ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை அறிமுகப்படுத்துவதில் மத்திய அரசு உறுதி: சட்ட மந்திரி மெக்வால்
- ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது தேசிய நலனுக்கானது.
- அதை அறிமுகப்படுத்த மத்திய அரசு உறுதியாக உள்ளது என்றார்.
ஜெய்ப்பூர்:
சட்டத்துறை மந்திரி அர்ஜூன் ராம் மெக்வால் ராஜஸ்தானில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது:
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது தேசிய நலனுக்கானது. அதை அறிமுகப்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.
1952, 1957, 1962 மற்றும் 1967-ம் ஆண்டுகளில் பாராளுமன்ற மற்றும் சட்டசபைத் தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டன.
இந்த முயற்சி தேசிய நலனுக்கானது. தேர்தல் ஆணையம், நிதி ஆயோக் மற்றும் முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழு ஆகியவை தங்கள் ஒப்புதலை அளித்தன. அதன்பிறகு அமைச்சரவை அதற்கு ஒப்புதல் அளித்தது.
ஒரே நேரத்தில் தேர்தல்களை முன்மொழியும் இரண்டு மசோதாக்கள் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டு பாராளுமன்ற குழுவால் பரிசீலிக்கப்பட்டது.
இதுதொடர்பாக பல்வேறு சமூக அமைப்புகளுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருகின்றன என தெரிவித்தார்.