வால்பாறை அருகே ஆம்புலன்ஸ் வாகனத்தை வழிமறித்து நின்ற காட்டு யானை
- தண்ணீர் தேவைக்காக பொதுமக்கள் பயணிக்கும் சாலைகளில் உலா வருகின்றன.
- நீண்ட நேரம் சாலையில் பொறுமையாக நின்று உணவருந்தியது.
வால்பாறை:
கோவை மாவட்டம் வால்பாறை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தில் யானை, சிறுத்தை, சிங்கவால் குரங்கு உள்ளிட்ட வனவிலங்குகள் ஏராளம் உள்ளன.
தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக வனவிலங்குகள் அவ்வப்போது பொதுமக்கள் பயணிக்கும் சாலைகளில் உலா வருகின்றன.
இந்நிலையில் நேற்று மாலை ஆழியார்-வால்பாறை சாலையில் உள்ள சின்னார்பதி அருகே ஒற்றை காட்டு யானை சாலையில் உலா வந்தது. அப்போது பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை நோக்கி சென்ற ஆம்புலன்ஸ் வாகனத்தை வழிமறித்து, அப்பகுதியிலேயே முகாமிட்டது. மேலும் நீண்ட நேரம் சாலையில் பொறுமையாக நின்று உணவருந்தியது.
இதனால் நீண்ட நேரமாக ஆம்புலன்ஸ் செல்ல முடியாமல் தவிப்புக்குள்ளானது. பின்னர் யானை அங்கிருந்து வனப்பகுதி க்குள் சென்றபிறகே ஆம்புலன்ஸ் மற்றும் மற்ற வாகனங்களால் அந்த இடத்தை கடந்து செல்ல முடிந்தது.
ஆழியார்-வால்பாறை சாலையில் ஒற்றை காட்டு யானை உலா வருவதால் சுற்றுலா பயணிகள் கவனமாக செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.