முனியாண்டி சுவாமி கோவிலில் 2,500 கிலோ அசைவ பிரியாணி விருந்துடன் விடிய, விடிய நடந்த பெண் பார்க்கும் படலம்
- பிரியாணி திருவிழாவிற்கு பக்தர்கள் ஒருவாரம் காப்புக்கட்டி விரதம் மேற்கொள்வார்கள்.
- பிரியாணியை சாப்பிடுபவர்களுக்கு நோய் நொடிகள் அண்டாது என்பது பக்தர்களின் நம்பிக்கை.
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வடக்கம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள முனியாண்டி சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் தை மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை அன்று ஒரு சமுதாயத்தை சேர்ந்தவர்களும், மாசி மாதம் முதல் வெள்ளிக்கிழமை மற்றொரு சமுதாயத்தை சேர்ந்தவர்களும் நடத்தி வரும் பிரியாணி திருவிழா அந்த பகுதியில் பிரசித்தி பெற்றதாகும். அதில் ஒரு சமுதாயத்தினர் சார்பில் 90-வது ஆண்டாக நடைபெறும் இந்த பிரியாணி திருவிழாவிற்கு பக்தர்கள் ஒருவாரம் காப்புக்கட்டி விரதம் மேற்கொள்வார்கள்.
இந்நிலையில் விரதம் மேற்கொண்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து தாங்கள் கொண்டு வந்த பாலை சுவாமிக்கு அபிஷேகம் செய்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். மாலை நடைபெற்ற விழாவில் கோவில் நிலை மாலையுடன் கிராம இளைஞர்கள் ஆட்டம் பாட்டத்துடன் பெண் பக்தர்கள் அனைவரும் தங்களது இல்லங்களிலில் இருந்து எடுத்துவந்த தேங்காய், பழம், பூ தட்டுகளை தலையில் சுமந்தபடி ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.
அங்கு சுவாமிக்கு தேங்காய் உடைத்து பூஜை செய்து சாமி தரிசனம் செய்தனர். இந்த விழாவில் பங்கேற்பதற்காக தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல இடங்களில் முனியாண்டி விலாஸ் ஓட்டல் நடத்தி வருபவர்கள் மற்றும் உள்ளுர் வெளியூர் மக்கள் உட்டபட ஏராளமானோர் திரண்டனர்.
விழாவின் நிறைவாக பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 150 ஆடுகள் மற்றும் 300-க்கும் மேற்பட்ட கோழிகள் முனியாண்டி சுவாமிக்கு பலியிடப்பட்டு 2,500 கிலோ பிரியாணி அரிசியில் அசைவ பிரியாணி அண்டா அண்டாவாக தயார் செய்து இன்று அதிகாலை கருப்பசாமிக்கு பிரியாணி படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஏற்கனவே அண்டாக்களில் தயாராக வைக்கப்பட்டிருந்த பிரியாணி சுடச்சுட பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது.
இந்த அன்னதானத்தில் கள்ளிக்குடி, வில்லூர், அகத்தாபட்டி உள்ளிட்ட அருகில் உள்ள கிராமத்தினர் ஆயிரக்கணக்கானோர் விடிய, விடிய காத்திருந்து தாங்கள் கொண்டு வந்திருந்த பாத்திரங்களில் பிரியாணியை பெற்றுச் சென்றனர். இந்த விழாவிற்காக தமிழகம் முழுவதும் உள்ள முனியாண்டி விலாஸ் ஓட்டல்களுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை விடப்படும்.
பிரியாணி திருவிழாவில் பங்கேற்ற பக்தர்கள் கூறுகையில், முனியாண்டி சுவாமியை வணங்கினால் வேண்டுதல் அனைத்தும் நிறைவேறும். வேண்டுதல் நிறைவேறியதற்காக பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய ஆடுகள் மற்றும் கோழிகள் பலியியிடப்பட்டு அசைவ பிரியாணி தயார் செய்து ஜாதி, மத பேத மில்லாமல் அனைவருக்கும் வழங்கும் ஒரு நிகழ்ச்சியாக நடத்தப்படுகிறது.
இந்த பிரியாணியை சாப்பிடுபவர்களுக்கு நோய் நொடிகள் அண்டாது என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும் விழாவையொட்டி தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் சிங்கப்பூர், மலேசியா என பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் வருகை தந்துள்ளனர். இதன் மூலம் இந்த விழாவில் பெண் பார்க்கும் படலமும் நடைபெறும்.
திருவிழாவில் பங்கேற்பதற்காக வருகை தரும் இளம்பெண்கள் கைகளில் பூத்தட்டுகளை ஏந்தி கோவிலுக்கு ஊர்வலமாக வருவார்கள். அப்போது அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மற்றும் வெளியூரில் இருந்து கலந்துகொள்ள வருகை தரும் இளைஞர்கள் தங்கள் மனம் கவர்ந்த பெண்களை தேர்வு செய்து தங்கள் பெற்றோரிடம் தெரிவிப்பார்கள்.
அதன்பேரில் அவர்களும் அந்த பெண்ணின் பெற்றோர், உறவினர்களை அழைத்து கோவில் வளாகத்திலேயே பேசி திருமணத்தை முடிவு செய்யும் பழக்கம் காலம் காலமாக நடந்து வருகிறது. முனியாண்டி சுவாமியின் சன்னதியில் வைத்து நிச்சயிக்கப்படும் இந்த திருமணங்கள் நிச்சயம் வெற்றி பெறும் என்பதும் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது என்றனர்.