இந்தியா

காடு வளர்ப்புக்கான நிதியை வைத்து ஐபோன்கள் வாங்கிய உத்தரக்காண்ட் வனத்துறை

Published On 2025-02-22 10:54 IST   |   Update On 2025-02-22 10:54:00 IST
  • உத்தரகாண்ட் சட்டமன்றத்தில் நேற்று CAG அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
  • ரூ.13.86 கோடியை காடு வளர்ப்புக்கு பயன்படுத்தாமல், தேவையற்ற விஷயங்களுக்கு செலவிடப்பட்டுள்ளன.

உத்தரக்காண்டில் காடுகள் வளர்ப்புக்காக ஒதுக்கப்பட்ட நிதியை ஐபோன்கள், மடிக்கணினிகள், குளிர்சாதன பெட்டிகள் வாங்குவதற்காகவும், கட்டிடங்களை புதுப்பிப்பதற்காகவும் பயன்படுத்தியது உட்பட பல நிதி முறைகேடுகள் CAG அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

உத்தரகாண்ட் சட்டமன்றத்தில் நேற்று பட்ஜெட் கூட்டத்தொடரின் போது தாக்கல் செய்யப்பட்ட CAG அறிக்கையில், தொழிலாளர் நல வாரியம் 2017 முதல் 2021 வரை அரசாங்கத்தின் அனுமதியின்றி ரூ.607 கோடியை செலவிட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. வன நிலத்தை மாற்றுவதற்கான விதிகள் கூட மீறப்பட்டுள்ளதாக அறிக்கை தெரிவித்துள்ளது.

வனப்பகுதிகள் வளர்ப்புக்கான இழப்பீடு, மேலாண்மை மற்றும் திட்ட ஆணையம் (CAMPA) தரவுகளின்படி, 2019-22 வரை காடுகள் வளர்ப்புக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.13.86 கோடியை வளர்ச்சிக்கு பயன்படுத்தாமல், தேவையற்ற விஷயங்களுக்கு செலவிடப்பட்டுள்ளன. தனியார் ஏஜென்சிகள் மூலமாக, 188.6 ஏக்கர் வன நிலங்களை வனம் சார்ந்து அல்லாத பயன்பாட்டிற்கு திருப்பி விடப்பட்டதாக 52 வழக்குகள் பதிவாகியுள்ளது தணிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது.

காடுகளில் நடப்படும் மரங்களில் 60-65% மரங்கள் வளரவேண்டும் என்று வன ஆராய்ச்சி நிறுவனம் அறிவுறுத்திய நிலையில், உத்தர்காண்டில் 2017-22 ஆம் ஆண்டில் நடப்பட்ட மரங்களில் 33% மட்டுமே வளர்ந்துள்ளது.

CAG அறிக்கையை எடுத்துக்காட்டில் அரசாங்கத்தின் நிதியை பாஜக அரசு வீணடிக்க காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

உத்தரகண்ட் வனத்துறை அமைச்சர் சுபோத் உனியல் இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News