உள்ளூர் செய்திகள்

ராமேசுவரம் மீனவர்கள் 3 பேர் சிறைபிடிப்பை கண்டித்து இன்று வேலைநிறுத்த போராட்டம்

Published On 2025-03-19 10:08 IST   |   Update On 2025-03-19 10:08:00 IST
  • வருகிற ஏப்ரல் 1-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு உத்தரவு.
  • சுமார் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

ராமேசுவரம்:

ராமேசுவரம் துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் அதிகாலையில் 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்துறை அலுவலக அனுமதி சீட்டு பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்களில் பெரும்பாலானோர் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர்.

அப்போது அந்த பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தங்கச்சி மடத்தை சேர்ந்த கென்னடி என்பவருக்கு சொந்தமான படகில் சென்றிருந்த சங்கர், அர்ஜூனன், முருகேசன் ஆகிய மூவரையும் கைது செய்து, விசைப்படகையும் பறிமுதல் செய்தனர்.

காங்கேசன்துறை முகாம் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர். எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து யாழ்ப்பாணம் மீன்வளத் துறை அதிகாரிகளிடம் 3 மீனவர்களையும் ஒப்படைத்தனர். பின்பு அவர்களை ஊர்க்காவல் படை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி அவர்களை வருகிற ஏப்ரல் 1-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து ராமேசுவரம் மீனவர்கள் 3 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சிறைபிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் மூன்று பேரையும், அவர்களின் விசைப்படகையும் உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி விசைப்படகு மீனவர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக ராமேசுவரத்தில் சுமார் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டு உள்ளது.

மேலும் இந்த வேலை நிறுத்தத்தினால் ரூ.5 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதோடு, நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட மீன்பிடி தொழிலை சார்ந்த மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News