என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பி.ஏ.பி."

    • உடுமலை கால்வாய் வாயிலாக 14,612 ஏக்கர், பாசன வசதி பெற்று வருகிறது.
    • 38 கி.மீ., தொலைவுக்கு இக்கால்வாய் அமைந்துள்ளது.

    உடுமலை :

    பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்தில் உடுமலை கால்வாய் வாயிலாக 14,612 ஏக்கர், பாசன வசதி பெற்று வருகிறது. ஆயக்கட்டு பகுதியில், மக்காச்சோளம் பிரதானமாக சாகுபடி செய்யப்பட்டுள்ளது.திருமூர்த்தி அணை அருகே பிரதான கால்வாயில் இருந்து பிரிந்து 38 கி.மீ., தொலைவுக்கு இக்கால்வாய் அமைந்துள்ளது.

    தற்போது இரண்டாம் மண்டலம், மூன்றாம் சுற்றுக்கு தண்ணீர் இக்கால்வாயில் சென்று வருகிறது. இந்நிலையில், வழியோரத்தில் தண்ணீர் திருட்டு காரணமாக கடைமடை பகுதிக்கு பற்றாக்குறை ஏற்படுகிறது.

    பருவமழை பெய்யாத பகுதிகளில் நிலைப்பயிராக உள்ள மக்காச்சோளத்துக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டியுள்ளது. எனவே அனைத்து மடைகளுக்கும் போதுமான தண்ணீர் கிடைக்க பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தண்ணீர் திருட்டை தடுக்க இரவு நேரங்களில் போலீஸ், பொதுப்பணித்துறையினர் உள்ளடக்கிய கண்காணிப்பு குழுவினர் ரோந்து சென்று தண்ணீர் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆயக்கட்டு விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    • திருமூர்த்தி அணையில் இருந்து இரண்டாம் மண்டல பாசனம் நிறைவு பெறுகிறது.
    • அரசுக்கு பரிந்துரை செய்து கருத்துரு பெற்று நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணையில் இருந்து நான்கு மண்டல பாசனத்தில் 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. அதில் இரண்டாம் மண்டல பாசனத்துக்கு கடந்த ஆகஸ்டு மாதம் 26-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இன்றுடன் பாசன காலம் நிறைவு பெறுகிறது.

    தொடர்ந்து மூன்றாம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் எப்போது திறக்கப்படும் என பி.ஏ.பி., விவசாயிகளிடம் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில் திருமூர்த்தி நீர் தேக்க முன்னாள் திட்டக்குழு தலைவர் பரமசிவம் மற்றும் முன்னாள் பகிர்மான குழு தலைவர்கள், பாசன சபை தலைவர்கள், பி.ஏ.பி., கண்காணிப்பு பொறியாளர் தேவராஜனை சந்தித்து மூன்றாம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தினர். தொடர்ந்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

    இது குறித்து திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு முன்னாள் தலைவர் பரமசிவம் கூறியதாவது:-

    திருமூர்த்தி அணையில் இருந்து இரண்டாம் மண்டல பாசனம் நிறைவு பெறுகிறது. இதையடுத்து மூன்றாம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறக்க அதிகாரிகளிடம் வலியுறுத்தினோம்.

    வருகிற 28ந் தேதி தண்ணீர் திறந்து நான்கு சுற்றுகளாக தண்ணீர் வினியோகிக்க வேண்டும். மொத்தம் 7,600 மில்லியன் கனஅடி நீர் வினியோகிக்க வேண்டும். இதன் வாயிலாக கோவை, திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 94,500 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும். அரசுக்கு பரிந்துரை செய்து கருத்துரு பெற்று நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • 4 வயது குழந்தை காங்கயம் அருகே வாய்க்காலில் தவறி விழுந்து தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதாகத் தகவல் பரவியது.
    • காங்கயம் காவல் துறையினா் கழந்தையைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

    வெள்ளகோவில் :

    வெள்ளக்கோவில் பகுதி பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன வாய்க்காலில் பாசனத்துக்காக தண்ணீா் திறக்கப்பட்டு, கடந்த சில வாரங்களாக வாய்க்காலில் அதிக அளவு தண்ணீா் சென்று கொண்டுள்ளது. இந்நிலையில், சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவில் தோ்த் திருவிழாவுக்கு வந்திருந்த ஒரு குடும்பத்தைச் சோ்ந்த 4 வயது குழந்தை காங்கயம் அருகே வாய்க்காலில் தவறி விழுந்து தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதாகத் தகவல் பரவியது. இது குறித்து உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, நீா்வளத் துறை மூலம் பிஏபி., வாய்க்காலில் தற்காலிகமாக தண்ணீா் நிறுத்தப்பட்டுள்ளது.

    வெள்ளக்கோவில் , காங்கயம் காவல் துறையினா் கழந்தையைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனா். இருப்பினும் குழந்தை வாய்க்காலில் தவறி விழுந்தது உறுதிப்படுத்தபடாததால், வேறு கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா்.

    • வீட்டுக்கு வெளியே விளையாடி கொண்டிருந்த சிறுவன் மாயமானான்.
    • காங்கயம் போலீசார் ‘சிசிடிவி’ பதிவுகளை பார்வையிட்டு தேடினர்

    திருப்பூர் :

    திருப்பூர் அடுத்த காங்கயத்தை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி மஞ்சுளா . இவர்களுக்கு ரிதன் என்ற 3½ வயது மகன் உள்ளார்.கடந்த 2ந்தேதி வீட்டுக்கு வெளியே விளையாடி கொண்டிருந்த சிறுவன் மாயமானான். புகாரின் பேரில் காங்கயம் போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் அப்பகுதியினர் தேடி வருகின்றனர்.சிறுவனை கடத்தி சென்றார்களா என்ற கோணத்திலும் அப்பகுதியில் உள்ள 'சிசிடிவி' பதிவுகளை பார்வையிட்டு தேடினர். ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை.

    இந்தநிலையில் வீட்டுக்கு அருகே பி.ஏ.பி., வாய்க்கால் செல்லும் காரணத்தால், சிறுவன் அங்கு ஏதாவது சென்றானா என்ற சந்தேகத்தின் பேரில் தேட ஆரம்பித்தனர்.சிறுவனை தேடும் பணிக்காக வாய்க்காலில் ஆங்காங்கே மதகுகள் அடைக்கப்பட்டு தீவிரமாக தேடி வருகின்றனர்.

    இப்பணியில், 20க்கும் மேற்பட்ட போலீசார், மற்றும் தீயணைப்பு படை வீரர்கள், பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர். சிறுவன் மாயமாகி 7 நாட்கள் ஆகியும் எந்த ஒரு தகவலும் கிடைக்காததால் பெற்றோர் மற்றும் அந்த கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சோகத்தில் உள்ளனர்.

    • இடைவெளியின்றி மூன்றாம் சுற்றுக்கு நீர் வழங்கப்படுகிறது.
    • பிரதான கால்வாய் பராமரிப்பு பணிகள் மேற் கொள்ளப் படும் என்றனர்.

    உடுமலை :

    பி.ஏ.பி., பாசன திட்டத்தின் கீழ் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று       வருகின்ற ன. நான்கு மண்டலமாக பிரித்து, சுழற்சி முறையில் தண்ணீர் வழங்கப்படுகிறது. அதன் அடிப்படையில் 3ம் மண்டல பாசனத்திற்கு கடந்த டிசம்பர் 28ந் தேதி திருமூர்த்தி அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டது.

    இதன் வாயிலாக இரு மாவட்டங்களில் உள்ள 94 ஆயிரத்து 362 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதோடு, வருகிற ஏப்ரல் 27-ந்தேதி வரை 120 நாட்களுக்குள், உரிய இடைவெளி விட்டு 4 சுற்றுக்களில் 7,600 மில்லியன் கனஅடி நீர் வழங்கப்படும் என அறிவிக்கப் பட்டிருந்தது.

    அதன் அடிப்படையில் மூன்றாம் மண்டலம் முதல் சுற்று முடிந்து 7நாட்கள் இடைவெளி விட்டு இரண்டாம் சுற்றுக்கு நீர் திறக்கப்பட்டது. இரண்டாம் சுற்று நிறைவடைந்த நிலையில் தொடர்ந்து இடைவெளியின்றி மூன்றாம் சுற்றுக்கு நீர் வழங்கப்படுகிறது.

    இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், விவசாயிகள் கோரிக்கை அடிப்படையில் மூன்றாம் சுற்றுக்கு இடைவெளியின்றி திருமூர்த்தி அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 21 நாட்கள் நீர் வழங்கப்படும். பாசன காலத்தை விரைந்து முடிந்து காண்டூர் கால்வாய் மற்றும் பிரதான கால்வாய் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றனர்.

    • கையகப்படுத்திய நிலங்களுக்கு தற்போது வரை விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை.
    • வாய்க்கால்களை உடைக்கும் நபா்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

    திருப்பூர் :

    திருப்பூா் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகளுக்கான குறைதீா்க்கும் முகாம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு சப்-கலெக்டர் ஸ்ருதன்ஜெய் நாராயணன் தலைமை வகித்தாா்.

    தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பல்லடம் ஒன்றியச் செயலாளா் வை.பழனிசாமி அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:- திருப்பூா் மாவட்டம் பல்லடம் வட்டம் பூமலூா் கிராமத்தில் பிஏபி. பாசனத் திட்டத்துக்கு கையகப்படுத்திய நிலங்களுக்கு தற்போது வரை விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை. ஆகவே பூமலூா் கிராமத்தில் பிரதான வாய்க்காலில் இருந்து கிளை வாய்க்கால்களுக்கு கையகப்படுத்திய நிலங்களுக்கு சந்தை மதிப்பீட்டில் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சாமளாபுரம் கிராம நீரினைப் பயன்படுத்துவோா் சங்கத்தின் சாா்பில் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:- பிஏபி., வாய்க்கால்களிலும், கிளை வாய்க்கால்களிலும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. அதிலும் ஒரு சில இடங்களில் கிளை வாய்க்கால்களையும் சோ்த்து கம்பிவேலி போடுகின்றனா். மேலும் கிளை வாய்க்கால்களில் மண்ணை அப்புறப்படுத்துவதால் கரைகளில் உடைப்பும் ஏற்படுகிறது. ஆகவே, பிஏபி., வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், வாய்க்கால்களை உடைக்கும் நபா்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தனர்.

    • பி.ஏ.பி., திட்டம், பாலாறு படுகை பாசன அமைப்பு முறையின் கீழ் 134 பாசன சங்கங்கள் உள்ளன.
    • முதலில் 5 ஆண்டாக இருந்த பதவிக்காலம் 6 மாதம் நீடிக்கப்பட்டது.

    உடுமலை:

    பி.ஏ.பி., பாசன திட்டத்தில் விவசாயிகள் நீர்ப்பாசன அமைப்பு முறை மேலாண்மை சட்டத்தின் கீழ் நீரினைப்பயன்படுத்துவோர் சங்கங்களுக்கு தலைவர் மற்றும் ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர்களை அத்திட்டங்களின் கீழ் பயன்பெறும் விவசாயிகள் ஓட்டுப்பதிவு முறையில் தேர்வு செய்ய வேண்டும் என்ற விதி உள்ளது.

    பி.ஏ.பி., திட்டம், பாலாறு படுகை பாசன அமைப்பு முறையின் கீழ் 134 பாசன சங்கங்கள் உள்ளன. 9 பகிர்மான குழு தலைவர்கள், 45 பகிர்மான குழு உறுப்பினர் மற்றும் திட்டக்குழு தலைவர் ஆகிய பதவிகள் உள்ளன. இம்முறையில் முதல் கட்டமாக கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களின் தலைவர் மற்றும் ஆட்சிமண்டல தொகுதி உறுப்பினர்கள் தேர்வு செய்ய வேண்டும்.

    பின்னர் பகிர்மானக்குழு தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு செய்ய வேண்டும். அதன்பின் பகிர்மான குழு தலைவர்களில் ஒருவர் திட்டக்குழு தலைவராகவும், மற்றவர்களை திட்டக்குழு உறுப்பினர்களாகவும் தேர்வு செய்ய வேண்டும். தேர்வு செய்யப்படும் நிர்வாக முறை இருந்தால் மட்டுமே பாசன திட்டங்கள் மேம்பாட்டிற்கு நிதி ஒதுக்கப்படும்.

    மேலும் தேர்வு செய்யப்படும் பாசன சபை நிர்வாகிகள், தண்ணீர் வழங்குவது, விவசாயிகளுக்கு நீர் பிரித்து கொடுப்பது, வாய்க்கால் பராமரிப்பு போன்ற பணிகளில் ஈடுபடுவர். இந்த பதவிகளுக்கான தேர்தல் கடந்த 2009-ம் ஆண்டு நடத்தப்பட்டது.

    முதலில் 5 ஆண்டாக இருந்த பதவிக்காலம் 6 மாதம் நீடிக்கப்பட்டது. பதவியில் இருந்தவர்களின் பதவிக்காலம் கடந்த 2014 டிசம்பர் 31-ந்தேதியுடன் நிறைவடைந்தது. அதன்பின் 8 ஆண்டாக தேர்தல் நடத்துவது இழுபறியாகி வந்தது.இந்நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு ஏப்ரல் 17-ந் தேதி தேர்தல் நடந்தது. தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் பங்கேற்ற முதல் கூட்டம் ஏப்ரல் 19-ந்தேதி நடந்தது.

    பி.ஏ.பி., திட்டத்தில் முதற்கட்ட தேர்தல் நடந்த நிலையில் தொடர்ந்து நடத்த வேண்டிய பகிர்மான குழு தலைவர், உறுப்பினர்கள் மற்றும் திட்டக்குழு தலைவர் தேர்தல் 10 மாதமாக நடத்தப்படவில்லை.தொடர்ந்து நடத்த வேண்டிய தேர்தல்களையும் உடனடியாக நடத்த வேண்டும் என பாசன சங்க நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.

    இந்நிலையில் கோவை மாவட்ட எல்லைக்குட்பட்ட, எண் 2 மற்றும் 3க்கான பகிர்மான குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான தேர்தல் கடந்த 18ந் தேதி பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. பகிர்மான குழு தலைவர் மற்றும் 10 பகிர்மான குழு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

    ஆனால் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 112 பாசன சங்க தலைவர்கள் ஓட்டளித்து 7 பகிர்மான குழு தலைவர் மற்றும் ஒரு பகிர்மான குழுவிற்கு 5 உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் 35 பேர் தேர்வு செய்ய வேண்டும்.

    கோவை மாவட்ட பகுதியில் தேர்தல் நடந்துள்ள நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் அதிக பதவிகள் உள்ளதால் திருப்பூர் மாவட்ட பகுதியிலும் உடனடியாக நடத்த வேண்டும். திட்ட குழு தலைவர் தேர்தலையும் நடத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பகிர்மான குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான தேர்தல் வருகிற மார்ச் 10-ந்தேதி நடக்கிறது.உடுமலை, தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகங்கள், திருப்பூர் சப்-கலெக்டர் அலுவலகத்தில் நடத்துவதற்கான முன்னேற்பாடுகளில் மாவட்ட நிர்வாகமும், வருவாய்த்துறை அதிகாரிகளும் ஈடுபட்டு வருகின்றனர்.

    • ஆறு மாதத்திற்கு ஒரு முறை பாசனத்திற்கு நீர் வழங்கப்படுகிறது.
    • தண்ணீர் திருட்டு அபரிமிதமாக நடந்து வருகிறது.

    திருப்பூர் :

    பி.ஏ.பி., பாசன திட்டத்தின் கீழ், கோவை, திருப்பூர் மாவட்டத்திலுள்ள, 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. பாசன நிலங்கள் நான்கு மண்டலமாக பிரிக்கப்பட்டு, ஆறு மாதத்திற்கு ஒரு முறை பாசனத்திற்கு நீர் வழங்கப்படுகிறது.

    திருமூர்த்தி அணையிலி ருந்து பாசனத்திற்கு நீர் செல்லும், 132 கி.மீ., நீளம் உள்ள பிரதான கால்வாய், ஆயிரம் கி.மீ., நீளம் உடைய கிளைக்கால்வாய்கள் மற்றும் பகிர்மான கால்வாய்களில், நேரடியாகவும், ஓஸ் அமைத்தும், கரையோரம் கிணறு அமைத்து, சைடு போர் முறை என, தண்ணீர் திருட்டு அபரிமிதமாக நடந்து வருகிறது.

    இந்நிலையில், பி.ஏ.பி., பாசன நீர் திருட்டை கட்டுப்படுத்தவும், பாசன விவசாயிகளுக்கு முறையாக பயிர் சாகுபடிக்கு உரிய நீர் வழங்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து, சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.

    உயர் நீதிமன்ற உத்தரவு அடிப்படையில், திருப்பூர், கோவை மாவட்டங்களில், பி.ஏ.பி., கால்வாயில் மேற்கொள்ளப்பட்ட கூட்டு நடவடிக்கை குழுவினர், கள ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    கடந்த பிப்., 27ம் தேதி நிலவரப்படி, கோவை, திருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட பி.ஏ.பி., பாசனம் உள்ள வருவாய் கிராமங்களில், மொத்தம், 2,069 இடங்களில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இதில், பாசன கால்வாய்களுக்கு அருகில், 2,895 கிணறுகள் இருப்பது கண்டறியப்பட்டது. விதி மீறி மின் இணைப்பு பெற்றதாக, 1,004 கிணற்றின் உரிமையாளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், 884 கிணறுகள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், 780 கிணறுகளில் விதிமீறல் உறுதி செய்யப்பட்டது. அதோடு, 288 கிணறுகளின் மின் இணைப்பு துண்டிக்க நோட்டீஸ் வினியோகிக்க ப்பட்டுள்ளது. தற்போது வரை,21 கிணறுகளின் மின் இணைப்பு துண்டிக்கப்ப ட்டுள்ளது. விதிமீறல் தொடர்பாக, 33 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 4 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.
    • 4 மண்டலங்களாக பிரித்து தண்ணீர் வழங்கப்படுகிறது.

    உடுமலை :

    பி.ஏ.பி., 4வது சுற்று பாசன பகுதியில் தண்ணீர் விரைவில் திறக்கப்பட உள்ளதால் கிளை பகிர்மான வாய்க்கால்களில் செடி கொடிகளை அகற்றும் பணி தீவிரமாக நடக்கிறது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி அணை மூலம் பிஏபி. பாசனத்தில் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் மொத்தம் சுமார் 4 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. 4 மண்டலங்களாக பிரித்து தண்ணீர் வழங்கப்படுகிறது.

    தற்போது மூன்றாவது மண்டல பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. மொத்தம் 4 சுற்றுகள் தண்ணீர் விடப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி மூன்றாவது சுற்று இன்னும் ஓரிரு நாட்களில் நிறைவடைய உள்ளது. இதை தொடர்ந்து நான்காவது சுற்றுக்கு விரைவில் தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதனையொட்டி நான்காவது சுற்று பாசனப்பகுதி உள்ள கிளை வாய்க்கால்கள் பகிர்மான கால்வாய்களில் படர்ந்து கிடக்கும் செடி கொடிகளை அகற்றும் பணி தீவிரமாக நடக்கிறது. மேலும் வாய்க்கால் ஷட்டர்களில் கிரீஸ் தடவும் பணியும் நடக்கிறது. இதன் மூலம் கடைமடை பகுதி வரை தண்ணீர் விரைவாக சென்றடையும் என அதிகாரிகள்- விவசாயிகள் தெரிவித்தனர். இந்நிலையில் 60 அடி உயரம் கொண்ட திருமூர்த்தி அணையில் நீர்மட்டம் 41. 76 அடியாக உள்ளது. தற்போது 813 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 119 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

    • கேரள - தமிழக அரசுகள் இடையே ஒப்பந்தம் ஏற்படுத்தி 1967ல் திட்டம் தொடங்கப்பட்டது.
    • கோவை, திருப்பூர் மாவட்டத்தில், 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    உடுமலை :

    மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீர் வீணாக கடலில் சென்று கலப்பதை தடுத்து வறட்சிப்பகுதிகளை பசுமையாக்கும் வகையிலும், பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம் (பி.ஏ.பி.,) செயல்படுத்தப்பட்டது.

    கேரள - தமிழக அரசுகள் இடையே ஒப்பந்தம் ஏற்படுத்தி 1967ல் திட்டம் தொடங்கப்பட்டது. திட்ட தொகுப்பு அணைகளான சோலையாறு, தூணக்கடவு, பெருவாரிபள்ளம், பரம்பிக்குளம், மேல்ஆழியாறு, ஆழியாறு அணைகளில் நீர் சேகரிக்கப்படுகிறது. ஒவ்வொரு அணைகள் வழியாகவும் மின் உற்பத்தி செய்து மலைப்பகுதியில் 49 கி.மீ.,தூரம் சுரங்கத்துடன் கூடிய சமமட்ட கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு நீர் கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து பிரதான கால்வாய், கிளைக்கால்வாய் வழியாக பாசன நிலங்களுக்கு நீர் வழங்கப்படுகிறது. இத்திட்டம் ஆசிய அளவில் சிறந்த பொறியியல் தொழில்நுட்பமாக கருதப்படுகிறது. இப்பாசன திட்டத்தில் கோவை, திருப்பூர் மாவட்டத்தில், 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பாசன நிலங்கள் நான்கு மண்டலமாக பிரித்து சுழற்சி முறையில் இரு ஆண்டுக்கு ஒரு முறை ஆறு மாதம் நீர் வினியோகிக்கப்படுகிறது.கேரள அரசு, இடைமலையாறு அணை கட்டியதும் தமிழக அரசு ஆனைமலையாறு மற்றும் நல்லாறு அணைகளை கட்டும் வகையில் ஒப்பந்தம் உள்ளது. ஆனால் கேரள அரசு 1997ல் இடைமலையாறு அணை கட்டிய நிலையில் ஆனைமலையாறு, நல்லாறு அணைகள் கட்டப்படாமல் இழுபறியாகி வருகிறது. நல்லாறு அணை கட்டினால் தற்போது மலைப்பகுதிகளில் 100 கி.மீ., தூரம் பயணம் செய்து, திருமூர்த்தி அணைக்கு வரும் நீர் 20 கி.மீ., தூர பயணத்தில் எளிதில் வந்தடையும். கூடுதலாக 7.5 டி.எம்.சி., நீரும் கிடைக்கும். அதே போல் ஆனைமலையாறு அணை கட்டினால் மழை காலத்தில் வீணாகி கடலை நோக்கி செல்லும் 2.5 டி.எம்.சி., நீர் சேமிக்கப்படும். மின் உற்பத்தி திட்டங்களும் செயல்படுத்த முடியும்.

    பி.ஏ.பி., திட்டம் தொடங்கப்பட்ட போது ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவாக இருந்த பாசன பரப்பு 3.77 லட்சம் ஏக்கராக விரிவுபடுத்தப்பட்ட நிலையில் பாசன நீர் அளவை அதிகரிக்க நிலுவையிலுள்ள இரு அணைகளுடன் கட்டப்படாமல் உள்ளது. இதனால் பாசன நிலங்களில் முறையான பயிர் சாகுபடி மேற்கொள்ள முடியாமல் சிறப்பான இத்திட்டம் கேள்விக்குறியாகி வருகிறது. அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தலின் போது இத்திட்டம் குறித்து வாக்குறுதி மட்டுமே இடம் பெறுகிறது. இரு அணைகளையும் கட்ட வலியுறுத்தி விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இரு மாநில அதிகாரிகள் மட்டத்தில் பேச்சு வார்த்தை, அணைகள் கட்ட விரிவான ஆய்வறிக்கை தயாரிக்க தொழில் நுட்ப கமிட்டி என கடந்த 35 ஆண்டுகளாக திட்டம் நிறைவேற்றப்படாமல் உள்ளது. கடந்த தேர்தலிலும் இரு அணைகளும் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தி.மு.க., வாக்குறுதி அளித்துள்ள நிலையில் நடப்பாண்டு பட்ஜெட்டில் இத்திட்டங்களுக்கு தேவையான நிதி ஒதுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். அதிகாரிகள் மட்டத்தில் மட்டும் பேச்சு வார்த்தை என்று இல்லாமல் இரு மாநில முதல்வர்கள் நேரடியாக பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இத்திட்டத்தில் நிலுவையி லுள்ள அணைகளை கட்டி முழுமையான பாசனம் மற்றும் பயிர் சாகுபடி திட்டமாக பி.ஏ.பி., திட்டத்தை புதுப்பிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.

    இது குறித்து விவசாயிகள் கூறுகையில், கேரளா அரசு இடைமலையாறு அணை கட்டியதும், ஆனைமலை யாறு, நல்லாறு அணைகள் தமிழகம் கட்டிக்கொள்ள ஒப்பந்தம் உள்ளது. கேரள அரசு, அணை கட்டி 30 ஆண்டுக்கு மேலாக பயன்படுத்தி வரும் நிலையில், ஆவணங்கள் வெளிப்படையாக உள்ளது. ஆனால் திட்ட ஒப்பந்தம் அடிப்படையில் தமிழக பகுதியில் கட்ட வேண்டிய இரு அணைகளும் கட்டவில்லை.விவசாயிகள் போராட்டம் நடத்தினால், தமிழக அரசு தரப்பில் பேச்சுவார்த்தை, தொழில் நுட்ப கமிட்டி ஆய்வு என இழுத்தடித்து வருகின்றனர்.

    இரு மாவட்டத்திலுள்ள பல லட்சம் விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள இத்திட்டத்தை செயல்படுத்த, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இரு மாநில முதல்வர்களும் நேரடியாக பேசி தீர்வு காண்பதோடு நடப்பாண்டு பட்ஜெட்டில் இரு அணைகளும் கட்டுவதற்கான ஆய்வு மற்றும் திட்ட நிதி ஒதுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர். ஆனால் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படாததால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

    • பல்வேறு குற்றச் சம்பவங்களும் நடந்துவருகின்றன.
    • குப்பைகள், கோழி கழிவுகள் கொட்டப்படுவதால் தண்ணீர் மாசடைந்து விட்டது.

    குடிமங்கலம் : 

    பி.ஏ.பி., வாய்க்கால் ஓரங்களில் திருட்டுத்தனமாக மது, போதை வஸ்து விற்பது, மரங்களை தீ வைத்து எரிப்பது, வெட்டி கடத்து வது, வெள்ளை வேளாண் மரத்தில் பட்டை உரிப்பது, தண்ணீர் திருட்டு, கொலை செய்துவாய்க்காலில் வீசுவது, தற்கொலை செய்து கொள்வது என பல்வேறு குற்றச் சம்பவங்களும் நடந்துவருகின்றன.வாய்க்காலில்இருந்து மீட்கப்படும்உடல்கள் அழுகி விடுவதால்இறப்பு க்கானமுழுமையான காரணத்தையும் கண்டறிய முடிவதில்லை. போலீசாரும் கண்டு கொள்வதில்லை. வாய்க்கால் முழுக்க உடைந்த மதுபாட்டில்கள், குப்பைகள், கோழி கழிவுகள் கொட்டப்படுவதால் தண்ணீர்மாசடைந்து விட்டது. கால்நடைகள் கூட குடிக்க தகுதியற்றதாக மாறி வருகிறது.பல இடங்களில் வாய்க்கால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கழிவுநீர் நேரடியாக வாய்க்காலில் கலக்கப்படுகிறது. சிலர் வீடு, காம்பவுண்ட் சுவர் கட்டி குடியிருந்து வருகின்றனர். செப்டிக் டேங்க் கூட வாய்க்காலில் கட்டப்பட்டு ள்ளது. சில இட ங்களில் வாய்க்காலையே காணவில்லை.பாசனத்தை முறைப்படுத்தவும், வா ய்க்காலை கண்காணிக்கவும் நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகள், 134 பாசன சபை தலைவர்கள், 876 ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள், பாசன சபை தலைவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஒன்பது பகிர்மான குழு தலைவர்கள், ஒரு திட்ட குழு தலைவர் உள்ளனர். ஆனாலும் வாய்க்காலை கண்காணிக்கவும் சட்டவிரோத செயல்களை தடுக்கவோ யாரும் குரல் கொடுப்பதில்லை என்ற மனக்குறை விவசாயிகள் மத்தியில் அதிகரித்துள்ளது.

    திருப்பூர் மாநகராட்சி நொச்சிப்பாளையம் பிரிவு திருவள்ளுவர் நகர் சாலையில் வசிக்கும் செல்வகுமார் என்பவர் முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில்,திருவள்ளுவர் நகரில் உள்ள சத்துணவு அங்கன்வாடி மையத்தின் பின் நீண்ட நெடுங்காலமாக பி.ஏ.பி., வாய்க்கால் பயன்பாட்டில் இருந்து வருகிறது.இக்கால்வாய் மேற்புறமுள்ள தனியார் பள்ளி நிர்வாகத்தினர், கால்வாயை ஆக்கிரமித்து கட்டடம் கட்ட 2, 3 முறை முயற்சி மேற்கொண்டனர். மக்களின் ஆட்சேபனையை தொடர்ந்து அவர்களது முயற்சி கைவிடப்பட்டது.தற்போது மீண்டும் ஆக்கிரமிப்பு செய்து கட்டுமான பணி செய்கின்றனர். இது குறித்து கலெக்டர் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • சோலையாறு அணையின் 160 அடி உயரத்தில் 15.42 அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது.
    • வினாடிக்கு 51.15 கனஅடி நீர்வரத்து உள்ளது.

    உடுமலை : 

    பி.ஏ.பி., திட்டத்தில் மேல்நீராறு, கீழ்நீராறு உள்ளிட்ட 8 தொகுப்பு அணைகளில் இருந்து பாசனம், குடிநீர் மற்றும் கேரள மாநிலத்துக்கு நீர் திறக்கப்படுவதால் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.சோலையாறு அணையின் 160 அடி உயரத்தில் 15.42 அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. வினாடிக்கு 51.15 கனஅடி நீர்வரத்து உள்ளது. 72 அடி உயரம் உள்ள பரம்பிக்குளம் அணையில் 18.67 அடி நீர் இருப்பு உள்ளது. வரத்து 35 கனஅடியாக உள்ளது.மொத்தம் 120 அடி உயரம் உள்ள ஆழியாறு அணையின் நீர்மட்டம் 58.20 அடியாக சரிந்துள்ளது. வினாடிக்கு 136 கனஅடி நீர் வரத்து உள்ளது.நீர்மட்டம் வேகமாக சரிவதால் தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்குமா என பொதுமக்களிடம் அச்சம் நிலவுகிறது.நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'பி.ஏ.பி., அணைகளில் உள்ள நீர் இருப்பை கொண்டு, கோடையில் தட்டுப்பாடின்றி குடிநீர் வினியோகிக்க முடியும். திருமூர்த்தி பாசனத்துக்கு நீர் இருப்பு வைத்து வினியோகிக்கப்படுகிறது. காடம்பாறையில் இருந்து ஆழியாறு அணைக்கு நீர் எடுக்கப்பட உள்ளது என்றனர்.

    ×