பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தை பார்வையிட்டார் பிரதமர் மோடி
- பந்திப்பூர் வனப்பகுதி, புலிகள் சரணாலயத்தை சுற்றி பார்க்கும் முதல் இந்திய பிரதமர் மோடி.
- பிரதமர் வருகையையொட்டி பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தில் 3 நாட்களாக பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.
கர்நாடகா:
ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை 3 மணிக்கு சென்னைக்கு வந்தார். தொடர்ந்து சென்னை-கோவை இடையே வந்தே பாரத் ரெயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார். சென்னையில் இருந்தவாறே தமிழகத்தில் பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். இரவில் தனி விமானத்தில் கர்நாடக மாநிலம் மைசூருக்கு சென்றார்.
அங்கிருந்து இன்று பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தை பிரதமர் மோடி பார்வையிட்டு வருகிறார். பந்திப்பூர் வனப்பகுதி, புலிகள் சரணாலயத்தை சுற்றி பார்க்கும் முதல் இந்திய பிரதமர் மோடி. பந்திப்பூர் வனப்பகுதியில் 22 கி.மீ. தூரம் பிரதமர் மோடி பயணம் செய்கிறார்.
பிரதமர் வருகையையொட்டி நேற்று மாலை முதல் பந்திப்பூர் வழியாக செல்லும் அனைத்து சாலைகளிலும் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தில் 3 நாட்களாக பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.
பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தில் வாகன சவாரிக்கு பிறகு பிரதமர் மோடி முதுமலை புறப்படுகிறார்.
நீலகிரி மாவட்டம் முதுமலைக்கு பிரதமர் மோடி வருகிறார். தெப்பக்காடு யானைகள் முகாமை பிரதமர் மோடி பார்வையிடுகிறார். பின்னர் ஆஸ்கார் விருது பெற்ற ஆவணப்படத்தில் நடித்த பொம்மன்-பெள்ளியை பிரதமர் மோடி சந்திக்க உள்ளார்.
பிரதமர் வருகையையொட்டி முதுமலை தெப்பக்காடு முகாமில் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.