உள்ளூர் செய்திகள்

ரூ.115 கோடியில் 6 புதிய திட்டப்பணிகள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

Published On 2024-08-26 08:57 GMT   |   Update On 2024-08-26 09:01 GMT
  • ரூ.4,378 கோடி மதிப்பீட்டிலான 219 திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார்.
  • புதிய தாலுகா அலுவலகம்-நவீன சலவை கூடம் திறப்பு

சென்னை:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 14.3.2024 அன்று சென்னை, தங்க சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வடசென்னை பகுதிக்கு விரிவான வளர்ச்சியை உறுதி செய்திடும் வகையில் ரூ.4,378 கோடி மதிப்பீட்டிலான 219 திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் சென்னை, வில்லிவாக்கம், பாடி மேம்பாலத்தின்கீழ், சிவசக்தி காலனியில் சுமார் 3.93 ஏக்கர் பரப்பளவில் 53.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 1,25,402 சதுர அடி கட்டிடப் பரப்பளவில் தரைதளத்தில் 64 கடைகளும், அலுவலக அறையும், இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமும், முதல் தளத்தில் 70 கடைகளும், இரண்டாம் தளத்தில் உணவு விடுதி வளாகம் உள்பட 54 கடைகளும், முற்றத்தில் மீன் வள அமைப்புகள் என மொத்தம் 188 கடைகளுடன் அமைக்கப்பட உள்ள சர்வதேச தரத்திலான கொளத்தூர் வண்ண மீன்கள் வர்த்தக மையம் அமைவதற்கு இன்று அடிக்கல் நாட்டினார்.

மேலும் ராயபுரம் மூலகொத்தலத்தில் சுமார் 0.67 ஏக்கர் பரப்பளவில் 14.31 கோடி ரூபாய் மதிப் பீட்டில் 41,593 சதுர அடி கட்டிட பரப்பளவில் அடித்தளம் மற்றும் இரண்டு தளங்களுடன் கூடிய சமுதாய நலக்கூடம், புரசைவாக்கம், கான்ரான் ஸ்மித் சாலையில் சுமார் 1.04 ஏக்கர் பரப்பளவில் 11.43 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 45,198 சதுர அடி கட்டிட பரப்பளவில் தரைதளத்தில் சலவைக் கூடங்கள், எந்திரக் கூடங்கள், துவைக்கும் கூடங்கள், உலர்த்தும் இயந்திரங்கள் மற்றும் துணி துவைக்கும் இடம், இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமும், முதல் தளத்தில் துணி உலர்த்தும் இடம், என 60 அறைகள் கொண்ட நவீன சலவைக்கூடம்.

புழல் ஏரிக்கரையில் சுமார் 8.17 ஏக்கர் பரப்பளவில் 16.96 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபாதை, இயற்கை காட்சி அமைப்புடன் கூடிய உயர்மட்ட நடைபாதை, மியாவாக்கி காடு வளர்ப்பு, குழந்தைகளுக்கான கண்காட்சி இடம், இயற்கை குளம், குடிநீர் மற்றும் நவீன கழிப்பறை போன்ற அனைத்து வசதிகளுடன் மேம்படுத்தப்பட உள்ள புழல் ஏரிக்கரை.

ரெட்டேரி ஏரிக்கரையில் சுமார் 4.38 ஏக்கர் பரப்பளவில் 13.12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நுழை வாயில் அரங்கம், இணைக்கும் பாலங்கள், இயற்கை தோட்டம் மற்றும் பூங்கா, நடைபாதை, சூரிய மின்கலம் கொண்ட நிழல் இருக்கைகள், உடற்பயிற்சி கூடங்கள், குழந்தைக ளுக்கான விளையாட்டு பகுதி, வாகன நிறுத்துமிடங்கள், குடிநீர் மற்றும் நவீன கழிப்பறை போன்ற அனைத்து வசதிகளுடன் மேம்படுத்தப்படவுள்ள ரெட்டேரி ஏரிக்கரை.

கொளத்தூர் ஏரிக்கரையில் சுமார் 0.4 ஏக்கர் பரப்பளவில் 6.26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இயற்கை நடைபாதை, படகு சவாரி, குழந்தைகளுக்கான விளையாட்டு பகுதி, செயற்கை நீர்வீழ்ச்சி, இசை பூங்கா, ஒளிரும் மீன் சிற்பங்கள், குடிநீர் மற்றும் நவீன கழிப்பறை போன்ற அனைத்து வசதிகளுடன் மேம்படுத்தப்பட உள்ள கொளத்தூர் ஏரிக்கரை என மொத்தம் 115.58 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 6 புதிய திட்டப்பணிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

கொளத்தூர், நேர்மை நகரில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் 2.50 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மண்டல உதவி ஆணையாளர் அலுவலகம், கொளத்தூர், ஜி.கே.எம் காலனி, ஜம்புலிங்கம் தெருவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வட்டாட்சியர் அலுவலகம், அயனாவரம், சி.கே.சாலையில் 2.27 கோடி ரூபாய் செலவில் நவீன சலவைக் கூடம் மற்றும் 45 லட்சம் ரூபாய் செலவில் 3 நியாய விலைக் கடைகள் என மொத்தம் 5.22 கோடி செலவில் முடிவுற்றப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, அனிதா ராதாகிருஷ்ணன், பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா, எம்.பி.க்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, கிரிராஜன், எம்.எல்.ஏ.க்கள் சுதர்சனம், தாயகம் கவி, வெற்றியழகன், ஆர்.மூர்த்தி, ஜே.ஜே.எபினேசர், ஆர்.டி.சேகர், ஜோசப் சாமுவேல், துணை மேயர் மு.மகேஷ் குமார், தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு வாரியத் தலைவர் ரங்கநாதன்மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News