ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கோவை வருகிறார்
- ஈஷா யோகா மைய மஹா சிவராத்திரி விழாவில் பங்கேற்கிறார்.
- பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
கோவை,
ஜனாதிபதி திரவுபதி முர்மு பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக இன்று தமிழகம் வருகிறார்.புதுடெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை 11.45 மணிக்கு மதுரைக்கு வருகிறார்.பின்னர் அங்கிருந்து கார் மூலம் மீனாட்சியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார்.
தொடர்ந்து அங்கிருந்து காரில் புறப்பட்டு மீண்டும் மதுரை விமான நிலையம் வருகிறார்.இதையடுத்து அங்கிருந்து தனி விமானம் மூலம் மாலையில் கோவைக்கு வருகிறார். அவருக்கு அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
பின்னர் அவர் குண்டு துளைக்காத பிரத்யேக காரில் புறப்பட்டு ரேஸ்கோர்சில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு வருகிறார். அங்கு சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார்.
தொடர்ந்து மாலையில் அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து கார் மூலமாக ஈஷா யோகா மையத்திற்கு செல்கிறார். அங்கு நடக்கும் மஹா சிவராத்திரி விழாவில் பங்கேற்கிறார்.
இரவு 8.30 மணியளவில் காரில் புறப்பட்டு மீண்டும் ரேஸ்கோர்ஸ் விருந்தினர் மாளிகைக்கு வந்து தங்குகிறார்.
நாளை காலை 9 மணிக்கு கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்துக்கு செல்கிறார். அங்கு போர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார்.
12 மணியளவில் மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் கோவை வந்து, இங்கிருந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
ஜனாதிபதி வருகையை முன்னிட்டு கோவை, நீலகிரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்த ப்பட்டுள்ளன.
கோவை விமான நிலையம் இன்று காலை முதல் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
முக்கிய பிரமுகர்களின் வாகனங்கள் மட்டுமே விமான நிலைய பகுதிக்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறது. மற்ற வாகனங்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
விமான நிலையத்தில் இருந்து வரும் பயணிகள், உள்ளே செல்லும் பயணிகள் அனைவரும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்யப்பட்ட பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
கோவை மாவட்டம் முழுவதும் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வெளி மாவட்டங்களில் இருந்து போலீசார் வரவழைக்க பட்டுள்ளனர்.
போலீசார் விமான நிலையம், ரேஸ்கோர்ஸ் விருந்தினர் மாளிகை, ஈஷா யோகா மையம் மற்றும் ஜனாதிபதி செல்லும் வழிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஜனாதிபதி வருகையை முன்னிட்டு கோவையில் இன்றும் நாளையும் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி வருகையை முன்னிட்டு நேற்று போலீசாரின் பாதுகாப்பு ஒத்திகையும் நடைபெற்றது. இேத போல் குன்னூர் பகுதியில் ஹெலிகாப்டர் ஒத்திகையும் நடைபெற்றது.
இதுதவிர மாவட்டத்தில் உள்ள தங்கும் விடுதிகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
நீலகிரி மாவட்டத்திலும் 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அங்குள்ள லாட்ஜ், ஓட்டல்களில் தங்குவோர் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.