என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vijayakanth"

    • தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
    • தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரை துரிதமாக அகற்றப்பட்டது.

    சென்னை :

    தே.மு.தி.க. நிறுவனத்தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சென்னை மாநகராட்சியின் தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரை துரிதமாக அகற்றிய தமிழக அரசுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டிய உடனே மக்கள் பாதிக்கப்படாதவாறு மழைநீரை உடனடியாக அகற்றிய தமிழக அரசுக்கும், மாநகராட்சிக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லாத நிலையில் அவரது மனைவி பிரேமலதாவே தற்போது கட்சியை வழி நடத்தி வருகிறார்.
    • தொடர் தோல்விகளால் கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும் சோர்ந்து போய் பல்வேறு கட்சிகளுக்கும் ஓட்டம் பிடித்துவிட்டனர்.

    சென்னை :

    சினிமாவில் மட்டுமல்ல அரசியலிலும் அதிரடி காட்டியவர் விஜயகாந்த். கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களுக்கு எதிராக அரசியல் களத்தில் கலக்கிய விஜயகாந்த், கட்சி தொடங்கிய ஓராண்டிலேயே 2006-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டார். விருத்தாசலம் தொகுதியில் விஜயகாந்த் வெற்றியை ருசித்த நிலையில் தே.மு.தி.க வேட்பாளர்கள் யாரும் எதிர்பாராத வகையில் கணிசமான வாக்குகளை அள்ளினார்கள்.

    முதல் தேர்தலிலேயே (2006-ம் ஆண்டு) 10 சதவீத வாக்குகளை பெற்ற தே.மு.தி.க. பின்னர் நடந்த பாராளுமன்ற தேர்தலையும் (2009-ம் ஆண்டில்) தனித்தே சந்தித்தார். இந்த தேர்தலிலும் தே.மு.தி.க. பெருவாரியான ஓட்டுகளை பெற்றது. 9-ல் இருந்து 10 சதவீத ஓட்டுகள் இந்த தேர்தலிலும் கிடைத்தன.

    இப்படி சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களில் தனித்து போட்டியிட்டு பலத்தை காட்டிய விஜயகாந்த் யாருடனும் கூட்டணி அமைக்க மாட்டேன். மக்களுடன் தான் எனது கூட்டணி என்றே கூறி வந்தார். ஆனால் 2011-ம் ஆண்டு முதல்முறையாக விஜயகாந்தும் கூட்டணி அரசியலுக்குள் தன்னை புகுத்திக்கொண்டார்.

    அ.தி.மு.க. கூட்டணியில் 41 தொகுதிகளில் போட்டியிட்ட தே.மு.தி.க 29 தொகுதிகளில் வெற்றிபெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை எட்டிப்பிடித்தது. இப்படி 3 தேர்தல்களில் வெற்றிக் கொடியை நாட்டிய தே.மு.தி.க.வுக்கு 2016-ல் இருந்து இறங்கு முகமே. முதல்- அமைச்சர் ஆசையுடன் மக்கள் நல கூட்டணியில் போய் சேர்ந்தார் விஜயகாந்த். ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட மோதலால் தி.மு.க. கூட்டணியிலேயே விஜயகாந்த் சேருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விஜயகாந்தின் இந்த முடிவு மீண்டும் அ.தி.மு.க.வுக்கே சாதகமாக அமைந்தது.

    ஜெயலலிதா மீண்டும் ஆட்சியில் அமர்ந்தார். இந்த தேர்தலில் விஜயகாந்தின் ஓட்டு சதவீதம் 2.4 சதவீதமாக சரிந்தது. பாராளுமன்ற தேர்தலை பொறுத்தவரையில் இதுவரை தே.மு.தி.க 3 தேர்தல்களை சந்தித்துள்ளது.

    2009-ல் தனித்து போட்டியிட்டு பலத்தை காட்டிய நிலையில் 2014-ம் ஆண்டு பாரதிய ஜனதா கூட்டணியில் 14 தொகுதிகளில் போட்டியிட்ட தே.மு.தி.க.வுக்கு தோல்வியே கிடைத்தது. 2019-ல் நடந்த பாராளுமன்ற தேர்தலிலும் தோற்ற தே.மு.தி.க கடந்த சட்டமன்ற தேர்தலிலும் தோற்றுப்போனது.

    இப்படி தொடர்ச்சியாக 4 தேர்தல்களில் மண்ணை கவ்விய தே.மு.தி.க., 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற்று தங்களது எம்.பி. கணக்கை தொடங்க திட்டமிட்டுள்ளது.

    விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லாத நிலையில் அவரது மனைவி பிரேமலதாவே தற்போது கட்சியை வழி நடத்தி வருகிறார். தொடர் தோல்விகளால் கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும் சோர்ந்து போய் பல்வேறு கட்சிகளுக்கும் ஓட்டம் பிடித்துவிட்டனர். ஆனாலும் மனம் தளராத பிரேமலதா, தே.மு.தி.க. மக்கள் செல்வாக்குடனேயே உள்ளது.

    எந்த நோக்கத்துக்காக அது தொடங்கப்பட்டதோ அந்த இடத்தை அடைந்தே தீரும் என்று தொடர்ந்து மேடைகள் தோறும் முழங்கி கொண்டிருக்கிறார். 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று அடித்து கூறுகிறார் தே.மு.தி.க. மூத்த நிர்வாகி ஒருவர்.

    தற்போதைய சூழலில் தே.மு.தி.க.வை கூட்டணியில் சேர்த்துக்கொள்வது என்பதே பெரிய விசயமாக உள்ளதே?

    கட்சிக்குள் பழைய உற்சாகம் இல்லையே?

    இப்படி இருக்கும் போது பாராளுமன்ற தேர்தலில் கூட்டணியாக இருந்தாலும் வெற்றிபெறுவது சாத்தியமா? என்பது போன்ற கேள்விகளை அவரிடம் முன்வைத்தோம். இதற்கு பதில் அளித்து அந்த நிர்வாகி கூறியதாவது:-

    தே.மு.தி.க.வில் தற்போதுதான் உள்கட்சி தேர்தலை நடத்தி முடித்துள்ளோம். கட்சியை கீழ்மட்டத்தில் வலுப்படுத்தும் எண்ணத்திலேயே அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    இதன்மூலம் தே.மு.தி.க.வுக்கு புதுரத்தம் பாய்ச்சப்பட்டுள்ளது. கட்சியின் பொருளாளரான பிரேமலதா, கேப்டனையும் கவனித்துக்கொண்டு கட்சியை சரியான திசையில் வழி நடத்தி சென்று கொண்டிருக்கிறார். இளைய கேப்டன் என்று அழைக்கப்படும் தலைவரின் மகன் விஜய பிரபாகரன் எந்த பொறுப்பிலும் இல்லாத நிலையில் இளைஞர்களை கவரும் வகையில் செயல்பட்டு வருகிறார். கட்சியினரின் இல்ல நிகழ்ச்சிகள் எதுவாக இருந்தாலும் தவறாமல் பங்கேற்கும் விஜய பிரபாகரனும் கட்சியை வளர்த்தெடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார்.

    கேப்டன் ஆசைப்பட்டபடி தே.மு.தி.க.வை ஆட்சி கட்டிலில் அமரச் செய்துவிட வேண்டும் என்பதில் பிரேமலதாவும், விஜய பிரபாகரனும் உறுதியாக உள்ளனர். சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் தே.மு.தி.க. இதுவரை பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்றதே இல்லை.

    வருகிற 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் இந்த வரலாற்றை மாற்றி எழுத வேண்டும் என்பதில் கட்சியின் முன்னணி நிர்வாகிகளும் தீவிரமாக உள்ளனர். வருகிற பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. வெற்றிபெறும் கூட்டணியில் இடம்பெறும். கூட்டணி பலத்துடன் தே.மு.தி.க. வெற்றிபெற்று பாராளு மன்றத்துக்குள் முதல் முறையாக காலடி எடுத்துவைக்கும். இதில் எந்தவித மாற்றமும் இல்லை.

    இவ்வாறு நம்பிக்கையுடன் பேசிய தே.மு.தி.க. நிர்வாகி, விஜயகாந்தின் உடல்நிலையை தேர்தலுக்குள் சரிசெய்து அவரை பிரசார களத்தில் இறக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இது சாத்தியமா? என்கிற கேள்விக்கும் அவர் பதில் அளித்தார்.

    விஜயகாந்துக்கு பேச்சு சரியாக வரவில்லை. நிற்பதற்கும் முடியவில்லை. இந்த இரண்டு பிரச்சினைகளையும் தேர்தலுக்குள் சரிசெய்துவிட முடியும் என்று குடும்பத்தினர் நம்புகின்றனர். தே.மு.தி.க. தொண்டர்களும் அந்த நாளுக்காகவே காத்திருக்கிறார்கள். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அது கட்சியினருக்கு மட்டுமல்ல, தமிழக மக்களுக்கும் நன்மை பயப்பதாகவே இருக்கும் என்றார்.

    பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. பெறப்போகும் வெற்றி எங்கள் கட்சிக்கு 2-வது வெற்றி இன்னிங்சாக இருக்கும் என்றே தே.மு.தி.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் மிகுந்த நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள். அதேநேரத்தில் அரசியல் நோக்கர்களோ... தே.மு.தி.க. இனி தேறுமா? என்பது சந்தேகம்தான் என்கிறார்கள்.

    விஜயகாந்தின் உடல்நிலை தொடர்ந்து சரியாக இல்லாத நிலையில் அந்த கட்சி எந்த திசையை நோக்கி பயணிக்கிறது என்பதே தெரியவில்லை. திசை தெரியாமல் நடுக்கடலில் தத்தளிக்கும் கப்பல் போலவே அந்த கட்சி உள்ளது. அது கரை சேருமா? என்பது மிகப்பெரிய கேள்வியாகவே உள்ளது என்றே அவர்கள் கூறுகிறார்கள்.

    தொடர் தோல்விகளால் தள்ளாடிக் கொண்டிருக்கும் தே.மு.தி.க.வுக்கு வருகிற பாராளுமன்ற தேர்தல் களம் மிகவும் கடினமானதாகவே இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தே இருக்க முடியாது என்பதும் அரசியல் நோக்கர்களின் கணிப்பாக உள்ளது.

    காமெடி நடிகர் விவேக் பாணியில் சொல்ல வேண்டும் என்றால் 'எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்' என்று சொல்லிக்கொள்ளும் நிலையிலேயே தே.மு.தி.க. உள்ளது என்பதே தற்போதைய சூழலில் மறுக்க முடியாத உண்மையாகும்.

    • கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 21 பொருட்களுடன் ரூ.2,500 ரொக்கமும் பொங்கல் பரிசாக வழங்கப்பட்டது.
    • தற்போது பொங்கல் பொருட்கள் குறைக்கப்பட்டதுடன், ரொக்கமும் குறைவாக அறிவித்திருப்பது ஏழை, எளிய மக்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னை:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கடந்த 2021-ல் அ.தி.மு.க. ஆட்சியின் போது அரிசி, வெல்லம், கரும்பு என 21 பொருட்களுடன் ரூ.2,500 பரிசு வழங்கப்பட்டது. ஆனால் 2022-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் பொங்கல் பரிசு தொகுப்பாக பச்சரிசி, வெல்லம், நெய், கரும்பு உள்ளிட்ட 21 பொருட்கள் மட்டுமே வழங்கப்பட்டன. பொங்கல் பரிசில் ரொக்கப் பணம் இல்லை.

    பொங்கலுக்கு வழங்கப்பட்ட பொருட்களின் தரம் குறித்து விமர்சனங்களும் அப்போது எழுந்தன. இந்த நிலையில் 2023-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ரொக்கமும், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரையும் வழங்கப்படும் என தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது. மேலும் பொங்கல் பரிசில் கரும்பு உள்ளிட்ட பொருட்கள் இடம்பெறவில்லை.

    அறிவிக்கப்பட்ட ரொக்கப் பணமும் குறைவாக உள்ளது. ஏற்கனவே சொத்து வரி, மின் கட்டணம், விலைவாசி உயர்வால் மக்கள் பல்வேறு துயரங்களை சந்தித்து வரும் நிலையில் பொங்கல் பரிசாக ரூ.1000 மட்டும் வழங்கப்படும் என அறிவித்திருப்பதை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை.

    கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 21 பொருட்களுடன் ரூ.2,500 ரொக்கமும் பொங்கல் பரிசாக வழங்கப்பட்டது. தற்போது பொங்கல் பொருட்கள் குறைக்கப்பட்டதுடன், ரொக்கமும் குறைவாக அறிவித்திருப்பது ஏழை, எளிய மக்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

    எனவே தமிழக அரசு மறு பரிசீலனை செய்து, தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளை, தமிழக மக்கள் அனைவரும் மனநிறைவோடு சிறப்பாக கொண்டாடும் வகையில் கடந்த ஆட்சியில் வழங்கிய குறைந்தபட்சம் ரூ.2,500 உயர்த்தி வழங்கிட வேண்டும்.

    பொங்கல் பரிசில் கரும்பு இடம்பெறாததை கண்டித்து தமிழக விவசாயிகள் ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகள் விளைவித்த செங்கரும்பை அரசு கொள்முதல் செய்து, பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பும் வழங்கி விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் இந்த பொங்கல் தித்திக்கும் பொங்கலாக அமைய இந்த அரசு நல்ல அறிவிப்பை வெளியிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த்தின் ரசிகர்களுக்கு புத்தாண்டை வாழ்த்து தெரிவித்தார்.
    • விஜயகாந்ததை பார்த்ததும் ரசிகர்கள் ஆரவாரம் எழுப்பினர்.

    உலகம் முழுவதும் இன்று புத்தாண்டு தினத்தை கொண்டாடி வருகின்றனர். பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், ஒருவருக்கொருவர் வாழ்த்து பகிர்ந்தும் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த்தின் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் புத்தாண்டை முன்னிட்டு அவரின் கட்சி தலைமை அலுவலகத்தில் காத்திருந்தனர்.

    விஜயகாந்த்

    விஜயகாந்த்

     

    இந்நிலையில் விஜயகாந்த் தொண்டர்களை சந்தித்து கையசைத்து புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார். சென்னை கோயம்பேடில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் தொண்டர்களை சந்தித்து கையசைத்து புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார். விஜயகாந்ததை பார்த்ததும் தொண்டர்கள் ஆரவாரம் எழுப்பினர். நீண்ட நாட்களுக்கு பிறகு விஜயகாந்த் தொண்டர்களை சந்தித்தார். இதற்கு முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி விஜயகாந்த் தொண்டர்களை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கவர்னரின் கருத்துக்கு தே.மு.தி.க. தனது எதிர்ப்பை தெரிவிக்கிறது.
    • மக்கள் ஐ.டி. எடுப்பதை மக்களிடம் கருத்து கேட்டு பின்னர் எடுக்க வேண்டும்.

    மதுரை:

    சிவகாசி, ராஜபாளையம் பகுதிகளில் நடைபெறும் தே.மு.தி.க. நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கட்சியின் பொருளாளர் பிரேமலதா இன்று மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகம் என்பதும் தமிழ்நாடு என்பதும் ஒன்றுதான். தமிழைப் பற்றி கவர்னருக்கு என்ன தெரியும்? ஏதோ 5 ஆண்டுகள் தமிழகத்தில் கவர்னராக இருப்பதால் அவருக்கு தமிழைப் பற்றி என்ன தெரியும்? கவர்னரின் கருத்துக்கு தே.மு.தி.க. தனது எதிர்ப்பை தெரிவிக்கிறது.

    மக்கள் ஐ.டி. எடுப்பதை மக்களிடம் கருத்து கேட்டு பின்னர் எடுக்க வேண்டும். ஆதார் மூலம் அனைத்து சலுகைகளும் மக்களிடம் சென்றடைகிறது. இந்த நிலையில் மக்கள் ஐ.டி. தேவையில்லை.

    முதலில் வெளிமாநிலத்தில் இருந்து எத்தனை பேர் இங்கே வேலை செய்கிறார்கள்? என்பதை அறிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாநிலமும் தனித்தனி ஐ.டி. எடுத்தால் என்ன ஆவது? இந்த திட்டத்தை நாங்கள் எதிர்க்கிறோம்.

    பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் அதிக நாட்கள் இருக்கிறது. அப்போது கூட்டணி பற்றி முடிவு செய்வோம். தற்போது தே.மு.தி.க. உட்கட்சி தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அது நிறைவு பெற்றதும் கட்சியின் செயற்குழு-பொதுக்குழு கூட்டம் நடத்தி பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்து கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவிப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக ஓ.பி.எஸ். முக்கிய முடிவுகளை வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
    • ஈரோட்டில் உள்ள அனைத்து சட்டமன்ற நிர்வாகிகளையும் கமல் சென்னைக்கு அழைத்து உள்ளார்.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தி.மு.க. கூட்டணியில் களம் இறங்கும் காங்கிரசை எதிர்த்து அ.தி.மு.க. போட்டியிடும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளுமே தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளன.

    அ.தி.மு.க.வில் இருந்து நீக்கி வைக்கப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக தானே நீடிப்பதாக கூறிக்கொண்டு நிர்வாகிகளையும் அவர் நியமித்துள்ளார்.

    ஈரோடு கிழக்கு தொகுதியில் எந்த மாதிரியான நிலைப்பாட்டை எடுப்பது என்பதில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தெளிவான முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். கொங்குமண்டலத்துக்குட்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதி எடப்பாடி பழனிசாமிக்கு செல்வாக்கு மிக்க தொகுதியாகவே கருதப்படுகிறது.

    2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் காங்கிரசிடம் சுமார் 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலேயே அ.தி.மு.க. தோற்றுப்போய் இருந்தது. இதனால் இந்த முறை எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்கிற எண்ணத்தில் எடப்பாடி அணி களம் இறங்கி உள்ளது.

    அதற்கு பதிலடி கொடுக்க ஓ.பி.எஸ். அணியினர் திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பாக அ.தி.மு.க. தலைமை கழகம் என்கிற பெயரில் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் வருகிற 23-ந்தேதி ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்கும் இந்த கூட்டத்தில் ஓ.பி.எஸ். பங்கேற்று முக்கிய ஆலோசனையில் ஈடுபடுகிறார்.

    வருகிற 23-ந்தேதி மாலை 6 மணி அளவில் எழும்பூர் அசோகா ஓட்டலில் நடைபெறும் இந்த கூட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் எந்த மாதிரியான முடிவை எடுப்பது? என்பது பற்றி விரிவாக ஆலோசிக்கப்படுகிறது. இதில் ஈரோடு மாவட்ட நிர்வாகிகளும் பங்கேற்கிறார்கள்.

    இதன் பின்னர் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக ஓ.பி.எஸ். முக்கிய முடிவுகளை வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    எந்த கூட்டணியிலும் இல்லாமல் தனியாக உள்ள தே.மு.தி.க.வும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக வருகிற 23-ந்தேதி முக்கிய ஆலோசனையை நடத்துகிறது. அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.

    கடந்த சட்டமன்ற தேர்தலின்போது சீட் விவகாரத்தில் ஏற்பட்ட மோதலால் கடைசி நேரத்தில் அ.தி.மு.க. கூட்டணியை விட்டு வெளியேறிய தே.மு.தி.க. வேறு வழியின்றி டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க.வுடன் கூட்டணி அமைத்து படுதோல்வியை சந்தித்தது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் எந்த கூட்டணியில் இடம்பெறுவது என்று அந்த கட்சி முடிவு எதையும் எடுக்காமல் இருக்கும் நிலையில்தான் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

    இதனால் தனித்து போட்டியிடுவதா? பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்து தாங்கள் விரும்பும் கூட்டணிக்கு இப்போதே ஆதரவை தெரிவிப்பதா? என்கிற குழப்பமான மனநிலையில் தே.மு.தி.க. உள்ளது. இதுபற்றி விரிவாக ஆலோசித்து பிரேமலதா முடிவை அறிவிக்க உள்ளார்.

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி இடம்பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கும் நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரசை எதிர்த்து களம் இறங்க வேண்டுமா? என்கிற கேள்வியும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தர்மசங்கடமான சூழலை ஏற்படுத்தி உள்ளது.

    இதனால் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடலாமா? வேண்டாமா? என்பது பற்றி முடிவு எடுப்பதற்காக கமல்ஹாசன் ஆலோசனை கூட்டத்தை கூட்டியுள்ளார்.

    இது தொடர்பாக ஆலோசிக்க ஈரோட்டில் உள்ள அனைத்து சட்டமன்ற நிர்வாகிகளையும் கமல் சென்னைக்கு அழைத்து உள்ளார். 23-ந்தேதி அன்று காலை 11.30 மணி அளவில் நடைபெறும் கூட்டம் தொடர்பாக அக்கட்சியின் துணை தலைவர்கள் மவுரியா, தங்கவேலு ஆகியோர் அறிவிப்பு வெளியிட உள்ளனர்.

    இந்த கூட்டத்தில் அந்தியூர், பவானி, பவானி சாகர், கோபிச்செட்டிபாளையம், மொடக்குறிச்சி, ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, பெருந்துறை ஆகிய 8 சட்டமன்ற தொகுதியை சேர்ந்த மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

    இந்த கூட்டத்துக்கு பின்னர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முடிவு என்ன? என்பது பற்றி அறிவிக்கப்பட உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி 10 ஆயிரம் ஓட்டுகளை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் எஸ்.ஆனந்த் போட்டியிடுகிறார்.
    • கூட்டத்திற்கு தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள், மாவட்ட கழக செயலாளர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.

    சென்னை:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு தே.மு.தி.க. சார்பில் போட்டியிடும் எஸ்.ஆனந்தை அறிமுகம் செய்வது மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் ஈரோடு ஸ்ரீஜனனி திருமண மண்டபத்தில் வருகிற 1-ந்தேதி (புதன்கிழமை) மாலை 4 மணி அளவில் நடைபெற உள்ளது.

    இந்த கூட்டத்திற்கு தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள், மாவட்ட கழக செயலாளர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் தற்போது ‘நான் கடவுள் இல்லை’ திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
    • இப்படம் வருகிற பிப்ரவரி 3-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    பிரபல இயக்குனரும் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் 1981-ஆம் ஆண்டு வெளிவந்த 'சட்டம் ஒரு இருட்டறை' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் படங்களை இயக்கியுள்ளார். இவரின் பெரும்பாலான படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.


    விஜயகாந்தை நேரில் சந்தித்த எஸ்.ஏ.சந்திரசேகர்

    தற்போது இவர் இயக்கத்தில் 'நான் கடவுள் இல்லை' என்ற படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் சமுத்திரக்கனி, இனியா, சாக்ஷி அகர்வால், சரவணன்,ரோகிணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற பிப்ரவரி 3-ஆம் தேதி வெளியாகவுள்ளது.


    விஜயகாந்தை நேரில் சந்தித்த எஸ்.ஏ.சந்திரசேகர்

    இந்நிலையில், இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் நடிகரும் தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்தை நேரில் சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து 'என் உயிரை நான் சந்தித்த போது' என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது கவனம் ஈர்த்து வருகிறது.


    • சுட்டுக்கொல்லப்பட்ட மீனவர் ராஜாவின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாயை தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருப்பது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல.
    • உயிரிழந்தவரின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும், 25 லட்சம் ரூபாய் இழப்பீடும் வழங்க வேண்டும்.

    சென்னை:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு கர்நாடக எல்லையில் அடிப்பாலாறு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சேலம் மாவட்டம் கொளத்தூர் காரைக்காடு பகுதியைச் சேர்ந்த ராஜா என்ற மீனவரை கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்துள்ளனர்.

    மேலும் இது போன்ற சம்பவம் இனிமேல் நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர் ராஜாவின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாயை தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருப்பது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல. உயிரிழந்தவரின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும், 25 லட்சம் ரூபாய் இழப்பீடும் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஆண்டு தோறும் கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் மக்களுக்கு உதவிட, தண்ணீர் பந்தல்கள் அமைத்து தங்களால் இயன்ற அளவிற்கு உதவுவது வழக்கம்.
    • தண்ணீர் பந்தல்கள் அமைத்து அதில் குடிநீர், நீர்மோர், இளநீர், குளிர்பானம், தர்பூசணி போன்றவைகளை பொதுமக்களுக்கு வழங்கி அவர்களின் தாகத்தை தணிக்க வேண்டும்.

    சென்னை:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கோடைகாலம் தொடங்கி இருக்கும் நிலையில் இந்த ஆண்டு ஆரம்பத்திலேயே வெயிலின் அளவு அதிகரித்துள்ளது. எனவே தமிழக மக்கள் இந்த கோடைகாலத்தை சமாளிப்பதற்கு தே.மு.தி.க. சார்பில் நம்மால் இயன்ற உதவிகளை செய்திட வேண்டும்.

    ஆண்டு தோறும் நம்முடைய கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் மக்களுக்கு உதவிட, தண்ணீர் பந்தல்கள் அமைத்து தங்களால் இயன்ற அளவிற்கு உதவுவது வழக்கம். அதே போல் வருகிற 5-ந்தேதி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டம், ஒன்றியம், நகரம், பகுதி, பேரூராட்சி, வட்டம், ஊராட்சி ஆகிய இடங்களில் தண்ணீர் பந்தல்கள் அமைத்து அதில் குடிநீர், நீர்மோர், இளநீர், குளிர்பானம், தர்பூசணி போன்றவைகளை பொதுமக்களுக்கு வழங்கி அவர்களின் தாகத்தை தணிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் மலேசியாவில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று 5 தங்கப் பதக்கங்களை வென்றார்.
    • இவருக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'அலைபாயுதே' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகர் மாதவன். இதைத்தொடர்ந்து 'மின்னலே', 'டும் டும் டும்', போன்ற பல படங்கள் நடித்ததன் மூலம் தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் இந்தி படங்களிலும் நடித்து புகழ் பெற்றார்.


    வேதாந்த்

    சமீபத்தில் 'ராக்கெட்ரி - நம்பி விளைவு' திரைப்படத்தை இயக்கி நடித்திருந்தார். பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் மாதவனின் தன் மகன் வேதாந்த் செய்யும் சாதனைகளை தனது சமூக வலைதளத்தில் அடிக்கடி பதிவிட்டு வருகிறார்

    சமீபத்தில் வேதாந்த் மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற Malaysia Invitational Age Group Swimming Championship போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்று 5 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளதாக மாதவன் தனது இணையப் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து தெரிவித்திருந்தார். இவருக்கு திரைப்பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


    விஜயகாந்த் பதிவு

    இந்நிலையில், வேதாந்திற்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் விஜயகாந்த் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "மலேசியாவில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் பங்கேற்ற நடிகர் மாதவனின் , 17 வயது மகன் வேதாந்த் 50, 100, 200, 400 & 1500 மீட்டர் ஆகிய பிரிவுகளில் பங்கேற்று வெற்றி பெற்று, 5 தங்கங்களை வென்றுள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் ஒலிம்பிக் உள்ளிட்ட உலக அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்கள் வென்று தமிழகத்திற்கும் இந்திய நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று எனது பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் மனப்பூர்வமாக தெரிவித்துக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.


    • மணிப்பூர் மக்களுக்கு பாதுகாப்பு கொடுத்து தவறு செய்தவர்களை கண்டறிந்து, கைது செய்து உரியவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.
    • விலைவாசி உயர்வை கட்டுபடுத்தி, ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த விலையில் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னை:

    தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் இன்று காலை நடந்தது.

    கூட்டத்திற்கு கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கு கூட்டணி, கட்சியின் வளர்ச்சி பணிகள், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து பிரேமலதா நிருபர்களிடம் கூறியதாவது:-

    தே.மு.தி.க. இந்த நிமிடம் வரை யாருடனும் கூட்டணியில் இல்லை.

    கூட்டணி இல்லாததால் தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டத்துக்கு எங்களுக்கு அழைப்பு இல்லை.

    பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து விரைவில் தே.மு.தி.க. நிலைப்பாட்டை விஜயகாந்த் அறிவிப்பார். ஜெயலலிதா இருந்த போது அ.தி.மு.க. பாராளுமன்ற தேர்தலில் 40 இடங்களை பெற்றது. தி.மு.க. 38 இடங்களை பெற்றது.

    இத்தனை எம்.பி.க்கள் பெற்ற தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தமிழகத்துக்கு என்ன செய்தது என்பதுதான் தே.மு.தி.க.வின் கேள்வி. தமிழ்நாட்டுக்கு தேவையான திட்டங்களை இரண்டு கட்சிகளும் செய்து தரவில்லை.

    காட்சிகளும் ஆட்சிகளும் தான் மாறுகிறது. மக்களின் நிலைமை மாறவில்லை.

    விலைவாசி உயர்வு மக்களை வாட்டி வதைக்கிறது. தி.மு.க. தேர்தலுக்கு முன்பு ஒரு நிலைப்பாடு தேர்தலுக்கு பிறகு ஒரு நிலைப்பாட்டில் உள்ளது. மணிப்பூர் சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவுக்கே தலைகுனிவு என்றார்.

    இதனிடையே, விஜய்காந்த் அரசியலுக்கு வரும் முன்பு மாணவ மாணவிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அளித்தார். அதுபோல் விஜய்யும் தற்போது மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்டங்களை வழங்குகிறார். இதுகுறித்து உங்கள் கருத்து என்ன என்று நிருபர்கள் பிரேமலதாவிடம் கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது;-

    விஜயகாந்த் போல் யாரும் வர முடியாது. அவருடன் யாரையும் ஒப்பிட முடியாது. மக்களுக்கு அவரைப் போல் யாரும் சேவை செய்ய முடியாது.விஜய் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியதை வரவேற்கிறேன். அரசியல் வேறு, சினிமா வேறு... விஜயகாந்தைப் போல் விஜய் வர முடியாது. கேப்டன் மாதிரி என்று நினைத்தால் அதன் விளைவுகள் மோசமானதாக இருக்கும். அரசியலுக்கு வருவரா இல்லையா என்பது விஜய் தான் தெளிவுபடுத்தணும் என்று கூறினார்.

    முன்னதாக தே.மு.தி.க. மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    விஜயகாந்த் பிறந்த நாளான ஆகஸ்டு 25-ம் நாள் வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடும் வகையில், செப்டம்பர் 14-ம் நாள் துவக்க விழாவை எங்கும் கொண்டாடும் வகையிலும் கொடியேற்றி, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், வழங்கியும், மக்களின் நல் வாழ்விற்காக நலத்திட்ட உதவிகள் வழங்கியும் தே.மு.தி.க. நிர்வாகிகளும், தொண்டர்களும், முழுமையாக உழைத்திட வேண்டும்.

    மணிப்பூர் மக்களுக்கு பாதுகாப்பு கொடுத்து தவறு செய்தவர்களை கண்டறிந்து, கைது செய்து உரியவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.

    கர்நாடகாவில் இருந்து நமக்கு வரவேண்டிய 26.32 டி.எம்.சி. தண்ணீர் பெற்றுத் தராததால் டெல்டா மாவட்டங்கள் முழுவதும் 5 லட்சம் ஏக்கர் பயிர் காய்ந்து விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உடனடியாக மாநில அரசு இந்த பிரச்சினையில் தீர்வுக்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    விலைவாசி உயர்வை கட்டுபடுத்தி, ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த விலையில் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    திருச்சி மாவட்டம் துறையூர், கரூர், வேலூர் ஆகிய இடங்களில் நடக்கின்ற கனிமவள கொள்ளைகளை தடுக்க மத்திய அரசு தலையிட்டு மாநில அரசை உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கொள்ளைகளை தடுத்திட வேண்டும்.

    அறிவியல் கலை கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கும் ஊக்கத் தொகை மற்றும் சலுகைகளை வழங்கி ஏழை, எளிய குடும்பங்கள் பயன்பெறும் வகையில் தமிழக அரசு உதவி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொன்னது போல தி.மு.க. அரசு அனைத்து பெண்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    ×