என் மலர்
நீங்கள் தேடியது "sub-collector"
- இச்சிப்பட்டி கிராமசபை கூட்டம் ,மக்கள் குறை தீர்க்கும் முகாம் உள்ளிட்ட அரசு மக்கள் தொடர்பு முகாம்களில் மனு அளித்தனர்.
- புறம்போக்கு இடத்தை நத்தமாக வகைமாற்றம் செய்து பயனாளிகளுக்கு வழங்க உகந்த இடமா என ஆய்வு செய்ய வந்தனர்.
மங்கலம் :
திருப்பூர் மாவட்டம் இச்சிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் பல ஆண்டுகளாக வீடில்லாமல் வாடகை வீட்டில் வசிக்கும் பொதுமக்கள் இச்சிப்பட்டி கிராமசபை கூட்டம் ,மக்கள் குறை தீர்க்கும் முகாம் உள்ளிட்ட அரசு மக்கள் தொடர்பு முகாம்களில் மனு அளித்தனர்.
இந்தநிலையில் திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ரீஸ்ருதன் ஜெய் நாராயணன், பல்லடம் தாசில்தார் நந்தகோபால், இச்சிப்பட்டி கிராம நிர்வாக அதிகாரி கார்த்திக், இச்சிப்பட்டி வருவாய்த்துறை அதிகாரி சந்திரகலா உள்ளிட்ட வருவாய்த்துறையினர் பல்லடம் ஒன்றியம், இச்சிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கொத்துமுட்டிபாளையம் பகுதியில் உள்ள 5 ஏக்கர் 66 சென்ட் வண்டிப்பாதை புறம்போக்கு இடத்தை நத்தமாக வகைமாற்றம் செய்து பயனாளிகளுக்கு வழங்க உகந்த இடமா என ஆய்வு செய்ய வந்தனர்.
அப்போது 5 ஏக்கர் 66 சென்ட் இடத்தில் கொத்துமுட்டிபாளையம் பொதுமக்கள் தாவரவியல் பூங்கா என்ற பெயரில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதை சப் கலெக்டர் பார்வையிட்டார். அவரிடம் கொத்துமுட்டிபாளையம் பகுதி பொதுமக்கள் , கடந்த 7 ஆண்டுகளாக நாங்கள் இந்த இடத்தில் தாவரவியல் பூங்கா என்ற பெயரில் சுமார் 6000 மரக்கன்றுகளை நடவு செய்து பராமரித்து வருகிறோம் .மேலும் தாவரவியல் பூங்காவில் உள்ள மரங்களை அழித்துவிட்டு வீட்டுமனை பட்டா வழங்குவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என ஒரு தரப்பினர் தெரிவித்தனர்.
சப் கலெக்டர் வரும் தகவலை அறிந்த வீட்டுமனை கேட்டு மனு அளித்த கோம்பக்காடு,தேவராயன்பாளையம் புதூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொத்துமுட்டிபாளையம் கிராமத்தில் காத்திருந்து சப்கலெக்டரை சந்தித்தனர். அப்போது இச்சிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சப்கலெக்டரிடம் கொத்துமுட்டிப்பாளையம் பகுதியில் வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் எனவும்,கொத்துமுட்டி பாளையம் பகுதியில் நடவு செய்யப்பட்டுள்ள மரக்கன்றுகளை வீட்டிற்கு 4 மரங்கள் என பராமரிக்கிறோம். எங்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என மற்றொரு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.2 தரப்பினரிடமும் "பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்று சப்-கலெக்டர் கூறி சென்றார்.
- கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீா் கூட்டம் நடைபெற்றது.
- சப்- கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமை வகித்தாா்.
திருப்பூர் :
திருப்பூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீா் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு சப்- கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமை வகித்தாா். இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ்.ஆா்.மதுசூதனன், செயலாளா் ஆா்.குமாா் ஆகியோா் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-
கால்நடை தீவனங்களான பருத்திக் கொட்டை, தவிடு, பிண்ணாக்கு உள்ளிட்டவற்றின் விலை அண்மையில் கடுமையாக உயா்ந்துள்ளது. விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும் பாலுக்கான கொள்முதல் விலையை ஆவின் நிறுவனம் கடைசியாக கடந்த 2019 ஆம் ஆண்டு உயா்த்தியது. இந்த நிலையில், ஆவின் நிறுவனத்துக்கு பால் ஊற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் உற்பத்தி செய்யும் பாலுக்கான கொள்முதல் விலையை உயா்த்திக் கொடுக்கக் கோரி ஆங்காங்கு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. பசும்பால் லிட்டருக்கு ரூ.42, எறுமைப்பால் லிட்டருக்கு ரூ.51 கொள்முதல் விலையாக நிா்ணயித்து ஆவின் நிறுவனம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.கூட்டத்தில் வட்டாட்சியா்கள் ராஜேஷ், கனகராஜ், கோவிந்தராஜ், சைலஜா உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.
- மாணவா்களுக்கு புத்தொளிப் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.
- மாணவா்கள் முழுமையான அா்ப்பணிப்பு உணா்வுடன் சேவையாற்றும் போது சமுதாயத்தில் மதிக்கப்படுவாா்கள்.
திருப்பூர் :
திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலகு 2 மாணவா்களுக்கு புத்தொளிப் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திருப்பூா் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய்நாராயணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
பேரிடா் காலங்களில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்களின் பங்கு சிறப்பாக இருக்க வேண்டும். மாணவா்கள் முழுமையான அா்ப்பணிப்பு உணா்வுடன் சேவையாற்றும்போது சமுதாயத்தில் மதிக்கப்படுவாா்கள். அதே வேளையில், மாணவா்கள் சேவை மட்டுமே குறிக்கோளாக இல்லாமல் படிப்பிலும் கவனம் செலுத்த வேண்டும்.
இன்றைய காலகட்டத்தில் தேவைப்படும்போது மட்டுமே கைப்பேசியைப் பயன்படுத்திவிட்டு மற்ற நேரங்களில் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தினால் வாழ்க்கையில் வெற்றியடையலாம் என்றாா்.இதில் நாட்டு நலப்பணித்திட்ட அலகு 2 ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா், பேராசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
- வாக்காளர் சேர்ப்பு பணிகள் குறித்து திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் ஆய்வு மேற்கொண்டார்.
- குழந்தைகளுடன் போட்டோ எடுத்து அவர்களை மகிழ்வித்தார்.
பல்லடம் :
பல்லடம் தாலுகா பகுதிகளில் நடைபெற்ற வாக்காளர் சேர்ப்பு பணிகள் குறித்து திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் ஆய்வு மேற்கொண்டார். பல்லடம் வடுகபாளையம் அரசு பள்ளி உள்ளிட்ட இடங்களில் வாக்காளர் சேர்க்கை பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட அவர், சித்தம்பலத்தில் உள்ள அங்கன்வாடி பள்ளியில் உணவு தரம் குறித்து ஆய்வு செய்தார். பின்னர் அங்குள்ள குழந்தைகளுடன் போட்டோ எடுத்து அவர்களை மகிழ்வித்தார்.
இந்த ஆய்வின் போது பல்லடம் தாசில்தார் நந்தகோபால்,மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- 110 வாகனங்களில் குறைபாடுகள் கண்டறியப்பட்டது.
- 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் முதலுதவி சிகிச்சை குறித்து செயல் விளக்கம் அளித்தனர்.
பல்லடம் :
திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து துறையின் கீழ் உள்ள பள்ளி வாகனங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஆய்வு செய்யப்பட்டு தகுதி சான்று வழங்கப்படுகிறது. அந்த வகையில் திருப்பூர் வட்டார போக்குவரத்து துறைக்கு உட்பட்ட பல்லடம்,காங்கயம் பகுதியைசேர்ந்த 350 பள்ளி வாகனங்களுக்கான தகுதி ஆய்வு பல்லடம் கரையாம் புதூர் கோவில் மைதானத்தில் நடைபெற்றது. இதில் வாகனங்களை திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அதிகாரி ஆனந்த் ஆகியோர் ஆய்வு செய்தனர்.இதில் பள்ளி வாகனங்களில் படிக்கட்டுகளின் உயரம், அதன் நிலை, டிரைவர் அமரும் பகுதி, வாகனத்தின் உள்ளே நடைமேடை பகுதி, தீயணைப்பு கருவி, முதலுதவி கருவி, மாணவர்கள் அமரும் இருக்கை வசதி, தீயணைப்பு சாதனம் மற்றும் அவசரவழி ஆகியவை அமைக்கப்பட்டு உள்ளதா? கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளதா? வாகனத்தின் முன்னால், பின்னால் பள்ளியின் பெயர், தொடர்பு எண், இ-மெயில் முகவரி எழுதப்பட்டுள்ளதா என்றும் ஆய்வு செய்யப்பட்டது.
ஆய்வு செய்யப்பட்ட 350 வாகனங்களில், 110 வாகனங்களில் குறைபாடுகள் கண்டறியப்பட்டது. அந்த வாகனங்களில் உள்ள குறைகளை நீக்கி மீண்டும் வரும் 29ந் தேதி மறு ஆய்வுக்கு கொண்டு வர அறிவுறுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பல்லடம் தீயணைப்புத் துறையினர் தீ தடுப்பு முறை குறித்து ஓட்டுநர்களுக்கு செயல்முறை விளக்கம் அளித்தனர். 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் முதலுதவி சிகிச்சை குறித்து செயல் விளக்கம் அளித்தனர். இந்த ஆய்வில், பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்ட் சவுமியா, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் (பொறுப்பு) ஆனந்தி, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் வேல்மணி, ஈஸ்வரன், மற்றும் பள்ளி வாகன ஓட்டுநர்கள், நடத்துனர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.இந்த ஆய்வுப்பணியில் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், ஒவ்வொரு பள்ளி வாகனங்களிலும் விறுவிறுவென ஏறி இறங்கினார். அவருக்கு ஈடு கொடுக்க முடியாமல் மற்ற அதிகாரிகள் ஓட்டமும் நடையுமாய் உடன் சென்றனர்.
- தலையில் இருந்த மூட்டையில் என்ன இருக்கிறது என்று கேட்டபோது தனது கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்த கடிதம் என தெரிவித்தார்.
- நகலை தர வேண்டுமானால் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்.
கடலூர்:
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை என்பதால் மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்று வருகின்றது. இதில் கடலூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் காலையிலிருந்து கோரிக்கை மனு அளிக்க நேரில் வந்தனர்.
இந்நிலையில் முதியவர் ஒருவர் மனுக்களை தலையில் கட்டி வைத்துக்கொண்டு கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் வந்தார். அப்போது அந்த முதியவர் நெற்றியில் பட்டை நாமம் போட்டு கொண்டு வந்தார். அவரது தலையில் இருந்த மூட்டையில் என்ன இருக்கிறது என்று கேட்டபோது தனது கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்த கடிதம் என தெரிவித்தார்.
இவர் திட்டக்குடி வட்டம் வடகிராம பூண்டி கிராமத்தை சேர்ந்த அய்யாசாமி ஆவார். அவர் கூறும்போது, எனது நிலத்திற்கு பட்டா மாற்ற செய்வதற்காக உரிய மனு அளித்தேன். இதற்கான உத்தரவு நகல் வந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் விருத்தாச்சலம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் வேலை செய்யும் அலுவலர் ஒருவர் இந்த நகலை தர வேண்டுமானால் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்.
வருவாய் துறையினரும் இதற்கு ஆதரவு அளித்து வருவதோடு அரசு புறம்போக்கு இடங்களை விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என 33 முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறினார்.
33 முறை மனு அளித்த அனைத்து கோரிக்கை மனுவையும் மூட்டையாக தலையில் வைத்து கொண்டு வந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பாக காணப்பட்டது.
- பல்லடம் அரசு மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகள் நலச்சங்க கூட்டம் நடைபெற்றது.
- மருத்துவர்கள் இருந்தும் உரிய சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என குற்றம் சாட்டினர்.
பல்லடம் :
பல்லடம் அரசு மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகள் நலச்சங்க கூட்டம் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட சுகாதாரதுறை இணை இயக்குனர் கனகராணி, பல்லடம் நகராட்சி தலைவர் கவிதாமணி,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.டாக்டர் சுபா வரவேற்றார்.
இதில் கலந்துகொண்ட தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள், பல்லடம் அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை வழங்கப்படுவதில்லை என்றும், எதற்கெடுத்தாலும் திருப்பூர், கோவை மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைப்பதாகவும், போதுமான மருத்துவர்கள் இருந்தும் உரிய சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என குற்றம் சாட்டினர். இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக சப் கலெக்டர் கூறினார். பின்னர் அவர் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, உள் நோயாளிகள் சிகிச்சை பெறும் அறை உள்ளிட்ட இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு பழைய துருப்பிடித்த கட்டில்கள் மற்றும் சக்கர நாற்காலி, ஸ்ட்ரெச்சர் ஆகியவற்றின் பயன்பாடுகள் குறித்து கேட்டறிந்ததோடு பயன்பாடற்ற பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்த உத்தரவிட்டார்.
மேலும் அரசு மருத்துவர்கள் முதல் பணியாளர்கள் வரை அனைவரும் கட்டாயம் அடையாள அட்டைகளை அணிந்திருக்க வேண்டும், பல்லடம் அரசு மருத்துவமனை முன்பு கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேகத்தடை மற்றும் முன்னெச்சரிக்கை பலகைகளை அமைக்க வேண்டும், மேலும் அரசு மருத்துவமனை வளாகத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். இதில் தலைமை டாக்டர் ராமசாமி மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள், தன்னார்வலர்கள்,அரசியல் கட்சியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.