பெரியார் குறித்த சீமானின் கருத்தால் பின்னடைவா? - நாம் தமிழர் வேட்பாளர் விளக்கம்
- தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார் 44,361 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
- அநீதியை தாங்கிக்கொண்டே பொதுமக்கள் இருக்க மாட்டார்கள்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் கடந்த 5-ந் தேதி நடைபெற்றது. தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி உள்பட மொத்தம் 46 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் 67.97 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.
ஈரோடு கிழக்கு தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் செலுத்திய தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டது. இதையடுத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டது.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோது இருந்தே தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார் முன்னிலை வகித்து வருகிறார்.
தற்போதைய நிலவரப்படி தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார் 44,361 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 9,258 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* பண பலத்தையும் தாண்டி நாம் தமிழருக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளது.
* 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் நா.த.க.விற்கு அதிக இடங்கள் கிடைக்கும்.
* தி.மு.க.விற்கு எதிரான வாக்குகள் நாம் தமிழருக்கு கிடைத்துள்ளது.
* எதற்கும் விலை போகாமல் 9,000-க்கும் மேற்பட்ட ஈரோடு தொகுதி மக்கள் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்துள்ளனர்.
* அநீதியை தாங்கிக்கொண்டே பொதுமக்கள் இருக்க மாட்டார்கள். 2026 தேர்தலில் மிகப்பெரிய மாற்றம் வரும்.
* பெரியார் குறித்த சீமானின் கருத்தால் பின்னடைவு ஏற்படவில்லை என்று அவர் கூறினார்.