தமிழ் அறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு
- தமிழ் அறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் ஆண்டுதோறும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- இந்த திட்டத்தின் கீழ் 2022-23-ம் ஆண்டிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் வயது முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் ஆண்டுதோறும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் 2022-23-ம் ஆண்டிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான தகுதிகளாக 1.1.2022 அன்று 58 வயது நிறைந்திருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரம் இருக்க வேண்டும். தாலுகா அலுவலகத்தில் இணைய வழியில் பெறப்பட்ட வருமானச் சான்று, தமிழ் பணி ஆட்சியமைக்கான ஆதாரங்கள் மற்றும் தமிழ் பணி ஆட்சி வருவதற்கான தகுதி நிலை சான்று, தமிழறிஞர்கள் 2 பேரிடம் கையொப்பம் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
இதற்கான விண்ணப்ப படிவம் நேரிலோ அல்லது தமிழ் வளர்ச்சித் துறையின் வலைத்தளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படுபவருக்கு மாதந்தோறும் உதவித் தொகையாக ரூ.3,500, மருத்துவ படி ரூ.500 ஆகியவை அவரின் வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் மார்ச் 31-ந் தேதிக்குள் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.