சமையல்

தீபாவளி அன்று மட்டுமல்ல....இந்த லேகித்தை எல்லா நாட்களிலும் சாப்பிடலாம்

Published On 2024-10-22 09:01 GMT   |   Update On 2024-10-22 09:01 GMT
  • சளி, இருமல், காய்ச்சல் போன்றவற்றிற்கும் இது அருமருந்தாகும்.
  • வாரம் ஒருமுறை சாப்பிடுவது அனைவருக்குமே நல்லது.

தீபாவளி விருந்தாலும், பலகாரங்களாலும் ஏற்படும் வயிற்று உப்புசம், அஜீரணக் கோளாறு, திடீர் ஏப்பங்கள், வாந்தி, வயிற்று வலி, அசதி போன்றவற்றுக்கு லேகியம் நிவாரணம் கொடுக்கும். கூடவே பனிக்காலத்தில் வரக்கூடிய சளி, இருமல், காய்ச்சல் போன்றவற்றிற்கும் இது அருமருந்தாகும்.

தீபாவளி தினத்தில் மட்டுமல்லாமல், மற்ற நேரங்களிலும் இந்த லேகியத்தை சாப்பிடலாம். இது செரிமானக் கோளாறுகள் ஏற்படாமல் பாதுகாக்கும். பொதுவாகவே நாம் உண்ணும் உணவுகளில் கொழுப்புச்சத்து நிறைந்திருக்கிறது. இந்த லேகியத்தை வாரம் ஒருமுறை சாப்பிடுவது அனைவருக்குமே நல்லது.

தேவையான பொருள்கள்:

சுக்கு - 50 கிராம்

மிளகு - 50 கிராம்

திப்பிலி - 50 கிராம்

சதகுப்பை - 30கிராம்

சிறுநாகப்பூ - 50 கிராம்

வாய்விடங்கம் - 50 கிராம்

கருஞ்சீரகம் - 50 கிராம்

சீரகம் - 50 கிராம்

லவங்கப்பட்டை - 50 கிராம்

கோரைக் கிழங்கு - 50 கிராம்

கொத்தமல்லி - 30 கிராம்

சித்தரத்தை - 30 கிராம்

ஓமம் - 30 கிராம்

அதிமதுரம் - 20 கிராம்

கிராம்பு - 20 கிராம்

வெல்லம்- 300 கிராம்

தேன் - 100 கிராம்

நெய் - 100 மில்லி

செய்முறை:

* அடுப்பில் பாத்திரம் வைத்து, மேலே குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு பொருளையும் தனித்தனியாக சிறு தீயில் வைத்து வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

* வறுத்து வைத்த ஒவ்வொரு பொருளையும் தனித்தனியாக நன்றாக மிக்சி ஜாரில் போட்டு அரைத்து, சலித்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

* லேகியத்திற்கு வேண்டிய அளவு வெல்லத்தை எடுத்து ஒரு அடி கனமான பாத்திரத்தில் சேர்த்து பாகு காய்ச்ச வேண்ம்.

* பாகு கம்பி பதம் வந்தவுடன் அடுப்பில் இருந்து எடுக்காமல் தீயை கொஞ்சம் குறைத்து வைத்து, அரைத்து வைத்திருக்கும் அனைத்து பொடிகளை ஒன்றன் பின் ஒன்றாக சிறிது சிறிதாக கெட்டி ஆகாமல் சேர்த்து கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.

* பின்னர் வாணலியை இறக்கி வைத்து நெய் விட்டு நன்றாகக் கிளறி சிறிது ஆறிய பின் சிறிது சிறிதாக தேன் விட்டுக் கிளறி வேறு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

* ஆறிய பின்னர் வயதுக்கு ஏற்றவாறு 3 - 12 வயது வரை 5 கிராம் காலை மற்றும் இரவு உணவிற்குப் பிறகு எடுத்து சாப்பிடலாம். 13 வயதுக்கு மேற்பட்டோர் 10 கிராம் அளவு எடுத்து காலை மற்றும் இரவு உணவிற்குப் பிறகு சாப்பிடலாம்.

-சித்த மருத்துவர் காமராஜ்..

Tags:    

Similar News