குடும்பத்துடன் திருடிய பணம் மூலம் பங்களா கட்டி சொகுசு வாழ்க்கை வாழ்ந்த பெண்கள்
- கோவை துடியலூர் பகுதியில் டெண்ட் அமைத்து தங்கி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
- போலீசார் கைதான 2 பேரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
கோவை:
கோவை மரக்கடை சந்திரன் முதல் வீதியை சேர்ந்தவர் ஆய்ஷம்மாள் (வயது75). இவர் மதுக்கரையில் இருந்து பஸ்சில் டவுன்ஹால் வந்தார்.
டவுன்ஹால் வந்ததும் பஸ்சை விட்டு இறங்கிய அவர் தனது கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க செயின் காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ஆய்ஷம்மாள் உக்கடம் போலீசில் புகார் அளித்தார்.
அதேபோல கோவை ராமநாதபுரத்தை சேர்ந்தவர் வசந்தா(75). இவர் தனது கணவருக்கு உடல் நிலை சரியில்லாததால் சக்தி ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து இருந்தார்.
சம்பவத்தன்று வசந்தா சரவணம்பட்டி பகுதியில் உள்ள கோவிலுக்கு பஸ்சில் சென்றார். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி அவரது அருகில் இருந்த பெண்கள் அவர் கழுத்தில் இருந்த 6 பவுன் தங்க நகையை பறித்து சென்றனர். இதுகுறித்து வசந்தா சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார்.
இந்த 2 புகார்களின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் நகை பறிக்கும் கும்பலை பிடிக்க, உதவி கமிஷனர் சரவணக்குமார் உத்தரவின் பேரில், உதவி கமிஷனர் முருகேசன் தலைமையில், உக்கடம் இன்ஸ்பெக்டர் ரவி, சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து, உமா, மஞ்சு மற்றும் போலீசார் கார்த்தி, பூபதி ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் தனிப்படை போலீசார் கடை வீதி பகுதியில் சாதாரண உடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக 2 பெண்கள் சுற்றி திரிந்தனர். அவர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளிக்கவே போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.
விசாரணையில், அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, மந்தித்தோப்பு பகுதியை சேர்ந்த நந்தினி(28) மற்றும் காளிஸ்வரி(28) ஆகியோர் என்பதும், மூதாட்டிகளிடம் நகை பறித்தவர்கள் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.
கைது செய்யப்பட்ட நந்தினி, காளிஸ்வரி இருவரும் அண்ணன் - தம்பியை திருமணம் செய்து உள்ளனர். இவர்கள் பல வருடங்களாகவே திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
காளிஸ்வரி தனது 12 வயதிலேயே தனது தாயாருடன் சேர்ந்து திருட தொடங்கி உள்ளார். திருமணம் முடிந்த பின்னர், தனது கணவரின் அண்ணன் மனைவியுடன் சேர்ந்து திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இவர்கள் இந்தியா முழுவதும் 10க்கும் மேற்பட்ட இடங்களில் தங்களது குடும்பத்தினருடன் சேர்ந்து திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.
முக்கியமாக இவர்கள் கோவில் திருவிழாக்களை குறி வைத்து, அங்குள்ள கூட்டநெரிசலை பயன்படுத்தி, பெண்களிடம் நகைகளை திருடி வந்துள்ளனர்.
தாங்கள் திருடிய நகைகளை அந்ததந்த பகுதியிலேயே விற்பனை செய்யும் அவர்கள், அந்த பணத்தை வைத்து பல்வேறு இடங்களுக்கும் இன்ப சுற்றுலா சென்று சொகுசாக வாழ்ந்துள்ளனர். இவர்கள் கோவை துடியலூர் பகுதியில் டெண்ட் அமைத்து தங்கி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் திருடிய பணம் மூலம் தூத்துக்குடியில், பங்களா கட்டி சொகுசு வாழ்க்கையும் வாழ்ந்து வருகிறார்கள்.
கோவையில் தற்போது பேரூர் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் கோனியம்மன் கோவில் திருவிழா நடக்க உள்ளதை அறிந்து 2 பேரும் திருடுவதற்காக கோவைக்கு வந்ததும், திருவிழா தொடங்க சில நாட்கள் இருப்பதால் பஸ்களில் பயணித்து மூதாட்டிகளிடம் நகையை பறித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து போலீசார் கைதான 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.