இந்தியா

கெஜ்ரிவால் முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகியது, ஆம்ஆத்மியின் தோல்விக்கு காரணம்- பிரசாந்த் கிஷோர்

Published On 2025-02-10 14:30 IST   |   Update On 2025-02-10 14:30:00 IST
  • இப்போதைய சூழலில், டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி செல்வாக்கு பெறுவது மிகவும் கடினமான விஷயம்.
  • கடந்த தேர்தலில் குஜராத்தில் ஆம்ஆத்மி கட்சி சிறப்பாக செயல்பட்டுள்ளது.

புதுடெல்லி:

டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி தோல்வியடைந்து ஆட்சியை இழந்தது. பா.ஜ.க. 48 தொகுதிகளில் வெற்றி பெற்று 27 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் ஆட்சியை பிடித்துள்ளது.

இந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் தோல்விக்கான காரணம் பற்றி பல்வேறு கருத்துகள் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஜன் சுராஜ் கட்சியின் தலைவரும், தேர்தல் வியூக நிபுணருமான பிரசாந்த் கிஷோர், ஆம் ஆத்மி கட்சியின் தோல்விக்கான காரணங்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரசாந்த் கிஷோர் கூறியதாவது:-

கடந்த 10 ஆண்டுகளாக அரவிந்த் கெஜ்ரிவால் செய்து வந்த எதிர்ப்பு அரசியல் ஆம்ஆத்மி கட்சியின் தோல்விக்கு முதல் காரணமாகும். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதாகி, ஜாமினில் வெளியே வந்த கெஜ்ரிவால், முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகியது 2-வது காரணமாக பார்க்கப்படுகிறது.

சட்டசபை தேர்தலுக்கு முன்பு முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகி விட்டு, வேறு ஒருவரை முதல்-மந்திரியாக நியமித்தது மிகப்பெரிய தவறான முடிவாகும். மேலும் சமீபகாலமாக கெஜ்ரிவால் எடுத்து வந்த அரசியல் நிலைப்பாடும் தோல்விக்கு காரணமாகும். 'இந்தியா' கூட்டணியில் இணைந்து விட்டு, பிறகு டெல்லி சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்டதால், அவரால் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.

மேலும் ஆம்ஆத்மி, ஆட்சி நிர்வாகத்தில் தோல்வியடைந்தது. கடந்த ஆண்டு பெய்த பருவமழையின் போது பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதுவும் இந்த தேர்தலில் எதிரொலித்துள்ளது.

எனவே இப்போதைய சூழலில், டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி செல்வாக்கு பெறுவது மிகவும் கடினமான விஷயம். தற்போது, ஆட்சி நிர்வாகத்தில் இல்லாத கெஜ்ரிவால், மற்ற மாநிலங்களில் ஆம்ஆத்மி கட்சியை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்தலாம். கடந்த தேர்தலில் குஜராத்தில் ஆம்ஆத்மி கட்சி சிறப்பாக செயல்பட்டுள்ளது. எனவே அங்கு கட்சியை வளர்க்க கெஜ்ரிவால் கவனம் செலுத்தலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News