முதுமலையில் உணவு, தண்ணீர் தேடி இடம் பெயரும் வனவிலங்குகள்
- வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக செல்ல வனத்துறை அறிவுறுத்தி உள்ளது.
- செல்பி எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் தற்போது பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது.
உறைபனி தாக்கத்தால் தேயிலை செடிகள், காய்கறி செடிகள் மற்றும் புல் வெளிகள் கருகி விட்டன.
ஊட்டி, மஞ்சூர், குன்னூர், கோத்தகிரி, மசினகுடி, முதுமலை ஆகிய பகுதிகளில் பனியின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனால் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தாவரங்கள் மற்றும் புற்கள் காய்ந்து விட்டன. இதனால் உணவு மற்றும் தண்ணீர் தேடி விலங்குகள் இடம் பெயர்ந்து வருகின்றன.
முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட கூடலூர்-கக்கநல்லா சாலை, மசினகுடி-முதுமலை சாலையோரங்களில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளன.
இவை உணவு தேடி சாலையோரங்களுக்கு வருகின்றன. குறிப்பாக யானை, மான்கள் கூட்டமாக வலம் வருகின்றன.
திடீரென சாலையை கடக்கின்றன. இதனால் வேகமாக வரும் வாகனங்களில் வனவிலங்குகள் சிக்கி விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. எனவே வாகன ஓட்டிகள் மிகவும் கவனமுடன் பயணிக்க வேண்டும்.
இது தொடர்பாக வனத்துறையினர் கூறும்போது, செல்பி மோகம் அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் விலங்குகளை கண்டவுடன் செல்பி எடுக்கின்றனர். இதனால் அவற்றுக்கு இடையூறு ஏற்படுவதுடன், மனிதர்களை தாக்கும் அபாயமும் உள்ளது.
எனவே முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் செல்பி எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.