மருமகளிடம் இருந்து தங்கள் வீட்டை மீட்டுத்தர வேண்டும் - ஆர்.டி.ஓ.விடம் தம்பதி புகார் மனு
- கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனவைி அவரை பிரிந்து சென்று விட்டார்.
- வருவாய் கோட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர் மூலம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம், பெரும்பண்ணையூர் செல்வம் தெருவை சேர்ந்தவர் உத்திராபதி (வயது 67). இவரது மனைவி பட்டு (64).
இந்த முதிய தம்பதியினருக்கு திருநாவுக்கரசு என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர். 2 மகள்களுக்கும் திருமணமாகி கணவன் வீட்டில் வசித்து வருகின்றனர். மகன் திருநாவுக்கரசுவிற்கு கடந்த 2011-ம் ஆண்டு திருமணமான நிலையில், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனவைி அவரை பிரிந்து சென்று விட்டார். இந்நிலையில் கடந்த 2023-ம் ஆண்டு திருநாவுக்கரசு உயிரிழந்து விட்டார்.
இந்த நிலையில் 6 மாதத்திற்கு முன்பு மருமகள், தனது வீட்டிற்கு புதிய பூட்டு போட்டு பூட்டியதுடன், வீட்டிற்கு வந்த தங்களை உள்ளே அனுமதிக்கவில்லை.
இதனையடுத்து கடந்த 6 மாதமாக மகள் வீட்டில் வசித்து வந்த நிலையில் தற்போது தங்கள் வீட்டை மருமகளிடம் இருந்து மீட்டு கொடுக்க வேண்டும் என திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சவுமியாவிடம் மனு அளித்துள்ளனர். மனுவை பெற்று கொண்ட வருவாய் கோட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர் மூலம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.