என் மலர்
நீங்கள் தேடியது "DGP Sylendra Babu"
- பழிக்கு பழிவாங்கும் கொலைகளை தடுக்க முடியும்.
- ரவுடிகளின் சமூக விரோத செயலையும் கண்காணித்து தடுத்து நிறுத்தலாம்.
சென்னை :
ரவுடிகளின் விவரங்களை டிஜிட்டல் மயமாக்கும் வகையில் டிராக் கேடி என்ற புதிய செயலி உருவாக்கப்பட்டு உள்ளது. அந்த புதிய செயலியை டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று முறைப்படி அறிமுகப்படுத்தி வெளியிட்டார்.
தமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. தாமரைக்கண்ணன் மேற்பார்வையில், தென்சென்னை கூடுதல் போலீஸ் கமிஷனர் பிரேம்ஆனந்த் சின்கா தலைமையிலான குழுவினர் இந்த செயலியை உருவாக்கி உள்ளனர். புதிய செயலியை வெளியிட்ட நிகழ்ச்சியிலும், இவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த புதிய செயலியில் தமிழகம் முழுவதும் உள்ள ரவுடிகளின் எண்ணிக்கை, அவர்களின் நன்னடத்தை பிரிவின் கீழ் எத்தனை பேர் பிணைக்கப்பட்டு உள்ளனர் போன்ற விவரங்கள் இடம்பெற்றுள்ளது.
வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் குற்றவாளிகளின் விவரமும் இதில் அடங்கும். இவர்கள் செய்த குற்ற விவரம் இருக்கும். நன்னடத்தை பிணையில் இருப்பவர்கள் அதை மீறும் பட்சத்தில் அது தொடர்பான எச்சரிக்கை தகவலும் இதில் வெளியாகும்.
தமிழகத்தில் உள்ள 39 மாவட்டங்கள் மற்றும் 9 கமிஷனரகங்களில் உள்ள 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரவுடிகள் மற்றும் இதர குற்றவாளிகளின் பட்டியல் புதிய செயலி மூலம் டிஜிட்டல் மயமானது. இதன் மூலம் ரவுடிகளின் செயல்பாட்டை போலீசார் கண்காணிக்க முடியும்.
பழிக்கு பழிவாங்கும் கொலைகளை தடுக்க முடியும். ரவுடிகளின் சமூக விரோத செயலையும் கண்காணித்து தடுத்து நிறுத்தலாம்.
மொத்தத்தில் ரவுடிகளின் விவரங்கள் அதிகாரிகளின் விரல் நுனியில் இருக்கும் வகையில் இந்த செயலி பேருதவியாக இருக்கும்.
- ஒவ்வொரு ஆண்டும் காவல் துறை பாதுகாப்பு உபகரணங்கள் அனைத்தும் எப்படி உள்ளன என்பது பற்றி நுணக்கமாக ஆய்வு செய்து வருகிறோம்.
- நவீன தரமான பாதுகாப்பு உபகரணங்கள்தான் நம்மிடம் உள்ளன. 2 மடங்கு அதிகமாக அளவுக்கு அதிகமானவே பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளன.
சென்னை:
சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அரங்கத்தில் "சைபர் பாதுகாப்பு சிக்கல்கள் மற்றும் போக்குகள்" என்ற தலைப்பில் ஒருநாள் பயிலரங்கம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
சைபர் கிரைம் மோசடிக்கு ஒரு எல்லை கிடையாது. எந்த மூலையில் இருந்தும் பணத்தை எடுத்து மோசடி செய்யலாம். எனவே, பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருப்பது முக்கியம். சைபர் கிரைம் மோசடியில், படித்தவர்கள் கூட கோடிக்கணக்கான பணத்தை இழந்துள்ளனர். எந்த ஒரு வங்கியும் ஓ.டி.பி. எண்ணை கேட்பது கிடையாது. எனவே ஓ.டி.பி. எண்ணை யாராவது கேட்டால் பகிரக்கூடாது இதன் மூலம் தான் குற்றங்கள் நிகழ்கிறது.
எனவே ஆசைவார்த்தை கூறுபவர்களின் உண்மைத்தன்மை அறிந்து நாம் விழிப்போடு இருக்க வேண்டும். தமிழகத்தில் சைபர் கிரைம் குற்றம் தொடர்பாக 46 காவல் நிலையம் உள்ளது. பொதுமக்கள் சைபர் கிரைம் குற்றம் தொடர்பாக இந்த காவல் நிலையங்களில் புகார் கொடுக்கலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் டி.ஜி.பி. சைலேந்திரபாபு அளித்த பேட்டி வருமாறு:-
சென்னை பல்கலைக்கழகத்தில் சைபர் பாதுகாப்பு குறித்து மாணவர்களுக்கு பயிலரங்கம் நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள எல்லா மக்களிடம் செல்போன் உள்ளது. இன்டர்நெட் இணைக்கப்பட்டுள்ளது.
எனவே உலகத்தில் உள்ள எந்த நபரும் நம் வங்கியில் உள்ள பணத்தை திருடலாம். வெளிநாட்டில் போதைப்பொருள் ஏற்றுமதி செய்தது தொடர்பாக உங்களது வங்கிக்கு பணம் வந்துள்ளது என்றோ உங்களுடைய ஆதார் எண் கொடுங்கள் என்றோ உங்கள் வங்கியில் உள்ள பணத்தை மோசடி செய்யலாம்.
தற்போது, மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் கார்டை இணைக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது. உங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் கார்டு இணைக்கப்படவில்லை. எனவே உங்களது மின்சாரம் துண்டிக்கப்படும் என்று கூறி நாங்கள் அனுப்புகிற லிங்கில் பத்து ரூபாய் செலுத்துங்கள். உங்களது மின் கட்டணம் துண்டிக்கப்படாது என்று கூறுவார்கள். மின் இணைப்பை மீண்டும் பெற நாம் அவர்கள் கொடுத்த லிங்கிற்கு பத்து ரூபாய் அனுப்பினால் நமது வங்கியில் உள்ள மொத்த பணத்தையும் அவர்கள் எடுத்து விடுவார்கள்.
அதுபோல் உயர் கலெக்டர், டி.ஜி.பி. பேசுவதாக கூறி மோசடி நடைபெறுகிறது. நம்மை ஏமாற்றுபவர்கள் வெளிநாட்டில் இருக்கலாம். சைபர் குற்றங்களில் ஏமாற்றப்பட்டால் 1930 என்ற எண்ணிற்கு புகார் கொடுக்கலாம்.
பிரதமர் வருகையின்போது பாதுகாப்பில் குளறுபடி நடந்ததாக எந்தவிதமான தகவலும் இல்லை. நல்ல முறையில் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் காவல் துறை பாதுகாப்பு உபகரணங்கள் அனைத்தும் எப்படி உள்ளன என்பது பற்றி நுணக்கமாக ஆய்வு செய்து வருகிறோம்.
செயல்படாத உபகரணங்கள் இருந்தால் மாற்று உபகரணங்கள் வாங்கும் பழக்கம் 100 ஆண்டுகளுக்கும் மேலாகவே இருந்து வருகிறது. அதை தவறாமல் செய்து வருகிறோம். தமிழகத்தில்தான் அதிக எண்ணிக்கையிலான தரமான உபகரணங்கள் உள்ளன.
தற்போது கூட நமது காவல்துறையைச் சேர்ந்த 2 குழுவினர் மோப்ப நாய்களுடன் அந்தமான் சென்றுள்ளனர். அங்கிருந்து விமானத்தில் திரும்ப உள்ளனர். இதே போன்று கேரளாவுக்கும் சென்றுள்ளனர்.
இப்படி வெளி மாநிலங்களுக்கும் பாதுகாப்பு உபகரணங்களை நாம் வழங்கி வருகிறோம். எனவே அதில் எந்த குளறுபடிகளுமே இல்லை. பழையதை மாற்றி விட்டு புதியன வாங்குவது வழக்கமாக மேற்கொள்ளப்படுவது தான். நம்மிடம் இருப்பது பழைய டெக்னாலஜி எல்லாம் கிடையாது. வெளி மாநிலத்தவர்களும் பாதுகாப்பு உபகரணங்களை கேட்டு வாங்குகிறார்கள். பழைய டெக்னாலஜி என்றால் அவர்கள் வாங்க மாட்டார்கள்.
நவீன தரமான பாதுகாப்பு உபகரணங்கள்தான் நம்மிடம் உள்ளன. 2 மடங்கு அதிகமாக அளவுக்கு அதிகமானவே பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளன. அதில் எதை பயன்படுத்த வேண்டும், எதனை களைய வேண்டும் என்கிற விதி உள்ளது. அதைத்தான் பயன்படுத்தி வருகிறோம்.
பிரதமர் பாதுகாப்பு தொடர்பாக எஸ்.பி.ஜி.யிடமிருந்து எந்த தகவலும் இதுவரை வரவில்லை.
என்.ஐ.ஏ.விடம் ஏற்கனவே 15 வழக்குகள் உள்ளன. அது தொடர்பான உதவிகள், தகவல்கள் பரிமாற்றங்களை மேற்கொள்ளவே என்.ஐ.ஏ. ஆலோசனை நடத்தப்பட்டது. அவர்கள் தரப்பிலும், நமது காவல்துறை தரப்பிலும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
நமது ஊரில் உள்ள அப்பாவி இளைஞர்களின் செல்போனை பயன்படுத்தியும் வெளிநாட்டினர் சைபர் குற்றங்களில் ஈடுபடுவார்கள். எனவே இளைஞர்கள் உஷாராக இருக்க வேண்டும்.
வட மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வந்து வேலை செய்யும்போது அதிக குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள் தொடர்பான கேள்விக்கு வட மாநிலத்தவர் சராசரியான குற்றச்செயலில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் மீது புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
- ஆள் கடத்தல் கும்பல் பற்றி தகவல் தெரிந்தால் 044-28447701 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.
- நல்ல தகவல் தருபவர்களுக்கு பண வெகுமதி அளிக்கப்படும்.
சென்னை :
தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் உள்ள நகர்ப்புற சாலை சந்திப்புகளிலும், புறவழிச்சாலை சுங்கச்சாவடிகளிலும் பெண்களையும், குழந்தைகளையும் வைத்து பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவர்களை சில கும்பல்கள் இந்த தொழிலில் ஈடுபட வைக்கின்றனர். இதை தடுத்து நிறுத்தும் வகையில் 'ஆபரேஷன் மறுவாழ்வு' என்ற அதிரடி நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் 9 போலீஸ் கமிஷனரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நேற்று அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 726 பிச்சைக்காரர்கள், 16 குழந்தைகள் மீட்கப்பட்டனர்.
இவர்களை இந்த தொழிலில் ஈடுபடுத்திய நபர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மீட்கப்பட்ட பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு இல்லத்துக்கும், குழந்தைகள் காப்பகத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். 150 பேர் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
ஏழை பெண்களையும், குழந்தைகளையும் பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுத்தும் நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள். சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் போன்ற நகரங்கள் மற்றும் வெகு தூரங்களில் இருந்து பெண்கள் மற்றும் குழந்தைகளை அழைத்து வந்து பிச்சை எடுக்க வைக்கும் ஆள் கடத்தல் கும்பல் பற்றி தகவல் தெரிந்தால் 044-28447701 என்ற எண்ணில் தெரிவிக்கலாம். நல்ல தகவல் தருபவர்களுக்கு பண வெகுமதி அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- முக்கிய வழக்குகளின் குற்றப்பத்திரிகையை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.
- கோப்பினை தீவிரமாக ஆய்வு செய்து உரிய அறிவுரைகள் வழங்க வேண்டும்.
சென்னை :
போக்சோ வழக்குகள் தொடர்பாக தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னை ஐகோர்ட்டின் சிறுவர் நீதிக்குழு மற்றும் 'போக்சோ' குழுவினர் 'போக்சோ' சட்டத்தை (குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை தடுப்பு சட்டம்) ஆய்வு செய்தனர். அதனடிப்படையில் அந்த குழுவினர் 'போக்சோ' வழக்குகளை புலனாய்வு செய்யும் அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கி உள்ளனர்.
அதன் விவரம் வருமாறு:-
* திருமண உறவு, காதல் உறவு போன்ற 'போக்சோ' வழக்குகளில் அவசரப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கக்கூடாது. அதற்கு பதிலாக சம்மன் அனுப்பி எதிரிகள், எதிர்மனுதாரரை விசாரணை செய்யலாம்.
* குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்படாத விவரம் வழக்கு கோப்பில் பதிவு செய்தும், அதற்கான காரணத்தையும் பதிவு செய்ய வேண்டும்.
* குற்றவாளியின் மீது கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிலை அதிகாரிகளின் அனுமதி கட்டாயம் பெற வேண்டும்.
* முக்கிய வழக்குகளின் குற்றப்பத்திரிகையை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். குறிப்பாக, மேல் நடவடிக்கை கைவிடும் வழக்குகளில் கோப்பினை தீவிரமாக ஆய்வு செய்து உரிய அறிவுரைகள் வழங்க வேண்டும்.
மேற்கண்ட அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளன.
இந்த அறிவுரைகளை போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறியுள்ளார்.
- நாளை முதல் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
- 6 மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் மீட்பு குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
சென்னை :
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் வாய்ப்பு உள்ளதால், தமிழகம் முழுவதும் நாளை (9-ந் தேதி) முதல் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையொட்டி தமிழகம் முழுவதும் மீட்பு படையினரை தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், நாகப்பட்டினம் மற்றும் தஞ்சை போன்ற 6 மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் மீட்பு குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அதோடு காவல்துறையைச்சேர்ந்த நீச்சல் வீரர்கள், கடலோர பாதுகாப்பு குழும வீரர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த தன்னார்வலர்களும் படகுகளுடன் தயாராக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேற்கண்ட தகவலை டி.ஜி.பி.சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
- டி.ஜி.பி.சைலேந்திரபாபு நாளை மறுநாள் 10-ந் தேதி (சனிக்கிழமை) கோவைக்கு வருகிறார்.
- கோவைக்கு வரும் அவர், கார் குண்டு வெடிப்புக்கு பிறகு கோவையில் தற்போது உள்ள நிலைமை குறித்து ஆலோசனை மேற்கொள்கிறார்.
கோவை:
கோவையில் கடந்த அக்டோபர் 23-ந்தேதி கார் குண்டு வெடிப்பு நடந்தது.
இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு உடனடியாக கோவைக்கு விரைந்து வந்தார். சம்பவம் நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த அவர், இதில் தொடர்புடையவர்களை விரைந்து பிடிக்குமாறும், விசாரணையை தீவிரப்படுத்தவும் உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து போலீசார் துரித விசாரணை நடத்தி, இந்த வழக்கில் தொடர்புடையதாக 6 பேரை கைது செய்தனர். மேலும் வெடி மருந்துகள் உள்பட பல்வேறு பொருட்களையும் கைப்பற்றினர்.
மேலும் அசம்பவாவிதங்களை தவிர்க்கும் விதமாக போலீசார் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து போலீசாருக்கு அறிவுரைகளையும் டி.ஜிபி. வழங்கினார்.
இதற்கிடையே இந்த வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டது. என்.ஐ.ஏ. அதிகாரிகளும் இந்த வழக்கு சம்பந்தமாக டி.ஜி.பி. சைலேந்திரபாபுவை நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் டி.ஜி.பி.சைலேந்திரபாபு நாளை மறுநாள் 10-ந் தேதி (சனிக்கிழமை) கோவைக்கு வருகிறார். கோவைக்கு வரும் அவர், கார் குண்டு வெடிப்புக்கு பிறகு கோவையில் தற்போது உள்ள நிலைமை குறித்து ஆலோசனை மேற்கொள்கிறார்.
மேலும் இதுபோன்ற சம்பவங்களை தடுப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் புதிதாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைள் குறித்தும் ஆலோசிக்க உள்ளதாகவும் தெரிகிறது.
மேலும் கோவையில் சில இளைஞர்கள் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதை கண்டுபிடித்த போலீசார் அவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். தற்போது அவர்களை நல்வழிப்படுத்துவதற்கான நடவடிக்கைளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்வார் என போலீசார் தெரிவித்தனர்.
- போலீஸ் நிலையத்தில் பராமரிக்கப்படும் ஆவணங்களையும் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆய்வு செய்தார்.
- போலீஸ் நிலையத்தில் பதிவேடுகளை முறையாக பராமரித்த எழுத்தர் தமிழ்ச்செல்வியை டி.ஜி.பி. சைலேந்திரபாபு பாராட்டி வெகுமதி அளித்தார்.
வண்டலூர்:
வண்டலூர் அருகே உள்ள ஓட்டேரி போலீஸ் நிலையத்துக்கு நேற்று இரவு 8 மணியளவில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு திடீரென வந்தார். அவர் அங்கு பணியில் இருந்த போலீசாரிடம் வழக்குகள் மற்றும் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் போலீஸ் நிலையத்தில் பராமரிக்கப்படும் ஆவணங்களையும் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆய்வு செய்தார்.
அப்போது இன்ஸ்பெக்டர் வெங்கடாசலத்திடம் இப்பகுதியில் நடைபெறும் குற்றங்கள் குறித்தும் அதன் பின்னணி நபர்கள் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் குற்றங்களை தடுப்பதற்கு என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறித்தும் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது போலீஸ் நிலையத்தில் பதிவேடுகளை முறையாக பராமரித்த எழுத்தர் தமிழ்ச்செல்வியை டி.ஜி.பி. சைலேந்திரபாபு பாராட்டி வெகுமதி அளித்தார். டி.ஜி.பி. சைலேந்திரபாபுவின் இந்த இரவு நேர அதிரடி ஆய்வால் ஓட்டேரி போலீஸ் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.
- குட்கா கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட 769 மோட்டார்சைக்கிள்களும், 679 கார் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
- கஞ்சா வேட்டை 3.0 என்ற பெயரில் மாநிலம் முழுவதும் கஞ்சா வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை தடுக்க டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் அனைத்து மாவட்ட போலீசாரும் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன்படி கடந்த 1 ஆண்டில் ரூ.71 கோடியே 58 லட்சத்து 97 ஆயிரத்து 800 மதிப்பிலான குட்கா போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு மே 1-ந்தேதி முதல் கடந்த 9-ந்தேதி வரையில் 17 மாதங்களில் போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் 53,235 குட்கா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்களிடமிருந்து 7 லட்சத்து 95 ஆயிரத்து 442 கிலோ மதிப்பிலான குட்கா கைப்பற்றப்பட்டுள்ளது.
குட்கா கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட 769 மோட்டார்சைக்கிள்களும், 679 கார் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 52 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. குட்கா விற்பனை தொடர்பாக 13,534 வழக்குகள் போடப்பட்டுள்ளன.
இதே போன்று 1½ ஆண்டில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 18,569 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து ரூ.40 கோடியே 47 லட்சத்து 18 ஆயிரத்து 253 மதிப்பிலான 35 ஆயிரத்து 496 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா வியாபாரிகளின் 4023 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
1648 இரு சக்கர வாகனங்களும், 239 நான்கு சக்கர வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. 564 கஞ்சா வியாபாரிகள் மீது குண்டர் சட்டமும் பாய்ந்து உள்ளது.
இதற்கிடையே கஞ்சா வேட்டை 3.0 என்ற பெயரில் மாநிலம் முழுவதும் கஞ்சா வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 12-ந்தேதி தொடங்கிய இந்த வேட்டையில் 403 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்படி போலீஸ் நடவடிக்கை தீவிரமாக இருந்த போதிலும் கஞ்சா, குட்கா கடத்தல் ஆசாமிகள், கடல் வழியாகவும், பஸ், ரெயில் வழியாகவும் கடத்தல் சம்பவத்தை தொடர்ந்து அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
- சென்னையில் 20 ஆயிரம் போலீசார் பணியில் உள்ளனர்.
- போலீஸ் வேலையில் உடல் உழைப்பு அதிகம்.
சென்னை :
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் நரம்பியல் துறை நடத்தும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கான 'டிரான்ஸ்நேசல் எண்டோஸ்கோபிக்' உடற்கூறியல் நரம்பியல் அறுவை சிகிச்சை தொடர்பான கருத்தரங்கு மற்றும் பயிற்சி முகாம் நேற்று நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் சாந்தி மலர் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி கருத்தரங்கை தொடங்கி வைத்தார். மேலும் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில், நரம்பியல் துறை சார்பில் போலீசாருக்கு முதுகு வலி உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்க புதிய பிரிவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனையும் அவர் தொடங்கி வைத்தார். இந்த கருத்தரங்கு நிகழ்ச்சியில் ஆஸ்பத்திரியின் பேராசிரியர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
பின்னர் டி.ஜி.பி. சைலேந்திர பாபு மேடையில் கூறியதாவது:-
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி 1,000 படுக்கை வசதிகளுடன், 5 ஆயிரம் பேர் சிகிச்சை பெறும் வகையில் பொதுமக்களுக்கு சிறப்பாக மருத்துவ சேவையை வழங்குகிறது. நேர்மையான அரசு ஊழியர்களுக்கான புகலிடம் அரசு ஆஸ்பத்திரி. ஏனென்றால் சமீபத்தில் மூத்த போலீஸ் அதிகாரி வால்டர் தேவாரம் உடல் நலக்குறைவு காரணமாக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அவரை போன்ற நேர்மையான அதிகாரிகளுக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டது.
டாக்டர்கள் ஆரோக்கியமாக இருந்தால்தான் பொதுமக்கள் நலமுடன் வாழ முடியும். உண்மையான சேவை மனப்பான்மை கொண்டுள்ள டாக்டர்கள் அரசு ஆஸ்பத்திரியில் இருக்கிறார்கள்.
எனக்கும் டாக்டராக வேண்டும் என ஆசை இருந்தது. அதற்காக 4 ஆண்டுகள் முயற்சித்தேன் ஆனால் அந்த ஆசை நிறைவேறவில்லை. தற்போது லட்சக்கணக்கான இளைஞர்கள் டாக்டராக வேண்டும் என நினைக்கிறார்கள் இது ஆரோக்கியமான விஷயமாகும்.
பொதுவாகவே போலீஸ் வேலையில் உடல் உழைப்பு அதிகம். அதனால் அவர்களுக்கு முதுகு, உடல் வலி அதிகம் ஏற்படும். சென்னையில் 20 ஆயிரம் போலீசார் பணியில் உள்ளனர். அவர்களுக்கு மாதம்தோறும் 3-வது திங்கட்கிழமைகளில், கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் புதிதாக தொடங்கப்படும் முதுகு வலி சிகிச்சை பிரிவில் சிகிச்சைகள் வழங்கப்படுகிறது. இது ஒரு மகிழ்ச்சியான செய்தி. இதனை அனைத்து போலீசாரும் பயன்படுத்தி கொள்ளவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 2022-ம் ஆண்டு சவால் நிறைந்ததாகவும், வெற்றிகரமாகவும் இருந்தது.
- 13,491 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர்.
சென்னை :
டி.ஜி.பி. சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு காவல்துறை வரலாற்றில் 2022-ம் ஆண்டு சவால் நிறைந்ததாகவும், வெற்றிகரமாகவும் இருந்தது. கடந்த ஆண்டு முழுவதும் எந்தவொரு சாதி அல்லது வகுப்புவாத மோதல், காவல்துறை துப்பாக்கிச்சூடு உள்பட பெரிய குற்றச்சம்பவங்களும் நிகழாமல் பாதுகாக்கப்பட்டது.
ஜல்லிக்கட்டு, தேவர் குரு பூஜை, இம்மானுவேல் சேகரன் நினைவு நாள், மதுரை சித்திரை விழா, விநாயகர் சதுர்த்தி, திருவண்ணாமலை கார்த்திகை தீபம் திருவிழா ஆகியவை அமைதியாக நடைபெற்று முடிந்தன. மாமல்லபுரத்தில் நடைபெற்ற சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்குபெற்ற போட்டியாளர்கள் உள்பட 2 ஆயிரம் வெளிநாட்டினருக்கு சிறப்பான பாதுகாப்பு வழங்கினோம். போட்டி வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.
ஆபரேஷன் ரவுடி வேட்டையில் 3,949 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த கடுமையான நடவடிக்கையினால் மாநிலத்தில் திட்டமிட்ட குற்றங்களை செய்யும் குழுக்களின் தீயத்திட்டங்கள் பெரிய அளவில் தடுக்கப்பட்டு உள்ளன.
ஆபரேஷன் கஞ்சா வேட்டை நடத்தப்பட்டதன் காரணமாக 9,906 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் தொடர்புடைய 13,491 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர். 24 டன் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, 4,141 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 22.09.2022 அன்று டி.ஜி.பி. அலுவலகம் வந்து போலீசாரிடம் இருந்து மனுக்களை பெற்றார். இதன்படி 1,500 பேரின் குறைகள் உங்கள் துறையில் முதல்வர் திட்டத்தின் கீழ் தீர்க்கப்பட்டு உள்ளன. இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அனைத்து போலீசாருக்கும் இரவு ரோந்துப்படி வழங்கும் வசதியை ஏற்படுத்தி கொடுத்தது இதுவே முதல் முறை.
பணியின்போது உயிரிழந்த 1,132 போலீசாரின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் தகவல் பதிவு உதவியாளர் மற்றும் போலீஸ் நிலைய வரவேற்பாளர் பணிகள் வழங்கப்பட்டன. காவல் பணியில் உள்ள பொது பணி நிலைமைகள், காவலர் குடியிருப்பு, காவலர் நலன்கள் உள்ளிட்டவை குறித்து ஆராய நான்காவது காவல் ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த சாதனைகள் அனைத்தும் தமிழக காவல்துறையின் ஒவ்வொரு அதிகாரியாலும் மற்றும் ஆண் மற்றும் பெண் காவலர்களின் அர்ப்பணிப்பு மற்றும் கடமையின்பால் கொண்ட பற்றின் காரணமாகவே சாத்தியமானது. காவல்துறை பணியில் வரும் காலங்கள் சவால்களை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும்.
நமது பாரம்பரியம் மற்றும் காவல் பணியில் தொழில் சார்ந்த உயர் தரத்தை பராமரிக்க நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, தமிழ்நாடு காவல்துறையின் கொடி உயர்ந்து பறந்திட உறுதி ஏற்போம்.
இவ்வாறு டி.ஜி.பி. சைலேந்திரபாபு சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
- காவல் நிலைய பதிவேடுகளையும், குற்ற நிகழ்வுகள் குறித்தும் ஆய்வு செய்த சைலேந்திராபு வழக்குகளில் புலன் விசாரணை நிலையை பற்றி கேட்டறிந்தார்.
- மனு கொடுக்க வரும் பொதுமக்களிடம் கனிவோடும், அன்போடும் நடந்துகொள்ள வேண்டும் என்று காவல் நிலைய அதிகாரிகளுக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.
சென்னை:
தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு சென்னை காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட நொளம்பூர் போலீஸ் நிலையத்துக்கு இன்று காலை திடீரென சென்றார். பின்னர் போலீஸ் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
காவல் நிலைய பதிவேடுகளையும், குற்ற நிகழ்வுகள் குறித்தும் ஆய்வு செய்த சைலேந்திராபு வழக்குகளில் புலன் விசாரணை நிலையை பற்றியும் கேட்டறிந்தார்.
குற்றச் சம்பவங்கள், சாலை விபத்துக்கள் நடக்காமல் தடுக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தினார்.
மனு கொடுக்க வரும் பொதுமக்களிடம் கனிவோடும், அன்போடும் நடந்துகொள்ள வேண்டும் என்றும், அவர்களின் குறைகளை உடனுக்குடன் களையவும் காவல் நிலைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
காவல் நிலைய கோப்புகளை சிறப்பாக பராமரித்ததற்காக காவல் நிலைய துணை எழுத்தர் பெண் காவலர் லலிதாவிற்கு ரூ. 5 ஆயிரம் பண வெகுமதி வழங்கி பாராட்டினார்.
காவலர்களுக்கு முறையாக வாராந்திர ஓய்வு வழங்கப்படுகிறதா? என்பதை கேட்டறிந்து காவலர்களுடன் குழு புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.
- நாற்று நடுதல், அறுவடை போன்ற முக்கிய விவசாயப் பணிகளை உரிய நேரத்தில் கவனிக்க இயலாமல் போவதோடு, தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விவசாயப் பணிகளுக்கு இடையூறு ஏற்படா வண்ணம் மோட்டார் வாகனச் சட்டத்தை அமல்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.
சென்னை:
விவசாய டிராக்டர்களை பறிமுதல் செய்யும் விவகாரத்தில் போலீசார் வேளாண் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது என்று டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அவர் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் குறிப்பாக கிராமப் புறங்களில் விவசாயப் பணிகளுக்காக வேலை ஆட்களை ஏற்றிச் செல்லும் டிராக்டர்களை வாகன தணிக்கையின் போது போலீசார் பறிமுதல் செய்து மோட்டார் வாகன ஆய்வாளரிடம் ஒப்படைத்து விடுவதாகவும் அதனால் விவசாய பணிகள் பாதிக்கப்படுவதாகவும் பல்வேறு விவசாய அமைப்புகளால் புகார்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
வாகன தணிக்கையின் போது டிராக்டர்களில் விவசாய பணிகளுக்காக செல்லும் விவசாய தொழிலாளர்களை காத்திருக்க வைக்கப்படுவதாகவும், இதனால் நாற்று நடுதல், அறுவடை போன்ற முக்கிய விவசாயப் பணிகளை உரிய நேரத்தில் கவனிக்க இயலாமல் போவதோடு, தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே மாநகர போலீஸ் ஆணையாளர்கள் மற்றும் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர்கள், வாகன தணிக்கையில் ஈடுபடும் காவல் அலுவலர்களுக்கு இது தொடர்பாக தேவையான அறிவுரைகளை வழங்கி, விவசாயப் பணிகளுக்கு இடையூறு ஏற்படா வண்ணம் மோட்டார் வாகனச் சட்டத்தை அமல்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.