search icon
என் மலர்tooltip icon

    மதுரை

    • 75 ஆண்டு தி.மு.க. அரசியல் வரலாற்றில் 25 முறை தான் தி.மு.க. ஆட்சி செய்துள்ளது.
    • இன்றைக்கு தமிழகத்தில் கொலை, கொள்ளை நடைபெற்று வருகிறது.

    மதுரை:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி, கள்ளிக்குடி ஒன்றியத்தில் வளையங்குளத்தில் சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் ரூ.7 லட்சம் மதிப்பில் நிழற்குடை அமைக்கும் பணியை சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடந்த 10 நாட்களாக பருவ காற்று திசை மாறியதால் இன்றைக்கு மதுரையில் 105 டிகிரி வெயில் சுட்டெரிப்பதால் மக்கள் வேதனைப்பட்டு வருகிறார்கள். பருவ திசை மாற்றத்தால் வெயில் கொடுமை ஒரு பக்கம் இருந்தாலும், மறுபுறம் நாட்டில் யார் துணை முதலமைச்சராக வரவேண்டும் என்று விவாதம் நடைபெற்று வருகிறது. இன்றைக்கு வெயிலின் கொதிகலன் போல, தி.மு.க.வில் யார் துணை முதலமைச்சர் என்கிற கொதிகலன் விவாதம் நடைபெற்று வருகிறது.

    உதயநிதியை மக்கள் பேசப்பட வைக்க வேண்டும் என்றும், தமிழகம் உதயநிதியை சுற்றுவது போன்ற மாயத்தோற்றத்தையும் உருவாக்கி வருகிறார்கள். முதல் முறையாக எம்.எல்.ஏ., அமைச்சர், துணை முதலமைச்சர் என்று சினிமாவில் வருவதை போல உருவாக்க நினைக்கிறார்கள். இது ஜனநாயகத்தை அச்சப்படுத்துவது போல் உள்ளது.

    75 ஆண்டு தி.மு.க. அரசியல் வரலாற்றில் 25 முறை தான் தி.மு.க. ஆட்சி செய்துள்ளது. அண்ணா ஆட்சி உருவாக்கியதை தவிர்த்து மற்றவை எல்லாம் அ.தி.மு.க.வில் குழப்பத்தை ஏற்படுத்தி தி.மு.க. ஆட்சிக்கு வந்துள்ளனர்.

    இன்றைக்கு தமிழகத்தில் கொலை, கொள்ளை நடைபெற்று வருகிறது. போதை பொருள் கடத்தும் கேந்திர நிலையமாக தமிழகம் உள்ளது. இதற்கு பதில் சொல்ல உதயநிதி முன்வருவாரா?

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ரெயில்வே தண்டவாள பராமரிப்பு பணிகள் தனியார் மூலம் ஒப்பந்த அடிப்படையிலும் மேற்கொள்ளப்படுகிறது.
    • தண்டவாள கொக்கிகளை கழற்றிய நபர்கள் அதனை எங்கும் எடுத்துச் செல்லவில்லை.

    மதுரை:

    மதுரை கோட்ட ரெயில்வேக்கு உட்பட்ட மானாமதுரை-ராமநாதபுரம் ரெயில் பாதையில் பரமக்குடி-சூடியூர் இடையே ரெயில்வே தண்டவாள இணைப்பு கொக்கிகள் (கிளிப்புகள்) கழன்று கிடந்தன.

    இந்த சம்பவம் ரெயில்வே வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே, கடந்த ஒரு வருடத்திற்குள் 18 ரெயில் விபத்து சம்பவங்கள் நடந்துள்ளதாக ரெயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் நடந்த இந்த சம்பவம் உன்னிப்பாக பார்க்கப்படுகிறது.

    இது குறித்து காரைக்குடி ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். அதனை தொடர்ந்து என்ஜினீயரிங் பிரிவை சேர்ந்த பணியாளர் ஒருவரிடம் மதுரை ரெயில்வே போலீஸ் துணை சூப்பிரண்டு பொன்னுச்சாமி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. எனவே, ரெயில்வே போலீசார் வேறு கோணத்தில் விசாரணையை தொடங்கி உள்ளனர். இந்த சம்பவத்தால், மதுரை-ராமேசுவரம் ரெயில், விபத்தில் இருந்து தப்பியது. மேலும், கொக்கிகள் கழற்றப்பட்ட சம்பவம் நடந்த ஒரு மணி நேரத்திற்குள் 420 கொக்கிகளும் மாற்றப்பட்டு அந்த பாதையில் வழக்கமான ரெயில் போக்குவரத்து தொடங்கியது. ரெயில்வே தண்டவாள பராமரிப்பு பணிகள் தனியார் மூலம் ஒப்பந்த அடிப்படையிலும் மேற்கொள்ளப்படுகிறது.

    எனவே, வழக்கு விசாரணைக்காக ஒப்பந்த பணியாளர்களிடமும், அந்த பாதையில் ரெயில்களை இயக்கிய என்ஜின் டிரைவர், உதவி டிரைவர் ஆகியோரிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே, போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இந்த சம்பவம் விபத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக செய்யப்படவில்லை என தெரியவருவதாகவும் கூறினர்.

    அதேபோல, கொக்கிகளை கழற்றி இரும்பு கடைகளில் விற்பனை செய்யும் நோக்கத்திலும் நடைபெறவில்லை என்பதும் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த சம்பவத்தை தண்டவாள பராமரிப்பு பணியாளர்கள் அல்லது இந்த பணியில் அனுபவம் உள்ளவர்களை தவிர வேறு யாராலும் செய்ய முடியாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எந்த நோக்கத்திற்காக செய்யப்பட்டது, இந்த செயலில் ஈடுபட்டவர்கள் யார் என்பது மட்டுமே விசாரணையில் தெரிய வேண்டியுள்ளது.

    ஏனெனில், தண்டவாள கொக்கிகளை கழற்றிய நபர்கள் அதனை எங்கும் எடுத்துச் செல்லவில்லை. கழற்றிய இடத்திலேயே வைத்து விட்டு சென்றுள்ளனர். இதனால் சம்பந்தப்பட்ட பிரிவு அதிகாரிகளுக்கும், பணியாளர்களுக்கும் இடையே ஏதும் பிரச்சனையா, ஒப்பந்த தொழிலாளர்களின் சம்பள பிரச்சனையா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

    பாதுகாப்பு காரணங்களுக்காக மதுரை கோட்ட ரெயில்வே பாதுகாப்பு படை கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில், பாதுகாப்பு படையை சேர்ந்த குற்றத்தடுப்பு பிரிவு போலீசாரும் தொழில்நுட்ப ரீதியான விசாரணையில் ரெயில்வே போலீசாருக்கு உதவி வருகின்றனர். அத்துடன், அந்த பகுதியை சுற்றிலும் குடியிருக்கும் குடியிருப்பு வாசிகளிடம் ரெயில்வே போலீசார் பல்வேறு தகவல்களை சேகரித்து வருகின்றனர்.

    • லாவண்யாவை, மதம் மாறச் சொல்லி வலியுறுத்தியதால் தற்கொலை செய்துள்ளார் என அண்ணாமலை அறிக்கை வெளியிட்டிருந்தார்.
    • பள்ளி நிர்வாகி சகாயமேரி கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமினில் வெளியே உள்ளார்.

    2022 தஞ்சையை அடுத்துள்ள மைக்கேல்பட்டி தனியார் கிறிஸ்தவ பள்ளிக்கூட விடுதியில் தங்கி படித்து வந்த அரியலூரை சேர்ந்த பிளஸ்-2 மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்டார்.

    அப்போது மைக்கேல்பட்டி பள்ளி மாணவி லாவண்யாவை, மதம் மாறச் சொல்லி தொடர்ந்து வலியுறுத்தியதால் விஷம் அருந்தி தற்கொலை செய்துள்ளார் என பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டிருந்தார்

    கட்டாய மதமாற்ற முயற்சியே தற்கொலைக்கு காரணம் என்பதால் பள்ளி நிர்வாகிகளை கைது செய்து பள்ளியை மூட வேண்டும் என பாஜக போராட்டம் நடத்தியது.

    மாணவி லாவண்யா தற்கொலை வழக்கில் பள்ளி நிர்வாகி சகாயமேரி கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமினில் வெளியே உள்ளார். மாணவி லாவண்யாவின் வழக்கை விசாரித்து வந்த சிபிஐ திருச்சி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

    இந்நிலையில், இந்த குற்றப்பத்திரிகைக்கு எதிராக சகாயமேரி மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அவரது மனுவில், "மாணவியின் மரணத்திற்கும் எனக்கும் தொடர்பு இல்லை. மதம் மாற அவரை யாரும் வற்புறுத்தவில்லை. குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் இன்று பதிலளித்த சிபிஐ, வழக்கு தொடர்பாக 141 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு, 265 ஆவணங்கள், 7 பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. நன்கு படிக்கும் லாவண்யாவை பிற வேலைகளை செய்ய அறிவுறுத்தியதால் கல்வியில் பின்தங்கும் நிலை ஏற்பட்டது.

    மாணவியை பிற வேலைகள் செய்யுமாறு அறிவுறுத்தியதால், அவர் தற்கொலை செய்துள்ளார். அதற்கான ஆவணங்கள் உள்ளன. ஆனால், மதமாற்றம் செய்ய எந்த முயற்சியும் நடைபெறவில்லை. எனவே குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக்கூடாது" என தெரிவிப்பு தெரிவித்தது.

    இறந்துபோன மாணவி தரப்பு வாதத்திற்காக வழக்கை செப்டம்பர் 24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

    • மணமகன் ஹரிஹரனின் தந்தை மீனாட்சிசுந்தரம், தனது செல்போனில் சமூக வலைதள பதிவவை பார்த்துக் கொண்டிருந்தார்.
    • புதுமணத் தம்பதியினர் தங்களது திருமண நிகழ்ச்சியில் கிடைத்த மொய் பணம் ரூ.1.91 லட்சத்தை புற்றுநோய் சிகிச்சை பிரிவு கட்டிட கட்டுமானத்திற்காக நன்கொடையாக தந்துள்ளனர்.

    மதுரை:

    தேனி மாவட்டம் ஜக்கம்பட்டியில் சென்னையை சேர்ந்த ஐ.டி. என்ஜினீயர் ஹரிஹரன்-தேன்மொழி ஆகியோருக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் மூலம் கிடைத்த திருமண மொய் பணத்தை ஏதாவது ஒரு வகையில் ஏழை மக்களின் உதவிக்காக பயன்படுத்த வேண்டும் என்று இந்த புதுமண தம்பதியினர் திட்டமிட்டனர்.

    இந்த நிலையில் மணமகன் ஹரிஹரனின் தந்தை மீனாட்சிசுந்தரம், தனது செல்போனில் சமூக வலைதள பதிவவை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது மதுரையை அடுத்த திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்த ஒரு தனியார் அறக்கட்டளை புற்றுநோயாளிகளை பராமரிப்பதற்கும், சிகிச்சை அளிப்பதற்கும் தனியாக ஒரு மையம் ஏற்படுத்தி வருவதாகவும், அதற்கு தாராள மனம் கொண்ட நன்கொடையாளர்கள் உதவி செய்யும்படியும் அந்த வீடியோவில் அந்த அறக்கட்டளை சேர்ந்த பால் மாணிக்கம் என்பவர் வீடியோ பதிவிட்டு இருந்ததை பார்த்தார்.

    இந்த தனியார் அறக்கட்டளையின் நோக்கம் நிறைவேற இந்த புதுமணத் தம்பதியினர் உதவும் வகையில் தங்களது திருமணத்தில் கிடைத்த மொய் பணம் ரூ.1.91 லட்சத்தை இந்த அறக்கட்டளையின் புற்றுநோய் சிகிச்சை மையம் கட்டுவதற்கு உதவியாக வழங்க திட்டமிட்டனர். இதற்காக மீனாட்சி சுந்தரம் மற்றும் புதுமண தம்பதியர் ஹரிஹரன்-தேன்மொழி ஆகியோர் திருப்பரங்குன்றம் வந்து அங்குள்ள தனியார் அறக்கட்டளை நிர்வாகிகளிடம் இந்த தொகையை நன்கொடையாக ஒப்படைத்தனர்.

    இது தொடர்பாக அறக்கட்டளை மேலாளர் ரமேஷ் கூறுகையில், புதுமணத் தம்பதியினர் தங்களது திருமண நிகழ்ச்சியில் கிடைத்த மொய் பணம் ரூ.1.91 லட்சத்தை புற்றுநோய் சிகிச்சை பிரிவு கட்டிட கட்டுமானத்திற்காக நன்கொடையாக தந்துள்ளனர். இதை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டுள்ளோம். இந்த மையம் அமைக்க ரூ.40 லட்சம் செலவாகும் என திட்டமிடப்பட்டுள்ளது.

    20 படுக்கைகள் கொண்ட இந்த சிகிச்சை மையத்தில் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கி சிகிச்சை பெறவும், அவர்களுக்கு தேவையான மறுவாழ்வு பணிகளை செய்ய முடிவு செய்துள்ளோம். இந்த புதிய சிகிச்சை மையம் இன்னும் சில வாரங்களில் தயாராகிவிடும் என்றார்.

    திருமணத்திற்கு வந்த மொய் பணத்தை வைத்து எதிர்காலத்திற்கு திட்டமிடும் மணமக்கள் மத்தியில், புற்றுநோய் சிகிச்சை மையம் கட்ட இந்த புதுமணத் தம்பதியின் தன்னலமற்ற சேவையை பலரும் பாராட்டி உள்ளனர்.

    • செல்போனில் அவ்வப்போது சத்தமிட்டு 16-ந்தேதிக்குள் பணத்தை செலுத்தவில்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுப்பதாகவும் மிரட்டும் தொணியில் வங்கி ஊழியர்கள் பேசி உள்ளனர்.
    • இன்று காலை சற்று தெளிந்த நிலையில் அவர்கள் 5 பேரும் ஆட்டோவில் ஆஸ்பத்திரிக்கு சென்றனர்.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ஊராண்ட உரப்பனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பால் பாண்டி (வயது 41). இவரது மனைவி சிவஜோதி (32). இந்த தம்பதியினருக்கு ஜனார்த்தனன் (14) என்ற மகளும், தர்ஷனா (12), தர்ஷிகா (12) என்ற மகள்களும் உள்ளனர். இதில் தர்ஷனா, தர்ஷிகா இருவரும் இரட்டைக் குழந்தைகள். பிள்ளைகள் மூவரும் அருகில் உள்ள கரடிக்கல் அரசு உயர்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் பால்பாண்டி சொந்தமாக வியாபாரம் செய்வதற்கு முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வந்தார். இதையடுத்து இரண்டு தனியார் வங்கிகளில் தனது மனைவி சிவஜோதி பெயரில் ரூ.8 லட்சம் மற்றும் ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் என கடன் வாங்கி உள்ளனர். அந்த பணத்தில் சிவஜோதி என்ற பெயரில் ஊராண்ட உரப்பனூரில் ஊறுகாய் கம்பெனி நடத்தி வந்தனர்.

    இதற்கிடையே வாங்கிய கடனை முறையாக செலுத்தி வந்த நிலையில் ரூ.2,40,000 கடன் பெற்ற தனியார் வங்கிக்கு முறையாக தவணைத்தொகையை செலுத்தவில்லை என கூறி ஊழியர்கள் கடந்த 10-ந்தேதி வீட்டிற்கு வந்து கேட்டுள்ளனர். அப்போது தம்பதியை சரமாரியாக திட்டியதாகவும் கூறப்படுகிறது.

    மேலும் செல்போனில் அவ்வப்போது சத்தமிட்டு 16-ந்தேதிக்குள் பணத்தை செலுத்தவில்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுப்பதாகவும் மிரட்டும் தொணியில் வங்கி ஊழியர்கள் பேசி உள்ளனர். எனவே பணத்தை திரும்ப செலுத்த பல இடங்களிலும் கேட்டும் கிடைக்காததால் மனவிரக்தி அடைந்த பால்பாண்டி தற்கொலை செய்ய முடிவெடுத்தார்.

    பின்னர் உரக்கடையில் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் ஒரு கிலோ குருணை மருந்து வாங்கி வந்துள்ளார். நேற்று இரவு சாப்பிட்டு விட்டு கணவன், மனைவி பிள்ளைகள் மூன்று பேர் என 5 பேரும் இரவில் அந்த குருணை மருந்தை தண்ணீரில் கலந்து குடித்து விட்டு வீட்டிலேயே இருந்துள்ளனர். ஒரு சில விநாடிகளில் அனைவரும் மயங்கினர்.

    இன்று காலை சற்று தெளிந்த நிலையில் அவர்கள் 5 பேரும் ஆட்டோவில் ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அப்போது பால்பாண்டி தனது மகள் வாந்தி எடுப்பதாக டாக்டரிடம் கூறியுள்ளார். அடுத்த சில நிமிடங்களில் மற்ற 4 பேரும் வாந்தி எடுத்ததை பார்த்த மருத்துவக்குழுவினர் அவர்களை உடனடியாக உள்நோயாளிகளாக அனுமதித்தனர். அதன்பிறகு டாக்டர்கள் விசாரித்தபோது, கடன் பிரச்சனை காரணமாக 5 பேரும் விஷம் குடித்து விட்டதாக பால்பாண்டி தெரிவித்தார்.

    இதனை அடுத்து ஐந்து பேருக்கும் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக் கப்பட்டு தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவம் குறித்து தகவல் இருந்த திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    வியாபாரத்திற்காக தனியார் வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தக் கூறி வங்கி ஊழியர்கள் நெருக்கடி கொடுத்ததால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • தமிழகத்தை பொறுத்தவரை அ.தி.மு.க. ஆட்சி தான் மீண்டும் வரும். கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை.
    • தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க. இந்த இரண்டு திராவிட கட்சிகள் தான் மாறி மாறி ஆட்சி அமைக்க முடியும்.

    மதுரை:

    மதுரையில் இன்று முன்னாள் அமைச்சர் செல்லுர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

    கோவையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்ற விழாவில் பேசிய தொழிலதிபர் மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம் தொடர்பாக எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடியார் விரிவான அறிக்கை வெளியிட்டுள்ளார். பாரதிய ஜனதாவின் இந்த நிலைப்பாடு மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். இதனை மக்கள் நன்றாக புரிந்துள்ளனர்.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தின் பெருமை, கலாச்சாரம் ஆகியவற்றை பேணுவதாக பிரதமர் மோடி வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் இப்போது அதற்கு எதிர்மாறாக மத்திய அமைச்சர் நடந்துள்ளார். இது விரும்பத் தகாத சம்பவம் ஆகும்.

    வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. வலிமையான ஒரு இயக்கமாக தேர்தலை சந்திக்கும். அ.தி.மு.க. மகா சமுத்திரம் போன்றது. எங்களுக்கு ஒரே எதிரி தி.மு.க. தான். வேறு யாரையும் நாங்கள் பொருட்படுத்தவில்லை. பாரதிய ஜனதாவை பொருத்தவரை அதன் மதவாதத்தை அ.தி.மு.க. ஒரு போதும் ஏற்கவில்லை. எங்களை பொறுத்தவரை கூட்டணி தேவையில்லை.

    தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளிலேயே தி.மு.க.வின் ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டு விட்டது. தி.மு.க. ஒருமுறை ஆட்சிக்கு வந்தால் தொடர்ந்து மறுமுறை ஆட்சிக்கு வராது இதுதான் வரலாறு. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விட பல மடங்கு திறமை கொண்டவராக எடப்பாடியாரை மக்கள் பார்க்கிறார்கள். எனவே வருகிற 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில் அ.தி.மு.க. மகத்தான வெற்றியை பெறும். மீண்டும் எடப்பாடியார் முதலமைச்சராக வருவார்.

    தமிழகத்தை பொறுத்தவரை அ.தி.மு.க. ஆட்சி தான் மீண்டும் வரும். கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை. தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க. இந்த இரண்டு திராவிட கட்சிகள் தான் மாறி மாறி ஆட்சி அமைக்க முடியும். கூட்டணி ஆட்சி என்பது தமிழக மக்களால் விரும்பத்தகாத ஒன்றாகும். கூட்டணி ஆட்சி அமைந்த மகாராஷ்டிரா உள்ளிட்ட வடமாநிலங்களில் நிலைமை என்னவாக இருக்கிறது என்று மக்களுக்கு நன்றாக தெரியும். எனவே தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடம் இல்லை.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சுற்றுப்பயணம் செய்து தொழில் முதலீட்டை ஈர்த்து வந்துள்ளதாக கூறுகிறார். ஆனால் இதுவரை பல முதலமைச்சர்கள் அமெரிக்காவுக்கு சென்றுள்ளனர். இவர் மக்களின் வரிப்பணத்தில் ஜாலியாக சுற்றுலா சென்று வந்துள்ளார். மற்றபடி அதில் குறிப்பிடத்தக்க ஒன்றுமில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • போதை பொருட்கள் எங்கு பார்த்தாலும் கிடைக்கிறது.
    • போதை பொருட்களால் இளைஞர்கள் அழிந்து கொண்டிருக்கிறார்கள்.

    மதுரை:

    மதுரையில் இன்று நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதல்வர் வெளிநாட்டில் 17 நாட்கள் தங்கி 19 நிறுவனங்கள் மூலம் மொத்தம் ரூ.7600 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டு இருக்கிறார். 17 நாட்களில் வெறும் 7,600 கோடி ரூபாய் ஒப்பந்தம் செய்திருப்பதை தோல்வியாக தான் நாங்கள் பார்க்கிறோம். இவ்வளவு நாட்கள் சென்று குறைந்த முதலீடு தான் பெற்றிருக்கிறார்.

    மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர், மதுக்கடையை உடனடியாக மூடினால் தமிழ்நாட்டின் சூழல் மோசமாகிவிடும் என தமிழக மக்களை கொச்சைப்படுத்தி பேசியுள்ளார். தமிழக இளைஞர்கள் கெடுத்ததே தி.மு.க.தான். தமிழகத்தில் மது இல்லாமல் இருக்கமுடியாத நிலையை உருவாக்கியதே திராடவிட மாடல் அரசுதான்.

    மதுவிலக்கு பிரச்சனைகளைப் பற்றி தொடர்ந்து பேசுகின்ற கனிமொழி மூன்று ஆண்டுகாலம் மவுனமாக இருக்கிறார். அனைத்து விதமான போதைப் பொருட்களும் எங்கு பார்த்தாலும் கிடைக்கிறது. முதலமைச்சர் என்ன தான் செய்து கொண்டிருக்கிறார். இளைஞர்கள் அழிந்து கொண்டிருக்கிறார்கள், காவல்துறை எதற்கு இருக்கிறது?

    சென்னை கோவளத்தில் ஹெலிகாப்டர் சர்வீஸ் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வெளிநாட்டு பறவைகள் அதிகமாக வரும் போது சென்னைக்கு தான் மூன்று மடங்கு அதிகமான பறவைகள் வருகிறது. இதனால் சுற்றுச்சூழலுக்கு நெருக்கடி ஏற்படும். இந்த திட்டத்தை தவிர்த்து மூட வேண்டும்.

    பாட்டாளி மக்கள் கட்சி சமூக நீதிக் கட்சி. எங்கள் தலைவர் தமிழ்நாட்டில் அருந்ததியர் சமுதாயத்திற்கு உள்ஒதுக்கீடு வாங்கி தந்துள்ளார். இஸ்லாமியருக்கும் இட ஒதுக்கீடு வாங்கி தந்துள்ளார்.

    திருமாவளவன் மது விலக்கு மாநாடு நடத்தினால் ஆதரிக்கிறோம். மது ஒழிப்பு தொடர்பாக நாங்கள் பி.எச்.டி. படித்துள்ளோம், திருமாவளவன் எல்.கே.ஜி. தான் படித்திருக்கிறார். தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.

    ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என்ற திருமாவளவன் பதிவு சரியானது. அதை ஏன் நீக்க வேண்டும்? தி.மு.க. ஆட்சிக்கு வரவேண்டும் என கட்சி தொடங்கவில்லை. அதை நீக்கியது தான் சரியில்லை.

    நாடு முழுவதும் மது விலக்கு கோரிக்கையை கண்டிப்பாக வைப்போம். மதுவிலக்கை எல்லா மாநிலங்களிலும் இதை செய்ய வேண்டும் படிப்படியாக கொண்டு வர வேண்டும். தமிழ்நாடு அரசு மதுவை விற்கவில்லை, திணிக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சாதி, மத வேறுபாடு இன்றி அனைவரையும் தமிழர்களாக இணைத்து மது ஒழிப்பு மாநாட்டை நடத்தலாம்.
    • இப்போதைய நிலையில் நடிகர் விஜய் கூட தனித்து தேர்தலில் நிற்க முடியாது.

    மதுரை:

    முக்குலத்தோர் புலிப்படை நிறுவனத்தலைவரும், நடிகருமான கருணாஸ் மதுரையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    முத்துராமலிங்க தேவரின் குருபூஜையை முன்னிட்டு தேசத்திற்காக போராடியவர்களின் போராட்டங்கள், தியாகங்கள் குறித்து எடுத்துரைத்து பேச தமிழகம் முழுவதும் தொடர்ச்சியாக பயணம் செய்து சொற்பொழிவு நடத்த இருக்கிறேன். சமூக வலைத்தளங்களின் மூலம் தற்போதைய இளைஞர்கள் மத்தியில் தவறான தகவல்கள் சென்றடைந்து விடுகின்றன. இதனை மாற்றி உண்மையான வரலாற்றை மக்களை சந்தித்து பேச இருக்கிறேன். அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர் உண்மையை பேசினார். அவரை கட்டாயப்படுத்தி மன்னிப்பு கேட்கவைத்துள்ளனர். இது சர்வாதிகாரபோக்கு. இதை ஒட்டு மொத்த தமிழக மக்கள் மற்றும் தமிழக வியாபாரிகளின் அவமானமாக கருதுகிறேன். பிரதமர் டுவிட்டர், பேஸ்புக்கில் கருத்து சொல்கிறார். அதற்கு பதில் அளிக்கும் வகையில் நாங்களும் சமூகவலைத்தளங்கள் மூலம் பதில் அளித்து வருகிறோம். அரசியலுக்கு வருவது எளிதல்ல. நடிகர் விஜய்யின் கொள்கை, சித்தாந்தம் குறித்து பேசினால், அதன்பின்னர் அவருடன் கூட்டணி வைப்பது பற்றி யோசிக்கலாம்.

    விடுதலை சிறுத்தைகள் நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டுக்கு எனக்கு அழைப்பு இல்லை. சாதி, மத அமைப்புகளுக்கு அழைப்பு இல்லை என்கிறார் திருமாவளவன். இவ்வளவு நாள் அவர் என்ன செய்தார்?. பா.ம.க. சாதிக்கட்சி என்றால், விடுதலை சிறுத்தைகள் என்ன கட்சி?. அர்ஜூன் ரெட்டி விடுதலை சிறுத்தைகளில் சேர்ந்ததால் அது தேசிய கட்சியாக மாறிவிட்டதா?.

    அக்கட்சி செய்வது பொது அரசியலா? சுய அரசியலா? என்பது தெரியவில்லை. சாதி, மத வேறுபாடு இன்றி அனைவரையும் தமிழர்களாக இணைத்து மது ஒழிப்பு மாநாட்டை நடத்தலாம். மது ஒழிப்பு மாநாடு என்பது ஓர் அரசியல் நாடகமாக இருக்கிறது. இப்போதைய நிலையில் நடிகர் விஜய் கூட தனித்து தேர்தலில் நிற்க முடியாது. நான் தனித்து நின்றால், நானும் எனது மனைவியை தவிர யாரும் ஓட்டு போடமாட்டார்கள். இது கள யதார்த்தம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அனுமதி பெறாமல் நட இருந்த கொடிக்கம்பத்தை காவல்துறையினர் அப்புறப்படுத்திச் சென்றனர்.
    • கொடிக்கம்பத்தை எடுத்துச் சென்றதைக் கண்டித்து வி.சி.க நிர்வாகிகள் போராட்டம் நடத்தினர்.

    மதுரையில் காவல்துறையினர் எடுத்துச் சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடிக்கம்பம் மீண்டும் நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    கொடிகம்பத்தை மீண்டும் வழங்கியதால் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் நடனமாடி கொண்டாடினர்.

    புதூர் பகுதியில் அனுமதி பெறாமல் நட இருந்த கொடிக்கம்பத்தை காவல்துறையினர் அப்புறப்படுத்திச் சென்றனர்.

    இதனால், கொடிக்கம்பத்தை எடுத்துச் சென்றதைக் கண்டித்து வி.சி.க நிர்வாகிகள் போராட்டம் நடத்தினர்.

    இந்நிலையில், விசிக கொடுக்கம்பம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கிரேன் மூலம் எடுத்து வரப்பட்ட 62 அடி உயர கொடிக்கம்பத்தை நடுவதற்கான பணியில் விசிக நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர்.

    விசிக கொடி ஏற்றுவதில் பல்வேறு காரணங்களை கூறி மதுரை ஆட்சியர் தடை செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக, மூத்த அமைச்சர்கள் கவனத்திற்கு கொண்டு செல்வோம் என திருமாவளவன் கூறி இருந்த நிலையில் கொடிக்கம்பம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    • நிதியமைச்சரிடம் அன்னபூர்ணா உணவக உரிமையாளர் மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல் ஆனது.
    • அன்னபூர்ணா உணவக உரிமையாளருக்கு ஆதரவாக பல அரசியல் தலைவர்கள் குரல் கொடுத்துள்ளனர்.

    ஜிஎஸ்டி குறித்து தனது ஆதங்கத்தை தெரிவித்த அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த வீடியோவில் நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா உணவக உரிமையாளர் மன்னிப்பு கேட்ட காட்சிகள் பதிவாகி உள்ளன.

    இந்நிலையில் அன்னபூர்ணா உணவக உரிமையாளர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட சம்பவம் தொடர்பாக நடிகர் கருணாஸ் காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார்.

    மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கருணாஸ், "நான் நாட்டிற்கு ஜி.எஸ்.டி. வரி செலுத்துகிறேன். நான் உட்பட பொதுமக்கள் செலுத்தும் ஜிஎஸ்டி வரி நாட்டு மக்களின் நலன்களுக்கு செலவிடப்படுவதில்லை. மக்களிடம் இருந்து பெறக்கூடிய ஜிஎஸ்டி வரியில் இருந்து அம்பானி, அதானி போன்றவர்களை வளர்த்துவிடுவதற்கு நான் ஏன் உழைக்க வேண்டும்.

    அன்னபூர்ணா முதலாளி சராசரி குடும்பத்தில் பிறந்து உழைத்து இந்த முன்னேறியுள்ளார்.நிதியமைச்சரிடம் அவர் பன்னுக்கு வரி இல்லை அதில் தடவுகிற ஜாமுக்கு 18% வரி போடுகிறீர்கள். இனிப்புக்கு ஒரு வரி காரத்துக்கு ஒரு வரி என குழப்பங்கள் இருப்பதாக கேட்கிறார். அவரை அடுத்த நாள் அழைத்து மன்னிப்பு கேட்க வைத்து தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வியாபாரிகளையே அவமானப்படுத்தியுள்ளார் நிதியமைச்சர். இதைவிட ஒரு சர்வாதிகாரம் என்ன இருக்க முடியும்" என்று தெரிவித்துள்ளார்.

    • காமராஜர் தோற்கடிக்கப்பட்டதற்கு காரணம் திராவிடம் அல்ல. தமிழ் மீது கொண்ட பற்று தான் காரணம்.
    • டெல்லியிலிருந்து இந்தியிலும், ஆங்கிலத்திலும் கடிதம் வருகிறது. ஏன் தமிழில் கடிதம் அனுப்ப மாட்டீர்களா?

    திருமங்கலம்:

    மதுரை திருமங்கலத்தில் நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசியதாவது:-

    பிரதமர் மோடி வெளிநாடு சென்றால் உலகின் மூத்த மொழி தமிழ் என்று பேசி வருகிறார். முதல்-அமைச்சர் அமெரிக்கா சென்று அங்குள்ள தமிழர்களிடம் தமிழின் பெருமை பற்றி பேசுகிறார். ஆனால் தமிழகத்தில் என்றாவது பேசியதுண்டா. தன் தாய் மொழியை மீட்க தமிழ் பிள்ளைகள் போராட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். தற்போது தெருக்கள், சாலைகள், காலனிகள் எல்லாம் ஆங்கிலத்தில் அழைக்கும் நிலை உருவாகியுள்ளது.

    காமராஜர் தோற்கடிக்கப்பட்டதற்கு காரணம் திராவிடம் அல்ல. தமிழ் மீது கொண்ட பற்று தான் காரணம். உலகில் எல்லா மொழிகளும் மனிதனால் பேசப்பட்டது. தமிழ் ஒன்று தான் இறைவனால் பாடப்பட்டது. கீழடியில் 2 ஏக்கர் மட்டுமே தோண்டப்பட்டு உள்ளது. அங்குள்ள 100 ஏக்கர் நிலங்களையும் தோண்டி ஆய்வு நடத்த வேண்டும் அப்போதுதான் தமிழனின் முழுமையான வரலாறு தெரியும்.

    தமிழகத்தில் எல்லோருக்கும் சிலை உள்ளது. ஆனால் வேலுநாச்சியாருக்கு சிலை இல்லை. நான்காம் தமிழ் சங்கம் வளர்த்த பாண்டித்துரை தேவருக்கு மரப்பாச்சி பொம்மை அளவில் தான் மதுரையில் சிலை வைக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் சீனர், ஜப்பானியர்கள் என அனைவரும் அழகாக தமிழ் பேசுகிறார்கள். ஆனால் நம்மிடத்தில் தமிழ் இல்லை.

    டெல்லியிலிருந்து இந்தியிலும், ஆங்கிலத்திலும் கடிதம் வருகிறது. ஏன் தமிழில் கடிதம் அனுப்ப மாட்டீர்களா? என கேட்க யாரும் முன்வரவில்லை. தாய் மொழி தமிழ் நம் கண் முன்னே அழிந்து போவதை வேடிக்கை பார்ப்பதா?

    மலை, மணல் திருடினால் பரவாயில்லை-எனக்கு ஆயிரம் ரூபாய் கொடுங்கள் என்று கேட்கும் நிலைதான் இங்கு உள்ளது. சீமான் வந்த பிறகு அனைத்தையும் தமிழில் தான் பேசுவார்கள். இந்தி படித்தால் எல்லா இடங்களிலும் வேலை கிடைத்து விட்டதா? இந்தி படித்தவன் தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் நுழைந்து விட்டான்.

    அமெரிக்கா சென்ற முதலமைச்சர் முதலீடுகளை ஈர்த்துக்கொண்டு மூட்டைகளை தூக்கிக்கொண்டு வந்து விடுவார். அதை நான் தான் சென்று இறக்க வேண்டும்.

    திருமாவளவனுக்கு வந்த தைரியத்தை பாராட்டுகிறேன். ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும். ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற திருமாவளவனின் கருத்தை ஆதரிக்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • சில மணிநேரங்களில் வீடியோ எக்ஸ் வலைதளத்தில் இருந்து நீக்கப்பட்டது.
    • வீடியோ குறித்து தனக்கு எதுவும் தெரியாது.

    மதுரை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் எக்ஸ் வலைதளத்தில் இன்று ஒரு வீடியோ வெளியிடப்பட்டது. அதில் திருமாவளவன் ஆட்சியில் அதிகாரத்திலும் பங்கு வேண்டுமென பேசி இருந்தார். இந்த வீடியோ மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதனிடையே சில மணிநேரங்களில் அந்த வீடியோ எக்ஸ் வலைதளத்தில் இருந்து நீக்கப்பட்டது.

    இதற்கிடையில் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று மதியம் மதுரை வந்த வி.சி.க. தலைவர் திருமாவளவனிடம் நிருபர்கள் ஆட்சி அதிகாரம் குறித்த வீடியோ குறித்து கேள்வி எழுப்பினர்.

    அப்போது அவர் வீடியோ குறித்து தனக்கு எதுவும் தெரியாது. என்னுடைய எக்ஸ் தளத்தில் தவறுதலாக பதிவு செய்திருக்கலாம். ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற எங்களின் நிலைபாடு நீண்ட காலமாக உள்ளது என்றார்.

    ×