என் மலர்
நீங்கள் தேடியது "கோவில்பட்டி"
- புற்றுக்கோவிலில் மகா சனி பிரதோஷ விழா சிறப்பு பூஜை நடைபெற்றது.
- சங்கரலிங்க சுவாமி, நந்தியம் பெருமான்னுக்கு 18 வகையான அபிஷேக பூஜைகள் நடைபெற்றன.
கோவில்பட்டி:
கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் மகா சனி பிரதோஷ விழா சிறப்பு பூஜை நடைபெற்றது.
பிரதோஷ வழிபாடு சுபமங்களம் தரும், சனிக்கிழமைகளில் வரும் மகா பிரதோஷம் அதாவது சனி பிரதோஷ வழிபாட்டினால் பதவி, புகழ் போன்றவற்றை தருவதோடு, மாயைகளில் மாட்டிக்கொண்டு அலைக்கழியாத நிலையையும் அளிக்கும்.சகல தோஷமும் போக்கி சந்தோஷம் அளிக்கும் பிரதோஷ வழிபாடு சிறப்புடையது என்று ஆன்றோர்களின் ஜதீக வாக்காகும். இதனை முன்னிட்டு மாலை கோவில் நடை திறக்கப்பட்டு சங்கல்பம், கணபதி பூஜையுடன் தொடங்கி ஸ்தபண கும்பகலச பூஜை, ருத்திர ஜெபம், வருணஜெபம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து சங்கரலிங்க சுவாமி, நந்தியம் பெருமான்னுக்கு மஞ்சள் பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான அபிஷேகம் பூஜைகள் நடைபெற்றன. பூஜைகளை சுப்பிரமணிய அய்யர் செய்தார். விழாவில் கோவில் தலைவர் ராஜபாண்டி, பொருளாளர் சுப்பிரமணியன், நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
- கழுகுமலை அருகே உள்ள டாஸ்மாக் கடை அருகே உமா மகேஷ்வரன்இறந்த நிலையில் கிடந்தார்.
- உமா மகேஷ்வரன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலை காயிதே மில்லத் தெருவை சேர்ந்தவர் உமா மகேஷ்வரன் ( வயது 44). தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகவில்லை.
இந்நிலையில் இன்று காலை கழுகுமலை அருகே உள்ள டாஸ்மாக் கடை அருகே அவர் இறந்த நிலையில் கிடந்தார். அவரது தலை உள்ளிட்ட இடங்களில் காயங்கள் இருந்தது. இதனை பார்த்த அப்பகுதியினர் கழுகுமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உமா மகேஷ்வரனின் உடலில் காயங்கள் இருந்த தால் அவர் கொலை செய்யப்பட்டி ருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் உமா மகேஷ்வரன் கொலை செய்யப்பட்டாரா? அவரை கொலை செய்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அம்மா பூமாதேவி ஆலயம் சித்தர் பீடத்தில் சுயம்வர கலா பார்வதி கல்யாண சந்தான சவுபாக்கிய ஹோமம் நடைபெற்றது.
- பூமாதேவி குருநாதர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு 21 வகையான கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு துளசிங்க நகரில் பிரசித்தி பெற்ற அம்மா பூமாதேவி ஆலயம் சித்தர் பீடத்தில் சுயம்வர கலா பார்வதி கல்யாண சந்தான சவுபாக்கிய ஹோமம் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருப்பள்ளியெழுச்சி பூஜை நடைபெற்றது. 6.45 மணிக்கு கணபதி பூஜை சங்கல்பம் கும்ப பூஜையும், 7.45மணிக்கு சுயம்வர கலா பார்வதி கல்யாண சந்தான சவுபாக்கிய ஹோமம், தீபாராதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து 8.45 மணிக்கு அம்பாள் பூமாதேவி குருநாதர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு 21 வகையான மஞ்சள், மாபொடி, திரவியம், பால், அன்னாபிஷேகம், சந்தனம், கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சோடனை தீபாராதனை நடைபெற்றது. லட்சுமணன் சுவாமி தலைமையில் ஆலய அர்ச்சகர் செல்வசுப்பிரமணியன் சங்கரன் குருக்கள் பூஜைகளை செய்தார்.
இதில் ஜோதிடர்கள் சண்முகக்குமார், திருமேனி, பாக்கியராஜ், சுப்பாராஜ், சங்கரேஸ்வரி, மாரியப்பன், ஆறுமுகம், ஜெயராம்குமார், மகேந்திரன், மாரிஸ்வரன் விளக்கு பூஜை குழுவினர் மீனாட்சி இசக்கிமுத்து, மாரித்தாய், செல்வராணி மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை அம்மா பூமாதேவி ஆலய குழுவினர் செய்தனர்.
- சுப்புராயலு, எலக்ட்ரானிக் பொருட்கள் ஏற்படுத்தும் நன்மை, தீமைகளை பற்றி விளக்கங்கள் அளித்தார்.
- மாணவர்களின் அறிவியல் மீதான பார்வை எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி மணிசங்கர் விளக்கி பேசினார்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் அமைதி மற்றும் வளர்ச்சிக்கான உலக அறிவியல் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி உயிரி வேதியியல் தலைவர் சுப்புராயலு, தமிழ் துறை பேராசிரியர் மணிசங்கர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
விழாவில் சுப்புராயலு, நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்கள், நம் இளைஞர்கள் பயன் படுத்தும் உணவு, மருந்து, எலக்ட்ரானிக் பொருட்கள் ஆகியவற்றால் வாழ்க்கை முறையில் ஏற்படுத்தும் நன்மை, தீமைகளை பற்றி உரிய அறிவியல் விளக்கங்கள் அளித்தார்.
மாணவர்களிடம் அறிவியலை நல் முறையில் பயன்படுத்தி அமைதி மற்றும் மேம்பாடு அடைதல் பற்றியும், இன்றைய உலகில் மக்களை வதைக்கும் சக்கரை நோய் மற்றும் மன அழுத்தம் ஏற்படுதல், அதிலிருந்து விடுபடுதல், இதற்கு நமக்கு அறிவியல் எவ்வாறு பயன்படுகிறது என்றும் விளக்கினார்.
மேலும் மணிசங்கர் நம் இலக்கியத்தில் காணப்படும் அறிவியல் கருத்துகளையும், அக்கருத்துக்களை சொல்ல கையாண்ட சொற்கள் நம்மிடையே மொழியால் ஏற்படும் அறிவியல் சிந்தனை களையும், திருக்குறள், பழமொழி மற்றும் பழம் பாடல்கள் ஆகியவை கூறும் நம் உணர்வு அறிவுக்கான இைணப்பை எவ்வாறு ஏற்படுத்துகிறது என்பது பற்றியும், மாணவர்களின் அறிவியல் மீதான பார்வை எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றியும் விளக்கி பேசினார்.
ஏற்பாடுகளை கல்லூரியின் தாளாளர் கே.ஆர். அருணாச்சலம் ஆலோசனையின்பேரில் கல்லூரி முதல்வர் பேராசிரியர் ராஜேஸ்வரன் வழிகாட்டுதலின்படி முதலாம் ஆண்டு துறைத்தலைவர்கள் பேராசிரியர் ஆறுமுகம், கணேசன், அறிவியல் மன்ற ஒருங்கிணைப்பாளர் அம்புஜராஜன் மற்றும் முதலாமாண்டு பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
- தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.
- 18 வயதுக்கு மேற்பட்டவர்களின் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணியில் ஈடுபட வேண்டும் என்று எம்.எல்.ஏ. பேசினார்
கோவில்பட்டி:
கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது. அப்போது கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ. பேசியதாவது:-
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம், பெயர் திருத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான சிறப்பு முகாம் இன்று மற்றும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதனையடுத்து வருகிற 26 மற்றும் 27 ஆகிய தேதிகளிலும் ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெறும். ஒவ்வொரு அ.தி.மு.க. நிர்வாகிகளும் தங்கள் வார்டுக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த 18 வயது நிரம்பியவர்களை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, வாக்காளர் பட்டியலில் இடம் பெறாத 18 வயதுக்கு மேற்பட்டவர்களின் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணியில் ஈடுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சின்னப்பன், மோகன், அ.தி.மு.க. அவைத் தலைவர் பெருமாள், மாவட்ட துணைச் செயலர் முருகேஸ்வரி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சத்யா, அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், நகரச் செயலர் விஜயபாண்டியன், முன்னாள் நகர் மன்ற துணைத் தலைவர் ராமர், ஒன்றிய செயலாளர் அன்புராஜ், அ.தி.மு.க. நகர பொருளாளர் ஆரோக்கியராஜ், யூனியன் துணைத் தலைவர் பழனிச்சாமி, ஆவின் தாமோதரன், ஆபிரகாம் அய்யாதுரை, மாதவராஜ், நகர்மன்ற உறுப்பினர்கள் கவியரசன், செண்பகமூர்த்தி, வழக்குரைஞரணி வடக்கு மாவட்டச் செயலர் சிவபெருமாள் மற்றும் நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம் வருகிற 26,27- ந் தேதிகளில் நடைபெறுகிறது.
- 18 வயது நிரம்பியவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணிகளில் ம.தி.மு.க.வினர் ஈடுபட வேண்டும் என்று கூறியுள்ளார்.
கோவில்பட்டி:
தூத்துக்குடி வடக்கு மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம், பெயர் திருத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான சிறப்பு முகாம் வருகிற 26,27- ந் தேதிகளில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.
இந்த முகாமினை பயன்படுத்தி தாங்கள் வார்டுக்குட்பட்ட பகுதிகளை சேர்ந்த 18 வயது நிரம்பியவர்களை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, வாக்காளர் பட்டியலை சரி பார்ப்பது, வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத வாக்காளர்களின் பெயர்களை பட்டியலில் சேர்ப்பது உள்ளிட்ட பணிகளில் ம.தி.மு.க.வினர் ஈடுபட வேண்டும். மேலும் அனைத்து நிர்வாகிகளும் இதில் கலந்து கொண்டு புதிய இளம் வாக்காளர்களை சேர்க்க மும்முரமாக களப்பணியாற்றிட வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு விட்டார் என்று கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கூறினார்.
- கால்பந்து வீராங்கனை மரணத்தில் தவறு நடந்துள்ளதை அரசே ஒப்புக் கொண்டுள்ளது என்றார்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
தீப்பெட்டி தொழில்
டெல்லியில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனிடம் தீப்பெட்டி தொழிலுக்கு பாதகமான லைட்டர்கள் இறக்குமதியை நிறுத்த வேண்டும். கோவில்பட்டி அருகே வில்லிசேரி கிராமத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அமைக்க வேண்டும் என வலியுறுத்தினேன்.
அதன்படி தீப்பெட்டி தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார். மேலும் வில்லிசேரி கிராமத்தில் இந்த மாதத்துக்குள் வங்கி கிளை திறக்க நடவடிக்கை எடுத்துள்ளார். இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இந்த வங்கி திறப்பு விழாவுக்கு நிர்மலா சீதாராமன் வருவார் என்று எதிர்பார்க்கிறோம். அ.தி.மு.க. பொதுக்குழு ஏற்கனவே வெற்றிகரமாக முடிவடைந்து விட்டது. இதில் 99 சதவீத பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஓ.பன்னீர்செல்வத்தை பொறுத்தவரையில் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு விட்டார். அதன் பின்னர் அவர் கூறும் கருத்துகள் அ.தி.மு.க.வுக்கு பொருந்தாது.
கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் தொடர்பாக தி.மு.க.வினர் யாரும் வாய் திறக்க மறுக்கின்றனர். இந்த சம்பவம் தமிழக முதல்வரின் தொகுதியில் நடந்துள்ளது. கால்பந்து வீராங்கனை மரணத்தில் தவறு நடந்துள்ளதை அரசே ஒப்புக் கொண்டுள்ளது. ஆகவே தமிழகத்தில் சிகிச்சை தேவைப்படும் நிலையில் சுகாதாரத்துறை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது நகர அ.தி.மு.க. செயலாளர் விஜயபாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் அய்யாதுரை பாண்டியன், அன்புராஜ், பஞ்சாயத்து யூனியன் துணை தலைவர் பழனிச்சாமி உள்பட பலர் உடன் இருந்தனர்.
- வில்லிசேரியில் இந்தியன் வங்கி கிளை அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது.
- வங்கியின் பணிகள் குறித்து கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கேட்டறிந்தார்.
கோவில்பட்டி:
வில்லிசேரியில் இந்தியன் வங்கி கிளை அமைப்ப தற்கான பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகளை கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, இந்தியன் வங்கி பொதுமேலாளர் கணேஷ்ராம், மண்டல அலுவலர் ஜெயபாண்டியன் ஆகியோர் இருந்தனர். அவர்களிடம் வங்கியின் பணிகள் குறித்து எம்.எல்.ஏ., கேட்டறிந்தார். இந்த வங்கி சிறப்பாக செயல்பட வில்லிசேரி மற்றும் சுற்று வட்டாரப் பகுதி மக்கள் ஒத்துழைப்பார்கள் என எம்.எல்.ஏ., அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
அப்போது, அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பி னர் ராமச்சந்திரன், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் செல்வகுமார், ஆவின் பால் கூட்டுறவு சங்கத் தலைவர் தாமோதரன், அ.தி.மு.க. நிர்வாகிகள் அழகர்சாமி, பழனிகுமார் உட்பட பலர் உடனிருந்தனர்.
- தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் ஒன்றிய அவைத் தலைவர் தலைமையில் நடைபெற்றது.
- கூட்டத்தில் கனிமொழி எம்.பி. மற்றும் அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி மத்திய ஒன்றிய தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் காமராஜர் அரங்கில் ஒன்றிய அவைத் தலைவர் பொன்னுச்சாமி தலைமையில் நடைபெற்றது.
ஒன்றிய துணை செயலர்கள் சீனிவாசன், அழகுராஜ், சின்னத்தாய், ஒன்றிய பொருளாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய ஒன்றிய செயலர் பீக்கிலிபட்டி முருகேசன் வரவேற்றார். இதில் கனிமொழி எம்.பி. மற்றும் அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது கனிமொழி எம்.பி., பேசியதாவது:-
தி.மு.க. சமூகத்துக்கான அடிப்படை கருத்துக்களை தாங்கி நிற்கக் கூடிய இயக்கமாகவும் அந்த இயக்கத்தின் கருத்துக்களை மேம்படுத்தக் கூடிய கட்சியாக இயங்கி கொண்டிருக்கிறது. அனைவருக்கும் இந்த சமூகத்தில் சமமான ஓர் இடம் உண்டு. அனைத்து உரிமைகளும் அவர்களுக்கு சமமாக கிடைக்க வேண்டும். இதற்கு எதிரே இருக்கக் கூடிய அனைத்தையும் கேள்வி கேட்பது தான் தி.மு.க. அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கக் கூடிய உலகத்தை, நாட்டை உருவாக்க வேண்டும். இது தி.மு.க.கொள்கை. இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் அடிப்படை.
இதற்கு நேர் எதிராக இருக்கக் கூடிய கொள்கை பா.ஜ.க.வின் கொள்கை. திராவிட இயக்கத்திற்கு எதிர் கருத்துக்களை கொண்டுள்ளது தான் பா.ஜ.க. திராவிட இயக்கத்தில் இருந்து வந்திருக்கிறோம் என சொல்லக்கூடிய அ.தி.மு.க., சட்டப்பேரவையில் நிறைவேற்றிய சட்டங்களுக்கு ஒப்புதல் தராமல் உள்ள ஆளுநரை சிறப்பாக செயல்படுகிறார் என கூறுகிறது.
இப்படிப்பட்ட மோசமான நிலையில் அ.தி.மு.க. தன்னை வைத்துக் கொண்டுள்ளது. பா.ஜ.க.தமிழகத்தில் காலூன்ற முடியாது. தமிழகத்தில் உள்ள மக்கள் மத நம்பிக்கை உள்ள வர்களாக இருப்பார்கள். எது நம்முடைய முன்னேற்றத்திற்கு பயன்படும், எது எதிராக கொண்டு போய் சேர்க்கும் என்பதை தெளிவாக புரிந்து கொண்டுள்ளவர்கள். அதனால் பா.ஜ.க. கூறுவதை நம்புவதற்கு மக்கள் தயாராக இல்லை.
தி.மு.க. ஆட்சி அமைந்த பின், பெண்கள், விவசாயிகள், பள்ளி மாணவர்களுக்கு புதுமை திட்டம், மகளிருக்கு நகர பேருந்தில் இலவச பயணம், காலை உணவு திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தி உள்ளது.
இந்த திட்டங்களுக்கு கிடைக்கும் பாராட்டுக்களை வருகின்ற மக்களவை தேர்தலில் வாக்குகளாக மாற்ற வேண்டும். கடந்த முறை ஒரு இடத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தோம். இந்த முறை முழுமையாக வெற்றி பெற வேண்டும். அதற்கு ஏற்றாற்போல் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.
கூட்டத்தில், தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் சந்திரசேகர், கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், கட்சியின் மாவட்ட துணை செயலர் ஏஞ்சலா, பொதுக்குழு உறுப்பினர் ராமர், செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், துணை அமைப்பாளர்கள் சண்முகராஜ் (விவசாய தொழிலாளரணி), ரமேஷ் (பொறியாளரணி), சந்தானம் (விவசாய அணி), மத்திய ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் பிரேமா துரைமுருகன், மாணவரணி அமைப்பாளர் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நகர தலைவர் அருண் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
- கூட்டத்தில் கோவில்பட்டியில் பிரச்சாரகூட்டம் நடத்துவது குறித்து தீர்மானம் நிறை வேற்றபட்டது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் கோவில்பட்டி நகர காங்கிரஸ் கமிட்டி செயல்வீரர்கள் ஆலோ சனை கூட்டம் நகர தலைவர் அருண் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட துணை தலைவர்கள் திருப்பதிராஜா, முத்து, மாவட்ட செயலாளர் துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக வடக்கு மாவட்ட தலைவர் காமராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் ராகுல் காந்தி பாத யாத்திரை 100-வது நாளை முன்னிட்டு கோவில்பட்டியில் சிறப்பாக பிரச்சாரகூட்டம் நடத்துவது குறித்து தீர்மானம் நிறை வேற்றபட்டது.
இதில் மாவட்ட பொது செயலாளர்கள் ஐ.என்.டி.யூ.சி. ராஜாசேகரன், சிவப்பிரகாசம், மாவட்ட மனித உரிமை துறை மாவட்ட தலைவர் காளிதாஸ், மாவட்ட செயலாளர் ஜோஷ்வா, மாவட்ட மாணவர் காங்கிரஸ் தலைவர் பிரபு, கோவில்பட்டி இளைஞர் காங்கிரஸ் தொகுதி தலைவர் சுடலைமணி, கோவில்பட்டி கிழக்கு வட்டார தலைவர் மாரியசூசைராஜ், நகர துணை தலைவர் முருகன் கிறிஸ்து ராஜா, நகர பொது செயலாளர்கோபால், நகர செயலாளர் சசி, கோவில்பட்டி தொகுதி மாணவர் காங்கிரஸ் டேனியல், பாலமுருகன், செந்தில் குமார், அருணாச்சலம், மகேந்திரன், அய்யாதுரை, முருகன், ஜான்சன், பரமேஷ் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- கோவில்பட்டியில் தொழில் முனைவோருக்கான பயிற்சி பட்டறை நடத்தியது.
- ஓவியர்களுக்கு சான்றிதழ்களை மாநிலத் தலைவர் அடைக்கலம் வழங்கினார்.
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் தமிழ்நாடு அனைத்து பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்கள் நல சங்கம் மற்றும் நிப்பான் பெயிண்ட்ஸ் இணைந்து தொழில் முனைவோருக்கான பயிற்சி பட்டறை நடத்தியது. விழாவில் "முன் கற்றலை அங்கீகரிக்கும் " தொழில் முனைவோருக்கான பயிற்சி பட்டறையில் பங்கேற்ற பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்களுக்கு என்.சி.வி.இ.டி.யால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி, மத்திய அரசின் 10 லட்சத்திற்கான இன்சூரன்ஸ் அட்டை வழங்கும் நிகழ்ச்சியும், மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை, மார்க்கெட் சாலையில் அமைந்துள்ள தேவர் மகாஜன சங்க திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாநில தலைவர் அடைக்கலம் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் சம்சுகனி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் தங்கமாரியப்பன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட அவைத் தலைவர் ஸ்டீபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மத்திய அரசின் தொழில் முனைவோருக்கான பயிற்சி பட்டறையில் பங்கேற்ற பெயிண்டர் மற்றும் ஓவியர்களுக்கு சான்றிதழ் மற்றும் இன்சூரன்ஸ் அட்டையை மாநிலத் தலைவர் அடைக்கலம் உறுப்பினர்களுக்கு வழங்கினார். மேலும் நிகழ்ச்சியில் கயத்தாறு ஒன்றியத் தலைவர் ஜெயபால், கோவில்பட்டி ஒன்றிய தலைவர் ராமச்சந்திரன், அமைப்புச் செயலாளர் பேச்சிமுத்து, ஒன்றிய செயலாளர் மாடசாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- திருவிழாவையொட்டி, சப்த நதி தீர்த்தம் அம்மன் சன்னதி முன்பு வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது
- விழாவின்போது தெப்பக்குளத்தை சுற்றி 3333 அகல்விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டிருந்தன.
கோவில்பட்டி:
இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் சார்பில், கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை ஸ்ரீ பூவனநாதசுவாமி கோவில் அகத்திய மாமுனிவரால் தோற்றுவிக்கப்பட்ட தெப்பக்குளத்தில் கார்த்திகை மாத பவுர்ணமியை முன்னிட்டு மஹா கங்கா ஆரத்தி திருவிழாவையொட்டி, 7 குடங்களில் சப்த நதி தீர்த்தம் அம்மன் சன்னதி முன்பு வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
அதையடுத்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, தெப்பக்குளம் அருகேயுள்ள ஆதி குறைதீர்க்கும் விநாயகர் கோவிலில் மகா கணபதி பூஜை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து புன்னியாகவாசனம் நடைபெற்றது. தொடர்ந்து சப்த நதி நீரை கும்பத்தில் வைத்து கும்ப பூஜை நடைபெற்றது. பின்னர் கும்பத்தை கோவிலில் இருந்து எடுத்து வரப்பட்டு கோவிலை சுற்றி வலம் வந்தனர். பின்னர் தெப்பத்தில் தீர்த்த அபிஷேகம் மற்றும் புஷ்பம் தூவும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மஹா கங்கா தீபாராதனை நடைபெற்றது. முன்னதாக, தெப்பக்குளத்தை சுற்றி 3333 அகல்விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டிருந்தன.
ஏற்பாடுகளை இந்து ஆலய பாதுகாப்பு இயக்க மாவட்ட பொதுச்செயலர் பரமசிவம், மாவட்ட செயலர் அய்யம்பெருமாள் ஆகியோர் தலைமையில், நிர்வாகிகள் செய்திருந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.