இரவு 9 மணிக்கு மேல என்னால தூங்காம இருக்க முடியாது - சாய் பல்லவி
- அமரன்’ல் இந்து ரெபேக்கா என படத்தின் கதாபாத்திரமாகவே வாழ்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார் சாய்பல்லவி.
- தனது அன்றாட வாழ்க்கை பற்றி அளித்த சுவாரசியமான பேட்டியில் கூறினார்
தென்னிந்திய திரை உலகில் பிரபல நடிகையான சாய்பல்லவி தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி படங்களில் நடித்து வருகிறார்.
மருத்துவ படிப்பை முடித்திருந்தும் அவரது வாழ்க்கை சினிமாவை நோக்கி நகர்ந்தது. படங்களில் அவர் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்கள் அனைத்தும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. 'பிரேமம்' படத்தில் மலர் டீச்சர், 'அமரன்'ல் இந்து ரெபேக்கா என படத்தின் கதாபாத்திரமாகவே வாழ்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார் சாய்பல்லவி. சமீபத்தில் அவர் நாக சைதன்யாவுடன் இணைந்து நடித்த தண்டேல் திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் சாய்பல்லவி சமீபத்தில் நடந்த நேர்காணலில் தனது அன்றாட வாழ்க்கை பற்றி அளித்த சுவாரசியமான பேட்டியில் கூறியதாவது:-
நான் இரவு 9 மணிக்கு தூங்கி காலை 4 மணிக்கு எழுந்து விடுவேன். ஜார்ஜியாவில் படித்துக் கொண்டிருந்த போது அதிகாலை 3.30 மணிக்கு எழுந்து படிக்கும் பழக்கம் இருந்தது. அந்த பழக்கம் அப்படியே பழகி விட்டது. 4 மணிக்கு மேல் நானே தூங்க முயற்சி செய்தாலும் என்னால் தூங்க முடியாது. தினமும் அதிகாலை 4 மணிக்கு எழுந்து என்னுடைய அன்றாட பணிகளை தொடங்கி விடுவேன். அது போல் பல படப்பிடிப்புகள் இரவு முழுவதும் படமாக்கப்படுகிறது. என்னால் இரவு 9 மணிக்கு மேல் கண் விழித்திருக்க முடியாது. இதை பார்த்து இயக்குனர்கள் பலர் என்னை சின்ன குழந்தை என்று சொல்வார்கள். இரவு நேர சூட்டிங்கே எனக்கு பிரச்சினைதான். ஆனாலும் எப்படியாவது அடம்பிடித்து இரவு 9 மணிக்கு தூங்கி விடுவேன்." இவ்வாறு அவர் கூறினார்.