search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "confiscation"

    • ரெயில்வே போலீசார் நேற்று நள்ளிரவு ஈரோடு வந்த மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சோதனை மேற்கொண்டனர்.
    • போலீசார் ரெயிலில் கஞ்சா கடத்தியது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    தமிழகம் முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் கடந்த சில நாட்களாக தொடர் சோதனை நடத்தப்பட்டு வருகின்றது. அதன்படி ஈரோடு மாவட்டத்திலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவு பேரில் போலீசார், மதுவிலக்கு போலீசார் ஒருங்கிணைந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் ஈரோடு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் ஈரோடு-பள்ளிபாளையம் மாவட்ட எல்லையான கருங்கல்பாளையம் காவிரி ஆறு சோதனை சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நாமக்கல் மாவட்டம் தேவனாங்குறிச்சியை சேர்ந்த சிவசக்தி (வயது 22) என்பவரை பிடித்து சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்திய பொழுது அவர் கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து அவரை கைது செய்த மதுவிலக்கு போலீசார் அவர் கொடுத்த தகவலின் பேரில் குமாரபாளையம் பகுதியை சேர்ந்த மதிவாணன் (40) மற்றும் சின்னாகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த லோகேஸ்வரன் (25) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    இதையடுத்து விற்பனைக்காக வைத்திருந்த 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் மதுவிலக்கு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதே போல ஈரோடு ரெயில்வே போலீசார் நேற்று நள்ளிரவு ஈரோடு வந்த மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சோதனை மேற்கொண்டனர். அப்போது முன்பதிவு இல்லாத பெட்டியில் சோதனை மேற்கொண்ட போது கழிவறை அருகே கருப்பு நிற பை ஒன்று கேட்பாரற்று கிடந்தது.

    இதையடுத்து அந்த பையை திறந்து பார்த்த போது அதில் சுமார் 1 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து கஞ்சா பையை கைப்பற்றிய ஈரோடு ரெயில்வே போலீசார் அதை ஈரோடு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் ரெயிலில் கஞ்சா கடத்தியது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பல்வேறு இடங்களில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
    • 25 சவரன் தங்க நகைகள் மற்றும் இருசக்கர வாக னத்தை பறிமுதல் செய்யப்பட்டது.

    தருமபுரி:

    தருமபுரி-திருப்பத்தூர் சாலையில் மதிக்கோன்பாளையம் போலீசார் வழக்கம் போல் இருசக்கர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு இருசக்கர வாகனத்தை போலீசார் வாகன தணிக்கையில் நிறுத்திய போது, அவர்கள் நிறுத்தாமல் அதிவேகமாக சென்றுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை பின் தொடர்ந்து தருமபுரி அருகே சுற்றி வளைத்து பிடித்தனர்.

    இதனை தொடர்ந்து அவர்களை போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்திய போது, 2 பேரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் 2 பேரையும் தீவிரமாக விசாரணை நடத்தினர்.

    இந்த விசாரணையில் இருவரும் தருமபுரி பகுதியைச் சார்ந்த ராஜா, வேடியப்பன் என்பது தெரியவந்தது. இருவரும் ஆன்லைன் ரம்மி விளையாடும் பழக்கம் வைத்திருந்ததும் அதில் லட்சக் கணக்கில் பணத்தை இழந்ததாகவும், அதற்காக வீட்டில் இருந்த நகைகளையும் அடகு வைத்துள்ளதும் தெரியவந்தது. இதனை அடுத்து பண தேவைகள் மற்றும் ஆன்லைன் விளையாடுவதற்காக பல்வேறு இடங்களில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

    மேலும் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு, இருசக்கர வாகனம், சாலையில் நடந்து செல்பவர்கள், இருசக்கர வாகனத்தில் வரும், பெண்கள், முதியோர் என பலரிடம் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு செங்கல்மேடு பகுதியில் பெண் ஒருவரிடம் 6 அரை சவரன் தங்க சங்கிலி பறித்து சென்றதும், விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து தொடர் செயின் பறிப்பு சம்பவத்தில் வேடியப்பன் மற்றும் ராஜா 2 பேரையும் மதிக்கோன்பாளையம் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 25 சவரன் தங்க நகைகள் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்யப்பட்டது.

    • வெளிநாட்டு சிகரெட் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
    • விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    கே.கே. நகர்:

    திருச்சி விமான நிலையத்திற்கு ஷார்ஜாவிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    ஒரு பயணியின் உடமைகளை சோதனை செய்த போது அவர் 9,140 சிகரெட்டுகளை மறைத்து எடுத்து வந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு இந்திய ரூபாயில் ரூ.1.55 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதே விமானத்தில் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட வாசனை பொருட்களை மறைத்து எடுத்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.47 ஆயிரம். இவற்றை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பயணியிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கடந்த சில நாட்களாக விமானம் மூலமாக வெள்நாடுகளில் இருந்து தங்கம் உள்ளிட்டவை கடத்தல் குறைந்து இருந்த நிலையில் தற்போது வெளிநாட்டு சிகரெட் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

    • சிங்கப்பூரில் இருந்து வந்த விமான பயணிகளிடமும் வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
    • போலி முகவரியில் பாஸ்போர்ட் பெற்றது தெரியவந்தது.

    கே.கே. நகர்:

    திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து இலங்கை, துபாய், வியட்நாம், சிங்கப்பூர், மலேசியா, கத்தார் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்கும் ஐதராபாத், டெல்லி, மும்பை உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    மேலும், சர்வதேச நாடுகளில் இருந்து வரும் பயணிகள் சிலர் தங்கத்தை அதிகளவில் கடத்தி வருவதும், அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் அடிக்கடி நடைபெறுகிறது.

    இந்த நிலையில் சிங்கப்பூரில் இருந்து அதிகாலை 2.35 மணிக்கு வந்த ஏர்இந்தியா விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறையை சேர்ந்த வான் நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, ஒரு பயணி 179 கிராம் எடையுள்ள 24 காரட் தூய்மையான தங்கசங்கிலி, தங்க துண்டு ஆகியவற்றை தனது பேன்ட் பாக்கெட்டில் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதுபோல் சிங்கப்பூரில் இருந்து வந்த விமான பயணிகளிடமும் வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, ஒரு பயணி 117 கிராம் எடையுள்ள 24 காரட் தூய்மையான தங்க துண்டை கடத்தி வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 2 பேரிடம் இருந்தும் மொத்தம் ரூ.23 லட்சம் மதிப்பிலான 296 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் 2 பயணிகளையும் கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதேபோல் மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து பேட்டிக் ஏர் விமானம் நேற்று திருச்சி விமான நிலையம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளின் ஆவணங்களை குடியுரிமை பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா கீழவளவை சேர்ந்த மகேஷ் (49) என்பவர் போலி முகவரியில் பாஸ்போர்ட் பெற்று வெளிநாடு சென்று, திரும்பியது தெரியவந்தது.

    இதேபோன்று திருச்சியில் இருந்து கோலாலம்பூருக்கு செல்ல இருந்த பேட்டிக் ஏர் விமானத்தில் பயணம் செய்ய இருந்த சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையை சேர்ந்த பாண்டி (46), திருச்சியில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு செல்ல இருந்த ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்ய இருந்த சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த ஞானசேகர் (53), திருச்சியில் இருந்து தாய்லாந்துக்கு செல்ல இருந்த ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்ய இருந்த தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை, உக்கடை பகுதியை சேர்ந்த பக்கிரி சாமி (52)ஆகியோரது பாஸ்போர்ட்டை சோதனை செய்ததில் போலி முகவரியில் பாஸ்போர்ட் பெற்றது தெரியவந்தது.

    இதனையடுத்து அவர்களை பிடித்த அதிகாரிகள் விமானநிலைய போலீசில் ஒப்படைத்தனர். தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    ×