உள்ளூர் செய்திகள்
தோரணமலையில் பாரதி- செல்லம்மாள் ரதத்திற்கு வரவேற்பு அளிக்கப்பட்ட காட்சி.

தோரணமலையில் சீர் வரிசைகளுடன் பாரதி- செல்லம்மாள் ரதத்திற்கு வரவேற்பு

Published On 2022-05-30 15:32 IST   |   Update On 2022-05-30 15:32:00 IST
கடையம் அருகே உள்ள தோரணமலையில் சென்னையில் இருந்து தொடங்கிய பாரதி- செல்லம்மாள் ரதத்திற்கு சீர் வரிசைகளுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
கடையம்:

சேவாலயா தொண்டு நிறுவனம் சார்பில் பாரதியாரின் 125-வது திருமண நாளை ஒட்டி கடையத்தில் நிறுவப்பட உள்ள பாரதி- செல்லம்மாள் சிலை சென்னையில் இருந்து தமிழகம் முழுவதும் சுமார் 1,000 கிலோ மீட்டர் தூரம் பயணித்து கடையம் அருகே உள்ள தோரணமலை வந்தடைந்தது .

தோரணமலை முருகன் கோவில் நிர்வாகி செண்பகராமன் கோவில் நிர்வாகம் சார்பில் சீர்வரிசை தட்டுகள், மாலை மரியாதை , மங்கள வாத்தியம், மேளதாளங்கள் முழங்க பூரண கும்ப மரியாதையுடன்  ரதத்தை வரவேற்றார்.

இதையடுத்து மலையில் கீழே  உள்ள உற்சவ மூர்த்திக்கு அபிஷேகம்,ஆராதனைகள் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.  பாரதியார் முருகனின் தரிசனம் காணும் வண்ணம் ரதம் நிறுத்தப்பட்டு பொதுமக்கள், பக்தர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தி வழிபட்டனர்.

சேவாலயா நிறுவனர் முரளிதரன், கோவிந்தபேரி பஞ்சாயத்து தலைவர் டி.கே. பாண்டியன், தொழிலதிபர் எஸ். ஆர் .டி. சேவாலயா கிங்ஸ்டன், சங்கிலிபூதத்தான் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக ஆழ்வார்குறிச்சியில் நடந்த பாரதியார் சிலை வரவேற்பில் முன்னாள் தலைமை ஆசிரியர் ஆழ்வார்குறிச்சி ஆயில்யன் என்ற மாடசாமி தலைமையில் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

அடுத்து ரவண சமுத்திரத்தில் சிவன் கோவில் முன்பு நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் ரவண சமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் முகமது உசேன், கோவிந்தப்பேரி பஞ்சாயத்து தலைவரும் 23 பஞ்சாயத்து கூட்டமைப்பின் தலைவருமான டி.கே. பாண்டியன் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் மணிகண்டன், ஆசிரியர் நீலகண்டன் மற்றும் கிராம பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர். ரவணசமுத்திரம் பஞ்சாயத்து செயலர் மாரியப்பன் நன்றி கூறினார்.
Tags:    

Similar News