என் மலர்
நீங்கள் தேடியது "thangam thenarasu"
- மானியக் கோரிக்கையில், விலையில்லா மடிக்கணினி வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
- எப்படியும் இந்த ஆண்டு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க இயலாது என்று கல்வியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
மானியக் கோரிக்கையில் விலையில்லா மடிக்கணினி வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்றும் எந்த நிதியை வைத்து மடிக்கணினி வழங்கப்போகிறார், எப்போது வழங்கப்போகிறார் என்பதையும் அமைச்சர் தெளிவுப்படுத்த வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
விளம்பரத்துக்காக திட்டங்களை அறிவித்துவிட்டு, அதைச் செயல்படுத்த நிதி ஒதுக்காமல், வெறும் கையில் முழம் போடுவதை திமுகவினரிடம்தான் கற்றுக் கொள்ள வேண்டும்.
மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வாங்க இந்த ஆண்டு ரூ. 2,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக, சட்டசபையில் தமிழக நிதியமைச்சர் கூறியிருக்கிறார்.
ஆனால், உயர்கல்வி மானியக் கோரிக்கையிலோ அல்லது தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை மானியக் கோரிக்கையிலோ இந்தத் திட்டத்திற்கு ஒரு ரூபாய் கூட ஒதுக்கப்படவில்லை. யாரை ஏமாற்ற முயற்சிக்கிறார் அமைச்சர்? தமிழக மாணவர்களையா?
எப்படியும் இந்த ஆண்டு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க இயலாது என்று கல்வியாளர்கள் தெரிவிக்கிறார்கள். பிறகு ஏன் இந்த வெற்று அறிவிப்பு? நிதியே ஒதுக்காமல், இந்த ஆண்டு, அடுத்த ஆண்டு என எப்படி கொஞ்சம் கூடக் கூச்சமே இல்லாமல் சட்டமன்றத்தில் பேசுகிறார் தமிழக நிதியமைச்சர்?
மானியக் கோரிக்கையில், விலையில்லா மடிக்கணினி வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. எந்த நிதியை வைத்து, மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப் போகிறார், எப்போது வழங்கப் போகிறார் என்பதை அமைச்சர் பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுவதற்காக ரூ.1,400 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
- மின் நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகைக்காக ரூ.1,036 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னை:
சட்டசபையில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இறுதி துணை மதிப்பீட்டை இன்று தாக்கல் செய்தார். அதில் மொத்தம் ரூ.19,287.44 கோடிக்கு நிதி ஒதுக்குவதற்கு வகை செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நிதிநிலை தன்மையை உயர்த்துவதற்கும், உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் பங்கு மூலதன உதவியாக ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுவதற்காக ரூ.1,400 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மின் நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகைக்காக ரூ.1,036 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பஸ்கள் வாங்குவதற்காக போக்குவரத்துக் கழகங்களுக்கு கூடுதலாக ரூ.1000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பென்ஜல் புயல் பாதிப்பு துயர் தணிப்பு பணிகளுக்காக ரூ.901.84 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- அ.தி.மு.க. தொண்டர்களின் எதிர்காலத்தை வேறு யாரோ தீர்மானித்து கொண்டிருக்கின்றனர்.
- அமைச்சர் தங்கம் தென்னரசின் பேச்சிற்கு அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சென்னை:
தமிழக சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது, நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:
* அ.தி.மு.க. தொண்டர்களின் எதிர்காலத்தை வேறு யாரோ தீர்மானித்து கொண்டிருக்கின்றனர்.
* வேறு ஒரு இடத்தில் இருந்து வேறு யாரோ ஒருவர் கணக்குகளை போட்டுக்கொண்டிருக்கிறார். கவனமாக இருங்கள்.
* வேறு யாரோ ஒருவரின் கணக்குகளை அ.தி.மு.க.வினர் புரிந்து கொள்ள வேண்டும்.
* அ.தி.மு.க.வை பறித்துக்கொள்ள நினைப்பவர்களிடமிருந்து நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.
* வானதி சீனிவாசன் மிகுந்த மகிழ்ச்சியுடன் சிரிக்கிறார், பூனை குட்டி வெளியே வந்துவிட்டது என்று பேசினார்.
அமைச்சர் தங்கம் தென்னரசின் பேச்சிற்கு அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசுவதற்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என அ.தி.மு.க.வினர் கோரிக்கை விடுத்தனர்.
- திரையுலகின் பிரபல ஒளிப்பதிவாளராக வலம் வருபவர் பி.சி.ஸ்ரீராம்.
- இவர் தெலுங்கு, இந்தி, மலையாளத்திலும் நிறைய படங்களில் பணியாற்றி இருக்கிறார்.
இந்திய திரையுலகின் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் பி.சி.ஸ்ரீராம். தமிழில் பூவே பூச்சுடவா, மவுன ராகம், நாயகன், தேவர் மகன், காதல் தேசம், அலைபாயுதே, ஐ உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். தெலுங்கு, இந்தி, மலையாளத்திலும் நிறைய படங்களில் பணியாற்றி இருக்கிறார். விக்ரம் நடித்த மீரா, கமல்ஹாசன், அர்ஜுன் இணைந்து நடித்த குருதிப்புனல் மற்றும் வானம் வசப்படும் ஆகிய படங்களை இவர் இயக்கியுள்ளார்.

மேலும் பல விருதுகளையும் வாங்கி குவித்துள்ளார். சமூக பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து வரும் இவர் அவ்வப்போது அரசியல் தொடர்பான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இந்நிலையில், பி.சி.ஸ்ரீராம் தனது சமூக வலைதளத்தில் சாந்தோம் மற்றும் ஆழ்வார்பேட்டையில் ஒரு நாளிலேயே மின்சார விநியோகத்தில் அதிகமான ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டுள்ளது. மின்சாரத் துறையின் செயல்பாட்டிற்கு என்ன நேர்ந்தது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு மின்சாரத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உடனடியாக பதிலளித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இதனை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடியாக அறிவுறுத்தப்படும். நகரம் முழுவதும் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வருவதால் இது போல் நடக்கிறது. சிரமத்திற்கு வருந்துகிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.
- முதல்வன் திட்டத்திலும் அதிகளவில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
- வடசென்னை வளர்ச்சியில் முதலமைச்சரின் திராவிட மாடல் அரசு உயர்ந்த அக்கறை கொண்டுள்ளது.
சென்னை:
சட்டசபையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், மாதவரம் தொகுதியில் போட்டி தேர்வுக்கான பயிற்சி மையம் அமைக்க அரசு முன்வருமா என சுதர்சனம் எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கூறியதாவது:-
சென்னையில் ஏற்கனவே வண்ணாரப்பேட்டையில் தியாகராஜா கல்லூரி, நந்தனம் கல்லூரியிலும் தலா ஒரு பயிற்சி மையம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மதுரை, கோயம்புத்தூர், சேலம் போன்ற இடங்களிலும் போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது.
சென்னையை பொறுத்த வரை போட்டி தேர்வுக்கான பயிற்சி குடிமை தேர்வுக்கான பயிற்சி மையம் இயங்கி வருவதோடு, முதன்மை தேர்வாக இருந்தாலும் ஏறத்தாழ 300 மாணவர்கள் பயிற்சி கொடுக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், போட்டி தேர்வில் ஈடுபடும் மாணவர்களை அரசு கருத்தில் கொண்டு தான் பல நூலகங்களிலும் போட்டி தேர்வுக்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இதற்கான வசதி உள்ளதோடு, முதலமைச்சரின் கனவு திட்டமான நான் முதல்வன் திட்டத்திலும் அதிகளவில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
அதேபோல் வடசென்னை வளர்ச்சியில் முதலமைச்சரின் திராவிட மாடல் அரசு உயர்ந்த அக்கறை கொண்டுள்ளது. சென்னை, மதுரை மட்டுமல்லாமல் கோவையிலும் திருச்சியிலும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்கப்படும் என்று தெரிவித்தது போல, எதிர்காலத்தில் வட சென்னையில் அறிவுசார் மையம் மற்றும் நூலகம் அமைக்கப்படும் என்றார்.
- மின் கட்டண உயர்வுக்கு அதிமுக தான் காரணம்.
- மின்வாரியத்தில் என்ன நடந்தது, என்ன நடக்கிறது என்பதை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்னும் புரிந்து கொள்ளாமல் உள்ளார்.
சென்னை:
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் தங்கமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகள் கடந்துவிட்ட நிலையில், மூன்று முறை கடுமையாக மின்கட்டணத்தை உயர்த்திய பிறகும் தமிழ் நாடு மின்சார வாரியத்தை நஷ்டத்தில் இயக்கும் நிதி மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி அளித்ததில் இருந்தே தமிழ்நாடு மின்சார வாரியத்தில் என்ன நடந்தது என்பதையும், என்ன நடக்கிறது என்பதையும் அவர் இன்னும் புரிந்து கொள்ளாமல் இருக்கிறார் என்பது நன்கு புரிகிறது.
உதய் திட்டத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட்டதால் கிடைத்த நன்மைகளை நான் மின்சாரத்துறை அமைச்சராக இருந்தபோது, 2017 முதல் 2021 வரை சட்ட மன்றத்திலும், பிறகு இன்று வரை பலமுறை ஊடகங்கள் வாயிலாகவும், அறிக்கைள் வாயிலாகவும், பொது மேடையிலும் விளக்கியுள்ளேன். மேலும், நேருக்கு நேர் விவாதத்திற்கு தயாராக இருக்கிறேன் என்றும் தி.மு.க. அரசின் அமைச்சர்களுக்கு சவால் விடுத்துள்ளேன்.
எங்கள் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பின்படி, தி.மு.க. அரசு மின்கட்டணத்தை மூன்றாம் முறையாக உயர்த்தியதைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும், அ.தி.மு.க.வின் சார்பில், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்களை வெற்றிகரமாக நடத்தி உள்ளோம்.
தி.மு.க. அரசின் நிர்வாகத் திறனற்ற ஆட்சிக்கு, விலைவாசி உயர்வுக்கு, சட்டம்-ஒழுங்கு சீர்கேடுக்கு என்று பல்வேறு வகைகளில் தமிழக மக்களிடம் தொடர்ந்து எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. மின்கட்டண உயர்வைக் கண்டித்து கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டங்களுக்கு தமிழகம் முழுவதும் கிடைத்த வரவேற்பைப் பொறுக்க முடியாமல், அமைச்சர் தங்கம் தென்னரசு மின் கட்டண உயர்வுக்கு உதய் திட்டத்தில் நாங்கள் கையெழுத்திட்டதுதான் காரணம் என்று பழைய பல்லவியை பாடியுள்ளார்.
நான் தி.மு.க. அரசுக்கு மீண்டும், மீண்டும் வலியுறுத்துவது இதுதான். உதய் மின் திட்டத்தினால் ஏற்பட்ட நன்மைகளையும், தமிழக மக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்பதையும், தற்போது மின்கட்டண உயர்வு தேவையில்லை என்பதையும், மின்சாரத் துறை அமைச்சராக உள்ள தங்கம் தென்னரசு குறிப்பிடும் நாளில், அவருடன் நான் நேருக்கு நேர் விவாதிக்கத் தயார். அவர் தயாரா?
மூன்றாண்டு ஆட்சிக்குப் பிறகும், மூன்று முறை கடுமையான மின்கட்டணத்தை உயர்த்திய பிறகும், தங்களது நிர்வாகத் திறமையின்மை காரணமாக தமிழ் நாடு மின்சார வாரியத்தை லாபகரமாக இயக்க முடியாமல் உள்ளதை மறைக்க, எங்கள் மீது பழிபோடுவதை விட்டு விட்டு, இனியாவது தமிழ் நாடு மின்சார வாரியத்தை லாபகரமாக இயக்குவதற்கு முயற்சிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- காஞ்சிபுரத்தில் மெகஸ் எலக்ட்ரானிக்ஸ் ரூ.2,200 கோடி முதலீட்டில் 2,200 பேர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கக் கூடிய திட்டம்.
- நமது அரசாங்கமும், தனியாரும் செய்துள்ள கூட்டாட்சி முறையில் உள்ள திட்டம்.
சென்னை:
தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11 மணி அளவில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரான்ஸ் நாட்டில் இருப்பதால் அவரைத் தவிர அனைத்து அமைச்சர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். சுமார் 45 நிமிடங்களுக்கு மேலாக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
அமைச்சரவை கூட்டம் முடிந்ததும் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நிருபர்களிடம் கூறியதாவது:-
தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஏறத்தாழ 44 ஆயிரத்து 125 கோடி ரூபாய் முதலீட்டுக்காக 15 முதலீட்டு திட்டங்களுக்கு இந்த அமைச்சரவை ஒப்புதலை தந்துள்ளது.
இந்த முதலீட்டு திட்டங்களின் அடிப்படையில் ஏறத்தாழ 24 ஆயிரத்து 700 பேர்களுக்கு புதிதாக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்போது வந்திருக்கக்கூடிய இந்த முதலீடுகளில் குறிப்பாக வாகன உற்பத்தி மின்னணு பொருட்கள் மற்றும் உணவு பதப்படுத்துதல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கூறுகள் மற்றும் பேட்டரி உற்பத்தி ஆகிய தொழில்கள் குறித்த முதலீடுகள் இந்த அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் தூத்துக்குடி மாவட்டத்தில் சன்தாக் நிறுவனத்துக்கு அவர்களின் முதலீடாக 21 ஆயிரத்து 340 கோடி ரூபாய், வேலைவாய்ப்பாக 1,114 பேர்களுக்கு அந்த வேலைவாய்ப்பை உருவாக்க கூடிய திட்டம்.
காஞ்சிபுரத்தில் மெகஸ் எலக்ட்ரானிக்ஸ் ரூ.2,200 கோடி முதலீட்டில் 2,200 பேர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கக் கூடிய திட்டம்.
ஈரோட்டில் மில்கி மிஸ்ட் உணவு பதப்படுத்தும் தொழிலில் ரூ.1,777 கோடி முதலீட்டில் 2025 பேர்களுக்கு வேலைவாய்ப்பு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் லோகன் கீரிம்டெக் முதலீடு 1,597 கோடி ரூபாய். வேலைவாய்ப்பு 715 பேர்கள் ஆகியவை குறிப்பிடத்தக்க முதலீடுகளாக அமைந்திருக்கிறது.
இது தவிர உலகளாவிய திறன் மையங்களுக்கான அவற்றின் விரிவாக்கங்களுக்காக ஒப்புதலும் அளிக்கப்பட்டுள்ளது.
யு.பி.எஸ். மற்றும் அஸ்ட்ரா ஜெனிகா இந்த இரண்டு நிறுவனங்கள் அவர்களது மையத்தை விரிவாக்கம் செய்வதற்கான ஒப்புதல் தரப்பட்டுள்ளது.
எனவே இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் ஏறத்தாழ ரூ.44 ஆயிரத்து 125 கோடி அளவிற்கு புதிய முதலீடுகள் 15 புதிய நிறுவனங்களில் வந்திருக்கிறது. ஏறத்தாழ 24 ஆயிரத்து 700 பேருக்கு இது வேலைவாய்ப்பை உருவாக்கும்.
இது தவிர இன்னொரு மகிழ்ச்சியான செய்தி. நமது முதலமைச்சர் வரக்கூடிய 17-ந்தேதி இந்தியாவிலேயே முதல் முறையாக, தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் சிப்காட் சார்பில் காஞ்சிபுரம் மாவட் டம் ஸ்ரீ பெரும்புதூர் வட்டம் வல்லம் படுகால் பகுதியில் ரூ.706.5 கோடியில் கட்டப்பட்டுள்ள 18 ஆயிரத்து 720 படுக்கைகள் கொண்ட தொழிற்சாலை பணியாளர்கள் தங்குவதற்கான கட்டிடம் பாக்ஸ்கான் நிறுவனத்துக்காக கட்டப்பட்டுள்ளது.
அந்த கட்டிடத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.
இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் 3 முக்கியமான கொள்கைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. எரிசக்தி துறை மூலமாக குறிப்பாக பட்ஜெட்டில் கூட இதுபற்றி அறிவிப்பு வெளியிட்டிருந்தோம்.
தமிழ்நாடு நீரேற்று புனல்மின் திட்டம். தமிழ்நாடு சிறுபுனல் மின் திட்டங்கள். அதற்கான கொள்கை, தமிழ்நாடு காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களுக்கான புதுப்பித்தல் மற்றும் ஆயுள் நீட்டிப்புக்கான கொள்கைக்கும் அனுமதி கொடுத்துள்ளோம்.
பசுமை எரிசக்தியில் தமிழ்நாடு முன்னணியில் இருக்கக்கூடிய ஒரு மாநிலமாக இருப்பதை நீங்கள் அறிவீர்கள். வரக்கூடிய 2030-ம் ஆண்டுக்குள் 20 ஆயிரம் மெகாவாட் உற்பத்தி நிறுவு திறனை நாம் அடைய வேண்டும் என்கிற இலக்கை முதலமைச்சர் நிறுவி இருக்கிறார்கள்.
இப்போது இருக்கக்கூடிய நிலையற்ற பசுமை எரி சக்தியை நாம் சமப்படுத்தப்பட்ட மின்சாரமாக மாற்றுவதற்கு கட்டமைப்பை உருவாக்கி கிரிடில் அதை கொண்டு வருவதற்காக இந்த 3 கொள்கைகளை நாம் கொடுத்துள்ளோம்.
இந்த திட்டங்களில் 5 ஆயிரம் கோடி ரூபாய் அள வுக்கு முதலீடுகள் இருப்பதால் தனியார் பங்களிப் போடு செய்வது அவசியமாக இருக்கிறது.
அரசு மற்றும் அரசு நிறுவனங்கள் இவைகளுக்காக இருக்கக்கூடிய நீர்த்தேக்கங்களில் கூட்டு முயற்சியில் செயல்படுத்தக்கூடிய திட்டம். அதன் வாயிலாக கிடைக்கும் மின்சாரம் 100 சதவீதம் நமது மாநிலத்துக்கே வழங்க வேண்டும் என்கிற ஒரு திட்டம்.
நமது அரசாங்கமும், தனியாரும் செய்துள்ள கூட்டாட்சி முறையில் உள்ள திட்டம். அது தவிர தனியார் மூலமாக செய்யக்கூடிய முறை என 3 வகையாக பிரித்துக்கொண்டு இந்த கொள்கை வகுக்கப்பட்டு உள்ளது.
இந்த கொள்கைக்கு பல்வேறு சலுகைகளும், கட்டணங்களும் வழங்கி இருக்கிறோம்.
சிறிய புனல் திட்டமும் கொடுத்துள்ளோம். தூய்மையான மாசற்ற மின்சாரத்தை உருவாக்க இது சரியாக இருக்கும். காற்றாலையை புதுப்பிக்கும் கொள்கை மூலம் மின் உற்பத்தியை அதிகரிக்கும் வாய்ப்பும் உண்டாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் நிருபர்கள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் அமெரிக்க பயணம் எப்போது? என்று கேட்டனர். அதற்கு அவர் பதிலளிக்கையில், இது குறித்து முதலமைச்சர் அலுவலகம் முறையான வகையில் அறிவிப்பு வெளியிடும் என்றார்.
- வெம்பக்கோட்டை - விஜயகரிசல்குளத்தில் நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகளைப் பார்வையிட்டேன்.
- சங்கத் தமிழர்கள் அரிய கற்களால் ஆன அணிகலன்களை உற்பத்தி செய்து அணிந்தது தெரிகின்றது.
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜய கரிசல்குளத்தில் இதுவரை 16 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது கூடுதலாக 2 குழிகள் தோண்டுவதற்கு அளவீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
அகழாய்வு பணிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார். அப்போது அவர் அகழாய்வு குழிகளை சுற்றி பார்வையிட்டார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை - விஜயகரிசல்குளத்தில் நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகளைப் பார்வையிட்டேன்.

அகழாய்வில், இதுவரை 16 குழிகள் தோண்டப்பட்டுள்ள நிலையில், 2000க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தற்போது சுடுமண்ணாலான சிவப்பு நிற வண்ணம் தீட்டப்பட்ட சிகை அலங்காரத்துடன் கூடிய மனிதனின் தலை கிடைத்துள்ளது.
"கொடுமணம் பட்ட ...... நன்கலம்" (பதிற்றுப்பத்து 67) சங்கப் புலவர் கபிலரின் வரிகளிலிருந்து, சங்கத் தமிழர்கள் அரிய கற்களால் ஆன அணிகலன்களை உற்பத்தி செய்து அணிந்தது தெரிகின்றது.
அந்த வகையில், சூதுபவள மணிகள், மாவு கற்களால் செய்யப்பட்ட உருண்டை - நீள்வட்ட வடிவ மணிகள், அரிய வகை செவ்வந்திக் கல் மணிகள் கிடைத்துள்ளன. மேலும், சுடுமண்ணாலான பல வடிவமுடைய ஆட்டக் காய்கள், திமில் உள்ள காளையின் தலை முதல் முன்கால் பகுதி வரை கிடைத்துள்ளது அவர்களின் அணிகலன் வடிவமைப்பு கலை, விளையாட்டு மீதான ஆர்வத்தை பறைசாற்றுகிறது என்று தெரிவித்துள்ளார்.
- எதிர்க்கட்சித் தலைவருக்கு ஒன்றிய பாஜக அரசு நமக்கு நிதி ஒதுக்காதது பற்றித் தெரியாதா?.
- திராவிட மாடல் ஆட்சியின் மீது அவதூறு பரப்புவதையே அவர் வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்.
"100 நாள் வேலைத் திட்டத்திற்கு நிதியை விடுவிக்க வேண்டும் என பொங்கலுக்கு முன்பே பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். ஆனால், நிதி விடுக்காத பாஜகவை கண்டிக்காமல், தமிழ்நாடு அரசு மீது எடப்பாடி பழனிச்சாமி அவதூறு பரப்பி வருகிறார்" என்று தங்கம் தென்னரசு குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், "ஒன்றிய பாஜக அரசிற்கு ஒரு பாதிப்பென்றால் ஓடிவந்து குறுக்கே விழுந்து அதை மடைமாற்றம் செய்வதே எதிர்கட்சித்தலைவர் பழனிசாமி அவர்களின் கடமை என்பதை மீண்டும் ஒருமுறை அவர் நிரூபித்துள்ளார்.
100 நாள் வேலைத் திட்டம் என்ற மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்காக ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்காமல் ஏழை எளிய மக்களின் வயிற்றில் அடித்து வருகிறது ஒன்றிய பாஜக அரசு. இந்த நயவஞ்சக செயலை கண்டித்து மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், உடனடியாக தமிழ்நாட்டிற்கு ஒதுக்க வேண்டிய MGNREGS நிதியை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்திப் பொங்கலுக்கு முன்பே 13.01.2025 அன்று பிரதமருக்குக் கடிதம் எழுதி இருந்தார். இதை ஆதரித்து தமிழ்நாட்டு மக்களுக்காகக் குரல் கொடுத்திருக்க வேண்டிய பழனிசாமி , தனது குரலை அவதூறு பரப்ப மட்டுமே பயன்படுத்தி வருவது கண்டனத்திற்குரியது.
ஒரு பொறுப்பான எதிர்க்கட்சி தலைவராக அவர் தமிழ்நாட்டுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பியிருக்க வேண்டுமல்லவா?
எதற்கெடுத்தாலும் செய்தித்தாளிலே படித்தேன், டிவியைப் பார்த்து தெரிந்து கொண்டேன் எனக் கூறும் எதிர்க்கட்சித் தலைவருக்கு ஒன்றிய பாஜக அரசு நமக்கு நிதி ஒதுக்காதது பற்றித் தெரியாதா?.
புயல் வெள்ள நிவாரணம், கல்வி நிதி , 100 நாள் வேலைக்கான நிதி ஆகியவற்றை ஒதுக்காமல் தமிழ்நாட்டு மக்களை வாட்டி வதைத்துவரும் பாஜக அரசோடு மறைமுகக் கூட்டணி வைத்துக் கொண்டு , ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து ஒரு வார்த்தையாவது பேச முடியாமல் வாய் மூடி இருப்பது ஏன்?
தனது இயலாமையை மறைக்கவே மக்களின் நலனில் அக்கறை கொண்டு அனுதினமும் செயல்பட்டுவரும் திராவிட மாடல் ஆட்சியின் மீது அவதூறு பரப்புவதையே அவர் வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்" என்று பதிவிட்டுள்ளார்.
- மாணவர்களிடம் கலந்துரையாடிய அமைச்சர் தங்கம் தென்னரசு, அவர்களது பெயர், ஊர், பள்ளி வகுப்பு விவரங்களை கேட்டறிந்தார்.
- சிறுவனின் தோளில் கை போட்டவாறு சிறிது தூரம் நடந்து வந்து நன்றாக படிக்க வேண்டும் என அமைச்சர் அறிவுறுத்தினார்.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகேயுள்ள பி.புதுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் புதியதாக ஆய்வக கட்டிடம் கட்டும் பணிகளை தமிழ்நாடு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பள்ளி மாணவிகளின் கையால் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து, மாணவர்களிடம் கலந்துரையாடிய அமைச்சர் தங்கம் தென்னரசு, அவர்களது பெயர், ஊர், பள்ளி வகுப்பு விவரங்களை கேட்டறிந்தார். அப்போது ஆத்திகுளத்தைச் சேர்ந்த சக்திகாளியம்மன் என்ற மாணவியிடம் பேசிய அமைச்சர் பள்ளிக்கு எவ்வாறு வருகிறார் என்பது குறித்து உரையாடினார். அவரது அருகில் வந்த சிறுவன் அன்புக்கரசு, 'நானும் ஆத்திகுளத்தில் இருந்து நடந்து தான் சார் பள்ளிக்கு வரேன் பஸ் வரவில்லை' என்று தெரிவித்தார்.
அந்த சிறுவனின் பெயரை கேட்ட அமைச்சர் அன்புக்கரசு என்று சொன்னவுடன், 'உன்னுடைய அன்புக்கு கட்டுப்பட்டு உங்க ஊருக்கு பஸ் விடுறேன். முதல் பஸ் விட்டதும் உன்னை தான் முதலில் ஏற்றி விடுவோம்' என்று கலகலப்பாக பேசினார்.
பின்னர், சிறுவனின் தோளில் கை போட்டவாறு சிறிது தூரம் நடந்து வந்து நன்றாக படிக்க வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுறுத்தினார். அதேபோல், அருகில் இருந்த மாணவி ஒருவர் கைகளை கட்டிக்கொண்டு பேசியதை பார்த்த அமைச்சர், கையை கட்ட வேண்டாம் எனக்கூறி இயல்பாக உரையாடினார்.
- பட்ஜெட்டில் பீகாருக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டது
- பட்ஜெட்டில் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு எந்த புதிய திட்டமும் அறிவிக்கப்படவில்லை.
2025-26-ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 8வது முறையாக நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
பீகாரில் இந்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அம்மாநிலத்திற்கு பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. அதே சமயம் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு எந்த புதிய திட்டமும் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் பட்ஜெட்டை விமர்சித்து தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது எக்ஸ் பதிவில், "நாட்டின் வளர்ச்சியில் தொடர்ந்து முக்கியப் பங்காற்றி வரும் மாநிலமான தமிழ்நாட்டிற்கு, ஒன்றிய பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. தமிழ்நாட்டின் பங்களிப்பிற்கு அங்கீகாரம் இல்லை. குறைந்த பங்களிப்பு செய்யும் மாநிலங்கள் அதிக ஆதாயம் அடைந்துள்ளன" என்று பதிவிட்டுள்ளார்.
- தங்கத்தின் சிறு பகுதி ஒன்றும் கண்டறியப்பட்டுள்ளது.
- புதிய கண்டுபிடிப்புகள் இங்கு வாழ்ந்த மக்கள் செழிப்பான வாழ்க்கை முறையைக் கொண்டிருந்ததை உணர்த்துகிறது.
சென்னை:
நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-
"பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்
கட்டுநுண் வினைஞர் காருகர் இருக்கையும்" என்றுரைக்கிறது சிலப்பதிகாரம்.
பழந்தமிழர்கள் ஆடையானது பட்டு, மயிர், பருத்தி ஆகிய இம்மூன்றினாலும் நெய்யப்பட்டதாக உணர்த்துகிறது இந்தப்பாடல்.

ஆடை நெய்யும் தொழிலான நெசவுக்கு பழந்தமிழர்கள் பயன்படுத்திய 'எலும்பு முனைக் கருவி', புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் நடந்து வரும் அகழாய்வில் 192-196 செ.மீ ஆழத்தில், 7.8 கிராம் எடையுடன், 7.4 செ.மீ நீளம் மற்றும் 1 செ.மீ விட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், உடைந்த தங்கத்தின் சிறு பகுதி ஒன்றும் கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே இதே இடத்தில் தங்கம் கண்டறியப்பட்டுள்ள நிலையில், புதிய கண்டுபிடிப்புகள் இங்கு வாழ்ந்த மக்கள் செழிப்பான வாழ்க்கை முறையைக் கொண்டிருந்ததை உணர்த்துகிறது. பழந்தமிழர்களின் வரலாற்றைப் பறைசாற்றும் இந்த புதிய கண்டுபிடிப்புகள் பெருமகிழ்வைத் தந்துள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.