என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயில்வே ஊழியர்கள் மோதல்"

    • முட்டை வழங்குவது தொடர்பாக மோதல் ஏற்பட்டதாக கூறப்பட்டது.
    • அரை மணிநேர தாமத்திற்கு பிறகு விவேக் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டுச் சென்றது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு பல்வேறு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரெயில்களில் பயணிகளின் வசதிக்காக உணவு தயாரித்து வழங்கும் பெட்டிகள் (பேண்டரி கார்) இணைக்கப்பட்டு இருக்கும்.

    இந்த பிரிவில் பணியாற்றும் ஊழியர்கள், ரெயிலில் பயணம் செய்யும் பயணிகளிடம் ஆர்டர் பெற்று உணவு தயாரித்து வழங்கி வருகின்றனர்.

    இதேபோல் ரெயில்களில் ஏ.சி. பெட்டியில் பயணம் செய்பவர்களுக்கு உதவ ஊழியர்களும் பணியில் உள்ளனர். இவர்கள் கம்பளி, போர்வை ஆகியவற்றை வழங்கி வருகின்றனர்.

    நேற்று கன்னியாகுமரியில் இருந்து அசாம் மாநிலம் திப்ரூகருக்கு மாலை 5.25 மணிக்கு விவேக் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. இந்த ரெயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் அதில் பணியில் இருந்த உணவக ஊழியர் ஒருவருக்கும், ஏ.சி. பெட்டியில் பணியாற்றும் ஊழியருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    அவர்கள் பயணிகளை பற்றி கவலைப்படாமல் வார்த்தை மோதல்களில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில் ரெயில் 5.40 மணிக்கு நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. அங்கும் சில பயணிகள் ரெயிலில் ஏறினர். அப்போதும் ஊழி யர்கள் மோதல் நின்ற பாடில்லை. இதனை மற்ற ரெயில்வே பணியாளர்கள் யாரும் கண்டு கொள்ள வில்லை.

    தொடர்ந்து நாகர்கோவில் சந்திப்பு நிலையத்தில் இருந்து ரெயில் புறப்பட்டது. ஆனால் சில வினாடிகளில் அந்த ரெயில் நடுவழியில் நின்றது. சந்திப்பு ரெயில் நிலையத்துக்கும், ஊட்டுவாழ்மடம் ரெயில்வே கேட் பகுதிக்கும் இடையே ரெயில் நின்றதால், ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனைத் தொடர்ந்து ரெயில்வே பாதுகாப்பு படையினரும், ரெயில்வே போலீசாரும் விரைந்து சென்று ரெயில் நின்றதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது ஓடும் ரெயிலில் மோதலில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு ஆதரவாக அவர்கள் பணிபுரியும் பிரிவைச் சேர்ந்த மேலும் 2 பேர் வந்ததும், அவர்கள் ஒருவருக்கொருவர் கை கலப்பில் ஈடுபடும் சூழல் ஏற்பட்டதாலும் ரெயிலில் பயணம் செய்தவர்களில் சிலர், அபாய சங்கிலியை பிடித்து இழுத்ததால் ரெயில் நின்றது தெரியவந்தது.

    இது தொடர்பாக மோதலில் ஈடுபட்ட ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். முட்டை வழங்குவது தொடர்பாக மோதல் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதனை தொடர்ந்து ஏ.சி. பெட்டியில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்கள் திப்ரூ கரை சேர்ந்த தீப் கோகாய் (வயது28), அயன் கோகாய் (28) மற்றும் உணவக பிரிவில் பணியாற்றும் மேற்கு வஙகாளத்தை சேர்ந்த தபான் மொண்டல் (30), பீகாரை சேர்ந்த கைப் (20) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் பின்னர் கைதான 4 பேரையும் ஜாமீனில் விடுவித்தனர்.

    இந்த சம்பவம் காரணமாக சுமார் அரை மணிநேர தாமத்திற்கு பிறகு விவேக் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டுச் சென்றது. ரெயிலில் பணி யாற்றிய ஊழியர்கள் மோதல் காரணமாக நடு வழியில் ரெயில் நிறுத்தப்பட்ட சம்பவம் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கோட்ட ரெயில்வே தலைமை அலுவலகத்தில் தொழிற்சங்கங்களுக்கு இடையே நடந்த மோதல் தொடர்பாக 4 பேரை ரெயில்வே நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மதுரை:

    மதுரை ரெயில் நிலையத்தில் கோட்ட மேலாளர் தலைமை அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பல்வேறு தொழிற்சங்க அலுவலகங்களும் இயங்கி வருகின்றன.

    மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகத்தில் 2 தொழிற்சங்க அலுவலகங்களுக்கு இடையில் ஏற்கனவே பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் ஒரு தொழிற்சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் சிலர், கடந்த 20-ந்தேதி மதுரை கோட்ட ரெயில்வே தொழிலாளர் நலத்துறை அதிகாரியை நேரடியாக சந்திக்க சென்றனர்.

    அப்போது அங்கு மற்றொரு தொழிற்சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் சிலரும் இருந்தனர். ரெயில்வே தொழிலாளர் நலத்துறை அதிகாரி முன்பாக இரு சங்கத்தினரும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது இரு சங்கத்தினரையும் ரெயில்வே தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். அதன் பிறகு தொழிற்சங்க நிர்வாகிகள் அனைவரும் வெளியே வந்தனர். அப்போது அவர்களுக்கு இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இரு சங்கத்தை சேர்ந்தவர்களும் ஒருவரை ஒருவர் தாக்கி மோதலில் ஈடுபட்டனர். இந்த மோதலில் இரு சங்கங்களை சேர்ந்த பலருக்கும் காயம் ஏற்பட்டது. தொழிற்சங்கத்தினர் மோதிக்கொண்ட வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    எனவே இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று ரெயில்வே கோட்ட மேலாளர் பத்மநாபன் அனந்த் உத்தரவிட்டார். அதன்பேரில் ரெயில்வே துறை அதிகாரிகள் மோதலில் ஈடுபட்ட இரு சங்கத்தினரிடமும் விசாரணை நடத்தினார்கள்.

    மோதல் நடந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளும் ஆதாரத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் மோதலில ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.

    இந்த நிலையில் மதுரை கோட்ட அலுவலகத்தில் கோஷ்டி மோதலில் ஈடுபட்டதாக 4 ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்து கோட்ட ரெயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆனால் அந்த 4 பேர் யார்? எந்த தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள்? என்பது பற்றிய விவரங்களை தெரிவிக்க ரெயில்வே நிர்வாகம் மறுத்துவிட்டது.

    தொழிற்சங்க நிர்வாகிகள் வட்டாரத்தில் சிலரிடம் விசாரித்தபோது, “மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் அலுவலகத்தில் 2 தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது இரு தரப்பினரும் பயங்கரமாக தாக்கிக் கொண்டனர். இது தொடர்பாக ரெயில்வே நிர்வாகம் விசாரணை நடத்தியது. இதன் அடிப்படையில் 4 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

    மோதலின்போது அடிதடியில் ஈடுபட்ட ஒரு சிலர் மீது ரெயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே நாங்கள் இது தொடர்பாக அதிகாரிகளிடம் முறையீடு செய்வோம்” என்று தெரிவித்துள்ளனர்.

    கோட்ட ரெயில்வே தலைமை அலுவலகத்தில் தொழிற்சங்கங்களுக்கு இடையே நடந்த மோதல் தொடர்பாக 4 பேரை ரெயில்வே நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×