உள்ளூர் செய்திகள்

திருப்பூரில் பயங்கர தீ விபத்து: பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்

Published On 2025-03-09 11:22 IST   |   Update On 2025-03-09 11:22:00 IST
  • 6 மணிநேர போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது.
  • தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை.

திருப்பூர்:

திருப்பூர் மணியக்காரம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் முகமது பயாஸ். இவர் அங்கு பனியன் கழிவுத்துணிகள் குடோன் நடத்தி வருகிறார்.

இந்த குடோனில் நள்ளிரவு 1:30 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பனியன் துணிகள் என்பதால் தீ கொளுந்து விட்டு எரிந்தது. இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக திருப்பூர் தெற்கு மற்றும் வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஏராளமான பனியன் கழிவுத்துணிகள் தீப்பற்றி எரிந்ததால் தீயை கட்டுக்குள் கொண்டு வருவதில் சிரமம் ஏற்பட்டது.

இதையடுத்து மேலும் 5-க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகளில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தீயை அணைக்கும் பணி நடைபெற்றது. 6 மணிநேர போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது.

இருப்பினும் கரும்புகை வெளியேறி வருவதால் அதனை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பனியன் கழிவுத்துணிகள்-பொருட்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளது. தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News