பி.எம்.கேர்ஸ் திட்டம்
கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்து குழந்தைகளுக்கு சுகாதார காப்பீட்டு வசதி- மத்திய மந்திரி தகவல்
- பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு நிதி மற்றும் கல்வி உதவி வழங்கப்படுகிறது.
- கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இந்தக் குழந்தைகளுக்கு இடம்.
பாராளுமன்ற மக்களவையில் உறுப்பினரின் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை மந்திரி ஸ்மிரிதி இரானி தெரிவித்துள்ளதாவது:
கொரோனா பெருந்தொற்று பாதிப்பால்,பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர்களை இழந்த குழந்தைகளுக்கு பி.எம்.கேர்ஸ் திட்டத்தின் கீழ், பல்வேறு உதவிகளை மத்திய அரசு செய்து வருகிறது.
இது போன்ற குழந்தைகள் 23 வயதை எட்டும் வரை கல்வி உதவிகள் வழங்கப்படுகின்றன. பி.எம்.கேர்ஸ் திட்டத்தில் சேர்க்கப்படும் குழந்தைகள் 18 வயதை அடையும் போது, அவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் பெறும் வகையில் நிதியம் ஒன்று உருவாக்கப்பட்டு, பணம் செலுத்தப்படுகிறது.
இந்த தொகையை அஞ்சலக மாதாந்திர வருவாய் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் 18 வயது முதல் 23 வயது வரை மாதாந்திர உதவித் தொகையை பெறலாம்.
உறவினர்களுடன் தங்கியுள்ள குழந்தைகளுக்கு வாத்ஸல்யா திட்டத்தின்கீழ், மாதந்தோறும் ரூ.4,000 வழங்கப்படுவதுடன், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், கஸ்தூரிபாய் காந்தி பாலிகா வித்யாலயா மற்றும் தனியார் பள்ளிகளில் இந்தக் குழந்தைகள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.
ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் இந்த குழந்தைகளுக்கு ரூ.20,000 கல்வி உதவித் தொகையாக வழங்கப்படுகிறது. பிரதமரின் ஜன் ஆரோக்கியா காப்பீடு திட்டத்தின்கீழ் 23 வயது வரை சுகாதார காப்பீட்டு வசதி வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.