- டிரைவர் உட்பட 2 பேர் படுகாயம்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
போளூர்:
ஜமுனா முத்தூர் அடுத்த போங்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வள்ளியம்மாள் (வயது 44). இவர் போளூருக்கு பொருட்களை வாங்குவதற்காக வந்தார். பொருட்களை வாங்கிக்கொண்டு பஸ்சுக்காக காத்திருந்தார்.
அப்போது அந்த வழியாக மினி வேன் ஒன்று வந்தது. அந்த வேன் போங்கனூர் கிராமத்திற்கு செல்வதால் வள்ளியம்மாள் அதில் ஏறினார். வேனில் வள்ளியம்மாள் உட்பட 10 பேர் பயணம் செய்தனர்.
வேனை அதே உரைச் சேர்ந்த குப்பன் (25) என்பவர் ஓட்டி சென்றார். மினி வேன் அத்திமூர் துணை மின் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது.
திடீரென வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் வள்ளியம்மாள் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். டிரைவர் உட்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து போளூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு போளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
வள்ளியம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.