சமையல்

நினைவாற்றலை அதிகரிக்கும் வல்லாரை கீரை பாயாசம்

Published On 2024-10-04 03:44 GMT   |   Update On 2024-10-04 03:44 GMT

வல்லாரை வெல்ல வேண்டும் எனில் வல்லாரை உண்டுவா' என்பது பழமொழி. வல்லாரை, நினைவாற்றலை பெருக்கும், மூளை நரம்புகளை வலுப்படுத்தும். பதற்றத்தை குறைத்து, மன அமைதியை ஏற்படுத்தும் தன்மையுடையதால் `சரஸ்வதி' என தெய்வீகமாக இதனை அழைத்தனர் நம் முன்னோர்.

வல்லாரை ஒரு காயகற்ப மூலிகை. இதை மருந்தாக பயன்படுத்தும் பொழுது எல்லா பிணிகளும் உடம்பை விட்டு அகலும் என சித்த மருத்துவ பாடலில் சொல்லப்பட்டிருக்கிறது.

வல்லாரை, தோலுக்கு நல்ல பொலிவை ஏற்படுத்துகின்றது. வயதாவதால் தோலில் ஏற்படும் சுருக்கம், கண்களுக்கு அடியில், மற்றும் முகத் தில் ஏற்படும் மெல்லிய கோடுகளை நீக்க வல்லது. காயம்பட்ட தழும்புகள், தீப் புண்களால் ஏற்படும் 'கீலாய்டு' என்ற தழும்புகள், குழந்தை பிறப்பிற்கு பின் வயிற்றில் ஏற்படும் கோடுகள் போன்றவற்றிக்கு வல்லாரை இலையை அரைத்து பூசலாம்.

ரத்தத்தை தூய்மைபடுத்தும். உடலில் உள்ள வெப்பத்தை தணிக்கும். வாய் புண், தொண்டைப்புண் மற்றும் வயிற்று புண்களை ஆற்றும்.

தேவையான பொருட்கள்:

வல்லாரை கீரை- 100 கிராம்

பால்- 14 லிட்டர்

தேங்காய்- 1/2 மூடி (துருவிக் கொள்ளவும்)

பச்சரிசி- 1 தேக்கரண்டி (ஊறவைத்துக் கொள்ளவும்)

பாதாம் பருப்பு- 5

வெல்லம்- 100 கிராம் (பொடி செய்து கொள்ளவும்)

ஏலக்காய்- 5 (பொடி செய்து கொள்ளவும்)


செய்முறை:

வல்லாரை கீரை, தேங்காய் துருவல், பச்சரிசி, பாதாம் பருப்பு ஆகியவற்றை மிக்சி ஜாரில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பாலை அடுப்பில் வைத்து காய்ச்சிக் கொள்ள வேண்டும். பின்னர் வெல்லத்தை அடி கனமான பாத்திரத்தில் சிறிது நீர் சேர்த்து பாகு காய்ச்ச வேண்டும்.

அதில் அரைத்து வைத்துள்ள வல்லாரை கீரை கலவையை கலந்து சிறுதீயில் வைத்து ஒரு கொதி வந்தவுடன் தீயை அணைத்து சிறிது ஆறிய பின் காய்ச்சிய பால் மற்றும் ஏலக்காய் தூள் கலந்து பரிமாறலாம். சுவையான வல்லாரை பாயாசம் தயார்.

இதை குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். கலர்புல்லாக இருக்கும். 

Tags:    

Similar News