ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
- முதலில் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் செலுத்திய தபால் ஓட்டுகள் எண்ணப்படுகிறது.
- வாக்கு எண்ணிக்கைக்காக 14 மேஜைகள் போடப்பட்டு உள்ளன.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் கடந்த 5-ந் தேதி நடைபெற்றது. தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி உள்பட மொத்தம் 46 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இந்த தேர்தலில் 67.97 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையமான சித்தோடு அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் பாதுகாப்பு அறையில் பூட்டி சீல் வைக்கப்பட்டன.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.
காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையின் 'சீல்' உடைக்கப்பட்டு மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான ராஜகோபால் சுன்கரா முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் அறைக்கு கொண்டு செல்லப்பட்டன. இதையடுத்து வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.
முதலில் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் செலுத்திய தபால் ஓட்டுகள் எண்ணப்படுகிறது. அதன்பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட உள்ளன.
வாக்கு எண்ணிக்கைக்காக 14 மேஜைகள் போடப்பட்டு உள்ளன. 17 சுற்றுகளாக ஓட்டுகள் எண்ணப்படும். காலை 11 மணி அளவில் முன்னணி நிலவரம் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு சித்தோடு அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் துணை ராணுவத்தினரும், உள்ளூர் போலீசாரும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.