சாம்பியன்ஸ் டிராபி: சதம் விளாசிய சுப்மன் கில்.. 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி
- இரு அணிகளும் முதல் போட்டியில் மோதுகின்றன.
- வங்காளதேசம் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
துபாயில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் இன்றையபோட்டியில் வங்காளதேசம் மற்றும் இந்தியா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி முதலில் பேட்டிங் செய்தது.
இந்திய அணியின் அபார பந்துவீச்சு காரணமாக வங்காளதேசம் அணி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் அணி 10 ஓவர்களுக்குள் 50 ரன்களை குவிக்காமலேயே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 49.4 ஓவர்களில் வங்காளதேசம் அணி 228 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
வங்காளதேசம் அணியின் தவ்ஹித் ரிடோய் மற்றும் ஜேகர் அலி நிதானமாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த அணியின் ஸ்கோர் மெல்ல அதிகரித்தது. ஜேகர் அலி 68 ரன்களையும், ரிடோய் 100 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி சார்பில் முகமது சமி 5 விக்கெட்டுகளையும், ஹர்ஷித் ரானா 3 விக்கெட்டுகளையும் அக்சர் படேல் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.
229 எனும் எளிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஜோடி சிறப்பான துவக்கத்தை கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 50 ரன்களை கடந்த நிலையில், கேப்டன் ரோகித் சர்மா 41 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து வந்த விராட் கோலி 22 ரன்களில் தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார்.
மேலும், ஸ்ரேயஸ் அய்யர், அக்சர் படேல் அடுத்தடுத்து வந்த வேகத்தில் நடையை கட்டினர். மறுப்பக்கம் சுப்மன் கில் நிதானமாக விளையாடி சதம் அடித்தார். இந்திய அணி 46.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 231 ரன்களை குவித்தது. சுப்மன் கில் 101 ரன்களுடனும், கே.எல். ராகுல் 41 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதன் மூலம் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.