காசி தமிழ் சங்கமம்: ரெயிலில் அத்துமீறிய வடமாநிலத்தவர்.. தமிழக பயணிகளுடன் வாக்குவாதம்
- நாட்டுப்புற கலைஞர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் என 700 காசிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்
- ஆத்திரமடைந்த வடமாநில பயணிகள் ரெயில் கதவு கண்ணாடியை உடைத்து அதன் வழியாக கதவை திறந்து உள்ளே வர முயன்றனர்
தமிழ்நாடு - காசி இடையேயான உறவை பலப்படுத்தும் வகையில், காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. மூன்றாவது வருடமாக தமிழ்நாட்டில் இருந்து நாட்டுப்புற கலைஞர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் என 700 காசிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதற்காக சென்னையில் இருந்து உத்தரப்பிரதேச மாநிலம் பனாரசுக்கு சிறப்பு ரெயில் புறப்பட்டது.
இந்த ரெயில் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் அருகே வந்த போது, முன்பதிவில்லாத டிக்கெட் வைத்திருந்த வடமாநில பயணிகள் சிலர் ரெயிலில் ஏற முயன்றனர். சிறப்பு ரெயில் என்பதால் தமிழக பயணிகள் பெட்டிகளின் கதவுகளை பூட்டி வைத்திருந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த வடமாநில பயணிகள் ரெயில் கதவு கண்ணாடியை உடைத்து அதன் வழியாக கதவை திறந்து உள்ளே வர முயன்றனர். இதனால் வெளியில் இருந்த பயணிகளுக்கும், உள்ளே இருந்த தமிழக பயணிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
எனவே அங்கு பதற்றமான சூழல் நிலவியது. இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.