ப்பங்களுடன் தொடர்புடையது. மறைந்த முதல்-அமைச்சரை தாமதமின்றி அப்பல்லோ மருத்துவமனைக்கு மாற்றுவதற்கு போதுமான அக்கறை எடுத்துக்கொண்டது தொடர்பாக அந்த வீட்டில் இருந்த சசிகலா உள்ளிட்ட நபர்களின் நடவடிக்கையில் அசாதாரணமான அல்லது இயற்கைக்கு மாறான செயல் எதையும் ஆணையம் கண்டறியவில்லை.

    சசிகலா, கே.எஸ்.சிவகுமார், அப்போதைய சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்து இவர்கள் மீது விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

    ஒய்.வி.சி. ரெட்டி மற்றும் டாக்டர் பாபு ஆபிரகாம், அப்போதைய தலைமை செயலாளர் டாக்டர் ராமமோகன ராவ் ஆகியோர் மீது விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அப்பல்லோ மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பிரதாப் சி.ரெட்டி தொடர்பாக அரசாங்கம் முடிவு செய்து விசாரிக்கலாம்.

    இவ்வாறு ஆணையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    இந்த அறிக்கை பற்றி கடந்த 29.8.2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது சில குறிப்பிட்ட நபர்களுக்கு எதிரான விசாரணை ஆணைய அறிக்கையின் பரிந்துரைகள் மீது சட்ட வல்லுனர்களின் ஆலோசனை பெற்று தக்க நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.

    இந்த விசாரணை அறிக்கை மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை செயலாளரிடம் வழங்கப்பட்டு துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    • தினகரனும் இவர்களுடன் சேர்வதற்கு தயாராக இருக்கிறார்.
    • மாநில அரசாங்கம் பல தவறுகளை செய்கின்றது.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரத்தில் அ.தி.மு.க. 51-வது ஆண்டு தொடக்கவிழாவையொட்டி முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா அவரது இல்லத்தில் கட்சி கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க நிர்வாகிகள் அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே கட்சியை வலுப்படுத்தி, ஆட்சியை பிடிக்க முடியும். அ.தி.மு.க மத்திய அரசையும், மாநில அரசையும் கொள்கை ரீதியாக ஒரு சேர எதிர்த்து அரசியலில் பயணித்தால் தான் கட்சிக்கு எதிர்காலம் இருக்கும். இதைத்தான் 2014-லிருந்து 2016 வரை ஜெயலலிதா செய்தார்.

    மாநில அரசாங்கம் பல தவறுகளை செய்கின்றது. அதனை மக்கள் மன்றத்துக்குக் கொண்டு செல்ல அ.தி.மு.க தவறி விட்டது. அ.தி.மு.க.வில் எல்லோரையும் அரவணைத்து செல்கின்ற தலைமை வேண்டும். அப்படி ஒரு தலைமை தற்போது இல்லை.

    எடப்பாடி பழனிசாமி ஒரு குறுகிய வட்டத்துக்குள் இருக்கிறார். அதிலிருந்து அவர் வெளியே வர வேண்டும். அப்போதுதான் அ.தி.மு.க.வுக்கு ஒரு பொதுவான தலைவராக அவர் இருக்க முடியும். ஓ.பி.எஸ்-இ.பி.எஸ்க்கு கருத்து முரண்பாடு இருக்கிறது என்று நான் சொன்னதால் தான் என்னை கட்சியை விட்டு நீக்கினார்கள்.

    அ.தி.மு.கவிலிருந்து என்னை யாரும் நீக்க முடியாது. எடப்பாடி பழனிசாமி தற்போது உள்ள பொறுப்புக்கு ஆபத்து ஏற்படும் என்ற சூழல் வந்தால் கண்டிப்பாக ஓ.பி.எஸ்ஸை இணைத்துக் கொள்வார்.

    தினகரனும் இவர்களுடன் சேர்வதற்கு தயாராக இருக்கிறார். நீங்கள் ஒன்று சேருங்கள் கூட்டணி வைத்துக் கொள்வோம் எனக் கூறுகிறார். இவர்கள் அனைவரையும் அரவணைத்து செல்லுகின்ற ஆற்றல் சசிகலாவுக்கு மட்டும்தான் உண்டு.

    ஏனென்றால் ஜெயலலிதாவுடன் பல ஆண்டுகளாக உடனிருந்து பக்குவம் பெற்றவர். அவரால் தான் பொதுவான தலைவராக இருக்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சசிகலா, அ.தி.மு.க. 51-ம் ஆண்டு தொடக்க விழாவை ராமாவரம் தோட்டத்தில் கொண்டாட அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.
    • சசிகலா விழா நடத்த இடம் தர எம்.ஜி.ஆர். குடும்ப உறுப்பினர்களில் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

    சென்னை:

    மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். கடந்த 1972-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17-ந்தேதி அ.தி.மு.க.வை தொடங்கினார். தி.மு.க.வில் இருந்து வெளியேறி புதிய கட்சி தொடங்கிய எம்.ஜி.ஆர். தனது கட்சிக்கு அண்ணா பெயரை சேர்த்து அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்று பெயர் சூட்டினார்.

    அ.தி.மு.க. தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. வருகிற 17-ந்தேதி 51-வது ஆண்டில் அ.தி.மு.க. அடியெடுத்து வைக்கிறது. அ.தி.மு.க. தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவுபெறுவதை சிறப்பாக கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

    முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தில் கொடி ஏற்றி அ.தி.மு.க. 50-வது ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடுகிறார்.

    இந்த நிலையில் அ.தி.மு.க. ஆண்டு விழாவை சசிகலாவும் கொண்டாட திட்டமிட்டுள்ளார். சென்னை மணப்பாக்கம் ராமாவரம் தோட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர். காது கேளாதோர், வாய் பேசாதோர் பள்ளியில் சசிகலா நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கான விழாவுக்கு ஏற்பாடுகள் நடந்து வந்தன.

    ஆனால் சசிகலா, அ.தி.மு.க. 51-ம் ஆண்டு தொடக்க விழாவை ராமாவரம் தோட்டத்தில் கொண்டாட அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. சசிகலா விழா நடத்த இடம் தர எம்.ஜி.ஆர். குடும்ப உறுப்பினர்களில் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

    இது தொடர்பாக கிடைத்த தகவல்கள் வருமாறு:-

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த நேரத்தில் அவரது கையால் பள்ளி மாணவர்களுக்கு காது கேட்கும் கருவிகள் வழங்கப்பட்டன.

    இதற்கான மொத்த செலவை அப்போது அமைச்சராக இருந்த ஒருவர் ஏற்றார். ஆனால் சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறைக்கு சென்றதால் கருவிகள் வாங்கிய நிறுவனத்துக்கு அந்த அமைச்சர் பணம் கொடுக்கவில்லை.

    எனவே மாணவர்களுக்கு வழங்கிய கருவிகளை அந்த நிறுவனம் திரும்ப பெற்று விட்டது. அதேபோல் மற்றொரு விழாவில் பள்ளி வளர்ச்சிக்கு சசிகலா தரப்பில் வழங்கிய நன்கொடைக்கான காசோலையும் திரும்பி விட்டதாக கூறப்படுகிறது. எம்.ஜி.ஆர். காது கேளாதோர், வாய் பேசாதோர் பள்ளி நிர்வாகத்தினர் சசிகலா மீது அதிருப்தியில் உள்ளனர்.

    எனவே சசிகலா விழா நடத்த எம்.ஜி.ஆர். உறவினர்கள் திடீரென்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    மேற்கண்ட தகவலை கட்சி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

    இந்த நிலையில் சசிகலாவின் கணவர் நடராஜனின் தம்பி ராமச்சந்திரன், எம்.ஜி.ஆர். குடும்பத்தை சேர்ந்த மற்றொருவரிடம் விழாவுக்கு அனுமதி பெற்று தருமாறு பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து ராமாவரம் தோட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு சசிகலா மாலை அணிவிக்கவும், வீட்டின் வெளியே நலத்திட்ட உதவிகளை வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.

    ஆனால் இதற்கும் மறைமுகமாக எதிர்ப்பு கிளம்பி உள்ளது. விழாவுக்கு அனுமதி தரக்கூடாது என்று பள்ளி நிர்வாகம் சார்பில் நந்தம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    அந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

    ராமாவரம் தோட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர். காது கேளாதோர், வாய் பேசாதோர் பள்ளியில் வருகிற 17 மற்றும் 18-ந்தேதிகளில் விளையாட்டு விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அதில் வங்காளதேச தூதரக அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்.

    இந்த விழாவுக்கு எந்தவிதமான இடையூறும் இல்லாதபடி பாதுகாப்பு வழங்க வேண்டும். மேலும் அன்றைய தினம் பள்ளி வளாகத்தில் வேறு பொது நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி தரக்கூடாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    சசிகலா இதற்கு முன்பு ராமாவரம் தோட்டத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய நிலையில் தற்போது அவருக்கு எம்.ஜி.ஆர். குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து இருப்பது அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • மத்திய அரசும், மாநில அரசும் சண்டை போட்டுக்கொண்டே இருக்கக்கூடாது.
    • தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீரழிந்து விட்டது.

    சென்னை:

    சென்னையில் இன்று சசிகலா நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்தியாவில் உள்ள மாநிலங்களில் பல அரசுகள் உள்ளது. மத்தியில் ஒரே ஒரு ஆட்சி தான் இருக்க முடியும். ஒவ்வொரு மாநிலத்தில் வசித்து வருபவர்களும் அரசுக்கு வரி கட்டுகிறார்கள். இதனால் நமக்கு தேவையானவற்றை இங்குள்ள மாநில அரசு 100 சதவீதம் கேட்டு பெற உரிமை உள்ளது.

    மக்கள் நம்மை நம்பி தான் ஓட்டு போட்டு இருக்கிறார்கள். இதனால் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். மத்திய அரசும், மாநில அரசும் சண்டை போட்டுக்கொண்டே இருக்கக்கூடாது. சண்டை போடுவதற்காக மக்கள் ஓட்டு போடவில்லை.

    தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீரழிந்து விட்டது. தமிழ்நாடு போலீஸ் துறையில் நல்ல அதிகாரிகள் உள்ளனர். அவர்களை சரியாக பயன்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பொதுச் செயலாளர் பதவிக்கு பதில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • சசிகலாவின் மேல் முறையீட்டு வழக்கின் இறுதி விசாரணையை அக்டோபர் 26-ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

    சென்னை:

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க. பொதுச் செயலாளராக வி.கே.சசிகலாவும், துணை பொதுச் செயலாளராக டி.டி.வி.தினகரனும் தேர்ந்து எடுக்கப்பட்டனர். அப்போது, சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா சிறை சென்றார். இதையடுத்து, 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில் சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை பதவிகளில் இருந்தும், கட்சியில் இருந்தும் நீக்கம் செய்தனர்.

    பொதுச் செயலாளர் பதவிக்கு பதில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை புதிதாக உருவாக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதை எதிர்த்து சென்னை சிவில் கோர்ட்டில் சசிகலா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை சிவில் கோர்ட் தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் சசிகலா மேல் முறையீடு செய்தார். அந்த மனுவில், முழுமையாக விசாரணை நடத்தாமலும், தனது தரப்பு வாதங்களையும் முழுமையாக கேட்காமல் வழக்கை நிராகரித்தது தவறு என்று கூறியிருந்தார்.

    இந்நிலையில், இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதி எஸ்.சவுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இருதரப்பு கோரிக்கையின் அடிப்படையில் இறுதி விசாரணைக்காக இந்த வழக்கு அக்டோபர் 26-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

    • எம்.ஜி.ஆரின் பெருமைகளையும், ஜெயலலிதாவின் தன்னலமற்ற சேவைகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் தொடர்ந்து பயணிக்க உள்ளார்.
    • கடந்த 12, 13-ந்தேதிகளில் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டத்தில் சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

    சென்னை:

    சசிகலா தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களையும், பொதுமக்களையும் சந்தித்து வருகிறார்.

    கடந்த ஜூன் மாதம் 26-ந்தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் அவர் சுற்றுப்பயணம் செய்தார். கடந்த ஜூலை மாதம் திண்டிவனம், வானூர், உளுந்தூர்பேட்டை தொகுதிகளிலும், கடந்த 12, 13-ந்தேதிகளில் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டத்திலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

    இந்த நிலையில் சசிகலா கும்மிடிப்பூண்டி தொகுதியில் நாளை (புதன்கிழமை) சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதுகுறித்து சசிகலாவின் முகாம் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழக மக்களின் உரிமைகளை காப்பாற்றிடவும், தி.மு.க. தலைமையிலான ஆட்சியின் அவலங்களை மக்களுக்கு தோலுரித்து காட்டிடவும், பெண் இனத்தின் பாதுகாப்பை பேணி காத்திடவும் சசிகலா திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் தனது சுற்றுப்பயணத்தை தொடர்ந்து மேற்கொள்கிறார்.

    எம்.ஜி.ஆரின் பெருமைகளையும், ஜெயலலிதாவின் தன்னலமற்ற சேவைகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் தொடர்ந்து பயணிக்க உள்ளார். நாளை (புதன்கிழமை) மதியம் 2.30 மணிக்கு சசிகலா தி.நகரில் உள்ள தனது இல்லத்தில் இருந்து புறப்படுகிறார்.

    கோயம்பேடு பாலம், மாதவரம் ரவுண்டானா, செங்குன்றம், பாடியநல்லூர் வழியாக கன்னிகைபேர் சென்றடைந்து அங்கிருந்து தனது சுற்றுப்பயணத்தை தொடங்கும் சசிகலா பெரியபாளையம், தண்டலம், பாலவாக்கம், ஊத்துக்கோட்டை பேரூராட்சி ஆகிய பகுதிகளில் தொண்டர்களையும், பொதுமக்களையும் நேரில் சந்திக்கிறார்.

    இந்த சுற்றுப்பயணத்தில் நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் ஆகியோர் திரளாக கலந்து கொள்கின்றனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அ.தி.மு.க. நிர்வாகிகள் மனதிலாவது இடம் பிடிக்கலாம் என்று அவர் சுற்றுப்பயணத்தை தொடங்கினார்.
    • கொங்கு மண்டலத்தில் சசிகலா மேற்கொண்ட பயணம் படுதோல்வியை தழுவி இருக்கிறது.

    அரசியல் அரங்கில் வாரத்துக்கு ஒருமுறை அல்லது 10 நாட்களுக்கு ஒரு தடவை சசிகலா ஏதாவது சொல்லி சரவெடி போட்டு விடுகிறார். என்றாலும் அவர் இன்னமும் மக்கள் மனதில் இடம் பிடிக்கவில்லை. சரி, அ.தி.மு.க. நிர்வாகிகள் மனதிலாவது இடம் பிடிக்கலாம் என்று அவர் சுற்றுப்பயணத்தை தொடங்கினார். அதுவும் எதிர்பார்த்த அளவுக்கு கை கொடுப்பதாக இல்லை.

    சமீபத்தில் கொங்கு மண்டலத்துக்கு சசிகலா போனார். தனக்கு பின்னால் நிறைய பேர் திரண்டு வருவார்கள் என்று எதிர்பார்த்தார். இதன் மூலம் கொஞ்ச நாள் கெத்து காட்டலாம் என்று ஆசைப்பட்டார்.

    அதுவும் நடக்கவில்லை. கொங்கு மண்டலத்தில் சசிகலா மேற்கொண்ட பயணம் படுதோல்வியை தழுவி இருக்கிறது. மீண்டும் சசிகலா சறுக்கி இருக்கிறார்.

    • தி.மு.க அரசு சொன்னதை எதுவும் செய்யவில்லை என போகும் இடங்களில் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
    • ஏழை-எளிய மக்களுக்காக ஜெயலலிதா கொண்டு வந்த பல நல்ல திட்டங்களை தி.மு.க அரசு நிறுத்துவது நல்லதல்ல.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் அருளானந்த நகரில் உள்ள தனது வீட்டில் இன்று அண்ணாவின் 114-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது படத்திற்கு சசிகலா மலர்தூவி மரியாதை செய்தார். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    பேரறிஞர் அண்ணாவின் பாதையில் நாங்கள் பயணித்து கொண்டிருக்கிறோம். நேரம் வரும்போது அ.தி.மு.க. கட்சி அலுவலகத்திற்கு செல்வேன். நாங்கள் ஒன்றாகத்தான் இருக்கிறோம். எடப்பாடி பழனிசாமி தற்போது பழைய பழனிசாமியாக இருக்கிறாரா? இல்லையா? என்பதை நீங்கள் தான் கூற வேண்டும்.

    நிச்சயமாக அ.தி.மு.க.விற்கு தலைமை ஏற்று அனைவரையும் ஒன்றிணைப்பேன். வரும் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க ஒன்றிணைந்து நல்ல வெற்றிகளை பெறும். நான் பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைவரும் ஒன்றாக தான் உள்ளோம்.

    தி.மு.க அரசு சொன்னதை எதுவும் செய்யவில்லை என போகும் இடங்களில் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஏழை-எளிய மக்களுக்காக ஜெயலலிதா கொண்டு வந்த பல நல்ல திட்டங்களை தி.மு.க அரசு நிறுத்துவது நல்லதல்ல.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×