புதுச்சேரி

கூடுதல் நகை, பணம் கேட்டு நர்சை வரதட்சணை கொடுமை செய்த கணவருக்கு 2 ஆண்டு ஜெயில்

Published On 2025-03-15 14:53 IST   |   Update On 2025-03-15 14:53:00 IST
  • கடந்த 2021-ம் ஆண்டு கணவரை பிரிந்து நந்தினி தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
  • செல்வதிருமால் நந்தினி வேலை செய்யும் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று தகராறில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்து வந்தார்.

புதுச்சேரி:

புதுச்சேரி தருமாபுரியை சேர்ந்தவர் நந்தினி (வயது 30). இவர் அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் காலாப்பட்டு நடுத்தெருவை சேர்ந்த செல்வதிருமால் (32) என்பவருக்கும் கடந்த 2018-ல் திருமணம் நடந்தது. 4 வயதில் ஆண் குழந்தை உள்ளது.

திருமணத்தின் போது வரதட்சணையாக 25 பவுன் நகை, ரூ.2 லட்சம் ரொக்கம் மற்றும் சீர்வரிசை பொருட்களை நந்தினி வீட்டினர் கொடுத்துள்ளனர். கடந்த 2020-ம் ஆண்டு முதல் செல்வதிருமால் வேலைக்கு செல்லாமல், நந்தினியின் 25 பவுன் நகையை விற்று செலவு செய்து வந்தார். மேலும் கூடுதலாக ரூ.5 லட்சம் வரதட்சணை கேட்டு, அடிக்கடி நந்தினியை அடித்து கொடுமைப்படுத்தினார். இதற்கு செல்வதிருமால் தாயார் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால், கடந்த 2021-ம் ஆண்டு கணவரை பிரிந்து நந்தினி தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இருப்பினும், செல்வதிருமால் நந்தினி வேலை செய்யும் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று தகராறில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்து வந்தார். இதனால் மனஉளைச்சல் அடைந்த நந்தினி கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் 1-ந்தேதி வில்லியனுார் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் செல்வ திருமால், அவரது தாய் மலர்கொடி ஆகியோர் மீது போலீசார் வரதட்சணை வழக்குப் பதிந்தனர். வழக்கு விசாரணை புதுச்சேரி தலைமை குற்றவியல் நீதிபதி சிவக்குமார் முன்னிலையில் நடந்து வந்தது. அரசு சார்பில் வக்கீல் கணேஷ் ஞானசம்பந்தம் ஆஜரானார்.

விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்பட்டது. வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய செல்வதிருமாலுக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.500 அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். அவரது தாய் மலர்கொடி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

Tags:    

Similar News