உள்ளூர் செய்திகள்

தொடர் விடுமுறைக்கு பிறகு வெளியூர்களுக்கு பயணிக்க தருமபுரி பஸ் நிலையத்தில் குவிந்த பயணிகள்.

தொடர் விடுமுறை முடிந்து ஊருக்கு திரும்பினர்: தருமபுரி புதிய பேருந்து நிலையத்தில் குவிந்த பயணிகளுக்காக 65 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

Published On 2022-10-10 14:26 IST   |   Update On 2022-10-10 14:26:00 IST
  • ஊர்களுக்கு செல்வதற்காக புதிய பேருந்து நிலையத்தில் குவிந்தனர்.
  • தருமபுரி, கிருஷ்ணகிரிக்கு 65 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது.

தருமபுரி,

ஆயுத பூஜை மற்றும் பள்ளி காலாண்டு விடுமுறையையொட்டி தருமபுரியிலிருந்து பொதுமக்கள் அவர்களது சொந்த மற்றும் வேலை செய்ய ஊர்களுக்கு செல்வதற்காக புதிய பேருந்து நிலையத்தில் குவிந்தனர்.

மேலும் நேற்று பவுர்ணமி என்பதால் திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்வதற்காக அதிகப்படியான பயணிகள் குவிந்ததாலும் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

இதனால் தருமபுரி பேருந்து நிலையத்தில், பயணிகள் நெரிசல் அதிகரித்தது.

பயணிகள் பலர் குடும்பம் குடும்பமாக உடைமை களுடன் தங்களுக்கான பேருந்துகளில் இடம் பிடிக்க முயன்றதால், பேருந்து நிலைய வளாகம் முழுவதும் பரபரப்புடன், நெரிசலுடன் காணப்பட்டது.

இதையடுத்து சேலம் கோட்ட அரசுப் போக்கு வரத்துக் கழகம் சார்பில் முக்கிய நகரங்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில் சேலம் கோட்டத்தில் இருந்து தருமபுரி, கிருஷ்ணகிரிக்கு 65 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. பவுர்ணமியை ஒட்டி திருவண்ணாமலை கிரிவலம் செல்பவர்களுக்கும் விடுமுறை முடிந்து பணிக்கு செல்லும் பொது மக்களுக்கும் உடனுக்குடன் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயணிகள் காலதாமதம் இன்றி பயணம் செய்தனர் என தெரிவித்தனர்.

Tags:    

Similar News