என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிவாஜி"

    • முனைவர் மருது மோகன் எழுதிய சிவாஜி கணேசன் பற்றிய நூல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.
    • இந்நிகழ்ச்சியில் இளையராஜா, பாரதிராஜா, பாக்யராஜ், கவிஞர் முத்துலிங்கம், ராம்குமார், பிரபு, முனைவர் மருது மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    முனைவர் மருது மோகன் எழுதிய சிவாஜி கணேசன் பற்றிய நூல் வெளியீட்டு விழா சென்னையில், நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இளையராஜா, பாரதிராஜா, பாக்யராஜ், கவிஞர் முத்துலிங்கம், ராம்குமார், பிரபு, முனைவர் மருது மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்த விழாவில் கலந்து கொண்ட இளையராஜா பேசியதாவது, சிவாஜி அவர்களிடம் நான் கற்றுக்கொண்ட விஷயங்களில் ஒன்று நேரம் தவறாமை. இன்றுவரைக்கும் என்னுடைய ஸ்டுடியோவில் என் கார் சரியாக ஏழு மணிக்கு நுழைந்து விடும். ஒரு நாள் நான் தாமதமாக வந்து விட்டேன். என்ன ராசா நீயுமா லேட்டு என்று கேட்டார். இல்லண்ணே நான் சரியாகத்தான் வந்தேன். நீங்க முன்கூட்டியே வந்து விட்டீங்க என்றேன்.

     

    உண்மையில் நான் தாமதமாக வரவில்லை. நான் சரியான நேரத்திற்குத் தான் வந்திருந்தேன். அவர் தான் சீக்கிரம் வந்துவிட்டார். ரிக்கார்டிங்கில் உள்ளே வந்து அவருடைய அனுபவங்களை எல்லாம் சொல்லிக் கொண்டிருப்பார். அதையெல்லாம் கேட்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

     

    ஒருமுறை திரையுலகம் சார்பில் சிவாஜிக்குப் பாராட்டு விழா நடத்தப்பட்டது. அதில் சிவாஜிக்கு ஒரு பரிசு கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதற்காக வசூல் செய்யப்பட்டது. இன்று இருக்கும் நடிகர்கள் சாப்பிடும் சாப்பாட்டில் ஒவ்வொரு அரிசியிலும் சிவாஜியின் பெயர் இருக்கிறது. அவருக்குக் கொடுக்கப்படும் பரிசில் யார் பெயரும் இருக்கக்கூடாது அதற்கு ஆகும் முழு பணத்தையும் நான் கொடுத்துவிடுகிறேன்.

    இளையராஜா

    இளையராஜா

     

    அதனைத் தெரிந்து கொண்ட சிவாஜி, யாரை மறந்தாலும் இளையராஜாவை மறக்கக் கூடாது என என்னிடம் தெரிவித்தார். அவருக்கான மரியாதையை இந்த சினிமாவோ, அரசோ செய்யவில்லை. ஆனால் தனிப்பட்ட ஒருவன் செய்து விட்டான் என்றால் அது இளையராஜா ஒருவன் தான். இவ்வாறு அவர் பேசினார்.

    • புகழ் பெற்ற மராட்டிய மன்னன் சிவாஜியும் இக்கோயிலுக்கு நன்கொடைகள் அளித்துள்ளான்.
    • இப்பகுதியில் உள்ள பிற சிவன் கோவில்களைப் போலவே இதன் கருவறையும் கீழ் மட்டத்தில் அமைந்துள்ளது.

    பீமாசங்கர் கோவில் புனேக்கு அருகில் உள்ள கெட் என்னும் இடத்திலிருந்து வடமேற்கில் 50 கிமீ தொலைவில் உள்ள போர்கிரி என்னும் ஊரில் உள்ளது. இது புனேயில் இருந்து 110 கிமீ தொலைவில் சாஹ்யாத்திரி குன்றுகளில் அமைந்துள்ளது. பீமாஸ்கந்தர் பகுதியிலிருந்தே பீமா ஆறு உருவாகின்றது. இது தென்கிழக்காகச் சென்று ராய்ச்சூருக்கு அருகில் கிருஷ்ணா ஆற்றுடன் கலக்கிறது. இது இந்தியாவிலுள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகும்.

    இக்கோயில், சிவன் வெல்லமுடியாத பறக்கும் கோட்டைகளான திரிபுரங்களை எரித்த புராணக்கதையுடன் தொடர்புள்ளது. இப்போருக்குப் பின் சிவனின் உடலிலிருந்து சிந்திய வியர்வையாலேயே பீமாராத்தி ஆறு உருவானது என்பது புராணக்கதை.

    பீமாசங்கரர் கோவில் புதியனவும் பழையனவுமான கட்டிடங்களின் கலவையாக உள்ளது. இக்கட்டிடங்கள் நாகரக் கட்டிடக்கலைப் பாணியில் அமைந்துள்ளன. மிதமான அளவுள்ள இக்கோவில் 18-ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கட்டப்பட்டது. இக்கோவிலின் சிகரம் நானா பட்னாவிஸ் என்பவனால் கட்டப்பட்டது.

    புகழ் பெற்ற மராட்டிய மன்னன் சிவாஜியும் இக்கோயிலுக்கு நன்கொடைகள் அளித்துள்ளான். இப்பகுதியில் உள்ள பிற சிவன் கோவில்களைப் போலவே இதன் கருவறையும் கீழ் மட்டத்தில் அமைந்துள்ளது. இக்கோவில் கட்டிடங்கள் ஒப்பீட்டளவில் புதியவையாக இருந்தாலும், பீமாசங்கரம் என்னும் இக்கோவில் 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தில் நாதஸ்வரம் வாசித்தவர்கள் எம்.பி.என்.சேதுராமன், பொன்னுசாமி சகோதரர்கள் ஆவார்கள்.
    • 9 வயதில் பொன்னுசாமி தனது இசைப் பயணத்தை தொடங்கினார்.

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன், பத்மினி நடிப்பில் கடந்த 1967-ம் ஆண்டு வெளியான தில்லானா மோகனாம்பாள் திரைப்படம் இசை உலகிற்கு புதிய அத்தியாயத்தை கொடுத்தது. நாதஸ்வரத்தை ரசிக்காதவர்கள் கூட இந்த படத்தின் காட்சிகளை பார்த்து அந்த இசையை தனக்குள் ஈர்த்து மெய்மறக்கும் அளவுக்கு சென்றனர்.

    இந்த திரைப்படத்தில் உண்மையாக நாதஸ்வரம் வாசித்தவர்கள் மதுரையைச் சேர்ந்த நாதஸ்வர வித்வான்களான எம்.பி.என்.சேதுராமன், பொன்னுசாமி சகோதரர்கள் ஆவார்கள். கழுத்து நரம்புகள் புடைக்க நாதஸ்வரத்தை இசைப்பது போன்று நடிகர் சிவாஜிகணேசன் நடித்தபோதிலும், அதன் பின்னணியில் இருந்தது இந்த இசை சகோதாரர்கள் என்பதை மறுக்கமுடியாது.


    9 வயதில் பொன்னுசாமி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நாதஸ்வரம் வாசித்து தனது இசைப் பயணத்தை தொடங்கினார். அவரது அண்ணன் சேதுராமன் தம்பியின் இசை ஆர்வத்தை உணர்ந்து தனது 11-வது வயதில் அவருடன் கைகோர்த்தார்.

    1977-ல் தமிழக அரசு இவருக்கு கலைமாமணி விருதை வழங்கி கவுரவித்தது. 1997-ல் கிருஷ்ண கான சபாவின் சங்கீதா சூடாமணி விருது, கர்நாடக மாநில அரசின் உயரிய விருதுகள் உள்ளிட்ட ஏராளமான விருதுகளை வாங்கி குவித்த இந்த இசை சகோதரர்களின் பயணம் தமிழகம் மட்டுமின்றி, மாநிலம் கடந்தும், நாடுகளை கடந்தும் ஒலிக்க தொடங்கியது. குறிப்பாக சிங்கப்பூர், மலேசியா, மாலத்தீவு, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இவர்களது நாதஸ்வர இசைக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்க முடியாது என்பதை பல முறை பறைசாற்றி உள்ளனர்.


    இதில் பொன்னுசாமி கடந்த சில ஆண்டுகளாக இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வந்தார். ஆனால் நாதஸ்வரத்தை மறக்கவில்லை. தினமும் ஒருமுறையாவது அந்த நாதஸ்வரத்தை தொட்டு வணங்கி தனது நாடிக்கமலத்தில் இருந்து வரும் காற்றுக்கு இசை உருவம் கொடுத்த ஒப்பற்ற கலைஞராக அனைவராலும் போற்றப்பட்டு வந்தார். இசை நுணுக்கங்களை தெளிவாக கற்று அதனை ரசிகர்களுக்கு விருந்தாக படைத்து வந்தார். தில்லானா மோகனாம்பாள் திரைப் படத்திற்கு பிறகு கோவில் புறா என்ற படத்திலும் இசைக் கலைஞராக நடித்திருந்தார். அதன்பிறகு திரைக்கு வரவில்லை.

    சமீப காலம் முதல் குறைந்த சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்த பொன்னுசாமி உரிய சிகிச்சையும் பெற்றார். இந்த நிலையில் நேற்று மதியம் அவர் தனது 91-வது வயதில் மதுரை விளாங்குடி விசாலாட்சி மின் காலனியில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். தில்லானா மோகனாம்பாள் படம் வெளியான பிறகு பிரபலங்கள் பலர் பங்கேற்ற விழாக்களில் நாதஸ்வரம் இசைக்கும் பணியை பொன்னுசாமி பெற்றுள்ளார். தலைமுறை தலைமுறையாக இவரது குடும்பத்தினர் நாதஸ்வரம் வாசித்து வந்துள்ளனர்.


    பொன்னுசாமி

    இவரது இழப்பு இசை உலகிற்கு பேரிழப்பு என்று கூறி பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். மறைந்த பொன்னுசாமிக்கு 3 மகன்கள், ஒரு மகள் உள்ளார். மகள் மதுரையில் உள்ள அரசு இசைக்கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார்.

    • எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற அவையின் மொத்த இடங்களில் 10 சதவீத தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும்.
    • நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் 328 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 99 தொகுதிகளில் வெற்றிபெற்றது.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சி கடந்த 10 ஆண்டாக பல தோல்விகளைச் சந்தித்து வந்தது. இதனால் நாடுமுழுவதும் காங்கிரஸ்காரர்கள் சோர்வில் இருந்தனர்.

    பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெறுவதற்கு அவையின் மொத்த இடங்களில் குறைந்தபட்சம் 10 சதவீத இடங்களில், அதாவது சுமார் 55 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும்.

    நடந்து முடிந்த 18-வது பாராளுமன்ற தேர்தலில் 328 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 99 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனால் அக்கட்சிக்கு பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைத்தது.


    இந்நிலையில், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரான ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், சத்ரபதி சிவாஜி மகாராஜ், மகாத்மா காந்தி, டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் ஆகியோரின் சிலைகள் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள முக்கிய இடங்களில் இருந்து அகற்றப்பட்டுள்ளன. இது கொடுமையானது என பதிவிட்டுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.

    • ஒரு பாடலை முதலில் பாடிவிட்டு அதற்கேற்ற மாதிரி வாயசைத்து நடிக்க வைப்பது பழக்கம்.
    • டி.எம்.எஸ். பாடும் போது இது சிவாஜி பாட்டு, இது எம்.ஜி.ஆர். பாடல் என்று நம்மால் சொல்லிவிட முடிகிறது.

    டி.எம்.சவுந்திரராஜன், "அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே" பாடலுக்காக மூச்சிரைப்புடன் கூடிய குரலுக்காக, ஒலிப்பதிவுக் கூடத்தை சுற்றிவிட்டு வந்து மூச்சிரைத்துக் கொண்டே பாடியதைப் பற்றி பார்த்தோம்.

    டி.எம்.சவுந்திரராஜன் தான் பாட வேண்டுமென எம்.எஸ்.வி. பிடிவாதமாக நின்ற பாடலும் ஒன்று உண்டு!

    'கௌரவம்' என்ற திரைப்படம். 'வியட்நாம் வீடு' சுந்தரம் இயக்கி சிவாஜி கணேசன் இரு வேடங்களில் நடித்த படம்! படத் தலைப்பைப் பார்த்தாலே கதை புரியும். பாரிஸ்டர் பட்டம் வாங்கிய பெரியப்பா சிவாஜிக்கு வாழ்க்கையில் எல்லாவற்றையும் விட, வளர்த்த மகனின் (சிவாஜி) வெற்றியையும் விட, தன் கவுரவம் தான் முக்கியம் என நினைப்பவர். ஒரு கொலை வழக்கில் நேருக்கு நேர் எதிராக வழக்கில் வாதாட வேண்டிய சூழ்நிலை வருகிறது. எதிராக வழக்காடப் போகிறேன் என்று மகன் சொன்னவுடனே அவரை வீட்டை விட்டு வெளியே போகச் சொல்லி விடுகிறார் பெரியப்பா சிவாஜி, மிகவும் உணர்ச்சி மயமான சூழலில் வரும் பாடல் தான்,

    "பாலூட்டி வளர்த்தக் கிளி,

    பழம் கொடுத்து

    பார்த்தக் கிளி, நான் வளர்த்தப்

    பச்சைக்கிளி

    நாளை வரும் கச்சேரிக்கு" என்ற பாடல்!!

    கவியரசரின் வரிகள் பாரிஸ்டரின் ஒட்டுமொத்த வாழ்க்கை வரலாற்றையும், குணத்தையும் சொல்லிவிடும்! அதுதான் கவியரசருக்குக் கைவந்த கலை ஆனதே!


    இந்த பாடல் அசரீரி குரலாக வரவுள்ளதாக சொல்லப்பட்டு, இந்த பாடலை எம்.எஸ். வி. தன் குரலில் பாடி பதிவு ஆனது. பாடலை கேட்டுப் பார்த்த சிவாஜி, அசரீரி குரலாக வருவதை விட வாயசைத்துப் பாடினால் தான் நன்றாகயிருக்கும் என்று சொல்லி வாயசைத்து நடித்து விட்டார். படத்திற்கு ரி.ரிகார்டிங் இசை அமைப்பதற்கு முன் பார்த்த எம்.எஸ்.வி., "அசரீரி இல்லாமல் சிவாஜி அண்ணன் நேரடியாக பாடுவதாக காட்சி இருக்கும் இதற்கு என் குரல் வேண்டாம். டி.எம்.எஸ். தான் பின்னணி பாட வைக்க வேண்டும். இல்லைன்னா பொருத்தமா இருக்காது" என்று பிடிவாதமாக சொல்லிவிட்டார்.

    வெளியூர் போயிருந்த டி.எம்.எஸ். வந்தவுடன், இந்த பாடலை கற்றுக் கொடுத்து சிவாஜி நடித்ததையும் போட்டுக் காட்டி டி.எம்.எஸ். சை பாட வைத்தார் எம்.எஸ்.வி.

    ஒரு பாடலை முதலில் பாடிவிட்டு அதற்கேற்ற மாதிரி வாயசைத்து நடிக்க வைப்பது பழக்கம். ஆனால் காட்சி எடுத்து விட்ட பிறகு அதற்கேற்ற மாதிரி பாடல் பாட வைப்பது மிக சவாலானது. ஒவ்வொரு சொல்லும் எடுக்குமிடமும், முடிக்குமிடமும் காட்சிக்குப் பொருத்த வேண்டும். பாடல் சம்பந்தப்பட்ட சிவாஜி, எம்.எஸ்.வி., டி.எம்.எஸ். எல்லோருமே தொழில் பக்தி உடையவர்கள். அவர்கள் அர்ப்பணிப்போடு செய்ததால் தான் அப்பாடல் சிறப்பாக வந்தது.

    மேலும், இதுபோன்ற பாடல்கள் என்றால் டி.எம்.எஸ். தான் என்ற முத்திரை இருக்கும்போது, எம்.எஸ்.வி. பிடிவாதம் பிடித்ததில் நியாயம் இருக்கத்தானே செய்கிறது?

    'தெய்வமகன்' படத்தில் வரும் "தெய்வமே, தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே", 'ஞான ஒலி' படத்தில் வரும் "தேவனே என்னைப் பாருங்கள்", "தங்கப் பதக்கம்" படத்தின் "சோதனை மேல் சோதனை போதுமடா சாமி", அவ்வளவு ஏன் 1978ல் வந்த 'பைலட் பிரேம் நாத்' படத்தில் வந்த "ஹூ ஈஸ் தி பிளாக் ஷீப்?" என்றப் பாடல் வரையிலும் கூட சிவாஜிக்கு டி.எம்.எஸ். கம்பீரமாகவும் கனகச்சிதமாகவும் பாடி முத்திரை பதித்தார் என்பதில் மாற்றுக் கருத்தே நமக்கு இல்லை. இந்தப் பாடல்களை கேட்டாலே சிவாஜி படப் பாடல்கள் என்று படத்தை பார்க்காமலே சொல்லி விடலாம்.

    1959ல் வந்த 'தங்கப் பதுமை' படத்தில் 'இன்று நமதுள்ளமே பொங்கும் புது வெள்ளமே' என்ற உற்சாகப் பாடலை டி.எம்.எஸ்.சை பாட வைக்கிறார் எம்.எஸ். வி. இதில் அவரின் குரல் அதிர்வு குறைந்து ஸ்படிகத் தெளிவு குரலில் பாட வைக்கிறார். 'பாகப்பிரிவினை' படத்திலும் 'ஏன் பிறந்தாய் மகனே', 'தாழையாம் பூ முடிச்சு' என்ற பாடலும் குழைவாகவும் தணிந்த குரலிலும் பாட வைக்கிறார். பின்னர் வந்த எல்லா பாடல்களிலும் அதே தொனியில் பாடுகிறார் டி.எம்.எஸ். பாசமலர், பாலும் பழமும், பாவ மன்னிப்பு பட பாடல்கள் சிவாஜிக்கான தொனியில் பொருந்தி பெரும் வரவேற்புப் பெற்றன.

    எம்ஜிஆருக்கு 1957ல் 'மகாதேவி' 'சேவை செய்வதே ஆனந்தம்' பாடலை பாட வைக்கிறார். 1960ல் 'மன்னாதி மன்னன்' படம். அதில் 'கனிய கனிய மழலை பேசும் கண்மணி' என்ற பாடலில் குழைந்து பாட வைத்திருப்பார். அதிர்வு குரலை எம்.ஜி.ஆருக்கும் தவிர்த்து விட்டு, ஸ்படிக தெளிவுக்குரலை கொண்டு வந்துவிட்டார். இந்தப் படத்திலிருந்து எம்.ஜி.ஆருக்கு பாடும் பாடல்களின் தொனி மாறிவிடுகிறது.

    டி.எம். சவுந்தரராஜனிடம் ஒரு பழக்கம் உண்டு. பாடுவதற்கு முன்னால் எந்த நடிகர் பாடுகிறார் என கேட்டுத் தெரிந்துக் கொண்டு அவரவர் குரலுக்கேற்றபடி தன் குரலை மாற்றிக் கொண்டு பாடுவார். அதனால் டி.எம்.எஸ். பாடும் போது இது சிவாஜி பாட்டு, இது எம்.ஜி.ஆர். பாடல் என்று நம்மால் சொல்லிவிட முடிகிறது.

    ஒரு போட்டியில் டி.எம். சவுந்தரராஜன் சொன்னார், சிவாஜிக்கு நாபி கமலத்திலிருந்துப் பாடுவேன். எம்.ஜி.ஆருக்கு மூக்குத் தொண்டையிலிருந்து குரலெடுத்துப் பாடுவேன்."

    'பாமா விஜயம்' என்ற படத்தில் 'வரவு எட்டணா செலவு பத்தணா' என்ற பாடலில் அப்பா குரலும் மகன்கள் குரல்களும் டி.எம்.எஸ். தான்! பாடும் விதத்தில் வித்தியாசம் காட்டியிருப்பார்.


    'சாந்தி' படத்தில் 'யார் அந்த நிலவு' என்ற பாடல் பற்றி பார்ப்போம். அந்தக் காலத்தில் ஆங்கிலேயப் பாப் பாடகரான கிளிப் ரிச்ர்ட் என்பரின் ரசிகர் சிவாஜி. தனக்கும் அது போல் ஒரு பாடல் பாட வேண்டும் என ஆசைப்பட்டார். 'அவர் பாடல் மாதிரி எனக்கு ஒரு டியூன் போட்டு தரணும்' என்று எம். எஸ். வியிடம் கேட்க, அவரும் சரியென சொல்லிவிட்டார். கவியரசரை வைத்து பாடல் எழுதி அட்டகாசமான ஒரு ட்யூன் போட்டு டி.எம்.எஸ்ஸை பாட வைத்து ஒலிப்பதிவும் செய்தாகிவிட்டது. படப்பிடிப்புக்கு முன் சிவாஜிக்கு பாட்டு போட்டுக் காட்டப்பட்டது. பாட்டை கேட்ட சிவாஜி படப்பிடிப்பை இரண்டு நாட்கள் தள்ளி வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டார்.

    இரண்டு நாள் கழித்து போய் சிவாஜியைக் கேட்டபோது," இன்னும் இரண்டு நாள் தள்ளி வையுங்கள்" என்று சொல்கிறார். இயக்குனர் பீம்சிங், என்ன பாட்டுப் பிடிக்கலையா? வேறு ட்யூன் போட சொல்லவா? என்கிறார்.

    'நான், விசுவை கேட்ட மாதிரி பிரமாதமான டியூன் போட்டு விட்டார். கவியரசர் என்னமா எழுதியிருக்கார்! டி.எம்.எஸ். என்னம்மா பாடிட்டார். இவர்கள் மூன்று பேரைதாண்டி நான் இந்தக் காட்சியில தெரியணும்னா நான் எப்படியெல்லாம் நடிக்கணும்னு யோசிச்சேன். அதனால் தான் நேரம் எடுத்துக் கொண்டேன்", என்றார் சிவாஜி. நடிப்புக்கென்றே பிறந்தவரின் தொழில் பக்தி!!

    கி.பானுமதி கிருஷ்ணகுமார்

    கி.பானுமதி கிருஷ்ணகுமார்


    அந்தக் காட்சியில் சிவாஜி ஊதி தள்ளி விட்டார். உண்மையிலேயே ஒயிலாக சிகரெட் பிடித்தபடி பாடும் அழகு புதுமையாக இருக்கும்!

    'பாவ மன்னிப்பு' என்ற படம். ஏ.வி.மெய்யப்ப செட்டியார் இந்தப் படத்துக்கு இசையமைக்கும் படி விஸ்வநாதன்- ராமமூர்த்தியை அழைக்கிறார். மொத்தம் எட்டு பாடல்கள். ஒன்று கிராமியம், ஒன்று மேற்கத்தியம், ஒன்று இந்துஸ்தானி, மெலடி என்று பல விதங்களில் பாடல்கள் தந்து விட்டார்கள். மெய்யப்ப செட்டியார், என் விருப்பத்துக்கு ஒரு பாடல் தாருங்கள் என்று சொல்லி வந்த பாடல் தான் "சாய வேட்டி தலையிலேக் கட்டி" என்ற பாடல்!

    மெய்யப்ப செட்டியார் இந்தப் படத்தை வைத்து பொதுமக்களின் ரசனையை கணிக்க எண்ணினார். அதனால் ஒரு போட்டியை அறிவித்தார். பாடல்களை பிடித்த வகையில் வரிசைப்படுத்த வேண்டும் என்பதுதான். அந்தப் போட்டியில் கடிதங்கள் மூட்டை மூட்டையாக குவிந்ததாம். பெரும்பாலோர் "சாய வேட்டி தலையில் கட்டி" என்ற பாடலை கடைசியாக பட்டியலிட்டு இருந்தார்களாம். பொதுமக்களின் ரசனை உணர்ந்து அதற்கு ஏற்ற பாடல்கள் வழங்குவதில் மெல்லிசை மன்னர்கள். இவர்களின் திறனை தெரிந்து கொண்டார், மெய்யப்ப செட்டியார்.

    "அத்தான் என்னத்தான்" என்ற பாடலை கேட்ட லதா மங்கஷ்கர், "இப்படிப்பட்ட பாடல் எனக்கு கிடைத்தால் நான் பம்பாயிலிருந்து சென்னை வந்து பாடித்தந்து விட்டு போகத்தயார்" என்று சொன்னாராம்.

    "அத்தான் என்னத்தான்" பாடல் பற்றி பி.சுசீலா நினைவு கூறுவது அதைவிட சுவாரசியமானது.

    நாளைக்கு, "ஒரு பாடல் ஒலிப்பதிவு இருக்குமா வந்திருங்க" என்று எம்.எஸ்.வி. சொல்ல,

    "எனக்கு, குரல் சரியில்லை, ஜலதோஷம் மாதிரி இருக்கு. லேசான காய்ச்சல்" என்று பி.சுசிலா சொல்ல,

    "அப்படியா, இந்தப் பாட்டுக்கு அந்த குரல் தான் வேண்டும். நீங்க வந்து பாடுங்க" என்று சொன்னாராம் எம்.எஸ்.வி. அந்த பாடல் இன்னும் நமது காதுகளில் ரிங்கரித்துக் கொண்டே இருக்கிறது!!

    வடக்கத்திய திரையுலகத்தினர் பலரும் எம்.எஸ்.வியின் இசையமைப்பை கவனித்து வந்தனர். குறிப்பாக நவ்ஷத் அலி என்ற இசை அமைப்பாளர்.

    கோவை சென்ட்ரல் ஸ்டுடியோவில் எம்.எஸ்.வி. வேலைக்கு சேர்ந்ததிலிருந்தே நவ்ஷத் அலி இசையின் மீது ஈர்ப்பாக இருந்தார். அவரது இசையில் வந்த இந்தி பாடல்களை கேட்டு விடுவார். அவரது உள்ளம் கவர்ந்த இசையமைப்பாளரை தனது குரு இடத்தில் வைத்து மதித்தது மட்டுமல்லாமல், எப்படியோ நவுஷத்தின் முகவரியை வாங்கி விட்டார். அவருடைய ஒவ்வொரு படப் பாடல்களைப் பற்றியும் நுட்பமாக ரசித்து அதைப் பாராட்டி யாரையாவது உருது தெரிந்தவர்களை பிடித்து கடிதங்கள் எழுத வைத்து அனுப்புவாராம். அப்படி ஒரு மகா ரசிகன் எம்.எஸ்.வி.

    நவ்ஷத் அலியும் இவரது நுட்பமான ரசனையை கவனித்து நன்றி தெரிவித்து தவறாமல் பதில் கடிதம் எழுதுவாராம்.

    கோப்பெருஞ்சோழன் பிசிராந்தயார் நட்பு போல பார்க்காமலே ஒருவரயோருவர் நட்பும் மதிப்பும் பாராட்டிய அன்பு, அவர்களுக்கு இடையே இருந்த அன்பு! கற்றோரை கற்றோரே காமுருவர் என்பது போல ஒரு ஆகச் சிறந்த கலைஞனை இன்னொரு ஆகச் சிறந்த கலைஞன் இனம் கண்டு கொண்டு, அதனால் வந்த அன்பு, பாசம்!!

    இவர்களின் நட்பை தென்னிய திரையுலகமும், வட இந்திய திரையுலகமும் ஒன்று சேர்த்து கண்டு ரசித்த நெகிழ்வும் நடந்தது. அது என்ன? அடுத்த தொடரில் பார்ப்போம்.

    • சிவாஜி சூரத்தை கொள்ளையடிக்கவில்லை என்று மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.
    • மோடி திறந்து வைத்த சிவாஜி சிலை அண்மையில் பெய்த கனமழையால் இடிந்து விழுந்தது.

    குஜராத்தின் சூரத் நகரை சத்ரபதி சிவாஜி கொள்ளையடித்தார் என்று மூத்த பாஜக தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான நாராயண் ரானே பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மும்பையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாராயண் ரானே, "நான் ஒரு வரலாற்றாசிரியர் கிடையாது. ஆனால் வரலாற்றாசிரியர் பாபாசாகேப் புரந்தாரே எழுதியதை படித்துள்ளேன். சத்ரபதி சிவாஜி சூரத்தை கொள்ளையடித்தார்" என்று தெரிவித்தார்.

    சத்ரபதி சிவாஜி சூரத்தை கொள்ளையடிக்கவில்லை, காங்கிரஸ் கட்சி தவறான தகவல்களை பரப்பி வருகிறது என்று மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நேற்று தெரிவித்த நிலையில், இன்று நாராயண் ரானே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    மகாராஷ்டிராவில் மோடி திறந்து வைத்த சிவாஜி சிலை அண்மையில் பெய்த கனமழையால் இடிந்து விழுந்ததை தொடர்ந்து இந்த விவாதங்கள் உருவாகியுள்ளன.

    ஜவஹர்லால் நேரு எழுதிய டிஸ்கவரி ஆப் இந்தியா புத்தகத்தில், "சிவாஜி சூரத் நகரை கொள்ளையடித்தார்" என்று எழுதியுள்ளார்.

    வரலாற்றுப் புத்தகங்களில் 1664 மற்றும் 1670 ஆகிய ஆண்டுகளில் 2 முறை சூரத்தை சத்ரபதி சிவாஜி கொள்ளையடித்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

    • வீட்டை ஜப்தி செய்யுமாறு பிறப்பித்த உத்தரவை செய்ய சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் நடிகர் பிரபுவுக்கு சொந்தமானது என தெரிவிக்கப்பட்டது.

    சென்னை:

    'ஜகஜால கில்லாடி' திரைப்படத் தயாரிப்புக்காக நடிகர் சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்தின் நிறுவனம் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாதது தொடர்பான வழக்கில் நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது.

    இந்த நிலையில், சிவாஜி வீட்டை ஜப்தி செய்யுமாறு பிறப்பித்த உத்தரவை செய்ய சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ராம்குமார் தரப்பில், சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் நடிகர் பிரபுவுக்கு சொந்தமானது என தெரிவிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து கடன் பிரச்சனைக்கு தீர்வு காணும்படியும் ஜப்தி உத்தரவை ரத்து செய்யக்கோரி மனுத்தாக்கல் செய்யவும் உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. 

    • இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளியான திரைப்படம் சிவாஜி.
    • இப்படம் 2007-ஆம் ஆண்டின் பிளாக் பஸ்டர் திரைப்படமாக அமைந்தது.

    இயக்குனர் சங்கரின் பிரம்மாண்ட இயக்கத்தில் ரஜினிகாந்த், ஸ்ரேயா சரண், விவேக் உள்ளிட்ட பலர் நடித்து கடந்த 2007-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் 'சிவாஜி'. இந்த படம் அந்த ஆண்டின் பிளாக் பஸ்டர் திரைப்படங்களில் ஒன்றாக அமைந்தது.

    ஏ.வி.எம் புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரித்த 'சிவாஜி' திரைப்படம் வெளியாகி இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதை கொண்டாடும் விதமாக ஏ.வி.எம். புரொடக்‌ஷன் கடந்த 13-ஆம் தேதி முதல் சமூக வலைதளப்பக்கத்தில் 'சிவாஜி' திரைப்படத்தின் சுவாரஸ்யமான பல புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறது.

     இந்நிலையில், 15 ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் விதமாக இயக்குனர் சங்கர் இன்று நடிகர் ரஜினிகாந்தை சந்தித்துள்ளார். மேலும், சந்திப்பின் போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படமானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • முதல் படத்திலேயே தமிழகத்தையே தன் வசப்படுத்தியவர் அவர் மட்டும்தான்.
    • முதல் மரியாதையில் அவரது இயல்பான நடிப்பு இப்போது பார்த்தாலும் ஆச்சரியத்தைத் தருகிறது.

    சிவாஜி மகா கலைஞன். நடிப்பிற்காகவே வாழ்க்கையை அர்ப்பணித்தவர். மேடை நாடகமெனும் விருட்சத்திலிருந்து சினிமாவில் விழுந்த கனி. சிவாஜியின் திரை வாழ்வு நான்கு பரிமாணங்கள் கொண்டது. சிவபெருமானுக்கும், அப்பருக்கும் கூட உருவம் தந்து இருபதாம் நூற்றாண்டில் உருவாகி வந்த சைவ - தமிழ் எழுச்சி மரபிற்கு அடையாளமாக இருந்தார்.

    அதே தருணத்தில் கலைஞரின் வசனங்களைத் தொடர்ந்து பேசி தமிழ் கலாச்சார மீட்டுருவாக்கத்தின் முகமாக இருந்தார். கட்டபொம்மன், வ.உ.சி போன்ற பல ஆளுமைகளை தன் நடிப்பால் உணர வைத்து இந்திய தேசியத்தின் தமிழ் முகமாகவும் இருந்தார். இப்படி வெவ்வேறு பரிமாணங்களில் இங்கு உருவாகி வந்த பல்வேறு கலாச்சார மீட்டுருவாக்க அலைகளின் வெகுஜன முகமாக அவர்தான் இருந்தார். 


    பீம்சிங், கோபாலகிருஷ்ணன் போன்ற இயக்குநர்கள் உருவாக்கிய தமிழ் நிலத்தின் கூட்டுக் குடுப்பக் கலாச்சாரப் பிரதிநிதியாகவும் , பல்வேறு இயக்குநர்கள் உருவாக்கிய பெண்களைக் கவர்கிற அதீத உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் காதலனாகவும் திகழ்ந்தார். ராஜபார்ட் ரங்கதுரை, தில்லானா மோகனாம்பாள் போன்ற படங்களின் வழியாக கலைஞர்களின் உடல் மொழிகளை அச்சு அசல் அப்படியே பிரதியெடுத்து அந்த அனுபவத்தைத் திரையில் கடத்தினார்.

    ஈகோவும், பாசமும் ஒருங்கே நிரம்பிய மேல்தட்டு மனிதர்களின் விசித்திரமான குணச்சித்திரத்தை திரையில் (கௌரவம், பார் மகளே பார் ) அற்புதமாகப் பிரதிபலித்தார் அவருடைய சோதனைக்காலம் எழுபதுகளின் பின்பகுதியில் தொடங்கி தொண்ணூறுகள் வரை தொடர்ந்தது.

    ராதா, அம்பிகாவையெல்லாம் தொந்தியோடு அணைத்தபடி அவர் ஆடிய ஆட்டம் உண்மையில் நமக்கான சோதனைக் காலம்.. ஆனால் அவருடைய மிக முக்கியமான இரு படங்களும் இந்தக் காலகட்டத்தில்தான் வந்தன. மிகை நடிப்பு என்று அவர் மீது வைக்கும் குற்றச்சாட்டுக்கு அவர் மட்டுமே காரணமில்லை.அவரால் எந்த விதமான பாவத்திலும் நடிக்க முடியும். ஆனால் அவர் காலகட்டத்தில் திரையுலகின் சூழல் அதுதான்.

    முதல் மரியாதையில் அவர் வெளிப்படுத்திய இயல்பான நடிப்பு இப்போது பார்த்தாலும் ஆச்சர்யத்தைத் தருகிறது. கத்தி மேல் நடக்கிற மாதிரியான பாத்திரப் படைப்பு அவருடையது. 'ப்பூ' வென்று ஊதித் தள்ளியிருப்பார். தேவர் மகனில் இடைவேளை வரை மிகச் சிறந்த நடிகரான கமலை கவனிக்கவே விடாமல் அவரே என் கண்களை ஆக்ரமித்திருந்தார். அந்த அளவுக்கு பெரிய தேவராகவே வாழ்ந்திருப்பார். 


    கமலுக்கு வாய்த்த இயக்குநர்களும், சூழலும் , காலகட்டமும் அவருக்கு வாய்க்கவில்லை. ஒருவேளை வாய்த்திருந்தால் தமிழில் உருவான சர்வதேசக் கலைஞனாக அவர் மலர்ந்திருக்க முடியும். தான் நடித்த பல படங்களின் காட்சிகளை நண்பர்களிடம் வேறொரு பாணியில் வெகு இயல்பாக நடித்துக் காட்டியிருக்கிறார். கமல் சொன்னதுதான் உண்மை 'ஒரு சிங்கத்துக்கு சைவச் சாப்பாடு போட்டுக் கொன்று விட்டோம். தமிழில் சூப்பர் ஹீரோவாக வலம் வருகிற எந்த நடிகரும் முதல் படத்திலேயே மக்களின் மனங்களை வென்றவர்களில்லை.

    எம்.ஜி.ஆர், ஜெமினி, ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய், அஜீத், விக்ரம், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி என்று அத்தனை பேருமே மெல்ல மெல்ல வளர்ந்து மக்கள் அபிமானத்தைப் பெற்றவர்கள்தாம். ஆனால் ஒரே விதிவிலக்கு சிவாஜி மட்டும்தான்‌. முதல் படத்திலேயே தமிழகத்தையே தன் வசப்படுத்தியவர் அவர் மட்டும்தான். அவரை பிரான்ஸ்காரன் மிகச்சரியாக அடையாளம் கண்டிருக்கிறான். தேசிய விருது வழங்கும் கமிட்டிக்கு அடையாளம் தெரியவில்லை என்பது மிகப்பெரிய சோகம்.

    அவர் தோற்ற ஒரே இடம் அரசியல்தான். குடும்ப வாழ்க்கை உட்பட மற்ற அனைத்திலும் அவர் வெற்றிகரமான மனிதர். உச்ச நட்சத்திர அந்தஸ்தை இழந்த பிறகும் கூட திரையுலகிலும், சமூகத்திலும் அவர் மிகப் பெரிய சக்கர்வர்த்திக்கான தோரணையோடுதான் வலம் வந்தார். அந்த கம்பீரம் குறையவே இல்லை.அதுமாதிரியான மரியாதை இனி ஒருவருக்கு வாய்க்காது.

    என் அம்மா, சித்திகள், என்று எல்லோரும் அவருடைய ரசிகைகள். என் வயதில் இருக்கிற எல்லோருடைய அம்மாக்களின் நினைவிலிருந்து சிவாஜியைப் பிரிப்பது சுலபமில்லை. சிவாஜி வெறுமனே படங்களின் கதாநாயகன் இல்லை. தமிழர்களின் பெருமிதம். ஒரு தலைமுறையின் கலைஞன். அவருடைய புகழ் நிலைத்து நிற்கட்டும்.‌

    -மானசீகன் 

    ×