காவல் தெய்வமாக விளங்கும் `புன்னைநல்லூர் மாரியம்மன்'
- அம்மன் சுயம்பு வடிவாய் புற்று மண்ணால் ஆனவள்.
- அம்மனுக்கு தைல அபிசேகம் மட்டுமே. அபிசேகங்கள் கிடையாது.
கீர்த்தி சோழன் என்னும் அரசர் புன்னை நல்லூர் மாரியம்மன் அருளால் ஒரு ஆண்மகனைப் பெற்று அதற்கு தேவசோழன் என்னும் பெயரைச் சூட்டி அவன் பல ஆண்டுகள் சோழ சாம்ராஜ்யத்தை ஆண்டு வந்தான்.
அதன் பின்னர் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னரான வெங்கோஜி மகாராஜா 1680- ல் திருத்தல யாத்திரை செய்யும் போது கண்ணபுரம் என்னும் சமயபுரத்தில் தங்கி வழிபாடு செய்தார். அன்றிரவு அம்பிகை அரசனின் கனவில் தோன்றி, தஞ்சைக்கு கிழக்கே 7 கி.மீ. தூரத்தில் உள்ள புன்னைக் காட்டில் புற்று உருவாய் உள்ள தன்னை வந்து வழிபடுமாறு கூறவே, அவ்வரசன் தலைநகராகிய தஞ்சைக்கு வந்து புன்னைக் காட்டிற்கு வழியமைத்து, அம்பிகை இருப்பிடத்தைக் கண்டு சிறிய கூரையமைத்து, புன்னைநல்லூர் என்று பெயரிட்டு அக்கிராமத்தையும் கோவிலுக்கு வழங்கினார்.
1728-1735-ல் தஞ்சையை ஆண்ட துளஜா ராஜாவின் புதல்வி வைசூரியால் கண் பாதிக்கப்பட்டு இந்த அம்பிகையை வழிபட்டு குணமானாள். அம்பிகையின் அருளை எண்ணி அவ்வரசன் அம்பிகைக்கு சிறிய கோவிலாக கட்டினார். காலப்போக்கில் இது இவ்வளவு பெரிய கோவிலாக மாறியது என்று வரலாறு கூறுகிறது.
தஞ்சையை ஆண்ட சோழப் பேரரசர்கள் தஞ்சையைச் சுற்றி எட்டுத் திக்குகளிலும் அஷ்ட சக்திகளை காவல் தெய்வங்களாக அமைத்தனர். தஞ்சைக்கு கிழக்காக அமையப்பெற்ற காவல் தெய்வமே புன்னைநல்லூர் மாரியம்மன் என்று சோழ சம்பு எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
17-ம் நூற்றாண்டில் தஞ்சையை ஆண்ட வெங்கோஜி மகாராஜாவால் இக்கோவில் உருவாக்கப்பட்டபோது, இப்பகுதி புன்னை வனக்காடாக இருந்துள்ளது.
மேலும், சிவ பெருமானை வழிபட கோவிலில் இருந்து சற்று தொலைவில் கைலாசநாதர் கோவிலையும் கட்டினார் மகாராஜா.
சுயம்பு அம்மன் -மூலஸ்தான மாரியம்மன் புற்று மண்ணால் உருவானது என்பது ஒரு தனிச் சிறப்பாகும். மூலவர் அம்மன் புற்று மண்ணால் ஆனதால் மூலஸ்தான அம்பாளுக்கு அபிஷேகங்கள் செய்யப்படுவதில்லை. தைலக் காப்பு சாற்றப்படுகிறது.
விஷ்ணு துர்க்கைக்கும், அம்பாள் உற்சவ மூர்த்திக்கும் நித்தியபடி அபிஷேகம் நடைபெறுகிறது. அம்பாளுக்கு 5 வருடத்திற்கு ஒரு முறை ஒரு மண்டலம் தைலக்காப்பு அபிஷேகம் நடைபெறும்.
அச்சமயம் ஒரு மண்டலம் அம்பாளை ஒரு வெண் திரையில் வரைந்து ஆவாகனம் செய்து, அதற்குதான் அர்ச்சனை ஆராதனைகள் நடைபெறும். அப்போது மூலஸ்தான அம்பாளுக்கு 48 நாட்களிலும் தினமும் இரு வேளை சாம்பிராணி தைலம், புணுகு, அரகஜா, ஜவ்வாது ஆகியவற்றால் அபிஷேகம் நடைபெறும்.
தைலாபிஷேக நேரத்தில் அம்பாளின் உக்ரம் அதிகமாகும். அதை தவிர்க்க அம்பாளுக்கு தயிர், இளநீர் வைத்து நைவேத்தியம் நடைபெறும். சுமார் 6 அடி உயரத்தில் பிரமாண்டமாக காட்சி தருகிறாள் அம்மன்.
அம்மை நோயானது 2 அல்லது 3 தினங்களிலேயே இத்தலத்தில் வழிபடுவோர்க்கு குணமாகிவிடுகிறது.
கடவுள் வாகனங்களில் இயற்கை வடிவான வாகனங்கள், பறவைகள், விலங்குகள், ஊர்வன வாகனங்கள், கலப்பு வடிவ வாகனங்கள், பூத கின்னர வாகனங்கள், அபூர்வ வகை வாகனங்கள் கூட்டு வாகனங்கள் என பல வாகனங்கள் உள்ளன. இவையல்லாது, இறைவனும், இறைவியும் பல்லக்கில் பவனி வருவது என்பதும் காலங்காலமாக நடைபெற்று வருகிறது.
இதர வாகனங்களை காட்டிலும், இறைவனோ, இறைவியோ பல்லக்கில் பவனி வருகையில் அதிக அளவிலான அலங்காரங்களும், ஜொலிக்கும் மின் விளக்கு அலங்காரங்களும் பல்லக்கு வாகனத்தில் இருப்பது தனிச்சிறப்பு.
அதிலும் இரவு நேரத்தில் மின்னொளிப் பாய்ச்சலுடன், இறைவனையோ, இறைவியையோ சுமந்து வரும் பல்லக்கினைக் காண குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமுடன் திரள்வது இன்றளவும் நடைபெற்று வருகிறது.
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கி வரும் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில், தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தை சேர்ந்த 88 கோவில்களில் ஒன்று.
தமிழகத்திலேயே மிகச் சிறப்பாக முத்துப்பல்லக்கு திருவிழா நடைபெற்று வருவது, இக்கோவிலில் மட்டும்தான். மற்ற கோவில்களில் பல்லக்கு உற்சவங்கள் நடைபெற்றாலும், அவையெல்லாம் சிறிய அளவிலான பல்லக்குகளாக அமைக்கப்பட்டிருக்கும், புன்னைநல்லூர் உற்சவர் மாரியம்மன் பவனி வரும் முத்துப்பல்லக்கு மிகப் பிரமாண்டமானதாகும்.
இத்தலத்தில் அம்மன் புற்று வடிவில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்கு சதாசிவ பிரம்மேந்திரரால் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இக்கோவில் சோழர்களால் கட்டப்பட்டது.
மாரியம்மன் கோவிலின் முக்கிய குறிப்புகள்
* அம்மன் சுயம்பு வடிவாய் புற்று மண்ணால் ஆனவள்.
* சுமார் 6 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக காட்சி தருகிறாள் அம்மன்.
* அம்மனுக்கு தைல அபிசேகம் மட்டுமே. அபிசேகங்கள் கிடையாது.
* உள்தொட்டி நிரப்புதல் என்பது இங்கு சிறப்பு வாய்ந்த பிரார்த்தனை ஆகும்.
* அம்மை நோய் 2 அல்லது 3 தினங்களிலேயே இத்தலத்தில் வழிபடுவோருக்கு குணமாகி விடுகிறது.
* கண்ணைக் கவரும் மராத்திய மன்னர்களது ஓவியங்கள் நிறைந்த வெளிமண்டபம் கோவிலுக்குள் நுழைந்தவுடன் காணப்படுகிறது.
* இங்கு உட்பிரகாரத்தில் எழுந்தருளி இருக்கும் பாடகச்சேரி தவத்திரு ராமலிங்க சுவாமிகள் பைரவ உபாசகராக இருந்து குறைவிலா அன்னதானம் செய்ததுடன் தனது சித்தியினால் அனைவருக்கும் திருநீறு அளித்து தீராத நோயெல்லாம் தீர்த்து வைத்திருக்கிறார்.
* ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திர சுவாமிகளால் மாரியம்மன் யந்திரம் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகும்.
* ஆகம விதிப்படி தினசரி நான்கு கால பூஜை நடைபெறும் கோவில் இது.
* புகழ் பெற்ற பிரார்த்தனை தலமான இக்கோவி லுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் பெரும் எண்ணிக்கையில் பக்தர்கள் கூட்டம் கூட்டமாய் வருவது வழக்கம்.
* புன்னைநல்லூர் சுற்று வட்டாரத்தில் இருந்தும், தஞ்சாவூரில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் மாசி முதல் பங்குனி மாதம் வரை அணி, அணியாகவும், அமைப்புக்கள் சார்பாகவும் பால்குடம் மற்றும் காவடிகள் எடுத்து வந்து இங்குள்ள விஷ்ணு துர்க்கை அம்மனுக்கு பாலாபிஷேகம் நடத்துகிறார்கள்.
* சரபோஜி மன்னர் தஞ்சையை ஆண்ட காலத்தில் இக்கோவிலுக்கு மகா மண்டபமும் 2-வது பெரிய பிரகாரத்திற்கு சுற்றுச்சுவரும்கட்டிக்கொடுத்தார்.