சமையல்

சமையலில் ஜமாய்க்க விரும்பும் பெண்ணா நீங்கள் உங்களுக்கான சமையல் குறிப்புகள்....

Published On 2024-10-20 04:10 GMT   |   Update On 2024-10-20 04:10 GMT
  • தாளிக்கும் போது மிளகாய் வற்றல் கருகாமல் இருக்க தண்ணீரில் கழுவிட்டு பயன்படுத்தலாம்.
  • சாம்பார் கொதித்த பின்னரே காய்கறிகளை போடவேண்டும்.

* ரவா உப்புமா அல்லது கிச்சடி செய்து அடுப்பிலிருந்து இறக்கும் முன் ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் விட்டு ஒருமுறை கிளறவும். வாசனையும் சுவையும் அற்புதமாக இருக்கும். தமிழ்நாட்டில் நாம் அதிகமாக தேங்காய் எண்ணெய் உபயோகிப்பதில்லை. ஒருமுறை முயற்சித்துப் பாருங்களேன்.

* சாம்பார் சாதம் தயார் செய்த பின் 15-20 சுண்டைக் காய்களை நல்லெண்ணெயில் வறுத்து சாதத்தில் கலக்கவும். பிரமாத சுவையுடன் இருக்கும்.

* புளியோதரை சாதம் செய்த பின், தனியா 2 ஸ்பூன், கடலைப்பருப்பு 1 ஸ்பூன், காய்ந்த மிளகாய் 6. வெந்தயம் 5 ஸ்பூன், வேர்க்கடலை 10 முதல் 12 வரை, சிறிது கறிவேப்பிலை ஆகியவற்றை லேசாக வாணலியில் வறுத்து பொடி செய்து சாதத்தில் கலக்கவும். அப்போது, தனிச்சுவையுடன் கூடிய புளியோதரை சாப்பிடலாம்.

* தக்காளி தொக்கு செய்ய மிக்சியில் தக்காளியுடன் சிறிதுபுளி, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், சிறிது வெல்லம், இரண்டு ஸ்பூன் இட்லி மிளகாய்ப் பொடி, உப்பு, கொத்தமல்லி சேர்த்து அரைத்து செய்தால் சுவையோ சுவை.

* கொத்தமல்லி, புளி, வெல்லம். இட்லி மிளகாய்ப் பொடி, பச்சை மிளகாய் அரைத்து, கடுகு தாளித்தால், தொட்டுக்கொள்ள ருசியான அவசர சட்னி ரெடி.

* காலை செய்த பொரியல் மீதி இருந்தால் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், மிளகாய்ப் பொடி, கரம் மசாலா சிறிது சேர்த்து பிசைந்துகொள்ளவும். மைதா மாவில் தோய்த்து, பிரட் தூளில் புரட்டி, எண்ணெயில் பொரித்து எடுத்தால், சுவையான கட்லட் தயார்.

* சாம்பார் வைத்து அடுப்பில் இருந்து இறக்கும்போது, மிக்சியில் ஒன்றிரண்டாக பொடித்த தனியா தூளை சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்குங்கள். சாம்பார் கமகமக்கும்.

* பிரட் சாண்ட்விச் செய்யும்போது பட்டர், வெள்ளரி, கேரட் வைத்து, அதனுடன் ஏதேனும் முறுக்கு அல்லது மிக்சர் வைத்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.

* சாபூதானா கிச்சடி (ஜவ்வரிசி) செய்த பின், பொடித்த வேர்க்கடலையுடன் தனியா, காய்ந்த மிளகாய், பொட்டுக் கடலை வறுத்து பொடி செய்து போடவும். இப்போது சுவை அள்ளும்.

*வீட்டில் தேங்காய் இல்லாவிட்டால், பொட்டுக்கடலை சிறிது, உப்பு, கொத்தமல்லி, சிறிது புளி சேர்த்து அரைத்து கடுகு தாளித்தால், திடீர் சட்னி தயாராகி விடும்.

* தோசை மாவுடன் வறுத்த ரவாவை கலந்து சுட தோசை மொறு மொறுப்பாக இருக்கும்.

* தாளிக்கும் போது மிளகாய் வற்றல் கருகாமல் இருக்க தண்ணீரில் கழுவி நன்றாக துணியில் துடைத்துவிட்டு கத்தரியால் நறுக்கிக் கொள்ளலாம்.

* புளிக் குழம்பு, ரசம் போன்றவற்றிற்கு புளியை ஊற வைக்கும்போது உப்பையும் சேர்த்து ஊற வைக்க வேண்டும். அப்போது தான் சுவையும் நன்றாக இருக்கும்

* காய்கறிகள் வாடிப்போய் இருந்தால் தண்ணீரில் எலுமிச்சை சாறு கலந்து காய்கறிகளை சிறிது நேரம் ஊறவிட்டு எடுத்தால் பசுமையாக இருக்கும்.

* இரவே உருளைக்கிழங்கை நறுக்கி வைக்க வேண்டுமா? எலுமிச்சை சாற்றில் கிழங்கு துண்டுகளைப்போட்டு பிரட்டி எடுத்து வைத்தால் கிழங்கு கறுத்துப்போகாமல் இருக்கும்.

* முருங்கைக் கீரை தண்ணீர் சாறு வைக்கும் போது அரிசி களைந்த நீரில் அளவான உப்பிட்டு வெங்காயம் அரிந்து போட்டு தண்ணீர் கொதிவந்ததும் கீரையைப் போடவேண்டும். தாளிக்கும் போது மிளகாய் போட்டு சீரகத்தை நுணுக்கிப் போடவேண்டும். கடுகு போட வேண்டாம். நல்ல சுவை கிடைக்கும்.

* சாம்பார் கொதித்த பின்னரே காய்கறிகளை போடவேண்டும். காய்கறிகள் வெந்ததும் புளி கரைசலில் கலந்து அதன் பிறகு தாளிக்கவேண்டும்.

* அரிசியையும் பருப்பையும் வாசனை வரும் வரை வறுத்து, பின்னர் களைந்து போட்டு பொங்கல் செய்தால் சீக்கிரம் வெந்து விடுவதுடன் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.

Tags:    

Similar News