உள்ளூர் செய்திகள் (District)
கைதான கிருஷ்ணன்.

நடத்தையில் சந்தேகம்- மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற ஜோதிடர்

Published On 2022-07-19 05:36 GMT   |   Update On 2022-07-19 05:36 GMT
  • குடிபோதையில் வீட்டிற்கு வந்த கிருஷ்ணன் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார்.
  • தகராறு முற்றவே ஆத்திரமடைந்த கிருஷ்ணன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து கற்பகத்தை சரமாரி குத்தினார்.

குடிமங்கலம்:

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள குமரலிங்கம் வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 70). இவரது மனைவி கற்பகம் (60). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். அவர் திருமணமாகி மனைவியுடன் தனியாக வசித்து வருகிறார்.

கிருஷ்ணன் கிளி ஜோதிடம் பார்த்து வந்தார். மேலும் அவருக்கு மது பழக்கம் இருந்து வந்தது. தினமும் மது குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். கற்பகத்தின் நடத்தையிலும் சந்தேகப்பட்டுள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே தினமும் தகராறு ஏற்பட்டு வந்தது.

நேற்றிரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்த கிருஷ்ணன் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார். தகராறு முற்றவே ஆத்திரமடைந்த கிருஷ்ணன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து கற்பகத்தை சரமாரி குத்தினார். இதில் அவரது கை, தலையில் பலத்த கத்திக்குத்து விழுந்தது. ரத்த வெள்ளத்தில்அலறி துடித்த அவரது அலறல்சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வீட்டிற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

அப்போது கற்பகம் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் இது குறித்து உடனடியாக குடிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கற்பகம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கிருஷ்ணனை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். நடத்தை சந்தேகத்தில் மனைவியை ஜோதிடர் கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News