உள்ளூர் செய்திகள் (District)

குலசை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2024-10-03 05:06 GMT   |   Update On 2024-10-03 05:06 GMT
  • நவராத்திரி விழாவே இங்கு தசரா விழாவாக கொண்டாடப்படுகிறது.
  • முக்கிய நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் வருகிற 12-ந்தேதி

உடன்குடி:

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே அமைந்துள்ள அழகிய கடற்கரை நகரம் குலசேகரன்பட்டினம்.

இங்கு வீற்றிற்கும் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன். அம்மையும், அப்பனும் ஒரு சேர வீற்றிருக்கும் காட்சி மற்ற கோவில்களில் காண இயலாத காட்சியாகும். நவராத்திரி விழாவே இங்கு தசரா விழாவாக கொண்டாடப்படுகிறது.


இச்சிறப்பு மிக்க தசரா திருவிழாவையொட்டி நேற்று காளி பூஜையும், அன்ன தானமும் நடந்ததது. நேற்றுஇரவு 9 மணிக்கு அம்மனுக்குகாப்பு கட்டினர். இன்று அதிகாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடி பட்டம் ஊர்வலம் கோவிலில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலுக்கு வந்தது. காலை 9.30 மணிக்கு வேத மந்திரங்கள் முழங்க கோவில் முன்பு உள்ள கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது.

தொடர்ந்து கொடி மரத்திற்கு பல்வேறு வகையான அபிஷேகம் நடந்தது. இதில் பல்லாயிரகணக்கான பக்தர்கள் கடலில் நீராடி புனித நீரை சுமந்து கோவிலுக்கு வந்தனர். ஓம் காளி ஜெய் காளி என்று கோஷமிட்டனர்.

கோவில் கலையரங்கத்தில் சிவலூர் தசரா குழு சார்பிலும், கடற்கரையில் சந்தையடியூர் தசரா குழு சார்பிலும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இன்று முதல் தினசரிமாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை கோயில் கலையரங்கத்தில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. கொடியேற்றம் நடந்தவுடன் கோவில் பூசாரி விரதம் இருந்து வந்த பக்தர்களுக்கு காப்பு கட்டினார். இன்று இரவு 10 மணிக்கு அன்னை முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் துர்க்கை கோலத்தில் வீதி உலா நடக்கிறது.

நாளை (4-ந் முதல் வருகிற 11-ந்தேதி வரை தினசரி காலை முதல் இரவு வரைசிறப்பு அபிஷேக ஆரா தனையும் மதியம் 12 மணிக்கு சிறப்பு அன்னதானமும் நடக்கிறது.

2-ம் திருநாளில் அன்னை கற்பக விருட்சம் வாகனத்தில் விசுவகர்மேசுவரர் கோலம், 3-ம் நாள் திருவிழாவில் ரிஷபம் வாகனத்தில் பார்வதி திருக்கோலம், 4-ம் திருநாளில் அன்னை மயில் வாகனத்தில் பாலசுப்பிரமணியர் திருக்கோலம், 5-ம் திருநாளில் காமதேனு வாகனத்தில் நவநீதகிருஷ்ணர் திருக்கோலம், 6-ம் திருநாளில் சிம்ம வாகனத்தில் மகிஷாசுர மர்த்தினி திருக்கோலம், 7-ம் திருநாளில் அன்னை பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் திருக்கோலம், 8-ம் திருநாளில் கமல வாகனத்தில் கச லெட்சுமி திருக்கோலம், 9-ம் திருநாளில் அன்னை அன்ன வாகனத்தில் கலைமகள் திருக்கோலம் என ஒவ்வொரு நாளும் இரவு 10 மணிக்கு அன்னை வீதி உலாவரும்.

வருகிற 8-ந்தேதி 6-ம் திருவிழாவில் இருந்து தமிழகம் முழுவதும் சுமார் 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட தசரா குழுவினர் காப்பு கட்டி வேடம் அணிந்து மேளம், டிரம் செட், தாரை தப்பட்டையுடன் கரகாட்டம், டிஸ்கோ நடன கலைஞர்கள் கலைநிகழ்ச்சி நடத்துவார்கள்.

அப்போது தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் எங்கு பார்த்தாலும் தசரா குழு வினர்கள் காட்சியளிப்பார்கள்.

மிக முக்கிய நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் வருகிற 12-ந்தேதி 10-ம் திருநாள் இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும், இரவு 12 மணிக்கு அன்னை முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி கடற்கரையில லட்சகணக்கான பக்தர்கள் முன்னிலையில் மகிஷா சூரசம்ஹாரம் நடக்கிறது.

தொடர்ந்து வருகிற 13-ந்தேதி அதிகாலை 1 மணிக்கு கடற்கரை மேடையில் அம்மனுக்கு அபிஷேகம், அதிகாலை 2 மணிக்கு சிதம்பரேசுவரர் கோவிலில் அம்மனுக்கு சாந்தாபிஷே ஆராதனையும் தொடர்ந்து தேரில் எழுந்தருளி கோவில் கலையரங்கம் வந்தடைந்ததும்.

காலை 5 மணிக்கு அபிஷேக ஆராதனையும், காலை 6 மணிக்கு அன்னை முத்தாரம்மன் பூஞ்சப்பரத்தில் தெரு பவனியும், பகல் 12 மணிக்கு அன்னதானமும், மாலை 4 மணிக்கு அம்மன் கோவில் வந்து சேர்ந்தவுடன் கொடி இறக்கப்பட்டு மாலை 4.30 மணிக்கு காப்பு களைதல் நடக்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடக்கிறது. 

Tags:    

Similar News